NewsBlog

Thursday, August 20, 2020

எண்ணூர் உப்பங்கழியும், அரங்கேற்றப்படும் அத்துமீறல்களும்!

பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெறும் முப்பது, நாற்பதாண்டுகளில் நதி நிறம் மாறிப்போனது. பெரும் பகுதி நீர் வாழ் உயிரினங்கள் அடையாளம் தெரியாமல் போயின. கிடைக்கும் சொற்ப வகை மீன்களும் மண்ணெண்ணெய் தொட்டிக்குள் வளர்வது போல உண்பதற்கு லாயக்கற்று சுவை மாறிப் போயின
>>> இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''

வடசென்னை மக்களால் நதி எனக் குறிப்பிடப்படும் எண்ணூர் உப்பங்கழி, முன்பு இருந்ததைப்போல இப்போது இல்லை. பள்ளி நாட்களில் மாணவர்களாகிய நாங்கள் பளிங்கு போல தோற்றமளிக்கும் இந்த நதியில்தான் நீந்தக் கற்றுக் கொண்டோம். சுவை மிகுந்த மீன்களை விடுமுறை நாட்களில் இங்குதான் வேட்டையாடி உண்டோம். வெண்குவியல்களாய் கொட்டப்பட்டிருக்கும் உப்பைச் சுமந்த உப்பளங்கள் பிரமிப்பூட்டும். உப்பையும், சவுக்குச் சுள்ளிகளையும் சுமந்த பாய்மர படகுகள் கம்பீரமாக பயணிக்கும். அந்தக் கால கோலிவுட்டின் வெளிப்புற படக்காட்சிகளின் முக்கிய இடமாக இருந்த நதி இது. பரிந்துரைக்கப்பட்ட சுற்றலாதலங்களில் ஒன்றாக விளங்கிய இடம்.

உப்பங்கழியின் பளீர் நீல நிற கரையோரத்தில், வண்ணமய சிறு நண்டுகள் தங்கள் தடித்த ஒற்றைக் காலால் வரவேற்கும். இருபுறமும், அடர்த்தியான அலையாத்திக் காடுகள் பசுமைப் பூச்சுடன் செழித்து வளர்ந்து ஆயிரக்கணக்கான உயிரினங்களின் உறைவிடமாக இருந்த நதி. 

இந்த நதி அதாவது எண்ணூர் உப்பங்கழி தனது அத்தனை சிறப்புகளையும், அழகையும் இழந்து பொலிவிழந்த விதவைப் பெண்ணாய் தற்போது காட்சியளிக்கிறது.  ஏற்கனவே எண்ணூர் அனல் மின்நிலையம் இருந்தது போதாதென்று அழகிய உப்பளங்கள் இருந்த இடத்தில் இன்னும் ஒன்றுக்கு இரண்டாய், வல்லூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம் என்று மூன்று அனல் மின்நிலையங்கள் நதியை சின்னாபின்மாக்கிவிட்டன. சாம்பல் மயமாய், நிலக்கரி கழிவுகளாய் உப்பங்கழியை நிரப்பிவிட்டன. 

அத்தோடு தனியாருக்குச் சொந்தமான வாகன உற்பத்தி நிறுவனங்களின் எண்ணெய் கழிவுகள், இரசாயன ஆலைகளின் கழிவுகள் என்று கரு நிறத்தில் எண்ணெய் பிசகாய் உருமாற்றிவிட்டன. அரிய வகை பச்சை ஆலி போன்ற நீர் வாழ் உயிரினங்களின் வாழ்வியலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், மீன்பிடித் தொழிலை மட்டும் நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலைய வைத்துவிட்டன.

சூழல்மாசுவால் சீரழிக்கப்பட்ட எண்ணூர் உப்பங்கழி குறித்து விரிவாக தெரிந்து கொள்வதுதான் பிரச்னையின் பிரதானத்தை உணர முடியும். மொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் மொத்த பரப்பளவு கொண்ட உப்பங்கழி என்பது ஒரு நீரேற்ற நீர்நிலைப் பகுதி என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஆங்கிலத்தில் புலிகாட் என்று வழங்கப்படும், பழவேற்காட்டுக்குத் தென் பகுதியில் ஆரணி நதி, உப்பங்கழிக்கு வந்தடைந்து, தெற்கு திசையில் பாய்ந்து எண்ணூர் முகத்துவாரம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அத்துடன், தெற்குப்பக்கம் கொசஸ்தலை நதி இந்த உப்பங்கழியில் இணைந்து, முகத்துவாரம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கொசஸ்தலை, ஆரணி நதிகளின் நீர் சமுத்திரமுனையில் சந்திக்கும் நீர்நிலை அமைப்பு. இதுத் தவிர, பக்கிங்காம் கால்வாயும், சென்ட்ரல் ரயில்நிலையம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலிருந்து கழிவு நீர் எண்ணூர் முகத்துவாரத்துக்கு வந்தடைகிறது.
 
முன்பு, இந்த நதியின் இரு பக்கங்களிலும் அலையாத்திக் காடுகளும், ஆற்றுப்படுகைகளில் அலையேற்ற சதுப்பு நிலங்களும், மண்மேடுகளும், உப்பு நீரில் வளரும் தாவரங்களும் ஏராளமாக இருந்தன. பிரதான கால்வாய் ஆழமாக இருந்ததால், நீரின் ஓட்டமும் அதிகமாக இருந்தது. முகத்துவாரம் இயற்கையாகவே திறந்திருந்ததால், ஒவ்வொரு பருவநிலை அலையேற்றத்தின்போதும், கடலிலிருந்து மீன்களும், இறால்களும் உப்பங்கழிக்கு புலன்பெயர்ந்து, அதி பாதுகாப்பான சதுப்பு நிலக்காடுகளில் முட்டைகளை இட்டன. இனப்பெருக்கம் நடந்தது. சுவை மிகுந்த நீர் வாழ் உயிரினங்களால் மீனவ மக்களின் வாழ்வும் செழித்தது. நதியைச் சுற்றியிருந்த உப்பளங்களால், சவுக்குக் காடுகளால் பொருளியலும் பெருகியது. 
 
பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெறும் முப்பது, நாற்பதாண்டுகளில் நதி நிறம் மாறிப்போனது. பெரும் பகுதி நீர் வாழ் உயிரினங்கள் அடையாளம் தெரியாமல் போயின. கிடைக்கும் சொற்ப வகை மீன்களும் மண்ணெண்ணெய் தொட்டிக்குள் வளர்வது போல உண்பதற்கு லாயக்கற்று சுவை மாறிப் போயின. https://www.youtube.com/watch?v=I2zClBfZh-0 https://www.youtube.com/watch?v=4pdprvBSwIo 
 
அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் வடசென்னைவாசிகளின் அறியாமையைப் பயன்படுத்தி பல ஆண்டுகள் ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய திட்டங்களின் விளைவுகள்தான் இவை. https://www.youtube.com/watch?v=4TflFDj74l0

சென்னை, ஆர்.கே.நகர், திருவொற்றியூர் பகுதிகளிலிருந்து சாக்கடை நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக இந்த உப்பங்கழிக்கு வந்து சேர்கிறது. 
 
மணலி தொழிற்சாலையிலிருந்து ரசாயனக் கழிவுகள், வாகன உற்பத்தி நிறுவனங்களின் கழிவுகள் இந்த உப்பங்கழியிலும் கொசஸ்தலை ஆற்றிலும் கலக்கின்றன. https://www.youtube.com/watch?v=9MZxhPcfj4k 
 
எண்ணூர் அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலையம், ஹெச்.பி.சி.எல்., பி.பி.சி.எல் எண்ணெய் நிறுவனங்கள், காமராஜர் துறைமுகம் போன்றவை இந்த நீர்நிலைப் பகுதியின் ஆயிரம் ஏக்கருக்கும்  அதிகமான இடத்தை ஆக்கிரமித்து கொண்டுள்ளன.  இதன் விளைவாக மீன், இறால் போன்ற நீர்வாழ் உயிரிகள் இனப்பெருக்கம் செய்யும் இங்குள்ள செழிப்பான மண் மேடுகள் மற்றும் சதுப்புநிலப்பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. https://www.youtube.com/watch?v=miF_9v9fi1I  https://www.youtube.com/watch?v=7zKaqaL-P6o

இந்த அத்துமீறிய ஊடுருவல்களாலும், குழாய்களிலிருந்து கசியும் நிலக்கரி சாம்பலும் இந்த நதியின் ஆழத்தை வெகுவாக குறைத்துவிட்டன.  இதன் விளைவாக, ஆழமற்ற நீர் வெகு வேகமாக வெப்பமடைந்தது. மீன்கள், இறால்கள் போன்ற நீர் வாழ் உயிரிகளின் உயிர்வாழ்க்கை சிக்கலானது. https://www.youtube.com/watch?v=yVVIsYEFAWQ  வடப்பகுதியில் இருக்கும் மீன்பிடி இடங்களில் சேறு அல்லது நிலக்கரி சாம்பல் சூழ்ந்து கொண்டது. இதனால், மீனவர்களின் படகுகள் சிக்கிக்கொள்வதால் அந்த மீன்பிடி இடங்களுக்குப் போவதில் சிக்கல் ஏற்பட்டது. https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg

அதேபோல, வடசென்னை அனல் மின் நிலையம் நேரடியாக முகத்துவாரப்பகுதிக்கு அதன் வெப்ப நீரை வெளியேற்றுகிறது. உயர் அலையேற்ற கால நிலையில்கூட, வெப்ப நீர் காரணமாக உப்பங்கழிக்கு கடலிலிருந்து மீன்கள் புலன் பெயர முடியாமல் போனது. https://www.youtube.com/watch?v=TUSV_c8s7ns 
 
இவ்வளவு மோசமான அரசு அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்தி எண்ணூர் கடற்கழியைக் காத்து ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நமது நாட்டில் எந்த சட்டப் பிரிவுகளும் இல்லையா என்ற கேள்வி எழுவதும் இயல்புதான்! 
 
இந்திய நாட்டில் ஏட்டளவில் குறைவில்லாத சட்டங்களும் உள்ளன. அவற்றில் ஒட்டகம் நுழையும் அளவுக்கு ஓட்டைகளும் உள்ளன. சட்டங்களைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்களும், விழிப்புணர்வற்ற மக்களும் உள்ளனர். 
 
எண்ணூர் உப்பங்கழியை மட்டும் எடுத்துக் கொண்டால் அது 6 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த 6 ஆயிரத்து 500 ஏக்கர்  பகுதியைப் பாதுகாக்க கோரி அரசே பரிந்துரைத்துள்ளது முக்கியமானது. அந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டு அப்பகுதிக்குக் கடற்கரை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சட்ட ரீதியாக முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது. 16 கி.மீ. நீளம் கொண்ட கருங்காலி நதிப் பகுதியின் முகத்துவாரத்திலிருந்து (சிந்தாமணி முகத்துவாரம்) எண்ணூர் முகத்துவாரம் வரையிலான பகுதி, 1996ஆம் ஆண்டு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல (சி.ஆர்.இசட்) வரைபடத்தில் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே  அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சி.ஆர்.இசட். அறிவிப்பு குறிப்பாக, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடையாளம் கண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டியது. இதன்படி, மீன்பிடி பகுதிகள் எவை என்று அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என சட்டம் குறிப்பிடுகிறது. அதேபோல, நதியின் நிலப்பரப்பை கையகப்படுத்த, நிலக்கரி சாம்பல், மணல் அல்லது கழிவுகளை நதியில் கொட்டுவதும், உப்பங்கழியில் வெப்ப நீரை வெளியேற்றுவதும் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. ஏதாவது காரணங்களுக்காக நதியின் போக்கைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதற்குக்கூட இந்த சட்டத்தின்படி யாருக்கும் அனுமதி கிடையாது எனலாம். 
 
இவ்வளவு கடுமையான சட்டங்கள் இருந்தும், இந்த நதி தற்போது ஏன் மிகவும் மோசமான நிலையில் உள்ளது? என்ற கேள்வி எழுவதும் சகஜம்தான்!

வெறும் சட்டங்களால் மட்டுமே பிரச்னைகளை தீர்த்துவிட முடியும் என்றால் நாம் புழல் சிறையைக் கட்ட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அதேபோல, சட்டங்களால் மட்டுமே நதியைப் பாதுகாத்துவிட முடியாது. அந்தச் சட்டங்கள் பாராபட்சமின்றி மக்களல் நலன்சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியம். அந்த சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும், அவை அமல்படுத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிர்பந்தங்களும் தர வேண்டியது மக்கள்தான்..! 
 
அதோடு மத்திய, மாநில அரசுகள் சட்டங்களை மீறாமல் அமல்படுத்த வேண்டும் என்பதை உறுதிசெய்வதில் ஆர்வம் கொண்டுள்ள வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியமானது. 
 
சீர்கெட்டுவிட்ட எண்ணூர் உப்பங்கழி சம்பந்தமாக மீனவ பெருமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே செய்தனர். ஆனால், அந்த எதிர்ப்பை சட்ட ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளவில்லை. மேலும், தகுந்த நேரத்தில் தங்கள் கருத்துக்களை அவர்கள் பதிவு செய்யவில்லை அல்லது பெரும்பான்மையினர் அதற்கு ஆர்வம் காட்டவில்லை.

வல்லூர் அனல் மின்நிலையம், ஹெச்.பி.சி.எல்லின் எண்ணெய் சேமிப்பு முனையம் முன்மொழியப்பட்டபோது பொதுமக்களின் கருத்துகளை அறிய கண்துடைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பது உண்மைதான்! இவற்றில் தங்களது கவலையைப் பதிவு செய்ய பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது துரதிஷ்டவசமானது. மண்ணையும், காற்றையும், காட்டையும், சக உயிர்களையும் காத்தல் வருங்கால தலைமுறையைக் காப்பது என்ற தொலை நோக்கு பார்வையில்லாமல் ஒரு சிலர் இதில் வேலைவாய்ப்பை நாடிச் சென்றனர். இந்த வாய்ப்புக்காக காத்திருந்த சூழலைச் சீரழிக்க வந்த நிறுவனங்கள், இவர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதியை எந்தவிதமான உத்திரவாதமும் தராமல், அதைக் காப்பாற்றும் எண்ணமும் இல்லாமல், ஒப்புக்கு தலையாட்டிவிட்டு இந்த நதிப்பகுதியில் தாங்கள் விரும்பும் எதை வேண்டுமானலும் செய்துகொள்ளலாம் என்று நினைத்தன. 
 
அரசு ஏஜென்சிகளை இதற்குப் பொறுப்பாளிகள் ஆக்குவதற்கு மக்கள் போதுமான முனைப்புக் காட்டவில்லை. எண்ணூர் உப்பங்கழி பகுதி அபிவிருத்தி மண்டலம் கிடையாது என்ற சட்டம் அமலாக்கப்படுவதையும், இந்தப் பகுதியின் 1996ஆம் ஆண்டின் வரைபடம் அறிவிப்பின்படி எண்ணூர் உப்பங்கழி பகுதியின் 6 ஆயிரத்து 500 ஏக்கரில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லாமல் இருப்பதையும் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருக்கும் மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்.

2017 ஜூலை மாதம் இந்த ஆணையம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எண்ணூர் பகுதியின் சி.ஆர்.இசட். வரைபடம் என்று கூறி மோசடியான ஒரு வரைபடத்தை வெளியிட்டதாகவும், இந்த வரைப்படத்தின்படி எண்ணூர் உப்பங்கழி என்ற ஒன்று இருப்பதையே மறுப்பதாகவும் சூழலியலாளர்களால் சொல்லப்படுகிறது.  காளாஞ்சி அருகே உள்ள சிந்தாமணி முகத்துவாரத்துக்கும், சமுத்திரமுனைக்கும் இடையே உள்ள ஒட்டுமொத்த பகுதியும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலமாக (நீர் அல்ல நிலம்) காட்டப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 
 
ஜூன் மாதம் மோசடியாகத் தயாரிக்கப்பட்ட இந்த வரைப்படத்தைப் பயன்படுத்தி இந்த நதியின் ஆயிரம் ஏக்கர் பகுதியை காமராஜர் துறைமுகத்துக்கு ஒதுக்கீடு செய்தது. அந்தத் துறைமுகம் நதியின் மேல் ஒரு கார் நிற்கும் முனையம், நிலக்கரி கிடங்கும் ஆகியவற்றை கட்ட விரும்புவதாக சொல்லப்படுகிறது.
 
இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மிக மோசமான அரசு மோசடி இது என்றால் மிகையில்லை..!

 
வெறும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மெரினாவில் லட்சக்கணக்கில் திரண்ட வரலாற்றைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு பயனும் இல்லை. பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் நெடுவாசல்கள், கதிராமங்கலங்கள் அவலங்களைவிட வடசென்னைவாசிகளின் வாழ்வியலுக்கு கவனம் செலுத்துவதும் முக்கியமானது. 

தனது தவறுகளுக்கு அரசாங்கத்தைப் பொறுப்பேற்க செய்வதற்கும், வளர்ச்சி என்ற பெயரால் வருங்கால தலைமுறையினரின் வாழ்வியலையும், சக உயிரிகளின் உயிர்களையும் சூறையாடுவதை தடுத்து நிறுத்தவும் ஆக பொறுப்பு அவர்களை அரியணையில் அமர்த்தும் மக்களின் அதிகாரத்துக்கே உள்ளது. மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை கேள்வி கேட்க வேண்டியதும், இதற்காக ஒரு விசாரணை நடத்தப்பட்டு, ஆணையத்தில் தவறாக நடந்துகொள்பவர்களின் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த வேண்டியதும் பொது மக்களின் தார்மீகப் பொறுப்பாகும். 

நாளை எண்ணூர் என்ற ஒரு பகுதி இல்லவே இல்லை என்று சுயநல வரைப்படம் உருவாவதற்கு முன் பொதுமக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், நாளைய இளந்தலைமுறையினர் சுயநல ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக இருந்த ஒரு சமூகத்தின் வாரிசுகள் தாங்கள் என்ற அவப் பெயரை வரலாற்றில் காலமெல்லாம், சுமக்க வேண்டியிருக்கும். சூழல்மாசுவால் மொத்த வாழ்வாதாரத்தை பறிகொடுத்து, சொந்த நிலத்தில் மனித உருமாறி அகதிகளாக வலம் வர வேண்டியிருக்கும்.


0 comments:

Post a Comment