NewsBlog

Thursday, August 27, 2020

அந்த இரண்டு இளம் மீட்பாளரும், தூக்கணாம் குருவி குஞ்சுகளும்

 

மித்ரன் மற்றும் வர்சா எப்போதும் போல் தங்கள் ஊரை சுற்றி சைக்கிளில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மழை நீர் தேங்கிய சதுப்பு நிலத்தில் வளர்ந்திருந்த யானைத்தட்டை புற்கள் செழித்த புதர் காட்டின் கரையோரம் அநாதரவாக தரையில் கிடந்த தூக்கணாங்குருவி கூடு ஒன்றை கண்டனர்.

யாரோ மாட்டுக்கு புல் அறுத்தவர்கள் உச்சிப் புல்லை வளைத்து, கோர்த்து, இணைத்து கட்டியிருந்த கூட்டை அகற்றி பொருட்படுத்தாமல் தரையில் வீசிச்சென்றுள்ளனர்.

கீழே கிடந்த கூட்டை அந்த இரண்டு சிறுவர்கள் கையில் எடுத்து சோதனை செய்ததில் உள்ளே நான்கு இளம் குஞ்சுகள் இருந்துள்ளன.

சரி நமக்கென்ன கவலை என்று அப்படியே கிடத்திவிட்டு கடக்கவில்லை அந்த குழந்தைகள்.

மித்ரன் மற்றும் வர்சா நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளிச்சிறுவர்கள். நண்பர்கள் இருவரும் அந்த குஞ்சுகளை பத்திரமாக வீட்டுக்கு எடுத்துக் கொண்டுப் போய் தங்கள் பெற்றோர்களிடம் நடந்த விவரத்தை விவரித்தனர்.

மாலையில் மீட்கப்பட்ட இளம் குஞ்சுகள் இரவு முழுதும் அந்த குழந்தைகள் அரவணைப்பில். குஞ்சுகள் பசியால் வாடும் என்று அந்த குழந்தைகள் புழுக்களையும் பூச்சிகளையும் பிடித்து உணவாக கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து என்ன செய்வதென்று அறியாமல் குழந்தைகளின் பெற்றோர்கள் 'ஊர்வனம்' குழுவினரை அண்ணன் இறகுகள் ரவீந்திரன் மூலம் நம்மை தொடர்பு கொண்டனர்.

ஊர்வனம் மீட்பு குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு குழந்தைகள் மித்ரன் மற்றும் வர்சா உடன் விரைந்து சென்றனர். குஞ்சுகள் கிடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

உயர்ந்த வசதியான பெரும் குடியிருப்புகளுக்கு நடுவே யானைத்தட்டை புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் அது. 

அங்கு பெரும் கூட்டமாக தூக்கணாங்குருவிகள் குடியேறி இருந்தன. ஆங்காங்கே கூடுகள் கட்டப்பட்டிருந்ததையும் பெற்றோர்கள் கூட்டுக்குள் நுழைவதும், வெளியேறுவதுமாய் இருந்தன. கூடுகளில் இருந்து வெளிவரும் அழகிய இசையில் உள்ளே குஞ்சுகள் உள்ளது உணரப்பட்டது.

கரையோரம் இருந்த புற்கள் அறுக்கப்பட்டிருந்தன. அறுபட்ட புல்லில் கட்டப்பட்டிருந்த கூட்டை அகற்றி கீழே வீசிச்சென்று புற்களை எடுத்து சென்றுள்ளனர்.

சரி குஞ்சுகளை நாம் எடுத்து சென்று இரையை ஊட்டி வளர்க்கும், ஒரு சவாலான, ஆபத்தான பணியைவிட, அதை காணாது தவிக்கும் பெற்றோர்களுடன் சேர்ப்பதுதான் சிறப்பானது.

கூடு கீழே கிடந்த சரியான இடம் கண்டறியப்பட்டது. அதன் அருகில் உயரே வளர்ந்து இருந்த புல்லின் சதுப்பு நிலப் பகுதியில் மீட்புக்குழுவினர் இறங்கினர். வேறு வழியில்லாததால், தூக்கணாங்குருவி போல் அருகருகே இருந்த வெவ்வேறு புல்லின் உயர்ந்து வளர்ந்த நுனிப்பகுதியை வளைத்து, இணைத்து கூடு மீண்டும் உயரே நான்கு குஞ்சுகளுடன் கட்டி விடப்பட்டது.

மித்ரன், வர்சா என்ற இரண்டு இளம் மீட்பாளர்கள் குருவியின் குடும்பத்தை இணைக்க மேற்கொண்ட சிரமங்கள், அனைத்து மனிதர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக "பல்லுயிர் ஓம்புதல மாந்தர் இயல்பு" என்ற கருத்தை உணர்த்துகிறது.

வாழ்த்துகள் மித்ரன் மற்றும் வர்சா...

படம், தகவல்: Vishwa Wishtohelp - https://www.facebook.com/vishwanath.vishwa.507
ஊர்வனம் :: Urvanam
விலங்குகள் மீட்புக்கு
8608700088

'''''''''''''''''''''''''

தூக்கணாம்குருவிகளின் வாழ்வியலை அறிய இணைப்புக்கு: https://www.youtube.com/watch?v=on__YmwEm1U&t=14s

0 comments:

Post a Comment