NewsBlog

Thursday, June 25, 2020

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர 
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இயக்குனர் சசியின் பிச்சைக்காரன் படத்தில் இறுதி காட்சியாக இப்படி வரும்: ‘மருத்துவமனையில் அமர்ந்திருக்கும் கதாநாயகனை தேடிவரும் போலீஸ் காவலர்கள், “எழுந்துர்டா!” – என்று அதிகார மிடுக்குடன் மேலதிகாரியிடம் அழைத்து செல்வார்கள். போலீஸ் அதிகாரியிடம், "என்ன காரணமாக கைது செய்கிறீர்கள்?” என்று கதாநாயகன் கேட்பான். “பிச்சைக்காரனுக்கெல்லாம் காரணம் சொல்லனுமா?” - என்று ஓங்கி அறைவார் அந்த அதிகாரி.

இந்த ஆணவத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீஸ் ஆகிய இருவரின் காவல்நிலைய கொட்டடி கொலைகள். அதிலும் பென்னீஸ் எம்எஸ்டபிள்யூ (MSW)பட்டதாரி! மக்கள் சேவைக்காக இந்த பட்டப்படிப்பை முடித்திருக்கும் இளைஞர். இவருடைய முன்,பின் பகுதிகள் முற்றிலும் சிதைக்கப்பட்டிருப்பதாக அவருடன் பிறந்தவர்கள் சொல்லி அழுகிறார்கள். கொரோனோ காலத்தில் அதிக நேரம் கடை திறந்து வைத்திருந்ததற்காக சட்டத்திற்கு புறம்பாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் இவை என்கிறார்கள் பொதுமக்கள்.

இத்தகைய மனித உரிமை மீறல்கள் நடைபெறும் போதெல்லாம். சம்பந்தப்பட்ட காவலர்களை இடமாற்றம் செய்வதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பதும், பாதிக்கப்படும் குடும்பத்து உயிரிழப்புகளுக்கு நிவாரணம் என்ற பெயரில் சில லட்ச ரூபாய் சட்ட ரீதியான கையூட்டாக வழங்குவதும் அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத சட்ட சம்பிரதாயங்களாகிவிட்டது.

இதையும் மீறி போராட்டங்களின் விளைவாக எழும் மக்களின் அழுத்தம் காரணமாக கண்துடைப்புக்கு ஒரு விசாரணை கமிஷன் நியமிக்கப்படும். அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது. 

இதற்கு அடுத்த சில மாதங்களில் காவல்நிலைய கொட்டடியில் அநியாயமாக துடிக்க.. துடிக்க கொலை செய்த அதே காவலர்களுக்கு விருதுகளோடு பதவி உயர்வுகளும் வழங்கப்படும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் சாமான்ய மக்களின் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!

“தற்போதுள்ள போலீஸ் சட்டங்களை எல்லாம் தூக்கி கடலில் வீசி எறிய வேண்டும்.  புத்தம் புதிய போலீஸ் சட்டத்தை உருவாக்க வேண்டும்!” – என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன். "நீதிமன்றம், காவல்துறை, சிறைத்துறை ஆகிய மூன்றும் இந்த அமைதி கூட்டுச்சதியில் பங்காளிகள்!" - என்கிறார் அவர் தொடர்ந்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளை மறைத்த காவலர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரிகள், ரிமாண்ட் செய்வதற்கு முன்பாக குற்றம் சுமத்தப்பட்டவர் தரப்பு நேரடி வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கு வாய்ப்பளிக்காத நீதித்துறை நடுவர், மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டிருந்தால் போலியான அத்தாட்சிகளை தந்த மருத்துவர் மற்றும் மருத்துவ சோதனை செய்யாமலேயே (செய்யப்பட்டதாக அதிகார பூர்வமற்ற ஒரு தகவல் உண்டு) சிறையிலடைத்த சிறைத்துறை ஆகிய அனைவருமே இந்த மரணங்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.

மக்கள் போராட்டம்  தீவிரமடைந்திருக்கும் நிலையில், நமது முதல்வரோ, மகன் மூச்சுத் திணறி இறந்ததாகவும், தந்தையோ நெஞ்சுவலியால் இறந்ததாகவும் அறிக்கை வெளியிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால், ஏதாவது விசாரணை கமிஷன் நியமித்தாலும் முதல்வரின் அறிக்கைக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியாவதற்கு வாய்ப்பேயில்லை!

அதே பிச்சைக்காரன் படத்தில், அதே கிளைமாக்ஸ் காட்சியில், கதாநாயகனை அடித்து தர தரவென்று இழுத்து செல்லும் காவல்துறை அதிகாரி, அவர் செல்வந்தர் என்று தெரிந்ததும், வேர்த்து, விறுவிறுத்து போவார். தட்டிவிட்ட அதே கையை இரு கையாலும் பவ்வியமாகப் பிடித்து மன்னிப்பும் கேட்பார்.

இந்த வேர்த்து விறுவிறுப்பும், தவறிழைத்தால் தண்டனைக்காளாக நேரிடும் என்ற நடுக்கமும் சாமான்யனைக் கண்டதும் காவல்துறைக்கு ஏற்படுத்தும் விதமான அரசும், அதற்கான அமைப்புமே தற்போதைய தேவை!

'''''''''''''''''''''''''


0 comments:

Post a Comment