NewsBlog

Monday, August 17, 2020

இப்படிதான் யானை கவுணி 'மினி ராஜஸ்தான் ஆனது!

 
ஒரு காலத்தில், யானை கவுணியில்தான், அநேக பிராமணர்கள் வசித்தனர். இவர்கள் பெரும்பாலும், ஆற்காடு, ஆரணி, வந்தவாசி ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள். கொச்சையான கிராமிய தமிழுக்கு சொந்தக்காரர்கள். கரிய நிறங்கொண்டவரகளாக (பிராமணரா என்று யூகிக்கும் வகையில்) இருப்பினும், தீர்க்கமான கருட மூக்கு கொண்டவர்கள்.

அப்போதெல்லாம் அனுமாருக்கு சாத்தப்படும் வெங்காய நிறத்தில் ஶ்ரீசுர்ணம் தான் இட்டுக் கொள்வார்கள்.

ஒரு பக்கம் கோமுட்டிகளும், இன்னொரு பக்கம் செட்டியார்களும், மறுபக்கம் முதலியார்களும் வாழ்ந்த இடம். கணிசமாக மார்வாரிகளும் இருந்தனர்.

உலகப்புகழ் பெற்ற வால்டாக்ஸ் ரோடில் திருப்பதி குடை அழகு.

நாயுடு சமூகத்தினரின், ஆத்மார்த்த பெருமாள் பஜனை, நம்முடலில் புது ரத்தம் பாய்ச்சும்.

தமிழ் மொழியில் ‘ல, ள, ன, ண, ழ’ வித்தியாசத்தைக் காதுக் கொடுத்துக் கேட்கலாம்.

பைராகி மடம் கோயில் மினி திருப்பதி. வைகுண்ட ஏகாதசியன்று, மார்வாடி உபயத்தில், நாட்டுச் சர்க்கரை. அது தேவாமிருதம்.

விடிய விடிய பரம்பத விளையாட்டுக்கள்தான்.

பிரம்மோற்சவம் நடக்கும் தருவாயில், பாண்ட் வாத்தியத்தோடு, கிளாரிநெட் மற்றும் சாக்ஸ்போன் (clarinet & saxophone) வாசிப்பு நாடி நரம்புகளை என்னமோ செய்யும்.

மூங்கிபாய் ஸ்கூல்தான், மேல்தட்டு பெண்கள் படிக்கும் பள்ளி. இந்து தியாலஜிகல் (Hindu theological) ஆண்களுக்கான பள்ளி. ஜிஎம்டிடிவியில் (GMTTV) முதலியார்கள் பரவலாக படித்தார்கள். ரிக்ஷாவில் செல்பவர்கள் மார்வாரிகள் மற்றும் மேல் தட்டு மக்கள். மின்ட் தெருவில், உள்ள டாக்டர் PT.ராமலிங்கம் ஒரு ஊசி போட்டா கொரானாவே காலியாகும் அவ்வளவு ராசியான டாக்டர்.  

சென்னை தமிழ் அழகு. "நீ வா சார்" என்று ரிக்ஷாவாலா பேசுவது, ஜெல்லாஸ்பத்திரி என்று GHஐ சொல்வது, பால் மாறாம, ஜல்ப்பு (ஜலதோஷம்), பழுப்பு (pipe), இட்னு, கவுச்சி, குந்திக்குனு, நாஸ்தா, நோவு இப்படி தமிழ் அழகு.

பிராமணர்கள் திராபை, ஜபர்தஸ்து என்கிற வார்த்தைகளை பிரோயிகித்தனர்.

ஆண்டாள் பாசுரம் அநேகருக்கு அத்துப்படி. அருணாசலேஸ்வரர் கோயில்தான் எங்களுக்கு திருவண்ணாமலை. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, மகாசிவராத்திரி எல்லாம் யாருக்கும் தெரியாது. செவ்வாய் வெள்ளி மட்டும் காளிகாம்பாள் கோயிலில் கூட்டம். இப்போதெல்லாம் திருவேற்காடு எங்களுக்கு தூரதேசம், "திருவேற்காடா போயாந்தே" எம்மாந் தொலவுன்னு வெகுளியாக சென்னை தமிழில் கேட்பது கொள்ளை அழகு.

டவ்டனை, டfton என்பதும், புரசைவாக்கத்தை, பொரஷவாக்கம் என்பதும், விருகம்பாக்கத்தை விரியம்பாக்கம் என்பதும், ஃபேனைத் துடை என்பதற்கு ஃபேனைத் தொடி என்பதும், குன்சா என்று சொல்வதும் பேஜார், பேமானி, கசுமாலம் என்கிற வார்த்தைகள் எங்கே?

சென்ட்ரல் ரெயில் நிலையம், எங்களுக்கே சொந்தமானது போல் ஒரு அந்நியோநியம்.

அரிசி போடுவதற்கு, நெல்லூரிலிருந்து, நடிகர் ரங்காராவ் போல கம்பீரமாய் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு 6 அடி மனிதர் வீட்டிற்கே வருவார். பக்கத்தாத்து வக்கீல் பாட்டிதான், நம் பிள்ளைகளுக்கு பெயரே சூட்டுவார். “மைதிலி, இப்பத்தான்டி, நான் ஸ்ரீவில்லிபுத்தூர் போய் ஆண்டாளை சேவிச்சிட்டு வரேன். உன் பொண்ணுக்கு ஆண்டாள்ன்னு பேர் வைடி!”- என்று சொல்ல, மகிழ்ச்சியோடு ‘ஆண்டாள்’ என்று பெயர் சூட்டப்பட்டது என் தங்கைக்கு.

பிராமணர்களில் அநேகம் பேர் அப்போது சீனிவாசன், பாலாஜி, வெங்கடேசன், பெண்களாக இருந்தால் நப்பின்னை, கோதை, லட்சுமி என்று பேர் வைத்தார்கள். பிராமணர் அல்லாதார் எத்திராஜ், ராஜேந்திரன், கபாலி, சிங்காரம், பழனி, சபாபதி, மலைச்சாமி, பெண்களாக இருந்தால், கயல்விழி, மோகன சுந்தரி, சுகந்தி, சாந்தி, விஜயலட்சுமி, உமா.

அப்போதெல்லாம், உடுப்பி ஹோட்டல்தான்! ஆனால் சுவை அதன் நறுமணம் நாலு தெருக்களுக்கு வீசும். அசைவம் என்றால், மதுரை முனியாண்டி விலாஸ்தான். எங்கு பார்த்தாலும் போக்குவரத்து கிடங்கிகள்தான் (transport godown)

கொத்தவால் சாவடி தான் அன்றைய கோயம்பேடு. நெய் வாங்கனும்னா கிரி டிரேடர்ஸ் என்கிற பெருமாள் செட்டி அண்ட் கோ. தாமரை இலையில் கட்டிக் கொடுப்பார்.ராயபுரம் கல்மண்டபம் அருகே அரிசி பருப்பு கிடைக்கும். அப்பவே “ஹோட்டல்க்கா?”, “வீட்டுக்கான்னு?” கேட்டார்கள். 

அவ்வளவு நேர்மை?

வருஷத்திற்கு ஒரு தபா, எல்லோருக்கும் டைபாயிட் (typhoid) வரும்.

விநாயக சதுர்த்தி, திருப்பதி குடை மற்றும் ஆடி மாதம் லைட் மியூசிக் ரொம்ப பிரபலம். எம்எஸ்வி, மாஸ்டீரியோ, சங்கர் கணேஷ் (MSV, MAESTERO, SHANKAR GANESH) ஆரம்ப கால டிஆர் (TR) பாடல்கள்தான் அப்போ ஹைலைட்.

சின்னகடம்மன் கோயிலில், எல்ஆர். ஈஸ்வரி செல்லத்தா, செல்ல மாரியத்தான்னு ஆடி மாதம், லைட் மியூசிக்ல பாடும் போது ஒட்டுமொத்த மக்களையும் சாமியாட வைத்தது கின்னஸ் சாதனைதான்.

திருவிளையாடல் ஒலிச்சித்திரம் எத்தனை முறை மகிழ்வித்தது!

புரட்சி செய்த வெளி மொழிப் படங்கள் சங்கராபரணம் 500 daysக்கு மேல் சத்யம் தியேட்டரில் ஓடியது. இந்த படம் வந்த போது, ரிக்ஷா வாலாகூட சங்கரா என்று ரம்மியமாக பாடினார். எஸ்பிபி பெருமளவில் ஈர்க்கப்பட்டார்.

என்டர்’ தி டிராகன் (ENTER THE DRAGON) ஆனந்த் தியேட்டரில் 365 நாட்கள், மரோசரித்ரா சபையர் (SAPPHIRE) தியேட்டரில் 500 நாட்களுக்கு மேல், ஜாக்கி ஷரூப் (JACKIE SHEROF) நடித்த ஹீரோ இந்திப் படம் பத்மம் தியேட்டரில் 500 நாட்களுக்கு மேல், 36 சாம்பர் ஆஃப் ஷாலின் (36 CHAMBER OF SHAOLIN) சபையர் (SAPPHIRE) தியேட்டர்ல 365 நாட்கள், இறுதியில் கியாமத்-ஸே, கியாமத்-தக் (QUATMAT SE QUATMAT TAK) எமரால்ட் (EMERALD) தியேட்டரில் 700 நாட்கள்.

மினர்வா (MINERVA) தியேட்டரும், ஓட்டேரி பாலாஜி தியேட்டரும், அற்புதமான ஹாலிவுட் படங்களை கீழ் தட்டு மக்களுக்கு கொண்டு சேர்த்தது.

ஆங்கிலப் படங்களைப் பற்றிய அதீத அறிவு, கீழ்த்தட்டு மக்களுக்கு உண்டு.

ஒருமுறை, ஐ ஆஃப் தி நீடில் (eye of the needle) படம் பார்க்கும் போது, பக்கத்தில் உட்கார்ந்து பார்த்த, ஒரு ரிக்ஷாகாரர், என்னைப் பார்த்து, இதில் வரும் ஹீரோ பேர் தெரியுமான்னார், தெரியலன்னேன். அவர் டொனால்ட் சுதர்லண்ட்ன்னார் (Donald Sutherland). அடுத்து இந்த ஹீரோவை பார்த்தா, யார் மாதிரி இருக்கு சொல்லுன்னார், மறுபடியும் தெரியலன்னேன், அந்த நபர், என்னைப் பார்த்து, உனக்கொன்னியும் தெர்லன்னு சொல்லி, நம்ம கமல் மாதிரி இருக்கான் பாருன்னு சொன்னார், அதே மாதிரி கண், நடிப்பு பாருன்னார். அந்த ரிக்ஷாகாரரை பார்த்து வியந்தேன் ஏனெனில் அந்த நடிகர் அப்படியே இருந்தார்.

ஒரே நேரத்தில், தீபாவளி ரிலீஸ், கிருஷ்ணா தியேட்டர்ல, கமலின் தூங்காதே தம்பி தூங்காதே, பாண்டியன் தியேட்டர்ல ரஜினியின் தங்க மகன். எப்புடி? கமல் ஸ்ரீதேவிதான் ஃபேமஸ்.

திமுக கோட்டை வடசென்னை என்பதால், என்விஎன் சோமு, டாக்டர் கலாநிதி (NVN SOMU, Dr.KALANIDHI) எல்லாம் தொகுதி பக்கம் வராமல் ஒவ்வொரு முறையும் ஜெயித்தனர்.

ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு பொருள் பிரத்யேகம். ஆதியப்ப நாயக்கன் தெருவில், மளிகை சாமான்கள், நாராயண முதலி தெருவில், பிளாஸ்டிக், செம்பு தாஸ் தெருவில் இரும்பு சாமான்கள், கோவிந்தப்ப நாயக்கன் தெருவில், எலக்ட்ரிக் பொருட்கள், பந்தர் தெருவில் (BUNDER STREET) எழுதுப்பொருட்கள். இப்படி ஒரே இடத்தில், எல்லா பொருட்களும் சகாய விலையில்.

பக்த பிரகலாதன் படம் பார்க்க டிவியில்தான்; ஒரு வீட்டில் நாலணா அதாவது 25 காசு கேட்கப்பட்டது. ஆனா என் ஹவுஸ் ஓனர் வீட்டில், தெருவே டிவி பார்த்து, மணிக்கணக்காக சிவாஜியின் நடிப்பை ஆராய்ச்சி செய்யும். அப்போது என்ன ஒரு குதூகலம் என்றால், “இந்த படத்துல சண்டை இருக்கா?”, “ஹை, ஜாலி!”- என்று சொல்வது.

ரேடியோ மாதிரி ஒரு சொர்க்கம் உண்டா? விவதபாரதியில், பாடல்கள் ஒலிக்கும் போது, நாளை இந்த வேளை என்று பாடும் போது ஆண்கள் கூட வாணிஸ்ரீ ஆகி அதே அபிநயம் செய்தனர்.

70 களில், மிகப்பெரும் மாற்றம் நடந்தது, ஒரு பக்கம், எம்எஸ்வி, டிஎம்எஸ். இன்னொரு பக்கம், டப்பாங்குத்து மியூசிக் டைரக்டர் என்று பேசப்பட்ட இளையராஜா வாழையில் ஊசி போல் நம் மனதில் கால் மேல் கால் போட்டுக் கொண்டார்.

சங்கர் கணேஷின், நான் கட்டில் மீது கண்டேன், டிஆர்ரின் வாசமில்லா மலரிது, சந்திரபோஸின் மாம்பூவே சிறு மைனாவே, மாஸ்டீரியோவின் இளைய நிலாவும் ஆக்கிரமித்தன.

அகஸ்தியா தியேட்டர், பைலட் தியேட்டர் மற்றும் தேவி தியேட்டர்களின் அகண்ட திரைகள் பிரபலமானவை.
 
மூர் மார்க்கெட் எங்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம்.

வண்டலூர் உயிரியல் பூங்கா யானை கவணிலதான் இருந்ததுன்னா, யாராவது நம்புவாங்களா? காலையில் சிங்கம் உறுமுவது எங்கள் வீட்டு மாடியில் கேட்கும். பேசின் பிரிட்ஜ் அனல் மின்நிலையத்திலிருந்து வரும் கரும்புகையை தினமும் சுவாசித்து வந்தோம்.

அப்போதே எங்களுக்கு, சாலையில், ‘இயேசுவின் ரத்தம் ஜெயம்!’ - என்று சொல்லி, புத்தகங்களையும், படங்களையும் விநியோகித்தனர். அதை வாங்கிக் கொண்டு, திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல விழித்தோம்.

கொண்டித்தோப்பில்தான், பாம்பு பஞ்சாங்கம் அச்சிடப்படுகிறது.

சீனப் பல் மருத்துவர்கள் கணிசமாக ஈவினிங் பஜார் பகுதியில் இருந்தனர். அவர்கள் எங்கே என்று தெரியவில்லை.

அடிப்பட்டால், புத்தூர் கட்டுத்தான். மூலகொத்தளம் பஸ் ஸ்டாண்டில் வலிக்க வலிக்க ஆந்திரா பஸ்ஸில் ஏற்றி, புத்தூருக்குச் சென்று வெற்றிகரமாக கட்டுப் போட்டு, ஒரு சில வாரங்களில் சரியாகிவிடுவோம்.

கல்யாணம் என்றால், நாரயணமுதலி தெரு கோமிட்டி மண்டபங்கள்தான் சகாய வாடகையில்! கொஞ்சம் வசதியிருந்தால், கோவிந்தப்ப நாயக்கன் தெரு பெரிய மண்டபம்.

ஒரு முறை நடிகை பத்மப்ரியாவை (மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்) பார்த்தேன், தூரத்து சொந்தம்.

குலதெய்வம் கோயிலுக்கு போறாங்களோ இல்லையோ, திருப்பதி பெருமாள்தான் ஒட்டு மொத்த வடசென்னைவாசிகளுக்கு பேவரிட். வருடத்திற்கு என்ன, மாதாமாதம் விசிட் அடித்தவர்கள். சம்மரில் (SUMMER) திருப்பதியோ அல்லது திருத்தணி மொட்டை தலையரை சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

மெல்ல மெல்ல பிராமணர்கள், நங்கநல்லூர், தாம்பரம், அம்பத்தூர் என்று வெகுஜனங்களோடு இடம் பெயர்ந்தனர். ஆகையால், இப்போது யானை கவுணி ‘மினி ராஜஸ்தான்’ ஆகிவிட்டது.

''''''''''''''''''''''''''''''''''''' 

(70 & 80களில் வடசென்னையில் (யானை கவுணி) பிறந்து வசித்த ஒரு சாமான்ய பிராமணரின் பதிவு இது. அவரது பெயர் குறிப்பிடவில்லை நண்பர் ரசூல் மொய்தீன் https://www.facebook.com/amrasoolmohideen பதிவில்)


0 comments:

Post a Comment