NewsBlog

Tuesday, January 21, 2014

விருந்தினர் பக்கம்:'இருப்பவர்களுக்கும் தெரியும்! இல்லாமல் போனவர்களுக்கும் தெரியும்!'


வாழ்க்கையில் நான் எவரிடமும் நன்றியையோ விசுவாசத்தையோ எதிர்பார்த்ததில்லை. அதை வைத்துக்கொண்டு நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. ஒரு காலத்தின் நண்பர்களாக இருந்தவர்கள் ஏன் சட்டென மனம் இறுகி விரோதித்துக் கொண்டார்கள் என்று எனக்கு ஒருபோதும் காரணம் தெரிந்ததேயில்லை. அவர்களில் சிலர் இன்று கற்பிக்கும் காரணங்கள் பொய்யானவை. அபத்தமானவை. அவர்களுக்கு தங்கள் வெறுப்பை நியாயப்படுத்த ஏதோ ஒன்று தேவைப்படுகிறது.

அவர்கள் என்னை வெறுப்பதற்குக் உண்மையான காரணம் நான் அவர்களை புறக்கணித்தேன் என்பதுதான். ஆனால் ஒரு மனிதனைக் கூட நான் அப்படி நடத்த எண்ணியதில்லை. பாதுகாப்பான ஒரு வேலை, குடும்பம் , வரையறுக்கபட்டட சில இலக்குகள் என வாழ்பவர்களால் என்னைப் போன்ற ஒருவனை புரிந்துகொள்ளவே முடியாது. என் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்பத்திலும் என்னிடமிருந்த எல்லாவற்றையும் வைத்து சூதாடியிருக்கிறேன். எனது உணர்ச்சிகரமான பைத்தியக்காரத்தனமான மன நிலைகளால் என்னை சார்ந்தவர்களை கடும் அபாயங்களுக்கு ஆளாக்கியிருக்கிறேன். எனக்கு இயற்கையும் சமூகமும் ஏற்படுத்தியிருக்கும் தடைகளை மிருக பலத்துடன் சளைக்காமல் எதிர்த்துப் போரிட்டிருக்கிறேன். இந்தப் போராட்டத்தில் சில சமயம் உறவுகளை பேண முடியாமல் போயிருக்கிறது. எனக்கு அவ்வளவு அவகாசமும் சவுகரியமும் உள்ள ஒரு வாழ்க்கை வாய்த்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்!

இப்போது என்னோடு இருப்பவர்களுக்குத் தெரியும். நான் அவர்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று. இப்போது என்னோடு இல்லாமல் போனவர்களுக்கும் தெரியும். நான் அவர்களை எவ்வளவு நேசித்தேன் என்று. என்னை அவமானப்படுத்துவதற்கு ஒருவர் ரொம்பவும் மெனெக்கெட வேண்டியதில்லை. அவ்வளவு எளிமையான இலக்கு நான். நான் அவமானங்களை கண்டு பின் வாங்கியதில்லை. ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்து என்னால் பேச முடியும். ஆனால் அவர்களின் கண்கள் மிகவும் தாழ்ந்து போகின்றன.

ஆத்மாநாம் ஒரு கவிதையில் கேட்பார். ‘இந்த உலகில் சிகிட்சைக்கு தேவையான அன்புகூடவா இல்லாமல் போனது?' - என்று. இந்த வார்த்தைகளை இப்போது அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.

- மனுஷ்ய புத்திரன்
 

1 comment:

  1. நான் நல்லவன் எனும் மன நிலை பிறர் குறையுடையோர் எனும் மன அழுத்தத்தின் பிரதிபலிப்பு.தன்னைப் படைத்த இறைவனை சந்தேக கண் கொண்டு பார்ப்போர்,பார்த்து பழகியோர் மனிதர்களிடம் நேசம் கொள்ளுதல் இயலாது.நேசம் என்பது என் இயலாமையின் வடிகால் அல்ல;என் இயலாமையை எனக்கு அறிமுகப்படுத்தும் ரசம் போகாத நிலைக் கண்ணாடி!மனுஷ்ய புத்திரன்,மனிதனாக வாழ கற்க வேண்டும்.மனிதனாக வாழப் பழகாதவர்களிடம் உள்ள முதல் பிழை சந்தேகம்....இது பிறழ்வாக மாறும் போது நான் கடவுள் எனும் கோமளித் தனங்களும் ஒட்டிக் கொள்கின்றன.

    ReplyDelete