NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Wednesday, September 30, 2020

பாபரி மசூதி தீர்ப்பு: அடப்பாவமே! 28 ஆண்டுகளுக்கு பின்தான் உண்மை தெரிந்தது!

 

 
இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''
 
உண்மைதான் நண்பர்களே, டிசம்பர் 6, 1992 –இல், பாபரி மசூதி யாராலும் இடிக்கப்படவில்லை. அது தானாகவே இடிந்துவிழுந்துவிட்டது என்ற உண்மையை இந்திய நீதிமன்றம் ஒன்றினால் தெரிந்து கொள்ள நமக்கெல்லாம் 28 ஆண்டுகள் ஆனது. எவ்வளவு முட்டாள்கள் பாருங்கள் நாம்! 
 
ஆக, தானாக இடிந்து விழுந்த பாபரி மசூதியை யாரும் இடிக்காததால், குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். யாருக்கும் தண்டனையே இல்லை. குற்றவாளிகளுக்குதானே தண்டனை தர முடியும்? 
 
மனதில் எழும் கேள்விகளும், வடிவேலு பாணி பதில்களும்தான் இனி போங்கள். 
 
சரி தானாக விழுந்துவிட்ட பாபரி மசூதியின் மீது ஒரு கும்பல் ஏறி நின்றதே.. என்று கேட்கிறீர்களா? 
 
ஆமாம்..! ஆமாம்.. அவர்கள் அனைவரும் சமூக விரோதிகள்! 
 
சரி… மசூதியின் மீது ஏறி நின்றவர்கள் சமூக விரோதிகள் என்றால் அவர்களை ஏற்றிவிட்டார்களே அவர்கள் யார்? அந்த சமூக விரோதிகளை நீதிமன்றம் கண்டுபிடித்துவிட்டதா? 
 
இதுவரையும் இல்லை. 
 
சரி.. அங்கே ஒரு குறிப்பிட்ட வகுப்புவாத கட்சியின் தலைவர்கள் எல்லாம் கூடியிருந்தார்களே அவர்கள் யார்? 
 
அட.. என்னய்யா? இதுகூடவா தெரியாது! அந்த மாமனிதர்கள் எல்லாம் அந்த மசூதியை யாரும் இடித்துவிடாமலிருக்க காவல் நின்றவர்கள். 
 
மசூதி இடிக்கப்போகிறார்கள் என்று இந்த தலைவர்களுக்கு எப்படி தெரியும்? 
 
அடிமுட்டாளா கேள்வி கேட்கிறீங்களே.. மசூதி இடிக்கப்படும் என்று யாரோ தலைவர்கள் கனவில் சொல்லியிருப்பார்கள். ஹி..ஹி.. அதனால்தான் அதை தடுக்க அவர்கள் அங்கே சென்றார்கள். 
 
சரி.. மசூதியின் மினராக்களின் மேலே இருந்தவர்கள் கையில் எல்லாம் கடப்பாறை, சுத்தியல் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்ததே! கூடவே கையில் காவி கொடியும் வைத்திருந்தார்களே? 
 
இப்பதாம்பா சரியா கேட்குறே.. கையிலிருந்த கடப்பாறை போன்ற ஆயுதங்களும், காவி கொடிகளும் மசூதி இடிந்துவிழாமலிருக்க முட்டுக் கொடுக்கதான் அவர்கள் வைத்திருந்தார்கள். சரியா? 
 
அப்படியா? ஒவ்வொரு ஊரிலிருந்தும், ஒரு செங்கல்லோடு புறப்பட்டு வரும்படி, அத்வானி ஜீ ரத யாத்திரை போனாரே.. அது..? 
 
ஆமாம்பா.. நய்யா.. நய்யா என்று கேள்வி கேட்டுட்டு. ஜீ.. நாடு முழுக்கவும் குண்டர்களை சாரிபா டங்க் சில்ப்பாயிடுச்சு.. தொண்டர்கள் திரண்டு வந்து பாபரி மசூதி இடிந்துவிழாமல் பாதுகாக்கும்படியும் கேட்டுக் கொண்டது மறந்து போச்சா..? 
 
காசி, மதுரா போன்ற முக்கிய இடங்களிலெல்லாம் மசூதிகள் இடிந்து விழப்போவதாக புரளி பரவிகிட்டிருக்கே.. இந்த தலைவர்கள் எல்லாம் மறுபடியும் மசூதிகள் இடிந்து விழாமலிருக்க தொண்டர்களோடு போய் நிற்பார்களோ? 
 
கடைசி கட்ட வஸ்திர பிரயோகமாக ‘ஆண்டி இண்டியன்’ என்ற சொல்லே காதில் விழுகிறது. 
 
ஆக, 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு உண்மை வெளிப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் நீதி, நியமங்கள் மிக மிக உயர்ந்தவை. நம் நாடு உலகின் பெரிய ஜனநாயக நாடு. 
 
ஆமாம்.. ஆமாம்.. உண்மைதான்.. நீங்களும் நம்புங்கள் நண்பர்களே!

Monday, September 28, 2020

கொரோனா வைரஸ் சானிடைசர் தரமானதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி?


மெத்தைல் ஆல்கஹால் போன்ற நச்சுத்தன்மை மிக்க பொருட்கள் கொரோனாவுக்கு பயன்படும் கிருமி நாசினியில் கலக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில், நல்ல சானிடைசரை கண்டுபிடிக்கும் எளிய வழியை,  அழகியல் தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் ரின்கி கபூர் தெரிவிக்கிறார்.

"ஒரு கிருமிநாசினி பயன்பாட்டுக்கு பொருத்தமானதா இல்லையா என்பதை நீங்களே  கண்டுபிடிக்கலாம். இதற்கு ஒரு ஸ்பூன் கோதுமை மாவு எடுத்து, அதில்  கிருமிநாசினியை சேர்க்க வேண்டும். மாவு ஒட்டும் தன்மைக்கு மாறினால், அந்தக்  கிருமிநாசினி நல்லதல்ல. மாவு உலர்வாகவே இருந்தால், கிருமிநாசினி  பயன்பாட்டுக்கு பொருத்தமானது'' என்று தெரிவிக்கிறார்  டாக்டர் கபூர்.

(ஆதாரம்: பிபிசி)

அடி ஆத்தி! நீர் நிலைக‌ளில் இத்தனை வகைக‌ளா...?


(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.

(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.

(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

(12) கடல் (Sea) - சமுத்திரம்.

(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

(15) கால் (Channel) - நீரோடும் வழி.

(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.

(18)  குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.

(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.

(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.

(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.

(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.

(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.

(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.

(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.

(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.

(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.

(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

தகவல்: G.V. Varadharajan,  திருவாரூர் நீர் நிலை பாதுகாப்பு இயக்கம்

https://www.facebook.com/groups/572874246100629/user/100000019619177

Friday, September 25, 2020

இந்த நல்லவரும், அந்த கெட்டவரும்



ஒரு அரிய நிகழ்வு அது. 12 ஆண்டுகளில் முதன்முறையாக நடந்த ஒரு துரதிஷ்டவசமான சம்பவம்.

இருப்பினும் அந்நாட்டு அதிபர் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறார். பாதிக்கப்பட்ட வெளிநாட்டு அதிபருக்கு கடிதம் எழுதி மன்னிப்பும் கேட்கிறார். அவமானகரமான சம்பவம் அது. மக்களை ஏமாற்றமடைய செய்த சம்பவம் என்றெல்லாம் மனம் நொந்து வருந்துகிறார் ‘பெத்தண்ணா’ அமெரிக்காவுக்கே சவால் விடும் அந்த மனிதர்.

யார் அவர்? என்ன நடந்தது என்கிறீர்களா?

இப்படி தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னிடம் கடிதம் மூலம் சொல்லி மனம் வருந்தி மன்னிப்பு கேட்டிருக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.  

அவர் மன்னிப்பு கேட்குமளவுக்கு அப்படி என்னதான் நடந்தது?

கொரோனா தொற்று காரணமாக எல்லையை முடக்கியுள்ள வட கொரியா, நோய்த்தொற்று தங்கள் நாட்டுக்குள் வராமல் இருக்க, யார் எல்லைக்குள் நுழைந்தாலும், அவர்களை "சுட்டுக் கொல்ல" உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருநாட்டு எல்லை அருகே ரோந்து கப்பலில் இருந்து காணாமல் போன தங்கள் நாட்டு அதிகாரி, பின்னர் வட கொரிய கடல் பக்கம் கண்டெடுக்கப்பட்டதாக தென் கொரியா கூறியிருந்தது.

வட கொரிய வீரர்கள் அவரை சுட்டு, பின்னர் அவரது உடலின் மீது எண்ணெயை ஊற்றி எரித்துள்ளதாக தென் கொரிய தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

தென் கொரியாவின் மீன்வளத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் வட கொரிய எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் ரோந்து கப்பலில் இருந்து கடந்த திங்கட்கிழமை காணாமல் போனார்.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான 47 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி வட கொரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக நம்பப்படுகிறது.

அவர் கப்பலில் தனது ஷூக்களை விட்டுவிட்டு, உயிர் கவசத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் வட கொரிய ரோந்து கப்பல் அவரை அவர்களது நாட்டு எல்லைக்குள் மிதக்கும் சாதனத்தை பிடித்தவாறு, கண்டெடுத்தனர்.

வட கொரிய அதிகாரிகளால் அவர் விசாரிக்கப்பட்டு, பின்னர் அவரை சுட்டுத் தள்ளுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முகக்கவசம் அணிந்த சில வட கொரிய வீரர்கள், அந்த அதிகாரியை எரித்ததாக தென் கொரியா கூறுகிறது. ஆனால், அந்த நபர் வந்த மிதக்கும் சாதனத்தை மட்டுமே எரித்ததாக வட கொரிய தரப்பு கூறியுள்ளது.

இதுதொடர்பாக வட கொரியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் தென் கொரியா வலியுறுத்தி இருந்த நிலையில், கிம் ஜாங்-உன் எழுதிய இந்த கடிதம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இத்தனைக்கும் கிம் ஜாங் உன் முதலாளித்துவ நாடுகளால் பெரும் வில்லனாக சித்தரிக்கப்படுபவர். உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக சொல்லப்பட்டவர். அத்தகைய கெட்டவர்தான் நடந்த செயல்களுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

ஆனால், இந்த சம்பவத்தை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்திய நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி சர்க்காருடன் கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள்.

குஜராத் கலவரங்களில் ஆயிரக்கணக்கில் சிறுபான்மை இன மக்கள் தீயிட்டும், கற்பழித்தும் கொல்லப்பட்ட போதும் மனம் கலங்காதிருந்தவர். ஒரு வருத்தமும் தெரிவிக்காதவர். சுற்றிலும் தனது குடிமக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, இனம், மொழி, சமயம் என்று பாகுபாடுகளால் மௌனம் சாதிப்பவர். அந்த பிரிவினையை ஒன்றையே அரசியல் வழிமுறையாக்கியுள்ள சங்பரிவார் திட்டத்திற்கொப்ப மொத்த நாட்டையும் பின்னோக்கி செலுத்தி கொண்டிருப்பவர். இவரைதான் நல்லவர் என்கிறார்கள் சிலர்.

என்னத்த சொல்ல? கேட்டால் 'ஆன்டி-இண்டியன்' என்பார்கள். 
 
(செய்தி ஆதாரம்: பிபிசி)

வந்த இடம் சென்று சேர்ந்தாலும் எஸ்.பி.பி குரல் காற்றில் கரையாமலே ஒலிக்கும்!

 

 

இந்திய திரையுலகின் பின்னணி பாடக நட்சத்திர வரிசை நீளமானது. முஹம்மது ரஃபி, கிஷோர் குமார், ஆஷா போஸ்லே, கே.ஜே. ஏசுதாஸ், டி.எம். சௌந்தர்ராஜன், எஸ். ஜானகி, லதா மங்கேஷ்கர் என நீளும் புகழ்மிக்க அந்த வரிசையில் ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம் அதாவது எஸ்.பி. பாலசுப்ரமணியம் முக்கிய இடத்தில் இருப்பவர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள கொனேட்டம்பட்டுதான் எஸ்.பி.பியின் சொந்த ஊர். தந்தை எஸ்.பி. சாம்பமூர்த்தி ஒரு ஹரிகதா கலைஞர். 1946 ஜூன் 4ஆம் தேதி பிறந்த, எஸ்.பி.பி., சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார்.
 
பொறியியல் படிப்பதற்காக அனந்தபூரில் உள்ள ஜேஎன்டியு பொறியியல் கல்லூரியில் ஆரம்பத்தில் சேர்ந்தவர், பிறகு அங்கிருந்து விலகி, சென்னையில் உள்ள அசோஸியேட் மெம்பர் ஆஃப் தி இன்ஸ்ட்டிடியூஷன் ஆஃப் எஞ்சினீயர்ஸில் இணைந்து பொறியியல் படிப்பை தொடர்ந்தார்.

படிக்கும் நாட்களிலேயே பல்வேறு பாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் பாலசுப்ரமணியம். இந்நிலையில், 1964ல் மெல்லிசைக் கச்சேரி குழுக்களுக்கான பாட்டுப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் முதல் பரிசை வென்றார். அந்தப் போட்டிக்கு நடுவர்களாக இருந்தது தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.பி. கோதண்டபாணி மற்றும் பிரபல வெண்கல குரல் பாடகர் கண்டசாலா.

இந்த நிகழ்வுக்குப் பிறகு எஸ்.பி. கோதண்டபாணி இசையமைத்த "ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாத ராமண்ணா" என்ற தெலுங்கு படத்தில் தன் முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பி. இந்தப் படம் 1966 டிசம்பரில் வெளியானது. இதற்குப் பிறகு தமிழில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த 'ஹோட்டல் ரம்பா' என்ற படத்தில் எல்.ஆர். ஈஸ்வரியோடு இணைந்து 'அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு' என்ற பாடலைப் பாடினார் எஸ்.பி.பி.

ஆனால், அந்தப் படம் கடைசிவரை வெளியாகவேயில்லை. இதனிடையே, கன்னட திரைப்படங்களில் பாட ஆரம்பித்திருந்தார் எஸ்.பி.பி. தமிழில் இவர் பாடி வெளியான முதல் பாடல், எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் வரும் 'ஆயிரம் நிலவே வா' பாடல்தான்.

இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பாகவே 'இயற்கையெனும் இளைய கன்னி' பாடலை சாந்தி நிலையம் படத்திற்காகப் பாடியிருந்தார். அந்தப் படம் 1969 மே 23ஆம் தேதி வெளியானது. ஆனால், "அடிமைப்பெண்" மே 1ஆம் தேதியே வெளியாகிவிட்டதால், தமிழில் எஸ்.பி.பி பாடி முதலில் வெளியான பாடல், 'ஆயிரம் நிலவே வா' என்ற பாடல்தான். இதற்குப் பிறகு மலையாளத் திரையுலகிலும் அறிமுகமானார் எஸ்.பி.பி.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் தமிழ் திரையிசைப் பாடல்களில் டி.எம். சௌந்தர்ராஜனின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்கும், டி.எம்.சௌந்தர்ராஜனே பாடிக்கொண்டிருந்தார்.

திரையுலகின் உச்சிவானிலிருந்த எம்.ஜி.ஆர். சிவாஜிக்கும் வேறு குரலை மாற்றி பாட வைத்தால் ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்களா என்ற தயக்கம் இயக்குனர்களுக்கும் இசை அமைப்பாளர்களும் இருந்தது. இந்த நிலையில்தான் அடிமைப் பெண் படத்திற்குப் பிறகு, எல்லாவிதமான பாடல்களையும் உயிரோட்டத்துடன் பாடும் தன்னுடைய திறனால் மெல்ல மெல்ல தமிழ்த் திரையுலகில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார் எஸ்.பி.பி.

1970களின் பிற்பகுதியில் அப்போதுதான் அறிமுகமாகியிருந்த இளையராஜாவின் இசையில் பாட ஆரம்பித்தார் எஸ்.பி.பி. இளையராஜா - எஸ்.பி. பாலசுப்ரமணியம் - எஸ். ஜானகி என்ற இந்தக் கூட்டணியில் அமைந்த பாடல்கள், தமிழ் திரையிசை ரசிகர்களால் ஒரு போதும் மறக்க இயலாதவை.

சுருக்கமாகச் சொன்னால், தமிழ், தெலுங்கு, கன்னட சினிமா பாடல்களில் கடந்த நூற்றாண்டின், கடைசி முப்பது ஆண்டுகள் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினுடையது எனலாம். ஒரு கட்டத்தில் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.

1981 பிப்ரவரி எட்டாம் தேதியன்று உபேந்திர குமார் இசையமைத்த 17 கன்னடப் பாடல்களை காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் பாடி முடித்தார். ஒரே நாளில் 19 தமிழ், தெலுங்கு பாடல்களையும் இந்தி இசையமைப்பாளர் ஆனந்த் மற்றும் மிலிந்த் இசையமைத்த 16 இந்திப் பாடல்களையும் ஒரே நாளில் பாடி சாதனை படைத்தவர் எஸ்.பி.பி.

1980ல் வெளிவந்த சங்கராபரணம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்த இந்தப் படம் சாஸ்த்ரீய இசையை அடிப்படையாகக் கொண்டிருந்த படம். எஸ்.பி. சாஸ்த்ரீய இசையை முறைப்படி படித்தவர் இல்லை என்றாலும் இந்தப் படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை வென்றார் எஸ்.பி.பி.

தெலுங்கில் சிரஞ்சிவி நடித்த படங்களுக்கும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கும் பெரும்பாலான டைட்டில் பாடல்கள் எஸ்.பி.பி பாடியதுதான்.

எஸ்.பி.பி. தன் பாடல்களுக்காகத்தான் பெரிதும் அறியப்பட்டவர் என்றாலும் அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளரும்கூட. தவிர, நல்ல நடிகர், சிறப்பான பின்னணி குரல் கொடுப்பவர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 45க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் எஸ்.பி.பி.

ஒரு சிறந்த பாடகராக அறியப்பட்டதாலோ என்னவோ, கிட்டத்தட்ட 45க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார் என்பது பலரால் கவனத்தில் கொள்ளப்பட்டதில்லை. குறிப்பாக தமிழில் அவர் நடித்து, இசைமைத்த "சிகரம்" திரைப்படம் முக்கியமானது.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை இதுவரை ஆறு முறை வென்றிருக்கிறார் எஸ்பிபி. இவர் பெற்ற மாநில அரசு விருதுகளுக்கும் தனியார் விருதுகளுக்கும் கணக்கே கிடையாது. தன்னுடைய ஐம்பதாண்டு கால பாடக கலைஞருக்கான வாழ்க்கையில் எல்லா மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 40,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் எஸ்.பி.பி. கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். நான்கு பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். மேலும் இந்திய அரசின் பத்மபூஷணன் விருதையும் பெற்றவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்தியாவில் உள்ள 14 மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி. சமஸ்கிருதப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

சாகரசங்கமம், ஸ்வாதிமுத்யம் ஆகிய இரண்டு படங்கள் தவிர, கமல்ஹாசன் நடித்து தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட எல்லாப் படங்களில், கமல்ஹாசனுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பிதான். ரஜினிகாந்திற்கும் சில தெலுங்கு படங்களில் குரல் கொடுத்திருக்கிறார்.

எஸ்.பி.பி என்னும் அடையாள உடலிலிருந்து உயிர் பிரிந்து அது வந்த இடம் சென்று சேர்ந்துவிட்டாலும் அவரது இனிய குரல் காற்றில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

Wednesday, September 16, 2020

இந்திய அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை வேவு பார்க்கும் சீனா: பிரபல நாளேடு தகவல்

 

இந்தியாவில்  குறிப்பாக சுமார் 10 ஆயிரம் பேரை சீனாவின் ஷென்ஸெனைச் சேர்ந்த தொழில்நுட்ப  நிறுவனமான ஜென்ஹுவா வேவு பார்ப்பதாக பிரபல ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ்  வெளியிட்ட புலனாய்வுச் செய்தியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்திய  குடியரசு தலைவர், பிரதமர், இந்திய கேபினட் அமைச்சர்கள், மாநில  முதல்வர்கள், சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள், முப்படை  தலைமைத் தளபதி, முப்படை தளபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி,  நீதிபதிகள், பிரபல தொழிலதிபர்கள் என ஒரு பெரிய பட்டியலில் இருப்பவர்கள்,  சீன நிறுவனத்தால் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக அந்த நாளிதழின் புலனாய்வுச்  செய்தி விவரிக்கிறது.

இந்த பட்டியலில், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், கிராம தலைவர்கள் கூட இருப்பதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த  விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தை தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ்  முற்பட்டதாகவும் ஆனால், அந்த நிறுவனத்தின் இணையதளம் பிறகு  மூடப்பட்டதாகவும் அந்த நாளிதழ் கூறுகிறது.

ஆனால்,  வேவு பார்க்கப்படும் நாடுகள் பட்டியலில், இந்தியா மட்டுமின்றி பிரிட்டன்,  ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருப்பவர்களும் உள்ளனர்.

இந்தியன்  எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி போலவே, லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி  மெயில் நாளிதழ்,  பிரிட்டனில் அரசி, பிரதமர் உள்பட 40 ஆயிரம் பிரபலங்கள்  வேவு பார்க்கப்பட்டதாகக் கூறி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில்,  பிரபல ஏபிசி ஊடக நிறுவனம், அதன் தளங்களில் அந்நாட்டின் அரசுத்துறைகளில்   முக்கிய பதவிகளை வகிக்கும் 35 ஆயிரம் பேர் வேவு பார்க்கப்படுவதாகக் கூறி  செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, September 3, 2020

குழந்தைகளைக் காக்க போராடிய பயங்கரவாதி விடுவிக்கப்பட்டார்

 

 

"மதுரா சிறையில், பல நாட்கள் எனக்கு உணவு வழங்கப்படவில்லை. உணவு வழங்கப்பட்டாலும், ரொட்டிகள் தூக்கி எறியப்பட்டன மேலும், சிறைக்குள் உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டேன்" - என்கிறார் அவர்.  ~இக்வான் அமீர்

'''''''''''''''''''''''

தொழில்நுட்ப காரணங்கள் என்ற பெயரால் தனது வழக்கு விசாரணைக்கு அலகாபாத் உயர்நீதி மன்றத்தால், பன்னிரண்டுமுறை வாய்த்தாவுக்காக காத்திருந்த அதிபயங்கரவாதி மருத்துவர் அவர்! ஆம்! வகுப்புவாதி ஆதித்யநாத்தின் அரசால் புனையப்பட்ட பயங்கரவாதி டாக்டர் கஃபீல்கான்தான் அவர்!

கடைசியில், அவரது குடும்பத்தார் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடவே, என்எஸ்ஏவுக்கு எதிராக சவால் விடுத்தனர்.  

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரியில், ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் உலகை அதிர்ச்சியுறச் செய்தது. அந்தத் தருணத்தில், குழந்தைகளைக் காக்க விரைந்து செயல்பட்டு பிராணவாயு உருளைகளை வரவழைத்து அதற்கு மேலும் குழந்தைகள் இறப்பு நிகழாமல் தடுத்த டாக்டர் கஃபீல்கானை உலகம் மெச்சியது.

உபியின் சங்பரிவார் ஆட்சியாளரின் இயலாமை வெளிப்பட்டதும் கஃபீல்கான் ஆளும் அரசியல்வாதிகளின் கோபத்துக்கு ஆளானார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் அவதூறாக தூண்டிவிடும் வகையில் பேசியதாக சிறப்பு பாதுகாப்பு படையால் கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது, ஆனால் இந்த நேரத்தில் என்எஸ்ஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பிரிவை மாநில அரசு அவருக்கு எதிராக பயன்படுத்தியது.

கஃபீல் கானுக்கு எதிராக மாநில அரசு இதுவரை இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை நீட்டித்தது. 

இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை, அலகாபாத் உயர்நீதிமன்றம் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது மற்றும் அவருக்கு எதிராக என்எஸ்ஏ பயன்படுத்தப்பட்டது சட்டவிரோதம் என்று நீதிமன்றம் கூறியது.

கடந்த 8 மாதங்களாக சிறையில் இருந்த டாக்டர் கஃபீல் கான் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர், தான் கைதானது CAA எதிர்ப்பு போராட்டங்களின் போதான பேச்சுக்காக அல்ல, கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவ கல்லூரியில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த சம்பவத்தை அம்பலப்படுத்தியதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டதாக கூறினார்

“சிறையில் என்னை வேண்டுமென்றே சித்ரவதை செய்தனர். பல நாட்கள் பசியுடன் இருந்தேன்" - என்று பிபிசியுடனான உரையாடலில் கஃபீல் கான் கூறியுள்ளார்.

"மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்த பிறகு நான் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டேன். ஆனால் இந்த முறை சிறை செல்வது மிகவும் பயமாக இருந்தது

மதுரா சிறையில், பல நாட்கள் எனக்கு உணவு வழங்கப்படவில்லை. உணவு வழங்கப்பட்டாலும், ரொட்டிகள் தூக்கி எறியப்பட்டன மேலும், சிறைக்குள் உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டேன்.

50 கைதிகளை வைக்கும் திறன் கொண்ட பேரக்கில் 150 கைதிகளுடன் வைக்கப்பட்டேன். நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்றபோதும் மூன்று நாட்களுக்கு நான் விடுவிக்கப்படவில்லை, பின்னர் எனக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடர்ந்தனர்.

சிறை அதிகாரிகளின் அணுகுமுறை இவ்வாறாக இருந்தபோதிலும், சிறை கைதிகள் நன்றாக நடத்தினர்” – என்றார் கபீல் கான்.

"குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவது குற்றமா? கொரோனா நெருக்கடியின் போது கூட நாட்டிற்கும் சமூகத்திற்கும் நான் அச்சுறுத்தலாக மாறுவேன் என்று அரசாங்கம் ஏன் உணர்ந்தது?. இறுதியில், உயர் நீதிமன்றம் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டவிரோதமானது" என்று கண்டித்துள்ளதை டாக்டர் கஃபீல் கான் சுட்டிக் காட்டுகிறார்.