NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Friday, October 23, 2015

வாழ்வியல் வழிகாட்டி- 'ஓயாமல் ஓதப்படும் திருமறை - திருக்குர்ஆன்'



திருக்குர்ஆன் இறைவனின் திருவேதம். மனிதர்களுக்கு வழிகாட்ட வந்த மறைநூல். இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபிகளாருக்கு அருளப்பட்ட புனித வேதம். ஜிப்ரீயல் (காப்ரீயல்) எனப்படும் வானவர் தலைவர், இறைவனிடமிருந்து இதைக் கொண்டு வந்தார். வரலாற்றுச் சூழல்களுக்கு ஏற்ப இது சிறுக சிறுக அருளப்பட்டது. நபிகளாரால் மனனம் செய்யப்பட்டது. அவர்களின் தோழர்களால் பதிவு செய்யப்பட்டது. நபிகளாரின் வாழ்நாளிலேயே சரி பார்க்கவும் பட்டது.

திருக்குர்ஆன்  114 அத்தியாயங்கள் கொண்டது. 30 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 14 நூற்றாண்டுகளாக மாற்றப்படாமல் அருளப்பட்ட நிலையிலேயே பாதுகாக்கப்பட்டும் வருகிறது. இதுவே இந்த இறைவேதத்தின் சிறப்புத் தன்மையாகும். திருக்குர்ஆனில் 6666 திருவசனங்கள் உள்ளன.

திருக்குர்ஆனின் மிகச் சிறிய அத்தியாயம் 'சூரே இக்லாஸ்'. மூன்று வசனங்கள் கொண்டது. 'அல்பகறா' எனப்படும் திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் மிகப் பெரியது. 286 வசனங்கள் கொண்டது.

ஆன்மிகம், வணக்க வழிபாடுகள், சமூகம், பொருளாதாரம், வரலாறு, அறிவியல், போர்கள், மனித உரிமைகள், குடும்பயியல், வாழ்வியல், சமூகயியல் என்று மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டும் திருக்குர்ஆன் மெய்ஞான அறிவுக் கருவூலகமாகும்.

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளிப்படாத காலத்தில் அதாவது 7 ஆம் நூற்றாண்டில் திருக்குர்ஆன் இறங்கியது. நபிகளார் எழுதப் படிக்கத் தெரியாதவர். அவரது வாழ்வின் 40 வயதுவரை இததகைய கருத்துக்கள் ஏதும் பேசாதவர். ஆனால், இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் வியக்கும் விதமாக திருக்குர்ஆன் நவீன அறிவியலை உள்ளடக்கியுள்ளது. இதுவே திருக்குர்ஆன் படைத்தவனால் அருளப்பட்டது என்பதற்கு போதிய சான்றாகும்.

 திருக்குர்ஆனில் இறங்கிய முதல் இறைவசனம், 'இக்ரா' ஓதுவீராக!(96:1-15) என்பதாகும். அதேபோல, இறுதியாக அருளப்பட்ட திருவசனங்கள், "இன்று உங்களுடைய தீனை .. வாழ்க்கை நெறியை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய 'தீன் - வாழ்க்கை நெறியாக' ஏற்றுக் கொண்டேன்" (5:3) என்ற வசனங்களாகும்.

திருக்குர்ஆன் 23 ஆண்டு காலம் ... காலச் சூழல்களுக்கு ஏற்ப அருளப்பட்டது. இதன் இறுதி வசனம் இறங்கிய நேரத்தில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்துக்கும் அதிகமான இறையடியார்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள். 10 லட்சம் சதுர மைல்கள் வரை இஸ்லாம் பரவியிருந்தது.

திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மூல மொழி அரபி. தகவல் தொடர்புக்கு மிகவும் பொருத்தமான வளம் கொண்ட மொழி இது. ஆழ்ந்த கருத்துச் செறிவு, உயரிய இலக்கிய நடை, இனிய ஓசை நயம் போன்ற எண்ணற்ற சிறப்புகள் கொண்டது. இன்றைய உலகின் 30 கோடிக்கும் அதிகமான மக்களின் தாய் மொழி. ஐ.நா.மன்றத்தின் அதிகாரப் பூர்வமான சர்வதேச அந்தஸ்து பெற்ற மொழி.



திருக்குர்ஆன் அருளப்பட்ட மூல மொழியிலேயே இன்றும் ஓதப்படுகிறது. சராசரி முஸ்லிமும் மூல மொழியிலேயே திருக்குர்ஆனின் சில வசனங்களையாவது மனனம் செய்திருப்பார்.

23 ஆண்டு காலம் சிறுகச் சிறுக அருளப்பட்ட திருக்குர்ஆன், தோல் துண்டுகள், கால்நடைகளின் எலும்புகள், பேரீச்சம் ஓலைகளில் எழுதிப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பணிக்காக மிகச் சிறந்த எழுத்தாற்றல் மற்றும் நினைவாற்றல் கொண்டவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இயல்பாகவே அரபிகள் நினைவாற்றல் மிக்கவர்கள். மனனம் செய்வதில் வல்லவர்கள். வரலாற்றுப் பூர்வமான மூதாதையர்களின் நெடிய பெயர்பட்டியலைக் கூட அவர்கள் தலைமுறை தலைமுறையாய் மனப்பாடமாக ஒப்பிவிப்பார்கள். நீண்ட கவிதைகளைக்கூட சரளமாக மனப்பாடம் செய்துவிடுவார்கள். இத்தகைய சிறப்பியல்புகள் கொண்டநபித்தோழர்களால் திருக்குர்ஆன் மனனம் செய்யப்பட்டது.

இதன் மூலம் திருக்குர்ஆன் 'ஒலி-வரி' வடிவங்களில் அட்சரம் மாறாமல் பதிவு  செய்யப்பட்டது. அத்தோடு பல நூறு நபித்தோழர்களால் மனனம் செய்யப்பட்ட திருக்குர்ஆன் தொழுகையில் ஓதப்படுவதும் அதன் பாதுகாப்பின் மற்றொரு காரணமானது.

நபிகளாரின் துணைவியார் அன்னை ஆயிஷா திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள்.

நபிகளாரின் மரணத்துக்குப் பிறகு அதாவது ஆறு மாதங்களுக்குள் திருக்குர்ஆனை நூல் வடிவில் தொகுக்கும் பணி தொடங்கியது.

நபிகளாருக்குப் பின் இஸ்லாமியப் பேரரசின் தலைவராக அதாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அபூபக்கர் இந்தத் திருப்பணியைத் துவக்கினார்கள். இதற்காக நபிகளாரின் பிரதம எழுத்தராக இருந்த நபித்தோழர் 'ஜைத் பின் ஸாபித்' தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பணியின் போது நபிகளாரின் காலத்தில் தோல்களிலும், எலும்புகளிலும், ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டு பத்திரப்படுத்தியிருந்த திருக்குர்ஆனின் மூல வடிவம் பாதுகாப்புடன் இருந்தது. அதேபோல, நபிகளாரிடம் நேரிடையாகவே திருக்குர்ஆனின் வசனங்களைக் கேட்டு மனனம் செய்திருந்த நூற்றுக்கணக்கான  நபித்தோழர்களும் உயிருடன் இருந்தார்கள்.



நபித்தோழர் ஜைத் பின் ஸாபித் அவர்களின் பொறுப்புணர்வு மிக்க மேற்பார்வையில், நபிகளார் அறிவித்திருந்த வரிசைக் கிரமப்படி தொகுக்கப்பட்டு .. நூற்றுக்கணக்கான நபித்தோழர்கள் முன்னிலையில் ஓதப்பட்டு... சரிபார்க்கப்பட்டு... ஒரே நூலாக ஆக்கப்பட்டது. இந்த தொகுப்பு 'முஸ்ஹஃப்' அதாவது 'ஒன்றிணைக்கப்பட்ட தாள்கள்' எனப்படுகிறது.

மூன்றாம் மக்கள் தலைவராக பொறுப்பேற்ற உஸ்மான் அவர்கள் காலத்தில் இந்த மூலப் பிரதியிலிருந்து பல பிரதிகள் எடுக்கப்பட்டு, பரந்து விரிந்திருந்த இஸ்லாமிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. இந்தத் திருப்பணியும் மூலப் பிரதியை தொகுத்த நபித்தோழர் ஜைத் பின் ஸாபித் அவர்களின் தலைமையிலான குழுவினரிடமே ஒப்படைக்கப்பட்டது.

இப்படி அருளப்பட்ட காலத்திலிருந்து ஒரு புள்ளியோ, எழுத்தோ மாறாமல், அருளப்பட்ட நிலையிலேயே திருக்குர்ஆன் இன்று உலகெங்கும் உள்ள மசூதிகளிலும், ஒவ்வொரு முஸ்லிமின் இல்லத்திலும் பல கோடிப் பிரதிகளின் வடிவில் பாதுகாப்புடன் இருக்கிறது.

உலக மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவவொரு நான்கு பேரிலும் ஒருவர் முஸ்லிம. இதன்படி சுமார் 200 கோடி முஸ்லிம்கள் தங்களின் தினசரி ஐவேளைத் தொழுகைகளில் திருக்குர்ஆனின் வசனங்களை ஓதுகிறார்கள். இந்தத் தொழுகை நேரங்களும் நாடு தோறும் மாறும். இவ்வாறு மாறிவரும் காலச் சூழலில் 24 மணி நேரமும் ஓயாமல் ஓதப்படும் திருமறை உலகில் திருக்குர்ஆன் மட்டும்தான்! திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட முதல் முதல் இறைவசனம் "ஓதுவீராக!" என்ற இறைவனின் கட்டளையைத் தொடர்ந்தே இன்றுவரை அது தொடர்ந்து ஓதப்பட்டு வருகிறது.

திருக்குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்தவர்கள் நபிகளாரின் காலத்துக்குப் பிறகும் தொடர்கிறார்கள். இவர்கள் 'ஹாபிஃஸ்கள்-திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள்' என்றழைக்கப்படுகிறார்கள்.

அதேபோல, திருக்குர்ஆனை மனனம் செய்வதற்கும், அதை அடுத்தவர்க்குப் பிழையில்லாமல் ஓதிக் கொடுப்பதற்கும் உலகெங்கும் 'மதரஸாக்கள்' எனப்படும் ஆயிரமாயிரம் கல்விக்கூடங்கள் உள்ளன.

அரேபிய மக்கள் பொதுவாகவே இலக்கியத்தில் ஈடுபாடு மிக்கவர்கள். அவர்களிடையே இசைவாணர்கள் அதிகம். புலமையை வெளிப்படுத்தக் களம் அமைத்துப் போட்டிகளும் நடத்துவார்கள். வெற்றிப் பெறும் கவிதைப் படைப்பு கஅபாவின் தலைவாயிலில் மக்கள் பார்வைக்கு தொங்கவிடப்படும்.

ஒருமுறை.

வழக்கப்படி .. முதல்தர வெற்றிக் கவிதை கஅபாவின் வாசலில் தொங்கவிடப்பட்டது. இந்த நேரத்தில் திருக்குர்ஆனின் 108 ஆவது அத்தியாயமான சூரே 'கவ்ஸர்' இறங்கியது. உடனே நபித்தோழர் ஒருவர் இந்த அத்தியாயத்தை ஓர் அட்டையில் எழுதி ஏற்கனவே கஅபாவில் தொங்கிக் கொண்டிருந்த கவிதைக்குப் பக்கத்தில் தொங்கவிட்டார்.

முதல் தரக் கவிதையைப் படித்த கையோடு மக்கள் 'கவ்ர்' அத்தியாயத்தையும் படித்தார்கள். வெறும் மூன்றே மூன்று திருவசனங்களில் நச்சென்று இருந்த அத்தியாயத்தைக் கண்டு வியப்படைந்தார்கள்.

இலக்கிய நடையழகு, ஓசை நயம், உள் வாங்கியிருந்த அழகிய கருத்துவளம் ஆகியவை பிரமிக்கத்தக்கவையாக இருந்தன. வருவோர், போவோர் உள்ளங்களை ஈர்த்தன. இந்த அத்தியாயத்துக்குப் பக்கத்தில் பெரும் கவிஞர்களில் சிலர் இப்படிக் கருத்து பதித்தார்கள்:

"மா ஹாஸா கலாமுல் பஷர்! - நிச்சயமாக இது மனிதனின் சொல்லாக இருக்கவே முடியாது!"




திருக்குர்ஆன் இஸ்லாத்தின் மூல ஆதார நூல். மனித இனத்துக்கு வாழ்வியலைப் போதிக்கும் இறைநெறி. படைத்தவனால்.. படைப்புகளுக்கு இறக்கியருளப்பட்ட வாழ்கைத் திட்டம்.

"நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கிறோம்!" - (54:17} என்கிறான் இறைவன் தனது திருவேதம் குறித்து.

உலகில் அறிவுரை வெறுவதற்கு இரண்டு வகையான வழிகள் உள்ளன.

ஒன்று, வரம்பு மீறி வாழ்ந்த சமுதாயங்கள் மீது இறங்கிய படிப்பினை தரும் தண்டனைகள்.

அடுத்தது, தகுந்த ஆதாரங்கள், உள்ளத்தை வருடிச் செல்லும் நல்லுரைகள், அழகிய அறிவுரைகள் போன்றவற்றால் பெறப்படும் நேர்வழி.

"முதல் வழியைவிட அறிவுரை பெறுவதற்கான இரண்டாவது வழி எளிமையாக இருக்க... பிறகு நீங்கள் ஏன் படிப்பினைப் பெறுவதில்லை? முரண்டு பிடிக்கிறீர்கள்? - என்ற வினாக்களை எழுப்பி இறைநெறியின் பக்கம் அழைக்கிறது திருக்குர்ஆன்.



தினமணி, 29 அக்டோபர், 2004 வெள்ளிமணியில் வெளியான கட்டுரை.



Saturday, October 10, 2015

ஆய்வுக் கட்டுரை: 'பசுவதை: சில சரித்திர சத்தியங்கள்!'



"பசு வதையைத் தடை செய்ய வேண்டும்!"-என்ற இந்து இயக்கங்களின் கோரிக்கை அரசியல் களத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிக் கொண்டே இருக்கிறது. இந்து பாசிஸ சக்திகள் தற்காலிக அரசியல் வெற்றி அடைந்துள்ள பிரதேசங்களில் இந்தக் கோரிக்கை மீண்டும் தீவிரமாகியுள்ளது. 

''பசுவதை இந்து தர்மத்திற்கு எதிரானது!''- என்றும், ''வேதங்கள் உட்பட இந்துமதப் பிரமாணங்கள் பசுவதையை அனுமதிக்கவில்லை''- என்றும் இந்துத்துவவாதிகள் பிரச்சாரத்ததை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

ஆனால், வேதகாலத்து ஆரியர்கள் பசுவைக் கொன்று அதன் இறைச்சியை புசித்தும் வந்தனர் என்பதுதான் உண்மை. வேதகால சமூக - பொருளாதாரத் துறையில் பசுவுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்து வந்தது.

வேளாண்மையோடு தொடர்புள்ள ஒரு நாடோடிக் கூட்டமாகத்தான் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர். விவசாயமும், கால்நடை வளர்ப்பும் அவர்களின் முக்கிய தொழில்களாய் இருந்தன. அவர்களுடைய முக்கிய சம்பாதியம் கால்நடைகள்தான் - குறிப்பாக பசுக்கள் கன்று காலிகள் அதிகம் பெருக வேண்டும் என்பதற்காக அவர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர் என்று வைதீக நூல்கள் கூறுகின்றன. 

யாகங்கள் நடக்கும்போது, புரோகிதர்களுக்குக் கூலியாக வழங்கியது பசுக்களைத்தான்! கன்று காலிகள் காரணமாக கோத்திரங்களிடையே போர் மூளுவதும் உண்டு. 

'கோத்திரம்' என்னும் சொல்கூட ஆரியர்களின் சமூக வாழ்வில் பசுவுக்கு இருந்த முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டும். (கோ - பசு) ஒரே ஆலயத்தில் தங்களுடைய 'கோ' க்களுடன் வசித்துவந்த ஆட்கள் கோத்திரம் எனப்பட்டனர்.

இவர்கள் பசுக்களையும், காளைகளையும் உணவுக்காக கொன்று புசித்து வந்தனர் என்று வேத இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. 

விருந்தினர்களுக்கு பசு இறைச்சியைப் பரிமாறி உபசரிப்பதை உயர்ந்த மரபாக அவர்கள் பின்பற்றி வந்தனர். பசு இறைச்சியை விடச் சிறந்த உணவு வேறில்லை என்பது அவர்களின் நம்பிக்கை.

வேதகால யாகங்களில் ஒரு பிரதான சடங்கு பசுவதைதான்!

யாகங்களில் மிகச் சிறந்த யாகம் 'சோம' யாகம்! ரிக் வேதத்தில் ஒன்பதாம் மண்டலம் முழுவதும் சோம யாகம் பற்றிய வர்ணணைகள் நிரம்பியுள்ளன. 

ஐந்து  ஹோமம் சோமயாகத்தின் முக்கியமான சடங்காகும். உயிர்ப் பிராணிகளை அக்னியில் அர்ப்பணித்தல் மட்டுமல்ல.. அவற்றின் இறைச்சியை யாக முறைப்படி ரிஷிகள் உண்ணவும் செய்தனர்.

பசு, ஆடு, காளை, குதிரை, எருமை, மான் போன்ற பிராணிகள்தான்  ஹோமத்திற்கு பயன்படுத்தப்பட்டன. யாகப் பசுவை மூச்சு திணற வைத்தோ, கழுத்தை நெரித்தோ கொல்வார்கள். கொன்ற பசுவை துண்டுகளாய் வெட்டி, ஒவ்வொரு துண்டாக எடுத்து  ஹோமத்தில் இடுவார்கள். மொத்தம் முப்பத்தாறு துண்டுகளாய் வெட்டி, ஒவ்வொரு துண்டையும் ரிஷிகளில் ஒவ்வொருவராய் எடுத்து   ஹோமம் செய்ய வேண்டும் என்பது நியதி. (ஐதரேய பிராமணம் 7 - 1) யாகப் பசுவின் எந்தெந்த பாகத்தை யார் யார்  ஹோமம் செய்ய வேண்டும் என்ற விபரத்தையும் வேத இலக்கியங்கள் தருகின்றன.



  • பிரஸ்தோ தாவ்  - தாடை எலும்பும் நாக்கும்,
  • உத்காதாவ்  -  வயிறு,
  • பிரதிகர்த்தாவ்  -  கழுத்து,
  • மைத்ராவருணன்  -  வலது தொடையின் கீழ்ப்பாகம்,
  • பிராம்ணாச்சம்ஸி  -  இடது தொடையின் கீழ்ப்பாகம்,
  • அச்சாவாகன்     -   வலது தொடையின் மேல்பாகம்,
  • அக்னீதரன்  -  இடது தொடையின் மேல்பாகம்,
  • நேஷ்டாவ்  -  வலது முன்காலின் கீழ்ப்பாகம்,
  • போதாவ்  -  இடது முன்காலின் கீழ்ப்பாகம்,
  • அத்ரேயன்  -  வலது முன்காலின் மேல்பாகம்,
  • ஸதஸ்யன்  -  இடது முன்காலின் மேல்பாகம்,
  • அத்வர்யூ  -  முதுகோடு சேர்ந்த வலப்பக்கம்,
  • பிரதிபிரஸ்தாவ்  -  முதுகோடு சேர்ந்த இடப்பக்கம்,
  • கிராவஸ்துதன்  -  கழுத்து இறைச்சி,
  • சுப்ரமணியன்   -  தலை

இதுமட்டுமல்ல, யாகப் பசுவின் வாலை 'கிருஹப்பத்னியும்', மூத்திரப் பையை 'கிருஹபதியும்' எடுக்க வேண்டும் என்பது விதி.

மேற்சொன்னவாறு பசுவை அணு அணுவாக வெட்டி, சுவைத்துண்ணும் சம்பிரதாயம் வேதகால இந்துக்களிடம் இருந்தது. புராதன கலாச்சாரத்திற்கு ஏற்ப பசு வதையைத் தடை செய்ய வேண்டும் என்று இன்றைக்கு கூறுபவர்கள், எதார்த்த சரித்திர சத்தியங்களை வெட்கமின்றி மறைக்கிறார்கள் என்றுதான் பொருள்.

வேதகால இந்து சமூகம் தாவர உண்ணிகளாய் இருக்கவில்லை என்பதும், இறைச்சி உணவுகள் அவர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் மேற்சொன்ன விபரங்களில் இருந்து தெளிவாகி விட்டதல்லவா? பிற்காலத்தில் தாவர உணவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதற்கும், பசுவுக்குச் சிறப்பான அந்தஸ்து அளிக்கப்பட்டதற்கும் காரணம் ஜைன - புத்த மதங்களின் செல்வாக்குதான்!

சிந்துநதி தீரத்தைக் கைப்பற்றிய ஆரிய கோத்திரங்கள் பிறகு படிப்படியாக கங்கைச் சமவெளிக்கும் பரவத் தொடங்கினார்கள். இரும்பின் உபயோகம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரியர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இரும்பு ஆயுதங்கள் கொண்டு காடுகளை திருத்தி, கழனிகளாக்கி, பெருமளவில் விவசாயம் செய்யத் தொடங்கினர். உழுவதற்கும், உண்பதற்கும் மற்றும் இதர தேவைகளுக்கும் கால்நடைகள் பெரிதும் தேவைப்பட்டது இந்தக் கால கட்டத்தில்தான்! இத்தகைய ஒரு சூழ்நிலைதான் பசுவுக்கு முக்கியத்துவத்தை தேடித் தந்தது! அதிக கன்றுகள் ஈன வேண்டும் என்பதற்காக பசுவுக்குப் பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டன. 

இவ்வாறு தொழில் ரீதியாகத்தான் பசுவுக்கு அன்று ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டதே தவிர, மத ரீதியான எந்தக் காரணமும் இல்லை. 



பண்டைக் காலத்தில் விவசாயத்திற்கு உழவுக் காளைகள் பெரிதும் தேவைப்பட்டன. இன்று அந்தப் பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிட்டன. உழவுக்கு காளைகளைப் பயன்படுத்துவதைவிட  டிராக்டர்களைப் பயன்படுத்துவதுதான் லாபகரமானது. சினைக் காளைகள் கூட அதிகம் தேவைப்படாத சூழ்நிலைதான் இன்று நிலவுகிறது. ஒரே ஒரு காளை மாட்டின் வீரியத்தை சேகரித்து, தகுந்த குளிர்சாதனத்தில் அதைப் பாதுகாத்து வைத்து, நூற்றுக்கணக்கான பசுக்களுக்கு அதைச் செலுத்தி கருத்தரிக்க வைக்கலாம். ஆகவே, பண்டைக்கால இந்தியாவில் அல்லது வேதகால இந்தியாவில் பசுவுக்கு இருந்த முக்கியத்துவம் இன்று இல்லை என்பதுதான் உண்மையாகும். 

இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இன்று பசுவதை கூடாது என்று குரல் கொடுப்பவர்கள் பசுவின் உயிரை மட்டுமே பெரிதாக நினைக்கிறார்கள். அவர்களுடைய இரக்கம், கருணை எல்லாம் பசுவின் மீது மட்டும்தான்! ஆடு, கோழி, முயல், மான் ஆகியவற்றின் மீது அவர்களுக்கு எந்த இரக்கமும் இல்லை. சிக்கனையும், மட்டனையும் மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டு, பசுவதைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போலி இந்துமதப் பிரியர்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும்.

கீசக வதம், துரியோதன வதம், வாலி வதம், தாருக வதம், சம்பூக வதம் என்று முறைகெட்ட வதங்கள் நடத்தி, அவற்றுக்கு ஆதரவாகவும் பேசும் வகுப்புவாத பாசிஸ்டுகள், பசுவதை எதிர்ப்புக்காக குரல் கொடுப்பது இந்து தர்மத்தைக் காப்பாற்ற அல்ல. மாறாக, இஸ்லாமிய சகோதரர்களின் நிம்மதியைக் குலைத்து. குறுகிய அரசியல் லாபம் தேடுவதே அவர்களின் நோக்கம்!



சிறுபான்மையினரை தேசவிரோதிகளாய் முத்திரை குத்த வகுப்புவாத பாசிஸ்டுகள் கண்டுபிடித்து வைத்துள்ள பல வழிமுறைகளில் ஒன்றுதான் பசுவதை எதிர்ப்பு என்ற கூக்குரலும்!

முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கூப்பாடு, சதுர்வர்ண - ஜாதீய முறையைப் புகழ்ந்துரைத்தல், விடுதலைப் போராட்டத்திலும், பொருளாதார - பண்பாட்டுத்துறைகளிலும் முஸ்லிம்களின் பங்களிப்பைக் குறைத்துக் காட்டுதல், முஸ்லிம் மக்களின் சமூக - அரசியல் இயக்கங்கள் மீது வகுப்புவாத முத்திரை குத்துதல், பாதுகாப்பு - பாராமிலிட்டரி, போலீஸ் ஆகிய துறைகளில் முஸ்லிம்களை ஒதுக்குதல், உருது மொழிக்கு எதிரான உணர்வை வளர்த்தல் போன்ற முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பாகமாகத்தான் பசுவதை எதிர்ப்பையும் பார்க்க வேண்டும். 

சில்லறை - மொத்த இறைச்சி வியாபாரத்தில் பெரும்பாலும் ஈடுபட்டிருப்பவர்கள் முஸ்லிம்களே! பசுவதை எதிர்ப்பு என்று குரல் எழுப்புவதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை நசுக்கிவிடலாம். அதேசமயம் இந்துக்களின் 'புனித விலங்கை' கொல்பவர்கள் என்னும் பொய்ப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்துவிடலாம்.

தீய நோக்கம் கொண்ட வகுப்புவாத பாசிஸ்டுகளின் இந்தப் பிரச்சாரம் சரித்திர சத்தியங்களுக்கு எதிரானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர் பிரபல வரலாற்று ஆய்வாளர். மனித உரிமைப் போராளி.  பேராசிரியர் மற்றும் முன்னாள் வரலாற்றுத்துறைத் தலைவர் கேரள பல்கலைக்கழகம்)

நன்றி: சமரசம் (மாதமிருமுறை - 16-31, 1995)