NewsBlog

Sunday, October 27, 2013

விருந்தினர் பக்கம்: 'கட்டுக்கடாங்காத இனவெறி'


தருமபுரி சாதிய ஆதிக்க வன்முறையாளர்களால் 3 கிராமங்கள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்ட சம்பவம் வருகிற நவம்பர் 7ந்தேதியுடன் ஒரு வருடத்தை எட்டப் போகிறது. அந்நாளை நினைவு கூர்ந்து அம்மக்களின் நீதிக்கான கோரிக்கையை முன்னெடுக்கும் வகையில், அதற்கான நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்கிற அடிப்படையில் தற்போது தருமபுரி நிலவரத்தை அனைவரின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.  

நிவாரண நிலைமைகள்:

 எரிக்கப்பட்ட வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு சில வீடுகள் கட்டப்பட்டும் உள்ளன. இந்தப் பணி முழுவதுமாக முடிவடைய இன்னும் ஒரு வருடம் ஆகும் என மக்கள் கூறுகிறார்கள். ஒரு வருடம் கடந்தும் அம்மக்கள் இயல்புவாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை. இன்னும் இழப்பீடுகள் முழுமையாக கிடைக்கவில்லை.  அதனால், மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலையில் கிராமங்களிலேயே இருந்துவருகின்றனர். பாதிக்கப்பட்ட கிராமத்திலேயே மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படும் ரேசன் பொருட்கள் போன்ற மற்ற பொருட்கள் வழங்கப்படுகிறன.. 

தாக்குதலுக்கு ஆளான மொத்த 135 வீடுகளில் ஒரு பகுதிதான் புனரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகமோ எஸ்.சி.எஸ்.டி ஆணையத்திடம் 3 பங்கு வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டதாக அறிக்கை சமர்பித்துள்ளது. இந்நிலையில், ஆணையர் 'சிவண்ணா' நேரில் வந்து பார்த்தபின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறன.

தமிழக அரசின் நிவாரணத் தொகையான ரூபாய் 50,000, சேதமடைந்ததற்கு ஏற்றாற்போல்
இழப்பீட்டுத்தொகையாக வழங்கப்பட்டது. அதேநேரத்தில், பாதிக்கப்படாத வீடுகளுக்கு இழப்பீடும், பாதிக்கப்பட்ட வீட்டிற்கு இழப்பீடு வழங்காமலும், இன்னும் பாதிக்கப்பட்ட சிலருக்கு சரிவர மதிப்பீடு செய்யப்படாதாலும் குறைவான நிவாரணத் தொகை பெற வேண்டிய நிலை. இது மக்களிடையே மோதலையும், ஒற்றுமையின்மையையும்  ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடாத வகையில், அரசை எதிர்பார்த்து நிற்கும் நிலையிலேயே உள்ளனர் அதாவது அரசாங்கம் ஒரு சிலருக்கு கடைகள், மற்றும் கறவை மாடுகளுக்கான கடனுதவி போன்றவற்றை வழங்கி மக்களை பிளவுபடுத்தியுள்ளது.
 

ஊர்க்கட்டுப்பாடுகள்:

குறிப்பாக,


1. தாக்கப்பட்ட கிராம மக்களுக்கு முடிவெட்டுதல்கூடாது,
2. துணிகளை சலவை செய்யக்கூடாது,
3. நெல்,மாவு அரைத்துத்தரக்கூடாது
4. வயலில் வேலைக்கு அமர்த்த கூடாது
5. பால் கூட்டுறவு சங்கங்களில் பால் வாங்கக்கூடாது
6. தாழ்த்தப்பட்ட மக்களோடு பேசக்கூடாது.
7. தாழ்த்தப்பட்டோர் நிலங்களில் டிராக்டர்களை ஓட்டக்கூடாது.
8. தாழ்த்தப்பட்டோருக்கு கடன் கொடுக்கக்கூடாது,

என்று ஊர்க்கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளுக்கு வன்னிய மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. ஏனென்றால்,
ஏற்கனவே அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களிடம்  பொருட்களை விற்பது, வாங்குவது போன்ற பொருளாதார உறவுகளைப் பேணி வந்துள்ளார்கள். அது மீண்டும் தொடர்ந்தாலும், பெரும்பாலான மக்களிடையே மனவிரிசல் போக்கே காணப்படுகிறது. இது வன்னிய, பிற்படுத்தப்பட்ட மக்களிடம் பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக இக்கட்டுப்பாடுகளை ஏற்காத சில வன்னிய குடும்பங்களும் இருக்கிறன.

கொண்டம்பட்டியை அடுத்துள்ள புளியம்பட்டி வன்னிய கிராமத்தில் ஊர்க்கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படாத 10 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்களிடம் பேசிவந்த வன்னிய அடித்தட்டு மக்கள் ஊர்க்கட்டுப்பாடு என்பதால் பேசகூடாது என்று பயந்து மறைந்து பேசும் சூழல் நிலவுகிறது.

தாழ்த்தப்பட்ட ஒருவருடன் பேசியதால் பஞ்சாயத்தில் வன்னியர் ஒருவர் தண்டத்தொகை கட்ட வைக்கப்பட்டுள்ளார்.
 

இத்தகைய சூழல் பாதிக்கப்பட்ட கிராமங்களை சுற்றி நிலவுகிறது. குறிப்பாக பத்துபேர் கொண்ட குழுக்களால் ஒவ்வொரு வன்னிய பிற்படுத்தப்பட்ட கிராமத்திற்கும் சென்று ஊர்க்கட்டுப்பாடுகளை ஒத்துக்கொண்டு அமல்படுத்த வேண்டும் என்பதற்கான பஞ்சாயத்துக்கள் நடந்து வருகின்றன. 

பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக சந்திக்கும் நெருக்கடிகள்:

 
வேலைவாய்ப்பை பொறுத்தவரை, 'தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் எந்த வேலைக்கும் வைத்துக்கொள்ளக்கூடாது!'- என பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சுற்றியுள்ள வன்னிய பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் உள்ள 'சாதிய கும்பல்' சமூக புறக்கணிப்பை, புதிய சாதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதனால்,  இம்மக்கள் எங்கும் வேலைக்கு செல்ல இயலாமல் முடக்கப்பட்டுள்ளனர். 


மாவட்ட நிர்வாகமும், உயர்நீதிமன்றம் அமைத்த வாசுகி தலைமையிலான ஆய்வுக் குழுவும் ஏற்கனவே அம்மக்கள் செய்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலையை செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஊரக வேலையில், தோண்டும் குழிகள் என்பது ஏரி, கால்வாய் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஊர்ப்பகுதியில்தான் அமைந்துள்ளன. அங்கு வரக்கூடாது என்ற நிலை இருப்பதால் அங்கு யாரும் இந்த பணி காரணமாக செல்வதில்லை. அப்படியே இந்த வேலை செய்தாலும் தலித் மக்கள் வசிக்கும் ஊர்ப்பகுதியில் உள்ள ஏரி, கால்வாய்க்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. அவை நீண்ட நாட்களுக்கான வேலைக்கான  உத்தரவாதமில்லாதவை. அத்துடன் அப்பணிகள் ஏற்கனவே முடியும் தருவாயில் உள்ளன. ஆதலால் ஊருக்கு அருகாமலேயே செய்த வேலை என்பதுபோய் மக்கள் அறிமுகமற்ற பகுதிக்கு சென்று வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு 'தாட்கோ லோன்' கொடுத்துள்ளது. அவற்றில் கரவை மாடும் வழங்கியுள்ளது. அதனை மேய்ப்பதற்கு சுற்றியுள்ள வன்னிய மக்களின் நிலங்களைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அதற்கும் தடை போடப்பட்டுள்ளது. அவற்றால் வரும் வருமானம் என்பதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும், வன்னிய, தலித் பெண்கள் இணைந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்கனவே இயங்கிவந்தன. அதனை பா.ம.க வன்னிய சாதி வெறியர்கள் சிலர் கலைப்பதற்கான உள்வேலையை செய்துவருகிறார்கள். குறிப்பாக செல்லன்கொட்டாய் பெண்களும், அருகில் வசிக்கும் நத்தம் கிராம பெண்களும் இணைந்த குழுக்களை பிரித்து வன்னிய பெண்கள் மட்டுமே கொண்டகுழுக்களை உருவாக்குவது நடக்கிறது. இங்குமட்டுமின்றி அனைத்து இடங்களிலும் நடைபெற்றுவருகிறது. அதற்கு அடித்தட்டு மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிடையாது. தூண்டும் சில சாதிய சக்திகள்தான் இதனை செய்துவருகிறார்கள் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.


அதேபோன்று நகர்ப்புறங்களில், அனைத்து சாதியத்தைச் சார்ந்த தொழிலாளரையும் உள்ளடக்கிய 'ஆட்டோ நிறுத்தத்தை', 'பா.ம.க ஆட்டோ கிளை' என்று பெயர் சூட்டி அதற்கான திறப்பு விழாவுக்கான ஆயத்தங்கள் நடப்பதாக ஆட்டோ தொழிலாளர்கள் தெரிவித்தனர். 


தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்ட நேரத்தில், சாதிய வன்முறை கும்பலால் வன்னிய பிற்படுத்தப்பட்ட அடித்தட்டு மக்களும் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட மக்களிடம் தாக்கப்பட்டதற்கான நிவாரணக்கோரிக்கை எழுந்தபோது,
காவல்துறையின் தேடுதலால் வன்னிய மக்களுக்கு  வயலில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை. மாடுகளை மேய்க்க முடியாமலும், எந்த பொருளையும் விளைவிக்க முடியாத நெருக்கடியை சந்தித்த வேண்டி வந்தது. குறிப்பாக வயலில் வேர்க்கடலை செடி அதிகளவு பயிரிடுவார்கள். தாக்கப்பட்ட நேரத்தில் அவை முற்றிலும் சேதமடைந்தன. 

இன்று ஊர்க்கட்டுப்பாடுகள் போடுவதால் பொருட்கள் விற்க, வாங்க, வேலைக்கு ஆட்கள் இல்லாத பற்றாக்குறையும் நீடிக்கிறது. சில அப்பாவிகளும் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதனால் இரவு நேரங்களில் பெண்கள் மட்டுமே குடும்பத்தை காக்கவேண்டிய நிலைமை நீடிகிகிறது. இதையும் கூட பெண்களை திரட்டுவதற்கு சாதிவெறி கும்பல் சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பல வன்னிய ஆ,ண்கள் தாங்கள் வைத்திருந்த வியாபார கடைகளை திறக்காமல் மாதக்கணக்காக பூட்டியிருந்தில் பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன.

உளவியல் மாற்றம் பொறுத்தவரை:

ஒட்டுமொத்த வன்னிய மக்களிடம் சாதிய உணர்வு மேலோங்கியுள்ளது. இன்னும் அதற்கான முரண்பாடுகள் ஆங்காங்கே வெடித்தவண்ணம் உள்ளன. . நண்பனாக இருந்தவன் இன்று 'பறையன்' என்று ஒதுங்கி நிற்கும் சூழல். உழைக்கும் வன்னிய பிற்படுத்தப்பட்ட மக்களில் சிறு பிரிவினர் தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைந்த இணக்கத்தை பேணுகின்றனர். மக்கள் அன்றாடம் வாழ்க்கை பிழைப்புக்கு கவனம் செலுத்துகின்றனர்.

ஆனால் சங்கங்களாக இயங்கும் இடங்களில்தான் சாதிய உணர்வு மேலோங்கி உள்ளது. முன்பு ஆட்டோக்களில் எந்த சின்னத்தையும் வரையாத தொழிலாளர்கள் பெரும்பான்மையினர் இன்று வன்னியர் சங்கத்தின் சின்னத்தை அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் (தீ சட்டியை) வரைந்து அடையாளப்படுத்தி வருகிறார்கள். ஆனால் விதிவிலக்காக, நத்தம், கொண்டபம்பட்டி, அண்ணாநகர் கிராம மக்கள் மற்றும் வன்னிய மக்கள் ஒன்றாகவே பயணம் செய்கிறார்கள். உதவியையும் செய்துகொள்கிறார்கள். 

சிறையில் இருந்து வெளிவந்த குற்றவாளிகள் மௌனம் காக்கும் சூழல் நிலவுகிறது. 'வி.சி.க' வை சேர்ந்த ஒருவரிடம் குற்றவாளியே முன்வந்து தாங்கள் செய்யவில்லை 'மதியழகன்'தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவர்களுக்குள்ளேயே காட்டிக்கொடுக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். குற்றவாளிகளை காவல்துறைக்கு அடையாளம் காட்டியதற்காக பாதிக்கப்பட்ட மக்களில் சிலரை வெட்டுவதாக பேசி அச்செய்தியை பரப்பி இன்னும் சிலர் பயத்தை உண்டாக்கி வருகிறார்கள்.

சிறைக்கு சென்றுவந்த குற்றவாளிகளைச் சார்ந்த வீடுகள், சொந்தங்கள் மத்தியில் கடுமையான தலித் மக்கள் மீதான எதிர்ப்பு நிலவிவருகிறது. அவர்கள்தான் முழுக்க பா.ம.க வன்னியர் சங்கத்தில் இணைந்துள்ளனர். இணைந்தவர்கள் தே.மு.தி.க, அதி.மு.க, தி.மு.க என அனைத்துக் கட்சிகளிலும் உள்ள குற்றவாளிகள். அதற்கான புள்ளிவிவரங்கள் யார் என்ற பட்டியலும் விசாரித்து வருகிறேன்.

சிறை சென்று வந்தவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொருவருக்கும் அதிகளவு பணமும் கொடுத்து, கறி சாப்பாட்டுடன் விருந்தளித்து பாதுகாக்கும் வேலை நடந்துவருகிறது. இவற்றிலும் முக்கிய ஆட்களுக்குத்தான் பணமும், பராமரிப்பும் கிடைப்பதால் போலீசாரால் தேடப்பட்டதில் மன பாதிப்படைந்த வன்னிய மக்கள் பெரும்பான்மையினர், "செய்தவன் தின்றான்! நாம் எதுக்கும் போகவில்லை! நம்மை சிக்க வைத்து விட்டனரே!' - என்று திட்டம் தீட்டிய குற்றவாளிகளை திட்டித் தீர்க்கும் குழப்பங்களும் நடக்கின்றன.

ஒருமாதத்திற்கு முன்பு கொண்டம்பட்டியை சேர்ந்த செயராமன், வன்னியர் ஒருவரின் நிலத்தில் வேலைசெய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவை மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை ஏற்படுத்தியது.

நிலத்தின் சொந்தக்காரரான வன்னியர், இறந்தவரோடு நண்பராகத்தான் இருந்திருக்கிறார். மூன்று மாதமாக அவரின் காட்டிற்கு வேலைசெய்ய இறந்தவரை அனுமதித்தும் உள்ளார். வன்னிய சாதியைச் சேர்ந்த அக்குடும்பம் சமாதானத்துடன் விபத்துக்கான செலவை ஏற்றுகொண்டு, நஷ்ட ஈடு தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது. அவர் சேர்ந்த கர்த்தானூர் வன்னிய கிராம தலைவர்களிடம் கொண்டம்பட்டி மக்கள் முறையிட்ட போதும், 'சமாதானத்துடன் பேசித் தீர்த்து கொள்வோம்!'- என்றுகூட கூறியுள்ளார். 


இந்நிலையில், இந்த சமாதான நடவடிக்கைகளுக்காக, அவர் பா.ம.க தரப்பிலும் சில ஆதிக்க சக்திகளாலும் மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளார். சாதிய ஆதிக்க சக்திகள் நுழைந்து அக்குடும்பத்தையும், ஊரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். "வழக்கு போடுங்கள் சந்திக்கிறோம்!" - என்று சவால் விட்டும் அவர்களைப் பிரித்து வைத்துள்ளனர்.

சம்பவம் நடந்த போது, மக்கள் கோபத்தில் உடலை எடுக்கவிடாமல் மறியல் செய்துள்ளனர். மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டு பல பேர் பலமாக தாக்கப்பட்டுள்ளனர். போலீசை அடித்த சிஆர்.பி,.எப்பை சேர்ந்த ஒருவரை கைதுசெய்ததுடன், இறந்தவரின் உடலை காவல்துறை எடுத்து சென்றுவிட்டது.

வன்னிய மக்களிடம் இருக்கும் சாதி உணர்வை சாதிவெறியாக மாற்றுவதற்கு சாதிய பஞ்சாயத்துகளின் தலைமை சக்திகளும், உதிரிகளும்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். உழைப்பில் ஈடுபடுகின்ற அன்றாட கூலி மக்களோ இதற்கு ஏதோ ஒருவகையில் பலியாகிவருகிறார்கள்.

இளவரசன் இறந்துவிட்டார். 'திவ்யாவின் நிலை என்ன ஆனது?' - என்பது தெரியவில்லை. அப்பெண் மனமுடைந்த நிலையில்தான் இருக்கிறார். 'சமூகமே என்னை புறக்கணிக்கிறது. யாரும் செய்யாத செயலையா நான் செய்தேன்?' - என்ற கேள்வியோடு வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார். தற்போது, காவல்துறையின் பாதுகாப்போடு வேலைக்கும் செல்கிறார்.

நாகராசன் இறந்தபின் பா.ம.கவின் கட்டுப்பாட்டில் இருந்த தாயார் தேன்மொழி தனி வீட்டில் தன் மகன், மகளுடன் வசித்து வருகிறார். செல்லன்கொட்டாய் கிராமமே அவர்களை புறக்கணித்துள்ளது. இப்போது அவர் தனது கணவர் செய்த வேலையை (கூட்டுறவு சங்கத்தில்) தொடர்கிறார், நத்தம் கிராமத்தின் வழியாகத்தான் காவலர் ஒருவர் பாதுகாப்புடன் தினமும் அவர் வேலைக்கு வந்து செல்கிறார். 

அரசு அடக்குமுறை:

இதுபோன்று மக்கள் தங்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை நடத்தவிடாமல் எதற்கெடுத்தாலும் 144 என்ற காரணம் காட்டி அச்சுறுத்தும் வேலையை அரசு கடைபிடித்து வருகிறது. 'சாதிய கலவரங்கள் நடக்கக்கூடாது!'- என்று இதற்கான காரணமும் மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.  இதனால் அப்பகுதியில் எந்தவித அரசியல் செயல்பாடுகளோ, கூட்டங்களோ, நடப்பதில்லை. யாரும் வெளியில் இருந்து வரக்கூடாது என்று நிபந்தனையால் தலித் மக்களின் கோரிக்கையை கொண்டு செல்வதற்கும் தடையாக உள்ளது.

கொண்டம்பட்டியில் நடந்த சம்பவத்தை கண்டித்து துண்டறிக்கை விநியோகித்த போஸ்டர் ஒட்டிய 'ம.ஜ.இ.க.' வைச் சேர்ந்த தோழர்களை காவல்துறை தேடிவருகிறது. அதனை அச்சடித்த அச்சகத்தாரை கைதுசெய்து தேச துரோக வழக்கினை பதிவு செய்துள்ளது. செப். 12   அன்று நாயக்கன்கொட்டாயில் உள்ள அப்பு, பாலன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதற்காக 19 - க்கும் மேற்பட்ட 'ம.ஜ.இ.க,' மற்றும்  'ம.ஜ.இ.அ' தோழர்களை கைது செய்திருக்கிறது. இதுபோன்ற அடக்குமுறையை ஏவி மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.

பா.ம.கவின் சாதிய அணிதிரட்டலும், அச்சுறுத்தலும்:

வன்னியர் சங்கமும் ஆதிக்க சக்திகளும் சுதந்திரமாக செயல்படும் சூழலையும், சாதகத்தையும் மாவட்ட நிர்வாகமே ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

தருமபுரி முழுவதும் வன்னியர் சங்க உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு மேலிடத்திற்கு ஒப்படைக்கும் திட்டம் அமைதியாக நடைபெற்றுவருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நல்லம்பள்ளி யூனியனில் 200 க்கும் மேற்பட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் ரகசியமாக நடந்திருக்கிறது. அதன்படி தருமபுரி முழுவதும் உறுப்பினர் படிவத்திற்கு ரூ.200 கட்டணத்துடன் சேர்க்கைக்கான வேலைகள் முடிந்து தற்போது தேர்தல் நிதிதிரட்டல் வேலைவரை நீண்டிருக்கிறது.

பா.ம.க வன்னியர் சங்கத்தை கூட்டுவதாகவும், ஒவ்வொரு வீட்டுக்கும் வன்னியர் சங்க அறிக்கை விநியோகிக்கப்பட்டு குறிப்பட்ட தொகையும் வழங்கப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும், மகளிர் அணியை கூட்டிப் பேசுவதாக விசாரித்ததில் தகவல் கிடைத்தது. 'வன்னியர்களை வஞ்சிக்கும் அ.தி.மு.க தி.மு.க கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம்!'- என்ற அறிக்கையும் வன்னியர் சங்கம் சார்பாக விநியோகிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நிதிதிரட்டலுக்கான 'குழுக்கள்' வசூலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இவற்றில் மிக முக்கியமான செய்தி, தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க. என அனைத்துக் கட்சிகளில் உள்ள வன்னிய சாதியைச் சேர்ந்த நபர்களுக்கும் வன்னியர் சங்கத்தில் உறுப்பினர் படிவத்தை கொடுத்துள்ளனர். கட்சிகள் எதுவாக இருந்தாலும் தாங்கள் சார்ந்த வன்னிய சாதிக்கான சங்கம் தேவை என்ற கண்ணோட்டத்தில் அமைப்பாக்கல் நிகழ்ந்திருக்கிறது. வன்னியராக அணிதிரட்டல் வேலைதிட்டம் பா.ம.க ஜி.கே.மணி, சரவணன், தலைமையில் நடைபெறுகிறது.

மேலும் தலித் ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து அவர்களை பணிநீக்கம் மற்றும் பணிமாற்றம் செய்யும் சதியும் நடந்து வருகிறது. பா.ம.க, அ.தி.மு.க, தி.மு.க.வைச் சார்ந்த ஆதிக்க சக்திகள் இதனை முன்னெடுத்து செய்து வருகிறார்கள். குறிப்பாக அரியகுளம் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தலித் ஆசிரியர் மகேந்திரன் என்பவரை வன்னிய பள்ளி மாணவியை அடித்த காரணத்திற்காக சின்னேறி மோட்டுப்பட்டியை சேர்ந்த தி.மு.க கவுன்சிலர் மோகன் என்பவர் சாதிவெறியோடு இவற்றில் தலையிட்டு பணிஇடை நீக்கம் செய்ய பள்ளிக்குள்ளேயே வலியுறுத்தி இடைநீக்கமும் செய்யவைத்து பின் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதுபோன்று இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.

சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை மிரட்டுவது வெளிப்படையாக நடந்துவருகிறது. ஏற்கனவே சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்கள் பயந்து வெளிப்படையாக நடமாடுவதற்கும் அஞ்சி ஊரைவிட்டு வேறு இடத்திற்கு குடிபெயரும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. நாம் கேள்விப்பட்ட வகையில் பல குடும்பங்கள் இதுபோன்று இடம்பெயர்ந்துள்ளனர். அதேநேரத்தில், சாதிமறுப்புத்திருமணங்கள் அப்பகுதிகளில் அதிகரித்து வருகின்றன என்பது முக்கியமானது. 


கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது இது:


பாலக்கோடு சாமனூரைச் சார்ந்த பாத்திர வியாபாரி தங்கராஜ். இவர் தலித் அல்லாதவர். ஆனால், இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஒன்றியச் செயலாளராக இருந்துவருகிறார். இது வல்லப்பட்டியைச் சேர்ந்த சாதிய வெறியர்களுக்கும் ராஜா என்கிற கவுன்சிலருக்கும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தங்கராஜை கட்சியைவிட்டு வெளியே வரச்சொல்லி பலமுறை மிரட்டியுள்ளனர். அதற்கு பணியாத தங்கராசை மரத்தில் கட்டிவைத்து காலை உடைத்துள்ளனர். அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்றார். இந்த சம்பவம் பகிரங்கமாகவே ஊரறிய நடந்துள்ளது.


இதுபோன்று தருமபுரி முழுவதும் பல்வேறு வடிவங்களில் சாதிய ஆதிக்கமும், அச்சுறுத்தலும் மக்கள் மத்தியில் பரப்ப்பட்டு வருகின்றன. இன்னும் ஆழமாக மக்களிடம் விசாரணை செய்தால் முழுமையான நிலைமையை உணரமுடியும். இதற்கான திட்டமிடலை செய்ய வேண்டியிருக்கிறது.


வழக்கை பொறுத்தவரை:


1. 150 பேர் கைது செய்யப்பட்டு, மூன்று மாதத்திற்குள்ளேயே பிணையில் வெளிவந்துள்ளனர். மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட 1000 பேரில், 50 முதல் 100 பேரின் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு மற்றும் பலர் என பொத்தாம் பொதுவாக பதிவு செய்துள்ளனர்.


அனைத்து வழக்குகளும் நிலுவையிலும், வாய்தாவிலும் நகர்ந்து கொண்டிருக்கிறன. குறிப்பாக சங்கரசுப்பு, என்.ஜி.ஆர் பிரசாத், செங்கொடி ரஜினி, சத்தியசந்திரன், ரத்தினம் ஆகியோர் வழக்கை நடத்துகிறார்கள்.


2. கிராமங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கான வழக்கை அரசாங்கம், 'சி.பி.சி.ஐ.டி'யிடம்  மாற்றியது. குற்றவாளிகளை கைது செய்வதில் அரசு காட்டிய மெத்தன போக்கின் விளைவாகவே தற்போது அதனை சி.பி.ஐக்கு மாற்றக் கோரிய வழக்கு போடப்பட்டுள்ளது.


3. சி.பி.சி.ஐ.டி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதற்கு பாதிக்கப்பட்டவர்களின் சார்பான வழக்கறிஞர்கள், 'முழு விசாரணை செய்யாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது!'- என்று வழக்கு போட்டுள்ளனர். அதனால் வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன.


4. பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நிவாரணத்திற்காக போட்டுள்ள வழக்கையும் வாசுகி தலைமையிலான குழு விசாரித்து விட்டது. 


5. கிராமத்தில் மாடி வீடு கட்டியிருந்தவர்கள் பாதிக்கப்பட்டதிற்கான நிவாரணம் கேட்ட வழக்கு, ஆய்வுக்குழு விசாரித்துள்ளது.



இளவரசன் கொலை வழக்கு


6. ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஒருநபர் விசாரணைக் குழுவும், அரூர் டிஎஸ்பி சம்பத்குமார் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரின் மீதும் சாதிய ரீதியான புகார்கள் மற்றும் சாதிய மனோபாவத்தோடு சில வழக்கை அணுகுபவர்கள் என்று புகார்கள் இருக்கின்றன. அதனால்,  இக்குழுக்களின் தலைமையிலான விசாரணை வேண்டாம் என்று நிராகரித்து இளவரசன் குடும்பம் மற்றும் திவ்யாவின் குடும்பமும் விசாரணைக்கு போகவில்லை. 

7. இளவரசன் மரணத்திற்கு நீதிபதி சந்துரு தலைமையிலான சிறப்பு புலன் விசாரணைகுழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளனர். அவையும் வாய்தாவில் இருக்கிறது. 


8. இதுபோக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 144 ஐ நீக்க வேண்டும், இளவரசன் இறுதி அஞ்சலிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவை நிராகரிக்கப்பட்டுள்ளது. 


9. ம.க.இக. சார்பாக இளவரசனின் மனைவியான 'திவ்யாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்!' மேலும் 'அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்!'- என கோரி மனு தாக்கல் செய்தும் அதற்கான உத்தரவும் பெற்றனர். தற்போது, அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.


10. சி.பி.எம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, 'வழக்குகளை 'சி.பி.ஐ'க்கு மாற்ற வேண்டும்!'- கோரிய வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.


இத்தகைய சூழலில், ஆதிக்க சக்திகளுக்கு பாடம் புகட்டும் வகையில் அனைத்து வழக்குகளையும் இணைத்து நடத்தவேண்டிய அவசியம் உள்ளது. சிறப்பு நீதிமன்றக் கோரிக்கை, சுண்டூர் படுகொலை மற்றும் அதன் நீதி இவை பற்றிய விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இவை வழக்குகளை முன்னெடுத்து செல்ல பெரிதும் உதவும்.


அதேபோல் வன்னிய பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து பா.ம.க மற்றும் சாதிய வன்முறை கும்பலைத் தனிமைப்படுத்த வேண்டிய பெரும் சவாலும் உள்ளது.  அதற்கான வேலைதிட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய தேவையும் உள்ளது.


சாதிய கட்டபஞ்சாயத்துகளின் பங்கு மிக முக்கியமாக உள்ளதால், சட்ட ரீதியாக அவற்றை தடைசெய்ய வலியுறுத்த வேண்டும்.


ஆக, தருமபுரி மாவட்டத்தில் சாதிய - ஆதிக்க வன்முறையாளர்களும், பா.ம.க வும் தங்களுக்கான திட்டத்தை தங்குத் தடையின் செய்து கொண்டிருப்பதும், தலித் மக்கள் பயந்து முடங்கியுள்ள நிலையுமே தற்போதும் நீடிக்கிறது.


மேற்கண்ட விவரங்கள் அங்குள்ள நிலைமையை புரிந்துகொள்ள போதுமானவையாக இருந்தாலும் நமது தரப்பில் ஒரு குழு அமைத்து தொடர்ச்சியாக தருமபுரி சம்பவத்துக்கான கோரிக்கையையும், வழக்கையும் நகர்த்த வேண்டும். 


சுண்டூர் படுகொலையில் பாதிக்கப்பட்ட கிராமத்திலேயே சிறப்பு நீதிமன்றம் அமைத்து அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கான கோரிக்கையையும் வலுப்படுத்த வேண்டும்.  இந்த பிரச்னைகள் குறித்த வெளியீடுகளும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதற்கான பரந்தளவிலான மக்கள் இயக்கங்களை இணைத்துக்கொண்டு முன்னெடுப்பதை நோக்கி நகரவும் வேண்டும்..
 


- தோழர் ரமணி, 

கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை, 
தமிழ்நாடு.

(தகவல்: Venkata Naga Narasimham T)

0 comments:

Post a Comment