NewsBlog

Wednesday, August 12, 2020

முதுபெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி மறைந்தார்.

 முதுபெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி உடல்நலக் குறைவால் தனது 102 ஆம் வயதில் இன்று காலமானார்.

மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?

சின்னச் சின்ன நடைநடந்து, செம்பவள வாய் திறந்து

ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து

- போன்ற பல வெற்றிப் பாடல்களை இயற்றியவர்தான் இந்த வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி.

கண்களுக்குக் கண்ணாடி ஏதுமின்றி, 102 வயதைத் தொட்டும் இளைஞர் போல் சுறுசுறுப்பாக, அவரே சமைத்துச் சாப்பிட்டுத் தான் பெற்ற விருதுகளோடு சிறிய வீட்டில் வாழந்து வந்த  கவிஞரின் மரணம் அக்கிராமத்தினரிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடத்துக்குள் ஒளிரும் குத்துவிளக்கு வறுமை வளாகத்தில் உலாவும் பெரியார், கொள்கைச் சிங்கம் கவிஞர் பி.கே.முத்துசாமி.

“இவரது பாடலுக்கு நான் அந்த நாள் ரசிகன்”-என்று கவிஞர் சுரதா வார இதழ் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

"வெண்பா வேந்தர்", "இந்த நுாற்றாண்டின் புகழேந்தி"-போன்ற விருதுகளும் கவிஞருக்கு வழங்கப்பட்டுள்ளன.

உலகத் திரைப்படங்களிலிருந்து இந்தியப் படங்களை வேறுபடுத்திக் காட்டும் ஒரு அடையாளம் திரைப்பாடல்கள். கிராம ஃபோன் - LP - SP  இசைத்தட்டுகளிலிருந்து 21 ஆம் நூற்றாண்டுத் திரையிசைப் பாடல்கள் வெகுவாக முன்னேறியிருந்தாலும் பாடல்கள் இல்லாமல் படங்கள் வெளிவருவது மிகமிகச் சொற்பமே.

சில படங்களின் பெயர்களோ, பாட்டிற்கு நடித்த நடிக, நடிகையர் பெயர்கள் கூட ஞாபகமில்லாமல் பாடல்களை முணுமுணுக்கும் பெரியவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அதில் ஒரு சிலர் காட்சிகளின் கோணங்களைக் கூடச் சொல்லுமளவிற்குத் திறமை பெற்றிருப்பார்கள்.

பாடல்களை உருவாக்குவதில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், வாயசைக்கும் நடிக நடிகையர் எனப் பலரின் பங்களிப்புகள் இருப்பினும் சில பாடலாசிரியர்களே மக்களின் நெஞ்சங் கவர்ந்தவர்களாக வலம் வருகிறார்கள். அரை நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்களை இயற்றிய பாடலாசிரியர்களுள் மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் சுரதா ஆகியோரைக் குறிப்பிட்டுச்  சொல்லலாம்.

இவர்களுக்கு மத்தியில், பல வெற்றிப்பாடல்களை எழுதிப் பொதுவெளியில் அடையாளங் காணப்படாத பாடலாசிரியர்களுள் ஒருவர்தான் வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி.

கவிஞர் முத்துசாமி
கவிஞர் பி.கே. முத்துசாமி, ஏராளமான வெண்பா, நூல்கள், கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார். அவரது படைப்புகளைப் பாதுகாக்க போதிய இட வசதி இல்லாததால், மூட்டைகளில் கட்டி வைத்துள்ளார். தன்னை சந்திக்க வருவோரிடம் வெகு ஆவலாக அந்த மூட்டையில் உள்ள படைப்புகளை எடுத்துக் காண்பித்து, அவை உருவான விதம் குறித்து விளக்குகிறார் வெளிச்சம் படாத கவிஞர் முத்துசாமி  

கவிஞர் பி.கே. முத்துசாமி திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிவந்தவர். தி.மு.க. வில் தன்னை இணைத்துக் கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றவர். முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றோருக்கு மிகவும் பரிச்சயமானவராகவும் இருந்திருக்கிறார்.

"அண்ணா அறுபது", "பெரியார் புரட்சிக் காப்பியம்", ஜெயலலிதா பற்றிய "புரட்சித் தலைவியின் புரட்சிக் காப்பியம்" போன்றவை இவர் எழுதிய நூல்களில் சில.  மேலும் 15, 000 வெண்பாக்களும் 1000 கவிதைகளும் அடங்கும். "புரட்சித்தலைவி அந்தாதி" என்ற நூலையும், பெரியார், அண்ணா, எம்ஜிஆர்.,  போன்றோரைப் பாராட்டித் தனித்தனியே வெண்பாக்களையும் எழுதியுள்ளார்.

"பொன்னித் திருநாள்" படத்தில் ( 1960 ) கே.வி. மகாதேவன் இசையில் பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடும், ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து? உன் எழில்தனை பாடவா  தமிழைச் சேர்த்து என்ற பாடலையும்,

"காவேரியின் கணவன்" படத்தில் மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே பொண்ணு வந்தா பொண்ணு  வந்தா பொட்டி வண்டியிலே .... போன்ற பாடல்கள் இன்னும் மக்களால் முணுமுணுக்கப்படும் பாடல்களாக அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பட்டியை சேர்ந்தவர் வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி. இவர் பள்ளிக்கல்வி மட்டுமே படித்துள்ளார். தமிழ், இலக்கியம் மீது கொண்ட காதலால் ஆயிரக்கணக்கான வெண்பாக்களை எழுதி உள்ளார். அந்தக் காலத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்தவர்களின் அறிமுகத்தால் அப்படியே சினிமாவுக்கு வந்தவர்.

இவரது தந்தையார் எஸ்.பி. கருப்பண்ணன், தாயார் காளியம்மாள். விவசாயத்தைப் பார்த்துக் கொண்டே மிதிவண்டி நிலையக் கடைப் பணியில் ஈடுபட்டவர். திரைப்படம் மீது கொண்ட பேரார்வத்தால் தனது நிலத்தை விற்பனை செய்து, அதில் கிடைத்த பணம் மூலம் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற திரைப்படத்தை எடுக்க முயற்சித்தார். அவரின் திரைப பட முயற்சி வெற்றிபெறவில்லை. அந்தத் திரைப்படத்தை அப்போதய பிரபல இயக்குநர் ஏ.கே. வேலனிடம் ஒப்படைத்தார். அந்தப் படத்தில் பாடல் ஆசிரியராக மட்டுமே பணிபுரிந்துள்ளார் - (மண்ணுக்கு மரம் பாரமா) "காவேரியின் கணவன்" ஏ.கே. வேலன் இயக்கிய படத்தில் இடம்பெற்ற "சின்னநடை நடந்து வா" - பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

பி.கே.முத்துசாமியின் மகன் ஒரு ஒளிப்பதிவாளர். மகள் கலையரசி ஆர். புதுப்பட்டியில் உள்ளார்.

2003 ஆம் ஆண்டு, தன்னுடைய மனைவியை இழந்த பின், மீண்டும் நாமக்கலுக்கே சென்ற கவிஞர் அங்கு வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார்.

இவர் படைப்பில் உருவான புத்தகங்களின் உரிமையை கூட, சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வழங்கிய இவர், கடைசி வரை தனக்கு அரசால் வழங்கப்பட்ட ரூ.1500/- பணத்தை கொண்டே வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இவர் எழுதிய ஒரு நாடகத்தில், நடிகவேள் எம்.ஆர்.ராதா போன்ற திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

திரைப்படப் பாடல்களில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர் வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமிக்கு ( 20 அக்டோபர், 1918 - 11 ஆகஸ்ட், 2020 ) அஞ்சலி செலுத்துவோம்.

மதுரையிலிருந்து
பென்ஸி.

நன்றி: Kadayanallur Benzy   (https://www.facebook.com/kadayanallur.benzy)


0 comments:

Post a Comment