NewsBlog

Friday, June 26, 2020

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!



இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்
 
'''''''''''''''''''''''''‘’
 இரவெல்லாம் தூக்கம் வரவில்லை எனக்கு!

அப்படி என்னதான் செய்துவிட்டார்கள் ஜெயராஜும், பென்னிஸீம்?

இந்தளவு கொடுமை இழைக்குமா சொந்த நாட்டின் சொந்த போலீஸ்?

நம்பவே முடியவில்லை!

ஒரேயடியாக சுட்டு கொன்றுவிட்டிருக்கலாம்!

அந்த சித்திரவதை வலியின் வேதனை தெரியாமலிருக்க.. கண நேரத்தில் பாயும் தோட்டாவின் வலியோடு எல்லாம் முடிந்திருக்கும்?

துடிக்க.. துடிக்க.. கதற.. கதற.. அண்டை. அயலாரின் காதுகள் செவிடாகி போனதேன்?

எல்லாம் அறியாமையும், சுயநலமும் ஒருசேர வாய்க்க பெற்ற சுயநல மக்களின் ஜனநாயக அமைப்பில் அவரவர் கால்களில் படும்போதுதான் வலி தெரியும் போலும்!

குற்றவாளிகளாயினும், தண்டனை அளவீடு மிஞ்சுவதில்லை எங்கும்!

அரசு பதக்கங்களும், பாராட்டுகளும், பதவி உயர்வுகளும், சாதீய அமைப்புமான அரசியல் சமூக அமைப்பில் இந்த அதிகார அத்துமீறல்கள் கட்டுக்கடங்காதவை!

தலைக்காய்ந்தவர்களும், சாமான்யர்களும் வாழ தகுதியற்றவர் என்கிறதா இந்த அதிகார அத்துமீறிய அரசியல் அமைப்பு? அல்லது ஒவ்வொரு கணமும் இருப்புகளுக்கான போராட்டமும், விழிப்புணர்வூட்டும் மக்களுக்கான தலைமையும் அவசியம் என்கிறனவா சாத்தான்குளம் படுகொலைகள்?

ஒரு ஜார்ஜ் பிளாய்ட் மூச்சுவிட திணறி இனவெறியனால் கொல்லப்பட்டதற்கு ஒட்டுமொத்த அமெரிக்க சமூகம் திரண்டு நின்றதே தெருக்களில்! நீதி கேட்டு நடந்த அந்த உக்கிர மக்கள் திரள்முன் மண்டியிட்டதே அதிகாரம்! நம்மால் ஏன் செய்ய முடியவில்லை! காரணங்களின் முடிவில் தீர்வாய் தடைபோட்டு நிற்பது அதே தன்னலம்தான்!

வலி பொறுக்க முடியாமல், ஓங்கி.. ஓங்கி ஒலிக்கின்றன பெரியவர் ஜெயராஜின், தம்பி பென்னிஸின் ஓலங்கள்! அதோ தெரித்து சுவர்களில் ஒட்டிக் கொள்கின்றன பிய்ந்தபோன அவர்களின் முன்பின் மறைவான அவையங்களின் நுண்ணிய ரத்தம் தோய்ந்த தசைகள்!

இதே வேதனை, இதே தண்டனை ஆட்சியாளர் முதற்கொண்டு கடைநிலை அதிகாரம்வரை பெற வேண்டாமா? அவர்களின் ஒவ்வொரு அணுத்துகள்களும் அதேஅளவு வேதனையை அனுபவிக்க வேண்டாமா? அதுதானே சமநீதி! அதுதானே பாதிக்கப்பட்டவரின் இழப்புக்கான முதல்நிலை இழப்பீடாக இருக்க முடியும்? மீண்டும் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்கும்?  

நாகரீக சமூகம் என்று சொல்லிக்  கொண்டு ஒரு காட்டுமிராண்டி சமூகத்தின் நுழைவாயிலில் நிற்கிறோமோ நாம்!

இந்த அதிகார வெறிப்பிடித்த கொடுமைக்கார்ரகளைவிட கொரோனோ எவ்வளவோ மேல்!
''''''''''''''''''''''''''''

1 comment: