NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Thursday, August 29, 2013

உலகம் சுற்றும் பாமரன்: " தருமம் செய்தால்... கம்பி எண்ண வேண்டியதுதான்!"


நமது மக்களவையில் ஏழை – எளியோர்க்கான உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றியிருக்கிற இதேவேளையில், வடக்கு கரோலினாவின் அரசு ஏழை – எளியோர்க்கு உணவளித்தால் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்று சட்டமியற்றியிருக்கிறது.
வடக்கு கரோலினாவின் ‘டவுன்டவ்ன் ராலி’யில்,  (Downtown Raleigh) வார இறுதியில் பல ஆண்டுகளாக வீடில்லாத ஏழை – எளியோர்க்கு உணவளித்து சேவையாற்றுகிறது ஒரு தொண்டு நிறுவனம். ஏறக்குறைய 70 க்கும் குறையாத ஏழைகளின் பசியாற்றலுக்கு இது உதவுகிறது.
ஆனால், திடுப்பென்று நகர்புறத்து சட்ட பிரிவுகளைச் சுட்டிக் காட்டி காவல்துறை தொண்டு நிறுவனங்களின் சேவைக்கு தடைவிதித்துள்ளது. சட்டங்களை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. அப்படி சமய உணர்வுகளைப் பாதிக்காமல் தொண்டு செய்ய நினைப்போர் கிராமப்பகுதிகளைத் தேர்வு செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அம்பலப்படுத்தும் இந்த ஏழ்மை நிலையை மூடிமறைக்கவே அரசாங்கத்தின் நடவடிக்கைகள். இன்னும் இதைப்போன்ற ஏராளமான முட்டாள் சட்டங்கள் இருப்பதாக சமூக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். 

(ஆதாரம்: www.newsobserver.com)


சிறுகதை: "இந்த உதவி மட்டும் செய்யம்மா..!"




“அம்மா!”
கூப்பிட்டதாக நினைத்துனேயொழிய, பிறந்து இரண்டே நாளான குழந்தை எப்படி பேசும்?”
ஆனால், என் அம்மா திரும்பிப் பார்த்தது என்னவோ உண்மை. அழகிய வேலைப்பாடுகள் அமைந்த அவளது சேலையின் முந்தானை சிக்கிக் கொண்டதால்.. அதை விடுவித்துக் கொள்ளவே அம்மா திரும்பிப் பார்த்திருக்கிறாள்.
புடவையை விடுவித்துக் கொண்டே  என் பக்கமாக பார்த்த அம்மா கண்ணீர் சிந்தினாள்.
அந்த அமாவாசை இரவில் மழை பொழிந்து கொண்டிருந்ததும் நல்லதாய் போயிற்று. நடு இரவை தாண்டும் முன்பே அந்த தெரு வெறிச்சோடிப் போனது; தவறு செய்ய நினைப்போர்க்கு வசதியாய்.
நாங்கள் இறங்கி வந்த கார் ‘ஹெட்லாம்ப்’ வெளிச்சம் சரியாக குப்பைத் தொட்டியை நோக்கிப் பாய்ந்ததால்.. அம்மாவின் கண்களிலிருந்து உடைந்த வளையலாய் கண்ணீர் வழிவதைக் காண முடிந்தது. லேசான காற்றில் பக்கத்திலிருந்த தூங்கு மூஞ்சி மரத்தின் இலைகளிலிருந்து மழைத் துளிகள் என் மீது விழுந்தன. அதைக் கண்டதும் அம்மா பதறிப் போய் மழை நீர் என் மீது விழாமல் தடுத்துக் கொண்டாள்.
குப்பைத் தொட்டியின் அடியில் நிம்மதியாக, அமைதியாக.. வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்த சுண்டெலி பயத்தால்.. எகிறி குதித்து என் மீது பாய்ந்து எங்கோ மறைந்து போனது.

அந்த அதிர்ச்சியால் கண்ணை அகல விரித்து அம்மாவைப் பார்த்தேன்.
“என்னடா.. செல்லம்?” – என்பதைப் போல அம்மாவின் இமைகள் பட்டாம் பூச்சியாய் படபடத்தன.
“அம்மா! நீ எனக்கொரு உதவி செய்ய வேண்டுமம்மா!”
அவளுடைய கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டது.
“அம்மா! அந்த உதவியைக் கேட்பதற்கு முன் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டுமம்மா!”
அம்மா குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
அழகாய், அமைதியாய் இருந்த சூழலைக் கலைத்துக் கொண்டு குளிர்ந்த காற்று வீசியது. வேகமாக வீசிய காற்று இருட்டையும் வெட வெடக்க வைத்தது. விக்கி.. விக்கி அழுது கொண்டிருந்த அம்மாவின் குரல் காற்றுடன் கலந்து அந்த நடு இரவில் விநோத சப்தத்தை எழுப்பியது.
ஊரைவிட்டு ஒதுக்குப் புறமாய் இருந்த அந்தப் பகுதி மின் தடையால், முக்காடிட்டுக் கொண்டு மூலையில் அமர்ந்திருக்கும் விதவைக் கிழவியைப் போன்றிருந்தது.
காரின் ஹெட் லாம்புகள் அணைந்தும், எரிந்தும் அம்மாவை சீக்கிரம் வந்துவிடும்படி எச்சரித்தன. அணைந்து அணைந்து எரியும் அந்த வெளிச்சத்தில் கருப்பு புடவையுடன் அம்மா போட்டோ ‘நெகடிவ்’ போலத் தெரிந்தாள்.

“அம்மா! ஏனம்மா இப்படி அழுகிறாய்? இப்போது எவ்வளவு அழுதும் என்ன லாபம்? சில யுகங்களாய் இந்த விதை ஒரே மாதிரியாய் விழுகிறதம்மா. நீ எப்போதும் ஒரே விதமாய் … ஒரே விஷயத்தில் மோசம் போய்க் கொண்டிருக்கிறாய்.
குந்தியைப் பார்த்து இன்னொரு குந்தி, அவளைப் பார்த்து இன்னொரு சாந்தி. இவர்களைப் பார்த்தும்.. இன்னும் சிலர் ஏன் படிப்பினை பெற மறுக்கிறார்கள்? மறுபடியும் மறுபடியும் அதேவிதமாய் அதே தேனொழுகும் வார்த்தைகளில் எதற்கு ஏமாந்து போகிறார்கள்?
“உன்னை எங்கேயோ பார்த்ததைப் போலிருக்கே!”- என்ற வார்த்தையுடன் தொடங்கும் மோசடி அது.
“உன் பெயர் ரொம்பவும் அழகாய் இருக்கு. உன் பெயரைவிட நீ இன்னும் அழகாய் இருக்கிறாய்!”
“உன்னைப் பார்க்காமல் ஒரு நொடியும் என்னால் இருக்க முடியாது!”
“நீ இல்லாமல் வாழ்க்கையே இல்லை!”
“என் படிப்பு முடிந்ததும் என் அப்பாவிடம் சண்டைப் போட்டாவது.. அவர் சம்மதிக்கா விட்டால்.. வீட்டை விட்டு வெளியேறியாவது உன்னை மணந்தே தீருவேன்!”
“யார் தடுத்தாலும்.. நம் திருமணம் நின்றுபோக அனுமதிக்க மாட்டேன்!”
“ஏய்.. எப்படியிருந்தாலும் நாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள்தானே? ஒரே ஒரு..”
“…………………………................................................. “

“உன்னை கண்டிப்பாய் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லியும் நீ நம்பவில்லை இல்லையா? இனி உன்னுடன் பேசமாட்டேன் … போ..!”
“உன் அழகு என்னை பித்தனாக்கிவிட்டது!”
“நம் திருமணம் நடப்பதற்குள் நான் பைத்தியக்காரனாகி விடுவேனோ!”
“ஒரே.. ஒருமுறை.. ஒரே ஒரு முறை.. சம்மதிக்க மாட்டாயா?”
“பயம் எதற்கு? என்னை நீ நம்பவில்லையா?”
“உனக்கு அப்படி சென்டிமென்டாக இருந்தால்.. கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிவிட்டால் போச்சு!”
எப்போதும் இதே வசனங்களுடன்.. இதே வார்த்தைகளுடன் நீ எப்படிதான் மோசம் போகிறாயோ? மீண்டும்.. மீண்டும் இன்னொரு கர்ணன் எப்படிதான் பிறக்கிறானோ?
அம்மா! ஒரு நிமிட உங்கள் ஆவேசத்திற்காக.. இன்பத்திற்காக.. உணர்வுகளுக்காக.. மன இச்சைகள் குதிரையில் சவாரி செய்ததால்.. இன்னொரு கர்ணனாக வாழ்க்கையை ஆரம்பித்து.. அநாதை, அபலை, அப்பன்பேர் தெரியாதவன், விபச்சாரி மகன் என்ற பட்டங்களுடன் வாழ்க்கைச் சிறையின் கைதியாய் கிடந்து.. கிடந்து செத்து.. செத்துப் பிழைத்து..
இன்னும் ஹோட்டல்களில் டீ கப்புகளை கழுவி, டேபிளைத் துடைத்து, உடைந்த டீ கப்புகளுக்காக அடிபட்டு.. உதைப்பட்டு.. தையற்காரரிடம் காஜா – பட்டன் தைத்து, பெரிய மனிதர்களின் காலைப் பிடித்து பூட் பாலீஷ் போட்டு, கார் கண்ணாடிகளின் தூசு துடைத்து, அழுக்குத் துணியானாலும் என்னை நான் விற்றுக் கொண்டு, கொள்ளையனாய், கொலைக்காரனாய், இருட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு.. ம்.. ஏனம்மா.. நீ இப்படி மீண்டும் மீண்டும் மோசம் போய் இன்னொரு கர்ணனை உலகில் கொண்டு வருகிறாய்? நாளை உன்னுடைய அழகான வாழ்க்கைக்காக இன்று என்னை குப்பைத் தொட்டியில் வீசி எறிகிறாய்?
“நீ இங்கிருந்து சென்றுவிடும் அடுத்த நிமிடத்திலிருந்து என்னைக் கண்டெடுத்து மீட்கும் மனிதனை எதிர்பார்த்து காத்திருக்கும் நான்..
அம்மா! எல்லோருக்கும் கர்ணனுக்குக் கிடைத்ததைப் போல ஒரு ராதையம்மா கிடைப்பாளா .. அன்புடன் வளர்த்து ஆளாக்குவதற்கு? ஒருவேளை அதிர்ஷ்டவசமாக அப்படி கிடைத்தாலும் எனக்கு நினைவு தெரியும்வரை பரவாயில்லை! அதனபிறகல்லவா என் கதை ஆரம்பிக்கும்!
பள்ளிக்கூடம் சென்றால்..
“உன் அப்பா – அம்மா உன்னை பெற்ற சொந்த அப்பா – அம்மா இல்லையாமே!”
“நீ குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டாயாமே!”
“பாவம்! உன்னைப் பெற்றவள் எங்கிருக்கிறாளோ?”
ஏதாவது விசேஷங்களுக்குச் சென்றால்..
“இந்தப் பையனைத்தானே குப்பைத் தொட்டியிலிருந்து நீங்கள் எடுத்து வளர்த்தது?”
“உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகும் இவனை உங்கள் சொந்த மகனாய் சமமாய் நடத்துவது உங்கள் பெருந்தன்மை என்றுதான் சொல்ல வேண்டும்”

என்னை.. என்னை வளர்க்கும் ராதையம்மாவை விரட்டி விரட்டி இம்சை செய்யுமே இந்த சமூகம்.. இவற்றையெல்லாம் புறக்கணித்து என்னை என்னதான் கவனித்துக் கொண்டாலும் என் இதயம் ஓட்டில் பதுங்கிக் கொண்ட நத்தையாக அல்லவா இருக்கும்! நான் வெளியே வலம் வராதவாறு உலகம் என்னை அணு அணுவாய் குத்திக் கொல்லுமே!
சரி போகட்டும்! அதன் பிறகாவது எனக்கு நிம்மதி கிடைக்குமா?
“எல்லாம் பிறந்த வழியைப் போலத்தான்! எவளோ பெத்துப் போட்டது! இவனோட புத்தியும் அப்படிதானே இருக்கும்!”
“காதுகளிரண்டையும் பொத்திக் கொண்டு எவ்வளவு நாளம்மா நான் வாழ்வது?
ஒரு கணம் உங்கள் சுகத்துக்காக.. ஒரு ஜீவன் வாழ்க்கை முழுவதும் அநாதையாக வாழ்வது எவ்வளவு சிரமமானது என்று  கொஞ்சம் யோசித்துப் பாரம்மா!
இந்த அநாதை ஓர் ஆணாக இருக்கும்போதே இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமென்றால்.. இன்னும் பெண்ணாக இருந்துவிட்டால்.. அந்த வாழ்க்கை நாய்கள் கிழித்துப் போட்ட துணியைப் போல் அல்லவா இருக்கும்!
இனியாவது விழித்துக் கொள்ளம்மா! இனி எப்போதும் ஆணிடம் ஏமாற மாட்டேன் என்று என் மீது சத்தியம் செய்யம்மா!”
பலாத்காரமாகவோ அல்லது ஏமாற்றப்பட்டோ ஒரு பெண், பிள்ளையைப் பெற்றுக் கொண்டால்.. அவளை வாழ்க்கையின் இறுதி எல்லைக்கே விரட்டியடிக்கும் சமூகத்தின் போக்கு சீக்கிரம் மாறாதம்மா. அதனால், முதலில் நீ மாற முயற்சி செய்!
இக் குழந்தையை நான்தான் பெற்றேன். இதை நானே வளர்த்து ஆளாக்குவேன். சமுதாயம் என் மீது வீசும் கற்களைச் சட்டை செய்யேன்!” – என்று உறுதியுடன் இரு அம்மா.

ஒரு குந்தி ஒரு கர்ணனை தைரியமாக வளர்க்க ஆரம்பித்தால் இன்னொரு குந்தி இன்னொரு கர்ணனை தன் குழந்தைதான் என்று உரத்துச் சொல்லுவாள். சிறிது.. சிறிதாக இந்த சமுதாயத்தின் வாயை மூட வைக்கலாமம்மா!
அம்மா! உனக்குத் தெரியுமா? இந்த சமுதாயத்திற்கு மறதி அதிகம் என்று? தன் விரல் சுட்டிக்காட்ட மற்றொரு நல்ல ‘ஆள்’ கிடைத்தால்.. சட்டென்று முந்தைய ‘ஆளை’ விட்டுவிடும். நான்றாக யோசியம்மா..!
அம்மாவிடம் மனம்விட்டு நான் அந்யோன்யமாக பேசிக் கொண்டிருந்தபோது,
“பாம். பாம்..” – என்று காரின் ஹாரன் ஒலித்தது. அது பத்தாவது முறையோ என்னவோ.. கணக்கில் வைத்துக் கொள்ள முடியவில்லை. நாங்கள் வந்த காரில் அமர்ந்து கொண்டு அம்மாவுக்காக காத்திருந்தார் தாத்தா. அம்மா என்னை விட்டு விட்டு இன்னும் திரும்பாததால்.. ஹாரனை ஒலித்துக் கொண்டிருந்தார்.
அம்மாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. அவளுடைய கண்கள் கவலையாய், பயத்துடன் காரின் பக்கமும்.. குப்பைத் தொட்டியின் பக்கமும் மாறி மாறி பார்த்தன.
அம்மா! தாத்தா.. இதைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளதோ இல்லையோ.. அதனால் உன் தந்தை என்றே சொல்கிறேன். அம்மா உன் தந்தையார் கூப்பிடுகிறார். புறப்படம்மா.. ஆனால், நீ புறப்படும்முன் எனக்கொரு உதவி செய்துவிட்டு போம்மா!
அம்மா புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்தவாறு என்னைப் பார்த்தாள் கடைசியாக..
“அம்மா! இந்த குப்பைத் தொட்டியின் பக்கத்திலிருக்கும் அதோ அந்த பெரிய பாறங்கல்லை எடுத்து என் தலை மீது போட்டுவிடம்மா!
ப்ளீஸ்..! எனக்கு இந்த ஒரே ஒரு உதவியை செய்துவிட்டு போம்மா!
விக்கி.. விக்கி அழுது கொண்டிருந்த அம்மாவுக்கு என்னவானதோ தெரியவில்லை. குப்பைத் தொட்டிக்குள் குனிந்து என்னை தூக்கிக் கொண்டு மார்போடு அணைத்துக் கொண்டாள். அதன்பிறகு விறுவிறு என்று காரை நோக்கி நடந்தாள்.
அதற்குள் வானமே இடிந்து விழுவதைப் போல இடி இடித்தது. தட்.. பட் டென்று மழைத்துளிகள் பூமியை துளைத்தெடுப்பதைப் போல் கொட்டின.
சோ வென்று மழை பிடித்துக் கொண்டது.
நான் மழையில் நனையாதவாறு சர்வ ஜாக்கிரத்தையுடன் முந்தானையால் போர்த்தி மார்புடன் இறுக அணைத்துக் கொண்டு அம்மா நடந்தாள்.  

தெலுங்கில்: வி.பிரதிமா.
தமிழில் : இக்வான் அமீர்
(சமரசம், மே 16-31, 1996 இல், பிரசுரமான சிறுகதை)

Wednesday, August 28, 2013

நேர்காணல்:“ஒளியிழந்த நாட்டின் உதய ஞாயிறுகள்!”

1996 ஆம் ஆண்டு நவம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் பீகார் தலைநர் பாட்னாவில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (SIO)  வட இந்திய அளவிலான மாநாடு நடைபெற்றது. “அறியாமையிலிருந்து… பேரறிவை நோக்கி..” – என்பது மாநாட்டின் மையக் கருத்தாகும். அந்த மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க நான் சென்றிருந்தேன். அப்போது அந்த இளைஞர்களின் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும், இறையச்சத்தையும், பிரச்னைகளை ஆழ அகலத்துடன் வாதிக்கும் திறமையையும் கண்டபோது, “ஒளியிழந்த நாட்டின் உதய ஞாயிறுகள்!” என்னும் பாரதி வரிகள் நினைவுக்கு வந்தன. எஸ்ஐஓவின் அன்றைய அகில இந்தியத் தலைவர்  ‘மலிக் முஃதஸிம் கானை சந்தித்து கண்ட நேர்காணலின் முக்கியப் பகுதி இது:

கேள்வி: பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இது போன்ற மாநாடுகளால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று கருதுகிறீர்கள்?

பதில்: 1986-இல், அகில இந்திய மாநாடு பெங்களூரில் நடந்தது. அது அமைப்பின் ஆரம்ப கட்டம். அமைப்பை வலுப்படுத்துவதற்கும், பரவலாக்குவதற்கும், மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கும் இத்தகைய மாநாடுகள் நடத்தப்படுகின்றன. முஸ்லிம் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் எங்கள் செய்தியை சமர்பிக்கவே இத்தகைய கூட்டங்களை கூட்டுகின்றோம். இது போன்ற மாநாடுகளால் மனித இனத்தின் அமைதி, முன்னேற்றம், ஈடேற்றம் இஸ்லாத்தின் மூலமே சாத்தியம் என்று திட்டவட்டமாக எடுத்துரைக்கின்றோம். இதனால் நல்ல பலன் கிடைத்ததை பெங்களூர் மாநாடு நிரூபித்தது. நாடு முழுக்க செய்தி பரவியது. கூடவே நாட்டின் பல பகுதிகளில் எஸ்ஐஓவின்  புதிய கிளைகள் ஏற்பட்டன. அமைப்பு வலுவான சக்தியாய் வளர்ந்தது. அதற்கு பிறகு வட இந்திய மாநாடு இப்போது நடைபெறுகிறது. இங்குதான் இந்திய முஸ்லிம்களில் 60 விழுக்காடு பேர் வசிக்கின்றனர். முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் எங்கள் செய்தி பெரிய அளவில் பரவவே இந்த ஏற்பாடு.

கேள்வி: இதுவரை எஸ்ஐஓ சாதித்தது என்ன?

பதில்: நிறைய சொல்லலாம். ஆனாலும் அது சுயதம்பட்டம் ஆகிவிடுமோ என்று விளம்பரப் படுத்தப்படுவதில்லை. இன்றைய இந்தியாவில் கல்வி அமைப்பு, சமூக அமைப்பு, அரசியல் அமைப்பு எல்லாமே சீர்குலைந்துள்ளன. இந்தச் சீர்க்குலைவு மாணவர்கள், இளைஞர்களின் வாழ்விலும் பிரதிபலிக்கிறது. வன்முறை, ஆபாசம், போதை மருந்துக்களுக்கு அடிமைப்படுதல் என்று பல ஒழுக்கக் கேடுகளுக்கு மாணவர்கள் ஆளாகி வருகின்றனர். சமூகப் பொறுப்பின்மை, இலட்சியப் போக்கின்மைகளுக்கு அவர்கள் பலியாகியுள்ளனர். இந்தச் சூழலில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே ஒழுக்க மாண்புகள் மேலோங்கவும், அவர்கள் கல்வியில் சிறப்புற்று விளங்கவும், தத்தமது திறமைகளை வெளிப்படுத்தவும், சமூக நல்லிணக்கம் மலரவும் எஸ்ஐஓ முயன்று வருகின்றது. இதற்காக கடுமையாக உழைக்கிறது. கொடுமைகளையும், தீமைகளையும் தடுக்கப் பாடுபடுகிறது. உலக அழகிப் போட்டிகள் போன்ற ஆபாசங்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்காக எதிர்ப்பு ஊர்வலங்களையும் நடத்தினோம். இன்று எஸ்ஐஓ இளைஞர்கள் வரதட்சணைக்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள். பல முக்கிய சந்தர்பங்களில் எஸஐஓ மகத்தான பங்கு வகித்தது. ஷரீஅத் பாதுகாப்பு போராட்டத்தில் எஸ்ஐஓ முன் வரிசையில் நின்றது. பாபரி மஸ்ஜித் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பிரச்னைகளில் அநீதிக்கு எதிராக குரல் எழுப்புகிறோம். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

கேள்வி: இன்று எஸ்ஐஓ எதிர்நோக்கியுள்ள சவால்கள் என்ன?

தில்: கல்வியின்மை, வேலையின்மை, வகுப்புவாதம், நமது பண்பாடுகளைச் சீரழிக்க முயலும் செய்தி ஊடகங்களின் போக்கு, சமூக அநீதிகள் போன்ற பலதரப்பட்ட பிரச்னைகள் சவலாய் நம் முன் உள்ளன.

கேள்வி: சில ஆயிரம் இளைஞர்களை வைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய நாட்டில் எப்படிச் செயல்படப் போகிறீர்கள்?

பதில்: நாங்கள் மிகப் பெரிய சக்தி என்று எப்போதுமே சொன்னதில்லை. எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறோம். ஓர் அறை நிறைய இருக்கும் இருட்டை ஒரு சின்ன மெழுவர்த்தியின் ஒளி விரட்டி விடுகிறதல்லவா? அதுபோலவே, நாம் தூய உள்ளத்துடன் செய்யும் சிறிய முயற்சிகளுக்குக் கூட இறைவன் பெரும்பலன்களைத் தருவான்!

கேள்வி: எந்த முஸ்லிம் நாட்டிலிருந்து இந்த மாநாட்டிற்கு நிதி உதவி கிடைத்தது?

பதில்: (சிரிக்கிறார்) இது தவறான .. ஆதாரமற்ற கருத்தாகும். எங்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நிதியை நாங்களே பகிர்ந்து கொள்கிறோம். இந்த நாட்டில் நல்ல காரியங்களுக்கு நிதி திரட்ட எந்தக் குறையும் இல்லை என்றே கருதுகின்றேன். எங்கள் உறுப்பினர்கள், அனுதாபிகள் மற்றும் பொது மக்கள் என்று பல தரப்பினரும் இப்பணியில் பங்கு கொள்கின்றனர்.

கேள்வி: ஆர்எஸ்எஸ் போல எஸ்ஐஓ வும் ஷாகாக்கள் (ஆயுத பயிற்சி வகுப்புகள்) நடத்துகிறதா?

பதில்: நாங்கள் அது போன்ற எந்தப் பயிற்சியையும் அளிப்பதில்லை. அதற்கான செயல்திட்டமும் எங்களிடம் இல்லை. நம் தாயகமாம் இந்தியத் திருநாட்டில் இறையச்சத்தின் அடிப்படையல் ஒரு சமூக அமைப்பை.. மறுமலர்ச்சியை கொண்டு வர விரும்புகின்றோம். அது கருத்துப் பரிமாற்றம், செய்திப் பகிர்வு மூலமே சாத்தியம் என்றும் நம்புகின்றோம். இந்தச் சமுதாயப் புரட்சியில் ஏழ்மையும், வறுமையும் ஒழிய வேண்டும்; மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும்; சமூக நீதி மலர வேண்டும்; சத்தியம் மேலோங்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். 

இதற்கு ஆயுதப் பயிற்சியோ, ஷாகாக்களோ தேவையில்லை. வன்முறையின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பது எங்களின் திடமான நம்பிக்கை. எங்களின் அழைப்பும், செய்தியும், கண்ணோட்டமும் பரந்தது; உலகளாவியது. அப்படியிருக்க.. எஸ்ஐஓ வையும், ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிட்டுப் பேசுவதே தவறு என்றே கருதுகின்றேன். எங்கள் அழைப்பு மனிதர்களை ஒன்றுப்படுத்துவது. ஆனால், ஆர்எஸ்எஸ்ஸினதோ மக்களைப் பிரிவினைப்படுத்துவது! ஆக இந்த இரண்டு அமைப்புகளின் நோக்கம், செயல்பாடு மற்றும் வழிமுறைகளில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது. 
(சமரசம், ஜனவரி 1-15, 1997 பிரசுரமானது)

Tuesday, August 27, 2013

இளைய சக்தி:"புத்துலகு சமைக்கும் சிற்பிகள் எங்கே?"

இளமை நாட்டின் முதுகெலும்பு போன்றது. நாட்டுப்பற்று, நல்லொழுக்கம், அறிவாற்றல், நேரந்தவறாமை, கடும் உழைப்பு போன்ற அருங்குணங்கள் கொண்ட இளைஞர்கள் நிரம்பிய நாடு முன்னேற்றத்தின் வானம் தொடும். உற்சாகம், உத்வேகம், ஆவேசம் கலந்த கூட்டுக் கலவைதான் இளமை. விண்ணையும், மண்ணையும் அளந்திடத் துடிக்கும் பருவமிது. வாழ்வின் வசந்தம்கூட. இதை சீராய் அமைத்துக் கொண்டால் ஆனந்தம். இல்லையென்றால்.. வாழ்க்கை நரகம்தான்!

இன்றைய கல்லூரி நிலவரங்கள் மகிழ்ச்சி தரக்கூடியவையாய் இல்லை. நினைத்தாலே சோகம் கப்பிக் கொள்கிறது. நாட்டில் 120-க்கும், மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளும் உள்ளன. இக்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களின் தரம் படு மோசமாக இருப்பதற்கு ஜான் டேவிட் போன்ற மாணவர்கள் இறந்தகால உதாரணங்கள். அடிதடிகளும், மூர்க்கத்தனங்களும் கொண்ட இளைய தலைமுறை இங்கு உருவாக்கப்படுகிறது.

இந்திய விடுதலைப் போருக்கு களப்பலியாகிப் போனோரின் பட்டியலில் எண்ணற்ற இளைஞர்களும் இடம் பெற்றுள்ளனர். அன்றைய பெருந்தலைவர்களின் வழிகாட்டுதலில் தங்களின் இன்னுயிரை இவர்கள் அர்ப்பணித்தார்கள். ஆனால், இன்றோ சரியான தலைமையும் இல்லாமல், சீரிய வழிகாட்டுதலும் இல்லாமல் இளைய சமூகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

1982 – இல், 'பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலும்' 1983 – இல், 'அலிகர் பல்கலைக்கழகத்திலும்' நடந்த வன்முறைகள், கலவரங்கள் காரணமாய் அந்த கல்விச்சாலைகளையே மூட வேண்டி வந்தது. திரையரங்கில் சலுகைக் கட்டணம் ரத்துச் செய்யப்பட்டதற்காக லக்னோ மாணவர்களும், காண்டீனில் ‘சமோஸா’ அளவு சிறுத்துவிட்டதற்காக ஜெய்பூர் மாணவர்களும் போராட்டங்கள் நடத்தினர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மகளிர் ஹாஸ்டல் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டதற்காகவும் ஒரு போராட்டம் வெடித்தது. மைசூர் மாநிலத்து கல்லூரி ஒன்றில் இடம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் ஒரு மாணவர் அதன் முதல்வரை கத்தியால் குத்தியதுவரை மாணவர்களின் இலக்கில்லாத பயணங்கள் நீளுகின்றன. இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, "நம் கல்வி நிலையங்களில் ‘கல்வி’ என்பதன் மதிப்பு சரிந்து போய் மலிவான விஷயங்களுக்கான முக்கியத்துவம் உயர்ந்து போனதே!” – என்று திட்டவட்டமாய் சொல்லலாம்.


மாணவர்கள் இனம், மதம், அரசியல் கட்சிகள் என்று பாகுபட்டுப் போய் பல குழுக்களாய் பிளவுண்டு கிடக்கிறார்கள். கல்லூரி தேர்தல்கள்கூட இந்த பிரிவினைக்கு பிரதான காரணமாய் விளங்கின்றன. அரசியல் கட்சிகளை மிஞ்சிவிடத் துடிக்கும் விளம்பர, பிரச்சார யுத்திகள் அசர வைப்பவை. காட்டுப்புரவிகளாய் திசை கெட்டு ஓடும் மாணவர்கள். அந்த ஓட்டத்தில் சிக்கிக் கொள்ளும் மாணவர்கள் சீர்கெட்டுப் போகும் பரிதாபநிலை. 

துரதிஷ்டவசமாக நமது கல்வி அமைப்பும் லோகாயதவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கற்ற கல்வி வாழ்க்கைக்கு உதவாதது.. வேலை வாய்ப்புகளில் விலை போவது.. இவைகூட கல்வியின் மீதுள்ள ஆர்வத்தை பெருமளவில் குறைத்துவிடுகின்றன.


அரசியல்வாதிகள் சுய லாபங்களுக்காக ஏவிவிடும் அம்புகளாய் மாணவர் அமைப்புகளை பயன்படுத்துகின்றனர். வாக்குரிமை 18 வயதாக, குறைக்கப்பட்டதும் இதற்காகத்தான். அரசியல் சுற்றுச் சூழலில் வளர்ந்த மாணவர்கள் சுயமாய் சிந்திக்கவும், முடிவெடுக்கவும் இயலாதவர்களாய் உள்ளனர். 

பிரிட்டீஷார் ஏற்படுத்திய கல்வி அமைப்பை இன்னும் நாம் சுமந்து கொண்டிருக்கின்றோம். ‘குமஸ்தாக்களை’ உருவாக்கும் இந்த கல்விமுறை சமூக பிரச்னைகளை தீர்க்க உதவாது. ஒருமுறை இந்திரா காந்தி அம்மையார் குறிப்பிடும்போது, “சுதந்திரத்திற்குப் பிறகு நாம் செய்த பெருந்தவறு, நம் கல்வி அமைப்பை மாற்றி அமைக்காததே!” – என்றார். இதனால் கல்வியும், வாழ்வும் அந்நியப்பட்டு விட்டன.

நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால்.. அதற்கு தக்க கல்விமுறையும் அமைய வேண்டும். இரண்டாம் உலகப் போரில் படுமோசமாய் பாதிக்கப்பட்ட ஜப்பான், உலகமே வியக்கும் வண்ணம் வளர்ச்சியடைந்ததற்கு பின்புலமாய் நிற்பவர்கள் அந்நாட்டு கல்வி அமைப்பினால் உருவான மாணவர்கள்தான்.

உச்சந்தலையிலிருந்து.. உள்ளங்கால்வரை மேற்கத்திய மோகம் இன்று நம் மாணவர் சமுதாயத்தை பிடித்தாட்டுகிறது. வெறும் ‘தலைவர்’ என்ற அந்தஸ்து பெற வேண்டும் என்பதற்காக.. சக மாணவர்களை ‘ராகிங்’ என்ற பெயரில் படாதபாடு படுத்துதல், ஆசிரியர்களை கிண்டலடித்தல், தேவையற்ற பிரச்னைகளில் கவனத்தை சிதறடித்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதை மருந்துகளை உட்கொள்ளல் போன்றவை நச்சுக் கொடிகளாய் கல்லூரி வளாகங்களில் பிண்ணிப் படர்ந்துள்ளன.

1990 ஆம், ஆண்டு உஸ்மானியா பல்கலைக கழகத்தில் டெக்னாலஜி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சிலர் ‘நீலப்படம்’ பார்ப்பதில் தொடங்கி கடைசியில் பெண்களையும் அறைகளுக்கு அழைத்து வருமளவு விபரீதம் நடந்தது. ஆபாசமான புத்தகங்கள், நிர்வாணப்படங்கள் அதிகமானகிப் போனதே இதன் காரணம். இதற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனையளிக்க வேண்டும். அற்பத்தனமான அபராதங்களும், சிறிய அளவிலான தண்டனைகளும் போதாது.


மாணவர்களை வழி நடத்தும் பொறுப்பும், அவர்களுக்கு நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்துத் தரும் பொறுப்பும் இன்றியமையாதது. அறிவுரைகளும், நல்ல தோழமையும் ஆரோக்கியச் சிந்தனையைத் திறக்கும் கதவுகளாகும்.
அதுபோலவே, ஆசிரியர் – மாணவரிடையே புனிதமான உறவு நிலவ வேண்டும். ஒழுக்கத்தில் தலை சிறந்த ஆசிரியர் மாணவர்களுக்கு கலங்கரை விளக்கு போன்றவர். மாணவர் உள்ளங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவர். 

நல்ல நூல்களை படிக்கும் பழக்கம் மாணவர்களை உயர்ந்த எண்ணங்களின் பக்கம் செலுத்த உதவும். அதுபோலவே, மாணவரிடையே எழும் வினாக்கள், ஐயங்களை தலைசிறந்த அறிஞர் பெருமக்கள், பல்வேறு துறைச் சார்ந்த வல்லுனர்களைக் கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். அவர்களின் மனதில் எழும் நிராசைகளையும், அவநம்பிக்கைகளையும் போக்க முயல வேண்டும். இன்னும் சமூக நலப்பணிகள், விளையாட்டுகள், சொற்பொழிவுகள், எழுத்துப் பணிகள் என்று கவனம் செலுத்த ஊக்கமளிக்க வேண்டும். சக மாணவரிடையே நட்பு, ஆத்மாபிமானம், வாய்மை, நாட்டுப்பற்று ஆகியவை பெருகும் வண்ணம் சூழல்களை ஏற்படுத்தித் தர வேண்டும். 

உழவன் திட்டமிட்டு வேளாண் களத்தை நன்றாக உழுது, நாற்று நட்டு, நீர்ப் பாய்ச்சி, களையெடுத்து, உரமிட்டு, பாதுகாத்து, சாகுபடியின் பலா பலன்களை எடுப்பதைவிட மிக முக்கியமான .. மிகவும் அவசியமான… அதிலும் கட்டாயமான பணி இது. 

இப்படி வளரும் மாணவர்கள் நிச்சயம் புத்துலகு சமைக்கும் சிற்பிகளாய் பரிமளிப்பார்கள். இந்த தேசமும் உலக அரங்கில் கண்ணியத்துடனும், பெருமையுடனும் தலைநிமிர்ந்து நிற்கும்.

Sunday, August 25, 2013

Saturday, August 24, 2013

சிறப்புக் கட்டுரை: 'நெறிக்கப்படும் ஜனநாயகக் குரல்வலை!'



ஜனநாயக அமைப்பில் தேர்வு செய்யப்பட்ட முஹம்மது மோர்சியின் ஆட்சி கவிழ்ப்பும் அதைத் தொடர்ந்து இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பின் ஆதரவாளர்களின் படுகொலைகளும் சர்வாதிகாரி முபாரக் அடக்குமுறையின் மறு மீட்சி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
"ராணுவத்தின் சதியினால் ஜுலை 3 இல், பிரதமர் மோர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது ராணுவ ஆட்சி திரும்பவும் ஆட்சி கட்டிலில் ஏற்றப்படதான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!” - என்கிறார் கெய்ரோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியரான சயிஃப் அப்துல் பதாஹ்.
".... சர்வாதிகாரி முபாராக்கின் கொடுங்கோலாட்சிக்கு மீண்டும் நாங்கள் திரும்பியிருக்கிறோம். இனி ஊர்வலங்கள், போராட்டங்கள் எல்லாம் இரும்பு கரம் கொண்டு நசுக்கப்படும். அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவார்கள். அரசியல்வாதிகளின் வீடுகளில் அதிரடி சோதனைகள்.. கைதுகள் என்று தொடரும். நெருக்கடி நிலைமை என்ற பெயரால் ஒவ்வொரு தனிநபரும் இனி சோதனைக்குள்ளாக்கப்படுவார்!” – என்கிறார் அவர் தொடர்ந்து.
ராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்கிய இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பினர் உட்பட மோர்சியின் பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஆக.14 இல், கெய்ரோவின் 'ரபாஆ அல் அதாவிய்யா' சதுக்கத்தில் ஜனநாயக முறையிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காக்கைக் குருவிகள் போல ராணுவத்தால் சுட்டு  வீழ்த்தப்பட்டது பழைய செய்தியானது.
இந்த படுகொலைகளைத் தொடர்ந்து ஒரு மாதம் தொடர்ந்து.. முபராக்கின் ஆட்சி நிலைக்கொள்ளும் விதமாக ராணுவம் அவசரநிலையைப் பிரகடனம் செய்தது. அத்தோடு நாள்தோறும் பதினொரு மணி நேர ஊரடங்கு உத்திரவும் அமல்படுத்தியுள்ளது. அவசரநிலைப் பிரகடனம் அமலில் உள்ள நிலையில் காவலர்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். எந்த வீட்டிலும் வாரண்ட் இல்லாமல் நுழையலாம். இதனடிப்படையில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சார்ந்த தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். ஏறக்குறைய ஆயிரத்துக்கும் குறையாமல் இதன் முதல்நிலை அல்லது இரண்டாம் நிலை தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 'கமஆ' - போன்ற இஸ்லாமிய இயக்கத்தவர் சிறைபடுத்தப்பட்டனர். 


20, ஆகஸ்ட், செவ்வாய் கிழமை அன்று இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சார்ந்த முதல் நிலைத் தலைவர்களில் ஒருவரான முஹம்மது பாதிய் கெய்ரோவில் வன்முறையைத் தூண்டியதாக பொய்யான குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாத தீர்ப்பு வாசிக்கப்பட்டு.. அவருக்கு மரண தண்டனைகூட விதிக்கப்படலாம்.
“எதேச்கதிகாரமான இந்த கும்பல் கும்பலான கைதுகள் மூலமாக எகிப்தின் அரசியலமைப்புச் சட்டம் எள்ளி நடையாடப்படுகிறது. அதுபோலவே அவசரநிலைப் பிரகடனமும், ஊடகங்களின் பொய்மையும் முபராக்கின் சர்வாதிகார ஆட்சிக் காலம் மீண்டும் தொடங்கிவிட்டதன் அறிகுறிகளாகும்!” – என்று கமஆ இஸ்லாமிய அமைப்பு அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டுகிறது. இந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முஸ்தபா ஹம்ஸா, எகிப்தின் பெனீய் சுஹைப் பகுதியிலிருந்து 'நடுஜாம' காவலர்களால் குடும்பத்தினரோடு எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் கைது செய்யப்பட்டார். 'நடு ஜாமக் காவலர்கள்' எனப்படுவது முபாரக் ஆட்சி அதிகாரத்தின் ராணுவ குழுக்களில் ஒன்றாகும். அதிகாலை நேரங்களில் அரசியல் ரீதியான எதிரிகளின் வீடுகளில் நுழைந்து கைது செய்யும் ராணுவ குழுவாகும் இது. 

ராணுவத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக்குகள், படுகொலைகள், கைது  படலங்கள் 'பயங்கரவாதத்துக்கு  எதிரான போர்!' - (எஜமானர் அமெரிக்கா கையாளும் அதே சொல்லாட்சி) என்று ராணுவம் கூறுகிறது.
திங்களன்று 25 காவலர்கள் கொல்லப்பட்டதற்கும், சிறுபான்மை கிருத்துவர்களின் வழிபாட்டு தலங்கள் எரிக்கப்பட்டதற்கும் கடும் கண்டனங்களைத் தெரிவித்த கையோடு துரதிஷ்டவசமான அந்த அசம்பாவிதங்களுக்கும், தங்களுக்கும்.. மற்றும் தங்களைப் போன்ற இஸ்லாமிய இயக்கங்களுக்கும்.. எவ்வித சம்பந்தமில்லை. அதேபோல, தங்கள் போராட்டங்கள் அனைத்தும் ஜனநாயகபூர்வமான அமைதி வழிகளில்தான் இருக்க வேண்டும் என்று தங்கள் ஆதரவாளர்களுக்கு கடுமையான கட்டளையிட்டிருப்பதாக  இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பினர் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் வட சினாய்யின் ரபாஃஹ் நகரின் தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கா விட்டாலும், காவலர்கள் கொல்லப்பட்டதற்கு ராணுவம் போராளிகள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளது. 
ராணுவத்துக்கு சொந்தமான விலைபோன தனியார் ஊடகங்கள் மோர்சியின் ஆதரவாளர்களை வன்முறையாளர்களாகக் காட்ட கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தேடிக் கொண்டிருக்கிறன.
அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோர்சியை பதவி நீக்கம் செய்த கையோடு அவரைக் கைது செய்த ராணுவம் அவர் இருக்கும் இடத்தை இதுவரையிலும் தெரிவிக்கவில்லை.
ஆனால், 30 ஆண்டுகளுக்கும் மேலான மனித படுகொலைகளுக்குக் காரணமானவரும், மனித உரிமைகளைப் பறித்தவரும், பல குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகி சட்ட ரீதியாக கைது செய்யப்பட்டவருமான சர்வாதிகாரி முபாரக் கடந்த புதனன்று பல வழக்குகள் நிலைவையில் இருந்த நிலையிலும் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டார். 

1950 – களிலிருந்து இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பினர் தங்களின் போராட்ட முறைமைகளை மாற்றிக் கொண்டனர். ஜனநாயக வழிகளில் தேர்தல்களில் பங்கெடுத்து கடைசியாக பெரும்பான்மைப் பெற்று வெற்றிப் பெற்றனர். அந்நிலையிலும்  அவர்களை ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க விடாமல் செய்வது ஜனநாயகத்தை இழிவுப்படுத்தும் செயலாகவே இருக்கும்.