சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.
சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.
வடசென்னையில் சூரிய கிரணம்
21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.
காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
டிராகன் பழச் செடியை கவாத்து செய்வது எப்படி?
How To Prune Dragon Fruit ....
Wednesday, September 30, 2020
பாபரி மசூதி தீர்ப்பு: அடப்பாவமே! 28 ஆண்டுகளுக்கு பின்தான் உண்மை தெரிந்தது!
Monday, September 28, 2020
கொரோனா வைரஸ் சானிடைசர் தரமானதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி?
மெத்தைல் ஆல்கஹால் போன்ற நச்சுத்தன்மை மிக்க பொருட்கள் கொரோனாவுக்கு பயன்படும் கிருமி நாசினியில் கலக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நல்ல சானிடைசரை கண்டுபிடிக்கும் எளிய வழியை, அழகியல் தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் ரின்கி கபூர் தெரிவிக்கிறார்.
"ஒரு கிருமிநாசினி பயன்பாட்டுக்கு பொருத்தமானதா இல்லையா என்பதை நீங்களே கண்டுபிடிக்கலாம். இதற்கு ஒரு ஸ்பூன் கோதுமை மாவு எடுத்து, அதில் கிருமிநாசினியை சேர்க்க வேண்டும். மாவு ஒட்டும் தன்மைக்கு மாறினால், அந்தக் கிருமிநாசினி நல்லதல்ல. மாவு உலர்வாகவே இருந்தால், கிருமிநாசினி பயன்பாட்டுக்கு பொருத்தமானது'' என்று தெரிவிக்கிறார் டாக்டர் கபூர்.
(ஆதாரம்: பிபிசி)
அடி ஆத்தி! நீர் நிலைகளில் இத்தனை வகைகளா...?
(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
(12) கடல் (Sea) - சமுத்திரம்.
(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் (Channel) - நீரோடும் வழி.
(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தகவல்: G.V. Varadharajan, திருவாரூர் நீர் நிலை பாதுகாப்பு இயக்கம்
https://www.facebook.com/groups/572874246100629/user/100000019619177
Friday, September 25, 2020
இந்த நல்லவரும், அந்த கெட்டவரும்
ஒரு அரிய நிகழ்வு அது. 12 ஆண்டுகளில் முதன்முறையாக நடந்த ஒரு துரதிஷ்டவசமான சம்பவம்.
இருப்பினும் அந்நாட்டு அதிபர் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறார். பாதிக்கப்பட்ட வெளிநாட்டு அதிபருக்கு கடிதம் எழுதி மன்னிப்பும் கேட்கிறார். அவமானகரமான சம்பவம் அது. மக்களை ஏமாற்றமடைய செய்த சம்பவம் என்றெல்லாம் மனம் நொந்து வருந்துகிறார் ‘பெத்தண்ணா’ அமெரிக்காவுக்கே சவால் விடும் அந்த மனிதர்.
யார் அவர்? என்ன நடந்தது என்கிறீர்களா?
இப்படி தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னிடம் கடிதம் மூலம் சொல்லி மனம் வருந்தி மன்னிப்பு கேட்டிருக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
அவர் மன்னிப்பு கேட்குமளவுக்கு அப்படி என்னதான் நடந்தது?
கொரோனா தொற்று காரணமாக எல்லையை முடக்கியுள்ள வட கொரியா, நோய்த்தொற்று தங்கள் நாட்டுக்குள் வராமல் இருக்க, யார் எல்லைக்குள் நுழைந்தாலும், அவர்களை "சுட்டுக் கொல்ல" உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருநாட்டு எல்லை அருகே ரோந்து கப்பலில் இருந்து காணாமல் போன தங்கள் நாட்டு அதிகாரி, பின்னர் வட கொரிய கடல் பக்கம் கண்டெடுக்கப்பட்டதாக தென் கொரியா கூறியிருந்தது.
வட கொரிய வீரர்கள் அவரை சுட்டு, பின்னர் அவரது உடலின் மீது எண்ணெயை ஊற்றி எரித்துள்ளதாக தென் கொரிய தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.
தென் கொரியாவின் மீன்வளத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் வட கொரிய எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் ரோந்து கப்பலில் இருந்து கடந்த திங்கட்கிழமை காணாமல் போனார்.
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான 47 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி வட கொரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக நம்பப்படுகிறது.
அவர் கப்பலில் தனது ஷூக்களை விட்டுவிட்டு, உயிர் கவசத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வட கொரிய ரோந்து கப்பல் அவரை அவர்களது நாட்டு எல்லைக்குள் மிதக்கும் சாதனத்தை பிடித்தவாறு, கண்டெடுத்தனர்.
வட கொரிய அதிகாரிகளால் அவர் விசாரிக்கப்பட்டு, பின்னர் அவரை சுட்டுத் தள்ளுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முகக்கவசம் அணிந்த சில வட கொரிய வீரர்கள், அந்த அதிகாரியை எரித்ததாக தென் கொரியா கூறுகிறது. ஆனால், அந்த நபர் வந்த மிதக்கும் சாதனத்தை மட்டுமே எரித்ததாக வட கொரிய தரப்பு கூறியுள்ளது.
இதுதொடர்பாக வட கொரியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் தென் கொரியா வலியுறுத்தி இருந்த நிலையில், கிம் ஜாங்-உன் எழுதிய இந்த கடிதம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இத்தனைக்கும் கிம் ஜாங் உன் முதலாளித்துவ நாடுகளால் பெரும் வில்லனாக சித்தரிக்கப்படுபவர். உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக சொல்லப்பட்டவர். அத்தகைய கெட்டவர்தான் நடந்த செயல்களுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
ஆனால், இந்த சம்பவத்தை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்திய நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி சர்க்காருடன் கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள்.
குஜராத் கலவரங்களில் ஆயிரக்கணக்கில் சிறுபான்மை இன மக்கள் தீயிட்டும், கற்பழித்தும் கொல்லப்பட்ட போதும் மனம் கலங்காதிருந்தவர். ஒரு வருத்தமும் தெரிவிக்காதவர். சுற்றிலும் தனது குடிமக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, இனம், மொழி, சமயம் என்று பாகுபாடுகளால் மௌனம் சாதிப்பவர். அந்த பிரிவினையை ஒன்றையே அரசியல் வழிமுறையாக்கியுள்ள சங்பரிவார் திட்டத்திற்கொப்ப மொத்த நாட்டையும் பின்னோக்கி செலுத்தி கொண்டிருப்பவர். இவரைதான் நல்லவர் என்கிறார்கள் சிலர்.
என்னத்த சொல்ல? கேட்டால் 'ஆன்டி-இண்டியன்' என்பார்கள்.
வந்த இடம் சென்று சேர்ந்தாலும் எஸ்.பி.பி குரல் காற்றில் கரையாமலே ஒலிக்கும்!
இந்திய திரையுலகின் பின்னணி பாடக நட்சத்திர வரிசை நீளமானது. முஹம்மது ரஃபி, கிஷோர் குமார், ஆஷா போஸ்லே, கே.ஜே. ஏசுதாஸ், டி.எம். சௌந்தர்ராஜன், எஸ். ஜானகி, லதா மங்கேஷ்கர் என நீளும் புகழ்மிக்க அந்த வரிசையில் ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம் அதாவது எஸ்.பி. பாலசுப்ரமணியம் முக்கிய இடத்தில் இருப்பவர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள கொனேட்டம்பட்டுதான் எஸ்.பி.பியின் சொந்த ஊர். தந்தை எஸ்.பி. சாம்பமூர்த்தி ஒரு ஹரிகதா கலைஞர். 1946 ஜூன் 4ஆம் தேதி பிறந்த, எஸ்.பி.பி., சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார்.
பொறியியல் படிப்பதற்காக அனந்தபூரில் உள்ள ஜேஎன்டியு பொறியியல் கல்லூரியில் ஆரம்பத்தில் சேர்ந்தவர், பிறகு அங்கிருந்து விலகி, சென்னையில் உள்ள அசோஸியேட் மெம்பர் ஆஃப் தி இன்ஸ்ட்டிடியூஷன் ஆஃப் எஞ்சினீயர்ஸில் இணைந்து பொறியியல் படிப்பை தொடர்ந்தார்.
படிக்கும் நாட்களிலேயே பல்வேறு பாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் பாலசுப்ரமணியம். இந்நிலையில், 1964ல் மெல்லிசைக் கச்சேரி குழுக்களுக்கான பாட்டுப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் முதல் பரிசை வென்றார். அந்தப் போட்டிக்கு நடுவர்களாக இருந்தது தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.பி. கோதண்டபாணி மற்றும் பிரபல வெண்கல குரல் பாடகர் கண்டசாலா.
இந்த நிகழ்வுக்குப் பிறகு எஸ்.பி. கோதண்டபாணி இசையமைத்த "ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாத ராமண்ணா" என்ற தெலுங்கு படத்தில் தன் முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பி. இந்தப் படம் 1966 டிசம்பரில் வெளியானது. இதற்குப் பிறகு தமிழில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த 'ஹோட்டல் ரம்பா' என்ற படத்தில் எல்.ஆர். ஈஸ்வரியோடு இணைந்து 'அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு' என்ற பாடலைப் பாடினார் எஸ்.பி.பி.
ஆனால், அந்தப் படம் கடைசிவரை வெளியாகவேயில்லை. இதனிடையே, கன்னட திரைப்படங்களில் பாட ஆரம்பித்திருந்தார் எஸ்.பி.பி. தமிழில் இவர் பாடி வெளியான முதல் பாடல், எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் வரும் 'ஆயிரம் நிலவே வா' பாடல்தான்.
இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பாகவே 'இயற்கையெனும் இளைய கன்னி' பாடலை சாந்தி நிலையம் படத்திற்காகப் பாடியிருந்தார். அந்தப் படம் 1969 மே 23ஆம் தேதி வெளியானது. ஆனால், "அடிமைப்பெண்" மே 1ஆம் தேதியே வெளியாகிவிட்டதால், தமிழில் எஸ்.பி.பி பாடி முதலில் வெளியான பாடல், 'ஆயிரம் நிலவே வா' என்ற பாடல்தான். இதற்குப் பிறகு மலையாளத் திரையுலகிலும் அறிமுகமானார் எஸ்.பி.பி.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் தமிழ் திரையிசைப் பாடல்களில் டி.எம். சௌந்தர்ராஜனின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்கும், டி.எம்.சௌந்தர்ராஜனே பாடிக்கொண்டிருந்தார்.
திரையுலகின் உச்சிவானிலிருந்த எம்.ஜி.ஆர். சிவாஜிக்கும் வேறு குரலை மாற்றி பாட வைத்தால் ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்களா என்ற தயக்கம் இயக்குனர்களுக்கும் இசை அமைப்பாளர்களும் இருந்தது. இந்த நிலையில்தான் அடிமைப் பெண் படத்திற்குப் பிறகு, எல்லாவிதமான பாடல்களையும் உயிரோட்டத்துடன் பாடும் தன்னுடைய திறனால் மெல்ல மெல்ல தமிழ்த் திரையுலகில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார் எஸ்.பி.பி.
1970களின் பிற்பகுதியில் அப்போதுதான் அறிமுகமாகியிருந்த இளையராஜாவின் இசையில் பாட ஆரம்பித்தார் எஸ்.பி.பி. இளையராஜா - எஸ்.பி. பாலசுப்ரமணியம் - எஸ். ஜானகி என்ற இந்தக் கூட்டணியில் அமைந்த பாடல்கள், தமிழ் திரையிசை ரசிகர்களால் ஒரு போதும் மறக்க இயலாதவை.
சுருக்கமாகச் சொன்னால், தமிழ், தெலுங்கு, கன்னட சினிமா பாடல்களில் கடந்த நூற்றாண்டின், கடைசி முப்பது ஆண்டுகள் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினுடையது எனலாம். ஒரு கட்டத்தில் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.
1981 பிப்ரவரி எட்டாம் தேதியன்று உபேந்திர குமார் இசையமைத்த 17 கன்னடப் பாடல்களை காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் பாடி முடித்தார். ஒரே நாளில் 19 தமிழ், தெலுங்கு பாடல்களையும் இந்தி இசையமைப்பாளர் ஆனந்த் மற்றும் மிலிந்த் இசையமைத்த 16 இந்திப் பாடல்களையும் ஒரே நாளில் பாடி சாதனை படைத்தவர் எஸ்.பி.பி.
1980ல் வெளிவந்த சங்கராபரணம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்த இந்தப் படம் சாஸ்த்ரீய இசையை அடிப்படையாகக் கொண்டிருந்த படம். எஸ்.பி. சாஸ்த்ரீய இசையை முறைப்படி படித்தவர் இல்லை என்றாலும் இந்தப் படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை வென்றார் எஸ்.பி.பி.
தெலுங்கில் சிரஞ்சிவி நடித்த படங்களுக்கும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கும் பெரும்பாலான டைட்டில் பாடல்கள் எஸ்.பி.பி பாடியதுதான்.
எஸ்.பி.பி. தன் பாடல்களுக்காகத்தான் பெரிதும் அறியப்பட்டவர் என்றாலும் அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளரும்கூட. தவிர, நல்ல நடிகர், சிறப்பான பின்னணி குரல் கொடுப்பவர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 45க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் எஸ்.பி.பி.
ஒரு சிறந்த பாடகராக அறியப்பட்டதாலோ என்னவோ, கிட்டத்தட்ட 45க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார் என்பது பலரால் கவனத்தில் கொள்ளப்பட்டதில்லை. குறிப்பாக தமிழில் அவர் நடித்து, இசைமைத்த "சிகரம்" திரைப்படம் முக்கியமானது.
சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை இதுவரை ஆறு முறை வென்றிருக்கிறார் எஸ்பிபி. இவர் பெற்ற மாநில அரசு விருதுகளுக்கும் தனியார் விருதுகளுக்கும் கணக்கே கிடையாது. தன்னுடைய ஐம்பதாண்டு கால பாடக கலைஞருக்கான வாழ்க்கையில் எல்லா மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 40,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் எஸ்.பி.பி. கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். நான்கு பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். மேலும் இந்திய அரசின் பத்மபூஷணன் விருதையும் பெற்றவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்தியாவில் உள்ள 14 மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி. சமஸ்கிருதப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.
சாகரசங்கமம், ஸ்வாதிமுத்யம் ஆகிய இரண்டு படங்கள் தவிர, கமல்ஹாசன் நடித்து தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட எல்லாப் படங்களில், கமல்ஹாசனுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பிதான். ரஜினிகாந்திற்கும் சில தெலுங்கு படங்களில் குரல் கொடுத்திருக்கிறார்.
எஸ்.பி.பி என்னும் அடையாள உடலிலிருந்து உயிர் பிரிந்து அது வந்த இடம் சென்று சேர்ந்துவிட்டாலும் அவரது இனிய குரல் காற்றில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
Wednesday, September 16, 2020
இந்திய அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை வேவு பார்க்கும் சீனா: பிரபல நாளேடு தகவல்
இந்தியாவில் குறிப்பாக சுமார் 10 ஆயிரம் பேரை சீனாவின் ஷென்ஸெனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஜென்ஹுவா வேவு பார்ப்பதாக பிரபல ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட புலனாய்வுச் செய்தியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தலைவர், பிரதமர், இந்திய கேபினட் அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள், முப்படை தலைமைத் தளபதி, முப்படை தளபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், பிரபல தொழிலதிபர்கள் என ஒரு பெரிய பட்டியலில் இருப்பவர்கள், சீன நிறுவனத்தால் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக அந்த நாளிதழின் புலனாய்வுச் செய்தி விவரிக்கிறது.
இந்த பட்டியலில், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், கிராம தலைவர்கள் கூட இருப்பதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்தை தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் முற்பட்டதாகவும் ஆனால், அந்த நிறுவனத்தின் இணையதளம் பிறகு மூடப்பட்டதாகவும் அந்த நாளிதழ் கூறுகிறது.
ஆனால், வேவு பார்க்கப்படும் நாடுகள் பட்டியலில், இந்தியா மட்டுமின்றி பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருப்பவர்களும் உள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி போலவே, லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் நாளிதழ், பிரிட்டனில் அரசி, பிரதமர் உள்பட 40 ஆயிரம் பிரபலங்கள் வேவு பார்க்கப்பட்டதாகக் கூறி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில், பிரபல ஏபிசி ஊடக நிறுவனம், அதன் தளங்களில் அந்நாட்டின் அரசுத்துறைகளில் முக்கிய பதவிகளை வகிக்கும் 35 ஆயிரம் பேர் வேவு பார்க்கப்படுவதாகக் கூறி செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thursday, September 3, 2020
குழந்தைகளைக் காக்க போராடிய பயங்கரவாதி விடுவிக்கப்பட்டார்
"மதுரா சிறையில், பல நாட்கள் எனக்கு உணவு வழங்கப்படவில்லை. உணவு வழங்கப்பட்டாலும், ரொட்டிகள் தூக்கி எறியப்பட்டன மேலும், சிறைக்குள் உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டேன்" - என்கிறார் அவர். ~இக்வான் அமீர்
'''''''''''''''''''''''
தொழில்நுட்ப காரணங்கள் என்ற பெயரால் தனது வழக்கு விசாரணைக்கு அலகாபாத் உயர்நீதி மன்றத்தால், பன்னிரண்டுமுறை வாய்த்தாவுக்காக காத்திருந்த அதிபயங்கரவாதி மருத்துவர் அவர்! ஆம்! வகுப்புவாதி ஆதித்யநாத்தின் அரசால் புனையப்பட்ட பயங்கரவாதி டாக்டர் கஃபீல்கான்தான் அவர்!
கடைசியில், அவரது குடும்பத்தார் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடவே, என்எஸ்ஏவுக்கு எதிராக சவால் விடுத்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரியில், ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் உலகை அதிர்ச்சியுறச் செய்தது. அந்தத் தருணத்தில், குழந்தைகளைக் காக்க விரைந்து செயல்பட்டு பிராணவாயு உருளைகளை வரவழைத்து அதற்கு மேலும் குழந்தைகள் இறப்பு நிகழாமல் தடுத்த டாக்டர் கஃபீல்கானை உலகம் மெச்சியது.
உபியின் சங்பரிவார் ஆட்சியாளரின் இயலாமை வெளிப்பட்டதும் கஃபீல்கான் ஆளும் அரசியல்வாதிகளின் கோபத்துக்கு ஆளானார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் அவதூறாக தூண்டிவிடும் வகையில் பேசியதாக சிறப்பு பாதுகாப்பு படையால் கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது, ஆனால் இந்த நேரத்தில் என்எஸ்ஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பிரிவை மாநில அரசு அவருக்கு எதிராக பயன்படுத்தியது.
கஃபீல் கானுக்கு எதிராக மாநில அரசு இதுவரை இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை நீட்டித்தது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை, அலகாபாத் உயர்நீதிமன்றம் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது மற்றும் அவருக்கு எதிராக என்எஸ்ஏ பயன்படுத்தப்பட்டது சட்டவிரோதம் என்று நீதிமன்றம் கூறியது.
கடந்த 8 மாதங்களாக சிறையில் இருந்த டாக்டர் கஃபீல் கான் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர், தான் கைதானது CAA எதிர்ப்பு போராட்டங்களின் போதான பேச்சுக்காக அல்ல, கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவ கல்லூரியில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த சம்பவத்தை அம்பலப்படுத்தியதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டதாக கூறினார்
“சிறையில் என்னை வேண்டுமென்றே சித்ரவதை செய்தனர். பல நாட்கள் பசியுடன் இருந்தேன்" - என்று பிபிசியுடனான உரையாடலில் கஃபீல் கான் கூறியுள்ளார்.
"மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்த பிறகு நான் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டேன். ஆனால் இந்த முறை சிறை செல்வது மிகவும் பயமாக இருந்தது
மதுரா சிறையில், பல நாட்கள் எனக்கு உணவு வழங்கப்படவில்லை. உணவு வழங்கப்பட்டாலும், ரொட்டிகள் தூக்கி எறியப்பட்டன மேலும், சிறைக்குள் உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டேன்.
50 கைதிகளை வைக்கும் திறன் கொண்ட பேரக்கில் 150 கைதிகளுடன் வைக்கப்பட்டேன். நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்றபோதும் மூன்று நாட்களுக்கு நான் விடுவிக்கப்படவில்லை, பின்னர் எனக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
சிறை அதிகாரிகளின் அணுகுமுறை இவ்வாறாக இருந்தபோதிலும், சிறை கைதிகள் நன்றாக நடத்தினர்” – என்றார் கபீல் கான்.
"குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவது குற்றமா? கொரோனா நெருக்கடியின் போது கூட நாட்டிற்கும் சமூகத்திற்கும் நான் அச்சுறுத்தலாக மாறுவேன் என்று அரசாங்கம் ஏன் உணர்ந்தது?. இறுதியில், உயர் நீதிமன்றம் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டவிரோதமானது" என்று கண்டித்துள்ளதை டாக்டர் கஃபீல் கான் சுட்டிக் காட்டுகிறார்.
Sunday, August 30, 2020
நல்லவன் வாழ்வான்
நேற்றைய பத்திரிகைகளில் வசந்தகுமாருக்கான அஞ்சலிச் செய்திகளே பெரும் பகுதியாய் இடம் பெற்றிருந்தன. அவர் இருக்கும்போது நாம் நினைத்துப் பார்க்காத அவரது வியாபார ஆளுமைத் திறனை அவர் இறந்த பிறகுதான் பலரும் சொல்ல கேட்டு, நாம் வியந்து கொண்டிருக்கிறோம்.
நிஜமாகவே அவர் ஒரு வியாபார சக்கரவர்த்தி என்பது இப்போது நமக்குப் புரிகிறது. அவர் நடத்திய அந்த சாம்ராஜ்யம் அவரது மகனால் விரிவடைய வேண்டும்.
தகப்பனுக்கு பிள்ளை செய்யக்கூடிய உதவியே தகப்பனின் பெயரை காப்பாற்றுவதுதான். அதுமட்டுமல்ல வசந்தகுமார் சாதிமத பேதமில்லாமல் எல்லா மக்களோடும் எளிமையாக பழகியவர். இத்தகைய அருங்குணம் அவரது மகனுக்கும் வரவேண்டும். காங்கிரஸ் பேரியக்கத்தில் அவர் காட்டிய பாரம்பரிய பாசம் பட்டுப் போய்விடாமல் அவர் மகன் அதைத் தொடர வேண்டும்.
பாசிசத்தின் கதை முடித்த கதநாயகன் அண்ணாச்சி வசந்தகுமார். அவரது வழியில் அவர் மகனும் நடைபோட வேண்டும் .
வரவிருக்கும், இடைத்தேர்தலிலும் வசந்தகுமார் மகனுக்கே நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதே தொகுதிமக்களின் பேராவல். அது எனது விருப்பமும்கூட. அதனால், நிலைமையை இப்போதே நான் சொல்லி வைக்கிறேன்.
வசந்தகுமார் அண்ணாச்சிக்கும் எனக்கும் சொல்லிக்கொள்ளும் விதமான பழக்கம் கிடையாது. ஒரு பெருநாள் தொழுகையின்போது ஈத்கா (சிறப்புத் தொழுகைகளுக்கான திடல்) மைதானத்திற்கு வந்திருந்த அவரோடு ஒரு படம் எடுத்துக் கொண்டதோடு சரி. உருவத்தைப் பார்த்தோ என்னவோ அவருடைய விஷேச புன்னகையுடன் ரொம்ப கண்ணியமாக என்னை விசாரித்து மரியாதை தந்தார் அப்போது.
அண்மையில், அருமை அண்ணன் தக்கலை அப்துல் வாகித் மறைந்த செய்தியறிந்து அவரது உடலை பார்க்கச் சென்றிருந்தேன். பார்த்துவிட்டு நான் வீட்டுக்கு வரும் வழியில் எதிரே வசந்தகுமார் அண்ணாச்சி காரில் வந்து கொண்டிருந்தார். அவரும் வாகித் அண்ணன் வீட்டுக்குத்தான் வந்து கொண்டிருந்தார்.
என்னைக் கண்டதும் காரின் வேகத்தைக் குறைத்து, என்னிடம் அதே விஷேசச் சிரிப்போடு, “நல்லா இருக்கீங்களா?” - என்று விசாரித்துச் சென்றார்.
ஒரே ஒருமுறை சந்தித்த சந்திப்பை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறாரே என்று நினைத்து எனக்கு வியப்பாக இருந்தது.
நேற்று நண்பர் ‘சித்திக் ஹஸன்’ (Siddique Hassan),
“ரொம்ப நல்லவனா இருக்குறதே தப்பு. வசந்தகுமார் அண்ணாச்சி ரொம்ப நல்லவனா இருந்தாரு. இப்போ எதிர்பாராத நிலையில இறந்துட்டாரு. மனசு தாங்கலே"ன்னு சொல்லி புலம்பினாரு.
வசந்தகுமார் அண்ணாச்சி, நல்லவனாக இருந்ததால்தான் இன்றைக்கும் நாம் அவரை பாராட்டுகிறோம். இத்தகைய சாதனையாளர்களின் சிறப்பே அவர்கள் மறைந்த பிறகும் அவர்களை நினைவு கொள்ள சிலவற்றை விட்டுச் செல்வார்கள்.
வசந்தகுமார் அண்ணாச்சியும் அத்தகைய பல நினைவுகளை நிச்சயம் விட்டு சென்றிருக்கிறார். வீடுதோறும், அவரது ஷவசந்த் அண்ட் கோ’வில் வாங்கிய பொருட்கள் ஏதாவது இல்லாமல் இருக்காது. எங்கள் வீட்டிலும் அவரது கடையில் வாங்கிய ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருக்கின்றன.
ஆமாம்! மதிப்பான பொருட்கள்தான்.
ஒரு சாதாரண எளிய பணியாளராய் வாழ்க்கையைத் தொடங்கி, உழைப்பை மூலதனமாக்கி வாழ்வில் உயர்ந்து காட்டிய ஒரு மதிப்புமிக்க மனிதரின் மதிப்புமிக்க பொருட்கள் அவை.
அண்ணாச்சி வசந்தகுமாரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.
'''''''''''''''''''''''''
ஆக்கம்: அபு ஹாஷிமா (Abu Haashima-https://www.facebook.com/abuhaashima)
Saturday, August 29, 2020
விமர்சனங்களைத் தாண்டி சாதனைப் படைத்த 'அரே ஓ சம்பா!' - ஷோலே
இந்த மாதம் 45-ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது என்றும் பசுமையான இந்திப் படமான "ஷோலே" (Cult movie).
கமல், ஸ்ரீவித்யா, ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ‘அபூர்வ ராகங்கள்’ வெளிவந்த ஆகஸ்ட் 15, 1975-ஆம் ஆண்டில்தான் இந்தப் படமும் வெளிவந்தது.
அப்பா தயாரிப்பில் மகன் ரமேஷ் சிப்பி இயக்க, ஆர்.டி.பர்மன், சலீம்-ஜாவேத் கூட்டணி அமைந்திருந்தனர்.
‘அந்தாஸ்’ (1971), ‘சீதா அவர் கீதா’ (1972) போன்ற படங்களுக்குப் பிறகு, இயக்குநர் ரமேஷ் சிப்பி ஹாலிவுட் பாணியில் ஒரு படம் எடுக்க எண்ணி அதனை ஜாவேத் அக்தரிடம் தெரிவித்தார். சலீம் ஜாவேத் இரட்டையர்கள் ‘ஷோலே’யின் ஒரு வரிக்கதையை ரமேஷ் சிப்பியிடம் சொல்ல, பின்னர் ஏகப்பட்ட மாற்றங்களுடன் திரைக்கதை உருவானது. நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். 1973-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதியில் படப்பிடிப்பு தொடங்கியது.
1950-களில் குவாலியர், ராம்கார் (Ramgarh) பகுதியில் இருந்து கொண்டு பக்கத்துக் கிராமங்களில் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவன் கப்பர் சிங். தன்னிடம் பிடிபடும் காவலர்களின் காது, மூக்குகளை வெட்டிக் காவலர்களை நடுச்சாலைகளில் போட்டுவிடும் அளவு கொடியவன் அவன்.
இந்த உண்மைச் சம்பவமும், திலீப்குமார் கொள்ளையனாக நடித்து வெற்றி பெற்ற ‘கங்கா ஜமுனா’ (Gunga Jumna -1961) மற்றும் பாக்கிஸ்தானியப் படைப்பாளர் இப்னே ஷபியின் (Ibn-e-Safi ) உருது நாவலின் பாத்திரங்களும் இயக்குநர் ரமேஷ் சிப்பிக்கு உள்ளூக்கம் தந்தன. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, நூறு விழுக்காடு வில்லனாக உருப்பெற்றதுதான் கப்பர் சிங் பாத்திரப் படைப்பு.
இந்தப் படத்தின் சக்திவாய்ந்த, கொடூரமானக் கொள்ளைக்காரன் பாத்திரமான கப்பர் சிங் வேடத்தில் நடிக்க முதலில் டேனியை (Danny Denzongpa) ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இயக்குநர் சங்கரின் ‘எந்திரன்’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக டாக்டர் போரா பாத்திரத்தில் நடித்த அதே டேனிதான் அவர்)
அந்த நேரத்தில் டேனி ஏற்கனவே இயக்குநர் ஃபெரோஸ்கானின் ‘தர்மாத்மா’ படத்திற்குக் கால்ஷீட் கொடுத்திருந்ததால் ‘ஷோலே’ ஒப்பந்த்த்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில், தர்மேந்திரா, அமிதாப் இருவரும் கப்பர் சிங் பாத்திரத்தில் நடிக்க விரும்பினார்கள். பின்னர் வில்லன் பாத்திரம் தங்களது இமேஜைப் பாதிக்கலாமென எண்ணி அந்த எண்ணத்தைக் கைவிட்டனர் என்பதை ‘ஷோலே’ நாற்பதாவது ஆண்டு விழாவில் இயக்குநர் ரமேஷ் சிப்பி நினைவு கூர்ந்தார்.
இயக்குநர் ரமேஷ் சிப்பி வழக்கமான வில்லன்களிலிருந்து கப்பர் சிங்கை மாற்றிக் காட்ட விரும்பினார். அதற்காக வில்லனின் உடை மற்றும் வழக்கு மொழிகளில் மாற்றம் கொண்டு வந்தார். 'கப்பர் சிங்'கிற்கு ராணுவ உடை அணிவித்தார். வில்லனின் மொழியை வட இந்தியாவில் புகழ்பெற்ற காரிபோலி (Khariboli) மொழியுடன், இந்தியைக் கலந்து பேச வைத்தார்.
இத்தகைய ஒரு சூழலில்தான் நாடக மேடைகளில் வளரிளம் பருவ நடிகராக வலம்வந்து, ‘ஹிந்துஸ்தான் கி கசம்’ (1973) படத்தில் அறிமுகமாகியிருந்த அம்ஜத்கானைக் கப்பர் சிங் பாத்திரத்திற்குச் சிபாரிசு செய்கிறார்கள் சலீம் ஜாவேத் இரட்டையர்கள்.
தாடி வளர்க்கவிட்டு, ஃபோட்டோ ஷூட் நடத்தியதில், அச்சு அசலாக இயக்குநரின் 'கப்பர் சிங்' பாத்திரத்திற்குப் பொருந்திப் போனார் அம்ஜத்கான்.
வில்லனாகத் தேர்வுசெய்யப்பட்ட பிறகு, ‘சம்பல் கொள்ளையர்கள்’ குறித்து ஜெயபாதுரியின் (ஜெயாபச்சன்) தந்தை தருண்குமார் பாதுரி எழுதி வெளிவந்த நூலான ‘அபிஹ்ஷாப்த் சம்பல்’ (Abhishapth Chambal) படித்துத் தனது பாத்திரத்திற்கு மெருகேற்றினார் அம்ஜத்கான்.
‘ஷோலே’ யின் முக்கியமான இரயில் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு ஏழு வாரங்கள் நீடித்தது. அப்போதெல்லாம், ஏழு வாரங்களில் ஒரு படமே எடுத்துவிடுவார்கள். இப்போதிருப்பது போல் VFX தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல், கிடைத்த தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, வெடிபொருட்கள், துப்பாக்கிகள், ஸ்டண்ட் நடிகர்கள், குதிரைகள் என ஏற்பாடு செய்து, ரயில் சண்டைக் காட்சியை எடுத்து முடித்தார்கள் என்பது வியப்பானது.
யே தோஸ்தி ஹம் நஹி தோடெங்கே,
தோடெங்கே தம்-மகர்,
தேரா சாத் னா சோடெங்கே .....
(We will never break our friendship
Till my last breath
I will not leave your side ..)
என்ற நட்பின் பெருமை பேசும் பாடலில் தர்மேந்திரா பைக் ஓட்டுவார். பைக்கின் 'சைட் கார்' படுக்கை வசதிகளுடன் தனியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும். தர்மேந்திரா அமிதாப் என மாறி மாறி அதில் அமர்ந்திருப்பார்கள்.
பாடலின் முடிவில் அமிதாப் தோள் மீது தர்மேந்திரா அமர்ந்திருந்து 'மௌத் ஆர்கன்' வாசிக்க, அமிதாப் விசிலடிக்க, பைக் பறக்க கிஷோர்குமாரும் மன்னாடேயும் தங்கள் மந்திரக் குரலால் அசத்தியிருப்பார்கள். இந்தக் காட்டசி 21 நாள் எடுக்கப்பட்டது.
படப்பிடிப்பினூடேதான் ஜெயா பாதுரி தன் முதல் குழந்தை ஸ்வேதாவைப் பெற்றெடுத்தார். அந்த ஸ்வேதாதான் இப்போது, மாடலாக, படைப்பாளராக, பத்திரிகையாளராக டெலி நடிகராக தூள் பரப்பிக் கொண்டிருக்கிறார்.
‘ஷோலே' படப்பிடிப்பின்போது, ஜெயா பச்சன், நான்குமாதக் கருவாக அபிஷேக் பச்சனைச் சுமந்து கொண்டிருந்தார். இதுவும் படம் விரைந்து வெளியிட முடியாமல் போனதற்கான காரணங்களில் ஒன்றானது.
'ஷோலே' திரைப்படம் ஒட்டு மொத்தமாக உருவாகி வெளியிட 500 நாட்களாயின.
குரோசாவா அகிராவின் (Akira Kurosawa) வின் பிரசித்திபெற்ற ஜப்பானியத் திரைப்படம் ‘Seven Samurai’ (1954). 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1586) நடந்த ஜப்பானிய வரலாற்றின் நிகழ்வைக் கொண்டு எடுத்த திரைப்படம்.
ஒரு மலைக்கிராமத்தின் அறுவடைக்குக் காத்திருக்கும் மொத்தப் பயிர்களையும் கொள்ளையடிப்பார்கள் கொள்ளையர்கள். அந்தக் கொள்ளையிலிருந்து, பயிரைக் காப்பாற்றுவதற்காக ஏழு சாமுராய்களை வாடகைக்கு அமர்த்துகின்றனர் மலைக்கிராம விவசாயிகள். இந்த மூலக் கதையிலிருந்துதான் ‘ஷோலே’ திரைப்படமானது.
ரயில் சண்டைக்காட்சியை எடுத்துக் கொண்டால், 1903 ஆம் ஆண்டு வெளிவந்த பேசாபடமான ‘The Great Train Robbery’ படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டதாகும்.
‘ஷோலே’யில் பயங்கர ஆயுதங்களோடு யாருக்கும் அடங்காத கொள்ளைக்காரன் கப்பர் சிங்கைப் (அம்ஜத்கான்) பிடிக்க இரண்டு கிரிமினல்களை (தர்மேந்திரா, அமிதாப்பச்சன்) கூலிக்கு அமர்த்துகிறார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான சஞ்சீவ் குமார். இதுதான் திரைப்படத்தின் கரு
‘மெஹ்பூபா மெஹ்பூபா,
குல்ஷன் மெய்ன் குல் கில்தே ஹே,
ஜப் செஹ்ரா மெய்ன் மில்தே ஹே,
மெய்ன் அவுர் தூ’
- என்ற புகழ்பெற்ற ‘ஷோலே’ பாடல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தனித்த கிரேக்கப் பாடகர் டெமிஸ் ரூசோஸின் (Demis Roussos)
‘Say You Love Me
Of all the things you're telling me,
I ever heard you say’
-என்ற பாடலிலுள்ள ராகத்தின் அப்பட்டமான ஜிராக்ஸ் பிரதிதான் என அப்போது விமர்ச்சனமும் எழுந்தது. ஆனால், ‘மெஹ்பூபா’ பாடலுடன் நில்லாமல், ஒரு சரித்திரமும் சொல்லும்.
கப்பர் சிங்கிற்கு ஆயுதம் வழங்கும் ஜிப்ஸிகள் கப்பர் சிங் தங்கள் பகுதிக்கு வருவதைத் தாக்கூருக்குத் (சஞ்சீவ் குமார்) தெரிவிக்க, வீருவும் (தர்மேந்திரா) ஜெய்யும் (அமிதாப்) கப்பர் சிங்கைப்பிடிக்க ஜிப்ஸிகள் பகுதிக்கு வருகை தருவார்கள். அப்போது, ஆடலர் ஹெலனும், ஜலால் ஆகாவும் பிரத்யேக தோற்றத்தில் ஆடிப் பாடுவார்கள். இந்த பாடலுக்கு ஃபில்ம் ஃபேரின் சிறந்த பாடகர் விருது, பாடகர் ஆர்.டி. பர்மனுக்குக் கிடைத்த்து. பின்னாளில் இந்த பாடலின் ராகம், பாடகர் மகேஷ் குமாரினால் மும்பையின் திருமண மண்டபங்களில், ‘லட்டு லா லட்டு லா, மிர்சிஸ் மூ ஜல்தா ஹை’ என்ற வரிகளோடு வரலாறானது. ஆர்டி பர்மனும், ஆனந்த் பக்சியும் கலை ரசிகர்களின் உள்ளங்களை இதுவரையிலும் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதும் உண்மை.
107 நிமிடத்திற்குப் பிறகுதான் கப்பர் சிங் திரையில் தோன்றுவார். அதுவரை அவரைச்சுற்றியே கதை இயங்கிக் கொண்டிருக்கும்.
தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், அம்ஜத்கான், ஹேமமாலினி, அமிதாப் பச்சன், ஜெயபாதுரி, அஸ்ரானி, ஜெக்தீப், ஹெலன் என நடிகர் பட்டாளம் அணிவகுத்து நிற்கும்.
படத்துக்கு முன்பதிவு பிரமாதமாக இருந்தது. ஆனால், சொல்லி வைத்தார் போல, எல்லா பத்திரிகைகளும் ‘படம் தேறாது’’ என்று விமர்சனம் எழுதியதால், மொத்த திரைப்பட யூனிட்டும் அதிர்ச்சிக்கு ஆளானது.
முதல் வாரத்தில் இயக்குநர் ரமேஷ் சிப்பி குழம்பித்தான் போனார். பம்பாய் மினர்வா அரங்கம் நிறைந்த இருக்கைகளுடன் நிசப்தமாகவே இருந்தது. விநியோகிஸ்தர்கள், விளம்பரதாரர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் எல்லாம் ‘இது தங்கள் பேரழிவின் தொடக்கமோ?’ என்று அச்சப்பட்டதாக பின்னாளில் அறிவிக்கிறார்கள்.
இந்தியா டுடே (India Today) இதழின் புகழ்பெற்ற திரை விமர்ச்சகர், கே.எம்.அல்மாதி, "எல்லாமே முடிந்துவிட்டது. சக்திவாய்ந்த உரையாடல்களால் கூட ஒரு கைதட்டலையோ, விசில் சத்தத்தையோ ரசிகர்களிடமிருந்து பெறமுடியவில்லை!" - என்று எழுதினார்.
மூன்று வாரங்களுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறியது. அகன்ற திரையிடலும், ஸ்டீரியோ ஃபோபோனிக் ஒலி அமைப்பின் தன்மையும் ரசிகர்களை இருக்கைகளுடன் கட்டிப் போட்டுவிட்டதே உண்மை. பம்பாய மினர்வா அரங்கின் கைதட்டல், விசில் சத்த ஒலிகள், அமிதாப் தர்மேந்திராவின் மரணக் கணங்கள சிதறடிக்க, ஜெயபாதுரி வருகை அரங்கில் கண்ணீரால் நிறைத்த்து.
இரண்டு ஆண்டுகள் ஓடிய ‘பர்சாத்’, (Barsaat-1949), மூன்று ஆண்டுகள் ஓடிய ‘முகல்லே ஆஸம்’, (Mughal-e-Azem- 1960), மூன்றரை ஆண்டுகள் ஓடிய ‘கிஸ்மத்’ (Kismet-1943) இவைகளின் சாதனைகளை ஷோலே முறியடித்தது. ஐந்தாண்டுகள் தொடர்ந்து ஓடி சரித்திரச் சாதனை புரிந்தது.
சென்னை சத்யம் திரையரங்கில் ஓராண்டிற்கும் அதிகமாக வழக்கமான திரையிடலில் (ரெகுலர் காட்சிகளாக) ஓடிய முதல் தமிழல்லாத படம் ‘ஷோலேவாகத்தான் இருக்கும்!
வெறும் 3 கோடி பட்ஜெட்டில் உருவான ‘ஷோலே’ 30 கோடி வசூலை அள்ளித் தந்த்து. ரஷ்யாவில் மட்டும் ஆறு கோடி ரசிகர்கள் ‘ஷோலே’ படத்தை ரசித்துப் பார்த்திருக்கிறார்களாம்.
கடந்த 50 ஆண்டுகளில் மக்களின் மனம் கவர்ந்த மிகப் பெரிய வில்லன்கள் பட்டியலில் அம்ரீஸ் பூரி (Mr India), ராமதிர் சிங் (Gangs Of Wasseypur), பிரேம்நாத் (Bobby), ரன்வீர் சிங் (Padmaavat), சஞ்சய் தத் (Kancha Cheena) போன்றோரைப் பின்னுக்குத் தள்ளி பட்டியலில் முதலிடத்தில் 'கப்பர் சிங்' அம்ஜத்கான்தான் அமர்ந்துவிட்டார்.
‘ஷோலே’ திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணம், கதை சொன்னவிதம், முதன் முறையாக ஸ்டீரியோஃபோனிக் ஒலி அமைப்பில் அசத்திய பிரம்மாண்டக் காட்சிகள், இந்தியாவின் முதல் அகன்ற 70 எம். எம். திரையிடல், பாடல்கள், காட்சிகள் படமாக்கப்பட்ட விதங்கள், இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்கள், புதுமையான அமிதாப்பின் மேனரிஸங்கள், கப்பர் சிங் வில்லன் பாத்திரம், சாதாரண ரசிகனைத் திருப்திப்படுத்தும் விதங்கள் எனச் சொல்லிக் கொண்டேபோகலாம்.
முதன்முறையாக இந்தியத் திரைப்பட வரலாற்றில் 100 திரையரங்குகளில் வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் படம் ‘ஷோலே’. அத்துடன் 60 திரையரங்குகளில் பொன்விழாவும் கண்ட படம் அது.
2002 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவின் மிகச்சிறந்த 10 திரைப்படங்களில் ‘ஷோலே’ முதலிடத்தைப் பிடித்தது. 2005 ஆம் ஆண்டு நடந்த 50-ஆம் ஃபில்ம்-ஃபேர் விருது விழாவில் கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த படமாகவும் ‘ஷோலே’ விருதுபெற்றது.
2014 ஆம் ஆண்டு ஜனவரியில் 3 D வடிவிலும் ‘ஷோலே’ மறுவெளியீடு செய்யப்பட்டது. படத்தின் ஒலிச்சித்திரம் மற்றும் உரையாடல்கள் தனித்தனி இசைத்தட்டுகாளாக வெளியாகிச் சாதனைகள் படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு படம் வெளியீட்டிற்கு முன், வெற்றிபெறுமா, பெறாதா என்பது பற்றிய முடிவை எந்தக் கொம்பனாலும் உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் வெற்றி பெற்ற பிறகு, ‘எதனால் படம் வெற்றி பெற்றது?’ அல்லது ‘தோல்வியுற்றது?’ என்பதனை விளக்க ஒரு கோஷ்டியே வரிசைகட்டும் என்பார் சுஜாதா.
ஷோலே’ வெற்றிக்குப் பிறகு அப்படித்தான் எண்ணற்ற கட்டுரைகள், விமர்ச்சனங்கள் வந்தன. அவற்றில் சுவாரஸ்யமான விசயங்கள் இவை:
‘ஷோலே’ வெற்றிக்குப் பிறகு இந்தித் திரைப்படங்களின் வில்லன் பாத்திரங்களில் அம்ஜத்கானின் கப்பர் சிங் மேனரிஸங்கள், உரையாடல் பாணிகள் எனப் பாலிவுட் மாறத் தொடங்கியது.
பாலிவுட.டின் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளைத் தூங்கவைக்க, ‘இப்ப தூங்கலன்னா கப்பர் சிங் வந்துருவான்’ (soja beta warna gabbar jaigea -sleep baby else Gabbar will come) என்பது போன்ற வசனங்களைப் பேசத் தொடங்கினார்கள்.
ஒரு வில்லன் விளம்பரப் படத்தில் நடிப்பதைத் தொடங்கி வைத்தவர் அம்ஜத்கான். ‘கப்பர் சிங்’ பாத்திரமாகவே பிரிட்டானியா குளுகோஸ் பிஸ்கட் விளம்பரப் படத்தில் ஒருவர் நடித்தார் (Popularly known as Gabbar Ki Asli Pasand)
இந்த அம்ஜத்கானைத்தான் சுஜாதாவின் கதையில் உருவான ‘விக்ரம்’ (1986) படத்திற்குச் சலாமியா நாட்டின் சுல்தானாகக் கொண்டுவந்தார் கமல்ஹாஸன்.
‘ஷோலே’யின், பிரம்மாண்ட வெற்றியின் 16 ஆண்டுகள் கழித்து, மீண்டும் 1991-ஆம் ஆண்டு, அம்ஜத்கானைக் கதாநாயகனாக வைத்து ‘ராம்கர் கி ஷோலே’, (Ramgarh Ke Sholay) என்ற பகடிப் படம் ஒன்றும் வெளிவந்த்து.
‘ஷோலே’ படம் பற்றிய சில புத்தகங்கள்கூட வெளியாகியிகியுள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதானால், பென்குவின் வெளியீடாக 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Sholay : The Making of a Classic’ என்ற நூலை சொல்லலாம்.
‘ஷோலே’ குறித்து இந்தியா முழுவதும் நிறைய விவாதங்கள், ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இரட்டையர்களில் ஓருவரான ஜாவேத் அக்தர், ஒரு நேர்காணலில் ‘ஷோலே’ படத்தின் கதை பல வரலாறுகளைக் கண்டது என்று கூறியிருக்கிறார்.
‘ஷோலே’ திரைப்படத்தில் மேற்கத்தியப் படங்களின் சாயல் இருப்பது விமர்ச்சனங்களில் சுட்டிக்காட்டப்பட்டன.
உலகத் திரைப்பட வரலாற்றில் புகழ்பெற்ற இயக்குநர்களுள் குறிப்பிடத் தக்கவர் இத்தாலியின் செர்ஜியோ லியோன்.
இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘ஒன்ஸப்பான் ஏ டைம்’ பட வரிசையில், ஹென்றி ஃபான்டா, சார்ல்ஸ் ப்ரான்ஸன் என நட்சத்திரப் பட்டாளம் கலக்கிய ‘ஒன்ஸப்பான்ய டைமின்தி வெஸ்ட்’ (Once Upon a Time in the West)- படம் 1968 ஆம் ஆண்டு வெளியானது. அதில் முதன் முறையாக வில்லன் பாத்திரத்தில் ஹென்றி ஃபான்டா கலக்கியிருப்பார்.
அந்தப்படம் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே அமெரிக்காவில் பார்த்துவிட்டதாக ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார் ஜாவேத் அக்தர். அதன் பாதிப்பை ‘ஷோலே’யின் பல காட்சிகளில் காணலாம்.
‘ஷோலே’ படத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை விமர்ச்சிக்கும் கட்டுரை ஒன்றைச் சாகித்ய விருதாளர் எஸ். ராமகிருஷ்ணன் 2005 ஆம் ஆண்டு எழுதும்போது, ‘ஷோலே’ திரைப்படம் பத்து ஆங்கிலப் படங்களின் காட்சிகள், கதை வடிவங்களைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். ‘The Great Train Robbery (1903), ‘Seven Samurai ( 1954), ‘Garden Of Evil’ (1954), ‘The Searchers’ (1956), ‘One-Eyed Jacks’ (1961), ‘Once Upon a Time in the West’ ( 1968), ‘Butch Cassidy and the Sundance Kid’ (1969), ‘The Wild Bunch’ (1969) என்று பட்டியல் நீள்கிறது.
இத்தனை படங்களிலிருந்து காட்சிகள், பாத்திரங்களின் மேனரிஸங்கள், பாடல்களின் பாணி, உருவி எடுக்கபட்டிருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தனையும் தங்களது படத்திற்கு தேவையான முறையில் உருமாற்றித் திரைக்கதையை உருவாக்கியவர்கள் சலீம் ஜாவேத் இரட்டையர்கள் (சலீம் அப்துல் ரஷீத்கான், ஜாவேத் அக்தர்) என்கிறார்கள் அவர்கள்.
‘ஷோலே’ படத்தில் வரும் வன்முறைக் காட்சிகள் திடுக்கிட வைக்கின்றன.
இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்த அம்ஜத்கானின் நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது. ‘படத்தில் வந்த சில காட்சிகள் சாதாரண கற்பனையில் தோன்றக்கூடியவை அல்ல’ - என்கிறார், சாகித்ய விருதாளர் அசோகமித்திரன்.
உலகத்தின் எந்த மூலையில் ஒரு நிகழ்வு நடந்து, மக்கள் அதிகமாகப் பேசத் தொடங்கினால், அதுகுறித்து கருத்துச் சொல்லி ஒரு கட்டுரை எழுதும் பழக்கமுடையவர் இவர். 2008 ஆம் ஆண்டு ஜூலை 21-இல், ‘ஷோலே’ திரைப்படம் பற்றியும் எழுதினார்.
‘கப்பர் சிங்கின் நக்கலான வசன உச்சரிப்பும் சட் சட்டென்று மாறும் முகபாவனைகளும் கவர்ந்திருக்கின்றன. ஆனால், ‘ஷோலே’யின் பெருவெற்றிக்கு அமிதாப்பின் உடல்மொழி முக்கியமான காரணம் - என்பதாகக் குறிப்பிடுகிறார். மேலும், ‘ஷோலே’ எழுபத்தெட்டில்தான் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது என்று நினைக்கிறேன். அப்போது நான் பதினொன்றாம் வகுப்பு மாணவன்’ - என்றும் எழுதியிருக்கிறார்.
உண்மை என்னவென்று பார்ப்போம்.
1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா முழுவதும் வெளியான ‘ஷோலே’ திரைப்படம், அதே நாளில் சென்னையில் சத்யம், காசினோ, பைலட் திரையரங்குகளில் வெளிவந்தது, மூன்று தியேட்டர்களிலும் 100 நாட்கள் ஓடியதைப் பதிவுசெய்கிறார் இந்தியத் திரைப்பட வரலாற்றாய்வாளரும் தமிழ் சினிமாவின் நடமாடும் தகவல் களஞ்சியமுமான ஃபில்ம் நியூஸ் ஆனந்தன்.
இதுவரை சொல்லப்படாத மிகச்சிறப்பான கதை என ‘ஷோலே’ திரைப்படம் புகழப்பட்டாலும், அதன் திரைக்கதாசிரியர்கள் சலீம் – ஜாவேத் மீது சில விமர்ச்சனங்களும் வந்தன.
1.’பானி அன்ட் க்லைட்’ (1967):
‘க்லைட் பாரோ’ (Clyde Barrow) மற்றும் எலிஸபெத் பார்க்கர் (Bonnie Elizabeth Parker) - இருவரும் கிரிமினல் இணையர்கள். வங்கிக் கொள்ளைக்குப் புகழ்பெற்றவர்கள். இவர்களின் வாழ்க்கை நிகழ்வைச் சித்தரிக்கும் படம்தான் ’பானி அன்ட் க்லைட் (Bonnie and Clyde’) 1967 ஆம் ஆண்டு வெளியாகி, புதிய ஹாலிவுட் கலாச்சாரத்தை உருவாக்கிய படம் இது. செக்ஸ், வன்முறை, கொடுமையான மரணம் ஆகியவற்றைக் கலந்து கொடுக்கும் புதிய திரைப்படங்களுக்கு மூலப்படமாக அமைந்த படம். விருதுகளைக் குவித்ததோடு, கலாச்சார, வரலாற்று ரீதியான அழகியல் படமென்று 1992-ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய ஃபில்ம் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்ட படம்.
2.’புச் கேசிடி அன்ட் சன்டேன்ஸ் கிட்’ ( 1969) :
வங்கி மற்றும் ரயில் கொள்ளைகளில் ஈடுபட்டு, மரணித்த பின்பும் பல கொள்ளைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையைத் திணறடித்த இரட்டைக் கொள்ளையர்களான புச் கேசிடி மற்றும் சன்டேன்ஸ் கிட் ஆகிய இருவரின் வாழ்க்கையைப் பிரதிபலித்த படம் இது.
பால் நியூமனும் ராபர்ட் ரெட்ஃபோர்டும் இரட்டைக் கொள்ளையர்களாகக் கலக்கிய படம். பல விருதுகளையும் பெற்றது. 2003 ஆம் ஆண்டு அமெரிக்க நூலகக் காங்கிரஸின் தேசிய ஃபில்ம் பதிவேட்டில் (National Film Registry) பதிவுசெய்யப்பட்ட திரைப்படம் ‘புச் கேசிடி அன்ட் சன்டேன்ஸ் கிட்’, (Butch Cassidy and the Sundance Kid-1969) இந்த இரண்டு படங்களையும் உல்டா பண்ணி ‘ஷோலே’ திரைப்படத்தில் தெளித்திருக்கிறார்கள் சலீம் ஜாவேத் இரட்டையர்கள் என்ற விமர்ச்சனம் அது.
இந்த விமர்ச்சனம் ஒருவேளை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் ‘ஷோலே’யின் அற்புதக் கேமிராக் கோணங்கள், இயக்கம், மக்களோடு ஒன்றெனக் கலந்திட்ட வசனங்கள், நடிகர்களின் இயல்பான நடிப்பு, பாடல்கள், தர்மேந்திரா - அமிதாப் வசனங்களில் தெறிக்கும் நட்பின் மேன்மை போன்றவை சினிமா இதயங்களை இன்னும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.
படத்தில் கப்பர் சிங்கின் வசனமொன்று வரும், "கப்பர் கே டாப் சே தும்ஹே ஏக் ஹை ஆத்மி பச்சா சக்தா ஹை, ஏக் ஹை ஆத்மி ... குட் கப்பர்" (There is only one man who can save you from Gabbar's heat, only one man...Gabbar himself.) இந்த வசனத்திலிருந்து நாம் புரிந்துகொள்வது இதுதான்:
‘உங்களைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள். நீங்கள்தான் உங்களைக் காப்பற்றிக் கொள்ளவேண்டும். தற்போதயக் கொரோனா தீநுண்மி கிருமித் தொற்றும் அதைத்தான் நமக்குக் கற்றுத் தந்துகொண்டிருக்கிறது.
'''''''''''''''''''''''
விமர்சகர்: பென்ஸி. (Kadayanallur Benzy - https://www.facebook.com/kadayanallur.benzy)
Friday, August 28, 2020
வெற்றிப்படிகட்டுகளை தொட்டுக் காட்டியவர்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1950-ஆம் ஆண்டு பிறந்தவர் வசந்தகுமார். பட்டப்படிப்பு முடித்து சென்னைக்கு வேலை தேடி வந்தவர், 1970-களில் விஜிபி நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றினார்.
அதன்பின் அந்தப் பணியிலிருந்து வெளியேறியவர் இனி பணியாளராகவே இருக்க கூடாது; முதலாளியாகதான் இருக்க வேண்டும் என்று லட்சிய வேட்கையுடன் செயல்பட்டு கடைசியில் தனது இலக்கை அடையவும் செய்தார்.
அதிலும் சாமான்யர்கள் எளிதில் வீட்டுப் பொருட்கள் வாங்கும் விதமாக தவணைமுறையில் வசந்த் அண்ட் கோ என்ற பெயரில் துவங்கிய அவரது நிறுவனம் வெகுவிரைவிலேயே பிரபலமானது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் என்று ஆலமரமாய் மொத்தம் 64 கிளைகள் பரப்பி படர்ந்து நின்றது. 2008-இல், வசந்த் தொலைக்காட்சி துவக்கப்பட்டது. தனது உழைப்பால் உயரிய படிக்கட்டுகளை அடைந்த வசந்தகுமார் தனது அனுபவங்களை தொகுத்து "வெற்றிப்படிக்கட்டு" என்ற பெயரில் சுயசரிதையாக்கினார். அந்தப் புத்தகத்தை நடிகர் ரிஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் தலைமையில் வெளியிட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான குமரி ஆனந்தனின் சகோதரர்தான் வசந்தகுமார். 2006 மற்றும் 2016ஆம் ஆண்டு நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.
2019ல் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் இன்று 28.08.2020 மாலை காலமானார்.
Thursday, August 27, 2020
உலக நாடுகளுக்கு, சமநீதி பாடத்தை போதிக்கும் நியூஸிலாந்து
குற்றவாளியின் நடவடிக்கைகள் ‘மனித நேயமற்ற செயல். அவர் யார் மீதும் கருணை காட்டவில்லை"
நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் கடந்த ஆண்டு இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி 51 பேரை கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின்போது, கிரைஸ்ட்சர்ச் நீதிமன்ற நீதிபதி கேமரன் மேண்டர் வியாழக்கிழமை (27.08.2020) அன்று வெளியிட்ட தீர்ப்பில் தெரிவித்த வாசகங்கள் இவை.
குற்றவாளி, பரோலில் கூட வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் சாகும் வரை சிறையிலேயே தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து நாட்டின் வரலாற்றில் இவ்வாறு தண்டனை விதிக்கப்படும் முதல் நபர் இவன்.
பரோல் இல்லாமல் வாழ்நாள் சிறை தண்டனை என்றால், தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி, ஒரு குறிப்பிட்ட காலம் சிறையில் இருந்த பிறகு அவருக்கு வெளியே வர அனுமதி வழங்கப்படாது. இதுபோன்ற தண்டனைகள், மிகவும் மோசமான கொலையாளிகளுக்கே வழங்கப்படும். நியூஸிலாந்தின் சட்ட அமைப்பில் மரண தண்டனை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
டர்ரன்டுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து நியூஸிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டென் கூறுகையில், "குற்றவாளியை பற்றி இனி சிந்திக்கவோ, அவர் கூறுவதை கேட்கவோ நமக்கு இனி எதுவும் இல்லை என்பதே இத்தீர்ப்பின் பொருள். தீவிரவாதி என்று குறிப்பிடப்படும் நபர் குறித்து கேட்பதோ பேசுவதோ இதுவே கடைசி நாளாக இருக்கும் என நம்புகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிரைஸ்ட்சர்ச்சில் நடந்தது என்ன?
கடந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி அங்குள்ள இரு மசூதிகளில் துப்பாக்கியுடன் நுழைந்த 29 வயதான ஆஸ்திரேலியாவை சேர்ந்த குற்றவாளி வெள்ளையின மேலாதிக்கவாதியான பயங்கரவாதி ப்ரென்டன் டர்ரன்ட் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டான்.
முதலில் அல்-நூர் மசூதியில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சுட, 30 விநாடிகள் கழித்து தனது காருக்கு சென்று மீண்டும் ஒரு ஆயுதத்தை எடுத்து வந்து மீண்டும் மசூதிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை சுட ஆரம்பித்தான்.
தனது நெற்றியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் அவர் அந்த சம்பவத்தை ஃபேஸ்புக்கில் நேரலை செய்தான்.
பின்னர் லின்வுட் இஸ்லாமிய மையத்திற்கு காரில் சென்றவன், அங்கு வெளியே இருந்த இரு நபர்களை சுட்டதோடு, அதன் ஜன்னல்களிலும் சுட்டான்.
உள்ளிருந்த வந்த நபர் ஒருவர் வெளியே ஓடிவந்து, பயங்கரவாதி ப்ரென்டன் டர்ரன்ட் பயன்படுத்திய துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்து, அவனை துரத்தினார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இரு போலீஸ் அதிகாரிகள், பயங்கரவாதி ப்ரென்டன் டர்ரன்ட்டை விரட்டிப் பிடித்தனர். கைதுக்கு பிறகு அவன் போலீஸாரிடம் மசூதிகளை எரிப்பதே தனது நோக்கம் என்றும், அதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதாகவும் புலம்பியுள்ளான்.
29 வயதான ஆஸ்திரேலியாவை சேர்ந்த குற்றவாளி வெள்ளையின மேலாதிக்கவாதியான ப்ரென்டன் டர்ரன்ட், 51 பேரை சுட்டுக் கொலை செய்ததையும், 40 பேரை கொலை செய்ய முயற்சித்ததாகவும், தன் மீது இருந்த தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான்.
தனது குடிமக்களுக்கான சமநீதியை உலக நாடுகளுக்கு நியூஸிலாந்து பாடம் நடத்தி கொண்டிருக்கிறது.
அந்த இரண்டு இளம் மீட்பாளரும், தூக்கணாம் குருவி குஞ்சுகளும்
மித்ரன் மற்றும் வர்சா எப்போதும் போல் தங்கள் ஊரை சுற்றி சைக்கிளில் வலம் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மழை நீர் தேங்கிய சதுப்பு நிலத்தில் வளர்ந்திருந்த யானைத்தட்டை புற்கள் செழித்த புதர் காட்டின் கரையோரம் அநாதரவாக தரையில் கிடந்த தூக்கணாங்குருவி கூடு ஒன்றை கண்டனர்.
யாரோ மாட்டுக்கு புல் அறுத்தவர்கள் உச்சிப் புல்லை வளைத்து, கோர்த்து, இணைத்து கட்டியிருந்த கூட்டை அகற்றி பொருட்படுத்தாமல் தரையில் வீசிச்சென்றுள்ளனர்.
கீழே கிடந்த கூட்டை அந்த இரண்டு சிறுவர்கள் கையில் எடுத்து சோதனை செய்ததில் உள்ளே நான்கு இளம் குஞ்சுகள் இருந்துள்ளன.
சரி நமக்கென்ன கவலை என்று அப்படியே கிடத்திவிட்டு கடக்கவில்லை அந்த குழந்தைகள்.
மித்ரன் மற்றும் வர்சா நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளிச்சிறுவர்கள். நண்பர்கள் இருவரும் அந்த குஞ்சுகளை பத்திரமாக வீட்டுக்கு எடுத்துக் கொண்டுப் போய் தங்கள் பெற்றோர்களிடம் நடந்த விவரத்தை விவரித்தனர்.
மாலையில் மீட்கப்பட்ட இளம் குஞ்சுகள் இரவு முழுதும் அந்த குழந்தைகள் அரவணைப்பில். குஞ்சுகள் பசியால் வாடும் என்று அந்த குழந்தைகள் புழுக்களையும் பூச்சிகளையும் பிடித்து உணவாக கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து என்ன செய்வதென்று அறியாமல் குழந்தைகளின் பெற்றோர்கள் 'ஊர்வனம்' குழுவினரை அண்ணன் இறகுகள் ரவீந்திரன் மூலம் நம்மை தொடர்பு கொண்டனர்.
ஊர்வனம் மீட்பு குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு குழந்தைகள் மித்ரன் மற்றும் வர்சா உடன் விரைந்து சென்றனர். குஞ்சுகள் கிடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
உயர்ந்த வசதியான பெரும் குடியிருப்புகளுக்கு நடுவே யானைத்தட்டை புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் அது.
அங்கு பெரும் கூட்டமாக தூக்கணாங்குருவிகள் குடியேறி இருந்தன. ஆங்காங்கே கூடுகள் கட்டப்பட்டிருந்ததையும் பெற்றோர்கள் கூட்டுக்குள் நுழைவதும், வெளியேறுவதுமாய் இருந்தன. கூடுகளில் இருந்து வெளிவரும் அழகிய இசையில் உள்ளே குஞ்சுகள் உள்ளது உணரப்பட்டது.
கரையோரம் இருந்த புற்கள் அறுக்கப்பட்டிருந்தன. அறுபட்ட புல்லில் கட்டப்பட்டிருந்த கூட்டை அகற்றி கீழே வீசிச்சென்று புற்களை எடுத்து சென்றுள்ளனர்.
சரி குஞ்சுகளை நாம் எடுத்து சென்று இரையை ஊட்டி வளர்க்கும், ஒரு சவாலான, ஆபத்தான பணியைவிட, அதை காணாது தவிக்கும் பெற்றோர்களுடன் சேர்ப்பதுதான் சிறப்பானது.
கூடு கீழே கிடந்த சரியான இடம் கண்டறியப்பட்டது. அதன் அருகில் உயரே வளர்ந்து இருந்த புல்லின் சதுப்பு நிலப் பகுதியில் மீட்புக்குழுவினர் இறங்கினர். வேறு வழியில்லாததால், தூக்கணாங்குருவி போல் அருகருகே இருந்த வெவ்வேறு புல்லின் உயர்ந்து வளர்ந்த நுனிப்பகுதியை வளைத்து, இணைத்து கூடு மீண்டும் உயரே நான்கு குஞ்சுகளுடன் கட்டி விடப்பட்டது.
மித்ரன், வர்சா என்ற இரண்டு இளம் மீட்பாளர்கள் குருவியின் குடும்பத்தை இணைக்க மேற்கொண்ட சிரமங்கள், அனைத்து மனிதர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக "பல்லுயிர் ஓம்புதல மாந்தர் இயல்பு" என்ற கருத்தை உணர்த்துகிறது.
வாழ்த்துகள் மித்ரன் மற்றும் வர்சா...
படம், தகவல்: Vishwa Wishtohelp - https://www.facebook.com/vishwanath.vishwa.507
ஊர்வனம் :: Urvanam
விலங்குகள் மீட்புக்கு
8608700088
'''''''''''''''''''''''''
தூக்கணாம்குருவிகளின் வாழ்வியலை அறிய இணைப்புக்கு: https://www.youtube.com/watch?v=on__YmwEm1U&t=14s
Wednesday, August 26, 2020
பையன்னா பரவாயில்ல; பொண்ணுன்னா செலவா?
"நாலும் பொட்டப்புள்ளையா பெத்து வெச்சுருக்கீங்க கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டா யார் உங்கள பாத்துக்குவா, இதுக்குத்தான் பையன் வேணும்ங்கறது"
"என்ன இருந்தாலும் குடும்பத்துக்கு வாரிசு வேணாமா?"
"பொம்பளப் புள்ளைக வேணுந்தான் ஆனாலும் கடைசி வரைக்கும் பசங்க தான் வருவாங்க"
இந்த சொல்லாடல்கள் எல்லாம் கிராமப்புறங்களைத் தாண்டி, ஹைடெக் சிட்டிகளான பெருநகரங்களில் பேசப்படுகின்றன.
கொஞ்ச நாள் முன்னாடி கூட விஜய் டிவி ‘நீயா நானால’ "பெண்களுக்கு சொத்து பிரிச்சு குடுக்கறது" சம்பந்தமா தலைப்பில விவாதம் நடந்துச்சு. வீட்டுல மூத்த ஆம்பளைங்கனு பேசுன பசங்கள்ள பாதி பேர் "அதான் கல்யாணத்துக்கு செய்றோம்ல அப்பறம் வந்து சொத்துல பங்கு கேக்கக் கூடாதுனு பேசுனாங்க".
“அப்ப உன் பொண்டாட்டிக்கும் இதே பார்முலாவை அப்ளை பண்ணிடலாம்லனு யாராச்சும் கேட்ருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.
ஆனா, யாரும் கேட்கல.
பெண் குழந்தைகள் எல்லாம் இவங்களப் பொறுத்த வரைக்கும் பாரம், வீண்செலவு, தண்டச் செலவுனு சொன்னா சரியாருக்கும்.
இதுவே ஆம்பளப் பயலுகளுக்குனா அது முதலீடு, ஃபிக்ஸ்ட் டெபாசிட் மாதிரி. இப்ப செலவு பண்ணாலும் பின்னாடி அவன வெச்சு ஒரு வியாபாரம் பாத்து, விட்ட காசப் பிடிச்சர்லாம்னு ‘காம்பிளிங்’ (Gambling) கணக்கா பேசுவாங்க. பேசறதோட மட்டுமில்ல; அதுதான் இப்ப வரைக்கும் நடைமுறையிலும் இருக்கு.
என் மகனுகென்ன கொறச்சல்? 50 பவுன் நகை கூட இல்லாம ஏன் கல்யாணம் பண்ணனும்னு? - பேசற தாய்மார்கள்,
“ஒன்னும் இல்லாத இடத்துல கல்யாண பண்ணா குறை இருக்குனு நெனச்சுருவாங்க. ஒத்தப் புள்ளைய வெச்சுருக்கேன் அவனுக்கு இல்லாததா? அவனுக்கு செய்யாததா?” அப்டினு மடில போட்டு தாலாட்டுவாங்க.
சரிதான்! இதெல்லாம் தாய்மார்கள் டிபார்ட்மெண்ட்.
"நான் படிக்காதத என் மகன் படிக்கணும்!”
“எனக்கு கிடைக்காதது என் மகனுக்கு கிடைக்கணும்!”
“சொத்து சேக்கணும்"
இந்த தாறு-மாறு கனவுகள் எல்லாம் தகப்பன்களோட டிபார்ட்மெண்ட்.
ரெண்டாவது படிநிலைகள் நான் சொல்றது. இதுவே வீட்ல ஒரு பொண்ணு ஒரு பையன்னா, அந்தப் புள்ள பெருசோ, சிறுசோ இவன் சொல்றதக் கேட்டுத்தான் நடக்கணும். அவனுக்கு தெரியாததா உனக்கு தெரிஞ்சுடும்? அவன் நாலு இடத்துல சஞ்சரிப்பவன்னு வசனம் பேசுவாங்க.
ஒரு காலத்துல பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊத்தி கொல்றதையெல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க. இப்போ, அந்தளவுக்கு சீரியஸா இல்லனா கூட, இவங்க பொம்பளப் புள்ளைகள ட்ரீட் பண்ற விதத்துக்கே முதல்ல கேஸ் போட்டு உள்ள தள்ளணும்.
படிக்காதவன் தான் இப்படியெல்லாம் பண்ணுவான்னு நீங்க தீவிரமா நம்புனீங்கன்னா, கடைசி வரைக்கும் அப்டியே தான் நம்பணும். ஏன்னா படிச்சவங்க கொஞ்சம் டீசன்ட்டா சுத்துவாங்க இதோ இப்படி: “கஷ்டப்பட்டு ஒரு டிகிரி படிக்க வெச்சுட்டேன்; கட்டிக் குடுத்தா போதும்னு”
கள்ளிப்பால் கொடுத்து கொன்ன காலகட்டத்துல இருந்து வெளிய வந்துட்டோம்னு சந்தோஷப்பட்டுக்கலாம் தான். ஆனா இப்பவரைக்கும் பையன்னா பரவால்ல; பொண்ணுனா செலவளிக்கனும்னு யோசிக்கிற 80% பேர் இருக்கத்தான் செய்றாங்க.
குழந்தைகள் உங்க கௌரவத்துக்கான அடையாளம் இல்ல. அது உங்களால் இந்த உலகத்துக்கு வந்த ஒரு உயிர் அவ்வளவுதான்! பெத்துட்டீங்கங்கறதுக்காக உங்க கௌரவத்தையெல்லாம் அவங்க தலைல கட்டாதீங்க! உங்க ஆசையெல்லாம் அவங்க மேல திணிக்காதீங்க! எல்லாத்தையும் தாண்டி ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் ஒண்ணுதான்! தராசுல வெச்சு இது ஒசத்தியான புள்ள; இது மட்டமான புள்ளன்னு எடை போடாதீங்க!
நன்றி: புளியங்குடி சையத் அலி (https://www.facebook.com/puliangudiseyad.ali)
Saturday, August 22, 2020
'பலியாடுகளா தப்லீக் ஜமாஅத்தினர்?' போலீஸாரின் பொய் வழக்கை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றம்
வெளிநாட்டவர்கள் பெற்று வந்த விசாவில், அவர்கள் மதம் சார்ந்த இடங்களுக்கோ அல்லது மத நிகழ்வுகளில் கலந்துகொள்ளவோ எந்தத் தடையும் இல்லை.
‘தப்லிக் ஜமாஅத்’ என்பது முஸ்லிம்களின் ஒரு பிரிவு கிடையாது. மதத்தை சீர்திருத்தம் செய்ய உருவான ஓர் இயக்கம். சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள்படி இந்த வெளிநாட்டவர்கள் மற்றவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றவோ அல்லது மதத்தை பரப்பவோ முயற்சித்தார்கள எனக்கூற முடியாது.
அதோடு அவர்கள் இந்திய மொழிகளான இந்தி அல்லது உருது மொழியை பேசவில்லை. அரபு, ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகளையே பேசுகிறார்கள்.
“அதிதி தேவோ பவா" அதாவது “விருந்தினர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள்!" என்பது இந்திய பண்பாடு.
நாம் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியம்படிதான் நடந்து கொள்கிறோமா என்ற கேள்வி இந்த வழக்கை விசாரிக்கும்போது எழுகிறது.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் நாம் உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஆவணங்களில் விதிமீறல், வைரஸ் பரவ காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி நாம் அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறோம்
2020 ஜனவரி மாதத்திற்கு முன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற்றன. அதில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் முஸ்லிம்கள். 2019 சிஏஏ சட்டம் அவர்களுக்கு எதிராக உள்ளதென போராட்டம் நடத்தினர். முஸ்லிம் அகதிகளுக்கு, குடிபெயர்பவர்களுக்கும் இந்திய பிரஜை என்ற உரிமை கிடைக்காது என்று அவர்கள் நம்புகின்றனர். என்ஆர்சிக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்றது
தற்போதைய நடவடிக்கையால் முஸ்லிம்கள் மனதில் அச்சம் கொண்டிருப்பார்கள். முஸ்லிம்கள் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை இந்த செயல்பாடு காட்டுகிறது. மற்ற நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களுடன் தொடர்பு வைத்திருந்தால்கூட, இங்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போல இது இருக்கிறது.
இந்த வழக்குக்கு பின்னால் பிறருக்கு தீமை விளைவிக்கும் எண்ணம் இருப்பதாக தெரிகிறது. எனவே மனுதாரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
வழக்கு புனைவுக்காக போலீஸ் சொன்னது என்ன?
விசா விதிகளை மீறி தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் பங்குபெற்றதாக இவர்கள் மீது பெருந்தொற்று நோய்கள் சட்டம், மகாராஷ்டிரா போலீஸ் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் வெளிநாட்டவர்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஊரடங்கு உத்தரவுகளை மீறி இவர்கள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்தி வந்ததாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தாகக் கூறி மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மனுதாரர்கள் இஸ்லாமிய மதத்தை பரப்பும் நோக்கில் மசூதிகளை பார்வையிட சென்றதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது
மேலும் இதில் ஐந்து வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்களின் தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்த பிறகு அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார்கள் என்றும் வாதிடப்பட்டது.
இந்த வெளிநாட்டவர்களை தவிர, இவர்களுக்கு தங்குமிடம் கொடுத்த நிஜாமுதீன் மசூதியின் அறங்காவலர்கள் மற்றும் ஆறு இந்தியர்கள் மீதும் போலீஸார் பொய் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
ஆனால், உண்மை என்ன?
இந்திய அரசால் முறையாக விசா வழங்கப்பட்டு இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், விருந்தோம்பல் மற்றும் உணர்வுகளின் அனுபவத்தை பெறவே தாங்கள் பயணம் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் கூறினர்.
விமான நிலையத்தில் தங்களுக்கு முறையாக கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதியான பின்பே தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அஹமத்நகர் மாவட்டத்தை வந்தடைந்தவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அதுகுறித்து தகவல் அளித்துள்ளனர்.
மார்ச் 23-ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டதால், இவர்கள் தங்குவதற்கு வசதி இல்லாமல் போனது. இந்நிலையில் வேறு வழியில்லாத நிலையில் தங்கிக்கொள்ள மசூதி நிர்வாகம் அனுமதித்தது.
தாங்கள் எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை
தங்கிய இடத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர்கள், தங்கள் விசாவின் விதிமுறைகளின்படி மசூதி போன்ற மதம் சார்ந்த இடங்களை பார்வையிட எந்தத் தடையும் இல்லை என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.



























