NewsBlog

Tuesday, October 29, 2013

சிறப்புக் கட்டுரை: 'இதோ நாளைய சிற்பிகள்'



'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வானொலி, தினமணி மற்றும் துக்ளக் போன்ற பத்திரிகைகளில் வாசகர் கருத்துக்கள் வெளியாகி இருந்தாலும் அநேகமாய் எழுத்துலகில் எனக்கு ஆரம்பமாக இருந்தது இந்த கட்டுரைதான்! ஒரு இன்லேண்ட் கடிதத்தில் எழுதி சமரசத்துக்கு அனுப்பி பிரசுரமான இதை பாமரன் வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறேன் - இக்வான் அமீர் 
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கம்பீரமாய் திறக்கப்பட்ட இரும்புக்கதவுகள். சென்னையின் பிரபலமான கல்லூரி அது! மாலை நேரம், சுமார் 6.30 மணி.

எதிரே வாகனங்கள் நெரிச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தன. கும்பல், கும்பல்களாக மாலை நேர வகுப்பு மாணவர்கள், ‘மச்சிக்களுடன், ஜோ.. க்யா யார்…’ களுடனும் மும்மொழி வம்பளந்து கொண்டிருந்தனர். பழைய புகை வண்டிகளை ஞாபகப்படுத்த புகைகளாக கக்கிக் கொண்டிருந்தனர்.

நண்பர் ஒருவரின் வருகைக்காக பக்கத்திலிருந்த ஒரு கடையில் காத்திருந்தேன் நான்.

“டேய்.. மச்சி! அதோ..! ஒரு இண்ட் ஸீஸிகி ஹெல்மெட் இல்லாம வருது. அதை என்ன செய்றேன் பார்.. இப்போ.” – கும்பலிலிருந்து மாணவர் ஒருவர் நடுரோட்டிற்கு வந்தார்.

“சார்.. சார்”

45 வயது மதிக்கத்தக்க நபரை சுமந்து வந்த ‘இண்ட் ஸீஸிகி’ கிறீச்சிட்டது. 

பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த சைக்கிள் அதன் மீது மோதி, “சாவு கிராக்கி!” என்று உதிர்த்துவிட்டு சென்றது.

“சார்..! முன்னாலே ஹெல்மெட் கேஸ் பிடிக்கிறாங்க.. பார்த்துப் போங்க!” 

–மாணவரின் பொய்யை நம்பிய அந்த நபர் வண்டியின் வேகத்தை குறைத்து, பாதையின் முன்னாள் எட்டி எட்டி பார்த்துக் கொண்டே எச்சரிக்கையுடன் சென்றார்.

மாணவர் கும்பலிலிருந்து “குபீர்” சிரிப்பொன்று கிளம்பியது. வெற்றிகரமாக ஏமாற்றிய மாணவரின் முகத்தில் 1000 வாட்ச் பளிச்சிட்டது.

அடுத்து அவர்களின் பார்வையில் பட்டவர்கள் இரண்டு பெண்கள். 

அவர்களையும் அழாத குறைக்கு கேலி செய்து அனுப்பியது அக்கும்பல்.

“டேய்..! ஜோ..அதோ பார்! மாமா போறார்!”

“மாமா..! மாமா..!” இது சட்டத்தின் காவலர் ஒருவருக்கு வீசப்பட்ட ஏவுகணை.

அவரும், "நமக்கேன் வம்பு?” – என்று கண்டும் காணாமலும் சென்றுவிட்டார்.

ஒரு நாட்டின் முதுகெலும்பான இந்த இளைய சமுதாயம், ஒழுக்கம் குன்றிய மிக மோசமான நிலையில் அனுதினமும் உருவாகிக் கொண்டேயிருக்கிறது.

வருங்காலத்தின் மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், பொறியாளர்கள், சமுதாய சிந்தனையாளர்கள் இவர்கள்தான் என்று எண்ணும்போது, சோகம்தான் ஏற்படுகிறது. இளையவயதிலேயே இறையச்சத்தை ஊட்டி, அதன் விளைவாக உண்டாகும் மேலான ஒழுக்கத்துடன் கூடிய கல்வி முறையைத் தவிர வேறு எதனாலும் இந்த இளந்தளிர்கள் திருந்தப் போவதுமில்லை..!  அப்படி திருந்தாத இவர்களால் புதிதாக நாட்டிற்கு ஒன்றும் ஆகப் போதுமில்லை..!

மாறுமா இந்த நிலை..?


0 comments:

Post a Comment