NewsBlog

Tuesday, October 22, 2013

சிறப்புக் கட்டுரை:'மோடியின் இரண்டு வினாக்களும்; தினமணியின் விளக்க உரையும்!'

 
சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்தும், வழக்கு தொடுக்கப்பட்டும் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு விடாப்பிடியாக மேடை ஏறினார் திருவாளர் நரேந்திர மோடி. 'பல்கிவாலா' நினைவு நாள் சொற்பொழிவு மேடையில்  அவர் ஆற்றிய உரையின் தலைப்பு 'இந்தியாவும், உலகமும்' 

மனிதர்களின் கண்ணியமும், மனித உயிர்களின் மதிப்பீடும் தெரியாத ஒருவர் இந்தியர்களையும், உலக மக்களையும் குறித்து பேச வந்தது வியப்புக்குரியது. நையாண்டிக்குரியது என்று சொன்னாலும் அது மிகையல்ல!

ஆக்ரோஷமாக முஷ்டியை உயர்த்தி மோடி மேடையில் பேசும்போது, ராஜாவின் மிமிக்ரியுடன் சொன்ன இரண்டு கருத்துக்கள் இவை:

1. இந்தியா என்பது தில்லி மட்டுமேயல்ல.. மதுரை, மைசூர், புவனேஸ்வர், வடேதரா, குவாஹாட்டி, கோலாப்பூர் உள்ளடக்கியவை. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் நாட்டின் பிற பகுதிகளிலும் நடக்க வேண்டும்.

2. அடுத்தது, இந்திய நிர்வாகத்தின் செயல்பாட்டின்மை மற்றும் பொறுப்பின்மையைப் பற்றியது.

  • காணாமல் போன கோப்புகள்,
  • மீனவர் பிரச்னை
  • எல்லைப் பிரச்னை

என்று தூத்துக்குடி கப்பல்வரை விமர்சித்த மோடி முத்தாய்ப்பாய் சொன்ன கருத்துக்கள் இன்னும் வேடிக்கையானவை. 

'யாருக்கும் தேசப்பற்றில்லை! நிர்வாக கட்டுப்பாடோ, பொறுப்போ இல்லை! எந்தவொரு மக்கள் பிரச்னைக்கும் பொதுநலன் கருதியும், தொலைநோக்குப் பார்வையுடனும் உடனடியாகத் தீர்வு காண தயாராக இல்லாத நிலையில் இயங்குகிறது நமது நிர்வாக எந்திரம். இந்த மெத்தனப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார் மோடி.

மோடியின் இந்தக் கேள்விகளை நியாயப்படுத்தி தினமணி தனது '21.10.2013' அன்றைய தலையங்கத்தில் விளக்க உரை எழுதியுள்ளது. அதில் முத்தாய்ப்பு பகுதி இதுதான்:

"நரேந்திர மோடி எந்த சார்பைச் சேர்ந்தவராக இருந்தால் என்ன? அவரது கருத்தில் நியாயம் இருக்கிறதா? தேச நலன் இருக்கிறதா? என்பதுதான் முக்கியம். இன்றைய இந்திய இளைஞர்கள் வெளிப்படுத்தத் தெரியாமல், ஆனால், எழுப்ப நினைக்கும் இரண்டு கேள்விகளை நரேந்திர மோடி எழுப்பியிருக்கிறார். இவற்றுக்கான விடை காணப்பட்டாலே போதும் வலிமை மிக்க இந்தியா உருவாகிவிடும்!"

மோடியின் பேச்சும், தினமணியின் விளக்க உரையும் சில அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றன:

இந்தியா என்ற உப கண்டம் என்பது என்ன? வெறும் எல்லைகளா, நதியும், மலைகளுமான நிலப்பரப்பா? அல்லது உண்மையிலேயே பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறைகள் கொண்ட பன்முகத் தொகுப்பா? அதாவது இந்தியா என்பது உண்மையிலேயே இரத்தமும், சதையுமான மனிதர்கள் என்பது உண்மையா இல்லையா?

இதற்கான விடை இவர்களுக்கு சங்கடமளிக்கும்.

ஒருவேளை இப்படி கூறினால்.. ஒப்புக் கொள்வார்களோ என்னவோ?

இந்தியா என்பது, வர்ணாசிரம தர்மத்துக்கு உட்பட்டது. சிறுபான்மை இனத்திலும், மிக சிறுபான்மை இனமே இந்த நாட்டின் பேரசர்கள்.. ராஜாக்கள்! மற்ற இனங்கள் எல்லாமே அடிமைகள், அடியாட்கள், பணியாட்கள்! இந்த அளவுகோலை ஏற்காதவர்கள் எல்லாம் தாமாகவே செத்துப் போக வேண்டும். அல்லது தீயிட்டு உயிருடன் கொளுத்தப்படுவார்கள். கற்பழித்துக் கொல்லப்படுவார்கள். இனசுத்தகரிப்பு செய்யப்படும். 

இதுதானே குஜராத்தில் நடந்தது! இந்த கொலைப் பாதகத்தின் கைத்தேர்ந்த முதல்வன், அதி கொடூர கொலைஞன் என்ற மதிப்பெண்கள் பெற்ற கையோடு பிரதமர் வேட்பாளருக்கு மோடி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தவிர வேறு அதிகப்படியான தகுதி அவருக்கு என்ன இருக்கிறது?

சர்வதேச அளவில் புகழ்  பெற்ற போலி என்கவுண்டர்கள் எல்லாம் இனி மதுரையில், மைசூரில், புவனேஸ்வரத்தில், வடேதராவில், குவாஹாட்டியில், கோலாப்பூரில் என்று நாட்டின் பட்டித் தொட்டிகள் எல்லாம் நடக்க வேண்டும் என்றா தினமணி விரும்புகிறது?

குஜராத் அரசின் எந்திரப் போக்கும்,  மெத்தனமும் தானே ஆயிரக் கணக்கான இந்தியர்கள் கொல்லப்படக் காரணமானது! கோடிக்கணக்கான இந்தியப் பொருளாதாரம் தீக்கிரையானது! 

தனயன் எதிரே, தாயும், தாய் எதிரே மகளும் கற்பழித்து எரியூட்டப்படுவதற்கு இந்த மெத்தனப் போக்கும் செயல்படாமையும்தானே காரணமாக நின்றது! 

நிறைமாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், மனிதாபிமானம் மரத்துப் போய் இன ரீதியான அடையாளமாகத்தானே காவல் நிலையத்தின் எதிரே அவளைக் கற்பழித்து, வயிற்றைக் கிழித்து சிசுவை உருவி எரியூட்டி தகனம் செய்தது? 

துச்சாதனன்களும், துன்மார்கர்களும் பேயாட்டம் போட வைத்தது இதே மோடி ராஜ்ஜியத்தில்தானே! இதே மோடியின் தலைமையில்தானே?

கோப்புகள் காணாமல் போனது இருக்கட்டும்; அவை கிடைக்கலாம் அல்லது அந்த தவறுகளுக்காக ஆட்சி மாற்றங்கள் கூட நிகழலாம். ஆனால், ஆயிரக் கணக்கான மனிதர்கள் காணாமல் போனார்களே மீண்டும் திரும்பி வர முடியாமல்... அதற்கான பதில்தான் என்ன? 

தேசப்பற்று என்பது மனிதனை நேசிப்பதா? அல்லது  வெறும் மண்ணை நேசிப்பதா? தேசப்பற்று என்பது சொந்த நாட்டினரை நேசிப்பதா? அல்லது வெறும் எல்லைகளை நேசிப்பதா? இதற்கு மோடியும், அவரது பேச்சுக்கு விளக்க உரை எழுதிய தினமணியும் தரப்போகும் சமாதானம்தான் என்ன?

உண்மையிலேயே பெரியாரும், அண்ணாவும் கட்டிக்காத்த உயரிய மனித நேய சமத்துவ விழுமியங்களை, எண்ணற்ற தியாகங்களால் போராடிப் பெற்ற அந்த நன்னெறிகளை களங்கப்படுத்தி விட்டார் மோடி! அதுவும் பெரியார் - அண்ணா  பூமியில்.

இன வெறிப்பிடித்த நவீன ஹிட்லரான மோடியை உயிர்பிக்கும் பணிகளில் களமிறங்கி விட்டிருக்கிறது தினமணி ஜெர்மனியின் வரலாற்றை மறந்து போய்!

இனத்தை நேசிப்பது குற்றமாகாது! ஆனால், இனவெறிக் கொள்வது கிணற்றில் விழும் நிலையில் உள்ள ஒட்டகத்தின் வாலை இழுத்துப் பிடித்துக் கொண்டவன் போலாவான் என்கிறார்கள் நபிகளார்.
 
 

0 comments:

Post a Comment