NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Sunday, June 23, 2013

Saturday, June 22, 2013

Vizigal - எப்போது விடுதலை?

Wednesday, June 19, 2013

Vizigal - 'மீன்கள்'

Sunday, June 16, 2013

Vizigal - தெருமுனை கூட்டம்.

Saturday, June 15, 2013

விருந்தினர் பக்கம்:'கையெழுத்து'


 
நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழில் சில பக்கங்கள் எழுதும் வாய்ப்பு என் சித்தப்பா மகன்(தம்பி தான்) மூலம் கிடைத்தது. விவசாயத்தைப் பெருக்க வேண்டியதன் அவசியம் குறித்த கட்டுரையைப் பள்ளியில் கேட்டிருப்பதாகவும், நான் எழுதிக் கொடுத்தால் copy -செய்து கொள்வதாகவும் சொல்லிக் கெஞ்சினான். "விவசாயம்" என்று நான் எழுதும் போதே என் சாயம் வெளுத்தது. 'வி' னா, வீணாய் போய் 'லி'னா மாதிரி இருந்ததைப் பார்த்து சிரித்தான் என் தம்பி. என் கையெழுத்து முன்பை விட மிக மோசமாகியிருந்தது. கடைசியாக நான் 'எழுதி' மூன்று வருடமாவது இருக்கும். என் computer-வந்ததிலிருந்து, டிக் செய்வதற்கும், underline-செய்வதற்கும், sign-செய்வதற்கும் தான் நான் பேனா எடுத்திருக்கிறேன். ink pen -பிளஸ்டூவோடு நின்று போனது.

என் கையெழுத்தைப் பார்க்கும் போது என் வாழ்வின் பல நிகழ்வுகள் அலையடிக்க ஆரம்பித்தன. என் கையெழுத்தை விட என் தங்கையின் கையெழுத்து நன்றாக இருக்கும். என் வீட்டு பாடங்களை அவள் எழுதிக் கொடுத்து வகுப்பில் தமிழாசிரியரிடம் மாட்டியிருக்கிறேன். என் அத்தை என் கையெழுத்தை மாற்ற எடுத்த முயற்சிகளில் நானே வென்றேன். என் கையெழுத்தின் லட்சணம் குறித்து நான் என்றும் கவலைப் பட்டதில்லை -MBA சேரும் வரை.

இதுவரையில் நான் பார்த்திலேயே ஆகச் சிறந்த கையெழுத்துக்கு சொந்தக்காரனான நண்பன் சாய்ராமின் கையெழுத்தைப் பார்த்த பிறகு, என் கையெழுத்து இன்னும் கேவலமானது போல் இருந்தது. அதற்கு முன்பு வரை என் BSC.  நண்பன் சரவண குமாரின் கையெழுத்து தான் சிறந்தது என்றிருந்தேன். பள்ளியில் என் நண்பன் பாலச்சந்தரின் கையெழுத்து மணிமணியாய் இருக்கும். அதைவிட அலங்கரிப்புகள். அவனுடைய கணக்கு நோட்டைத் திறந்தால் ஏதோ பெண்களின் கோல நோட்புக்கை திறந்தது போல இருக்கும். அததனை அலங்காரம். சூத்திரங்களுக்கு நெளி நெளியாக அடிக்கோடுகள். பதில்களுக்கு விதம் விதமான பெட்டிகள் என அமர்க்களப் படுத்தியிருப்பான். அதையும் மல்லிகை வாசம் வருகிற பால்பாயின்ட் பேனாவால் எழுதியிருப்பான். 4D -ல் ஒரு கணக்கு நோட்டு அவனால் தான் செய்ய முடியும்.



ஆனால் கையெழுத்தை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தவன் சாய்ராம் தான். அவன் MBA வில் 'தங்கப் பதக்கம்' வாங்கியதற்கு குண்டு குண்டான கையெழுத்தும் ஒரு முக்கிய காரணம். signature- கூட அவன் பிரித்து தனித்தனி எழுத்தாகத்தான் எழுதுவான் (இப்போது எப்படி இருக்கிறான்? என்று தெரியவில்லை) அவன் எதை எழுதினாலும் அது மார்க் ஆக மாறியது.

NASA வைப் பற்றி WASA வில் (wage and salary administration) எழுதினாலும், பீடியைப் பற்றி OD யில் (organization development) சொன்னாலும் அது மார்க் ஆனது. 'ஜோக்' இல்லை, உண்மை. 'அம்மா' என்பதை கேவலமாக எழுதுவதை விட 'அய்யோ' என்பதை அழகாக எழுதுவதன் முக்கியத்துவம் நான் அறிந்து கொண்டேன். 
இந்த சமயத்தில் கையெழுத்தில், பெரிய ஓவியர் போல வித்தியாசமான 'ஸ்டோர்க்ஸை' கையாண்ட எனது நண்பன் ராகவனைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவனைப் போலவே அவன் கையெழுத்தும் மிக வித்தியாசமானது. அவன் "ரகு காலில் நல்ல அடி" என்று எழுதிக் கொடுத்தால் "ராகு காலத்தில் நல்லா படி" என்று தான் படிப்பீர்கள். அப்படியொரு 'கங்கனம்' ஸ்டைலில் எழுதி திணறடிப்பான்.

துணை இயக்குனர் வாய்ப்பு தேடி சென்னையில் அலைந்த காலங்களில் சில இயக்குனர்கள் என் கையெழுத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். வடபழனியில் ஒரு இயக்குனரை பார்க்கச் சென்ற போது, அவரின் உதவியாளர், "ஹீரோவுக்கும், ஹீரொயினுக்கும் முதல் சந்திப்பு சண்டையில் ஆரம்பிக்குது! இதுக்கு சீன் எழுது பார்க்கலாம். " என்றார்.
நான் பல்சரில் வரும் நாயகனை, ஸ்கூட்டியில் வரும் நாயகி மோதிவிடுவதாக, அதன் சண்டை காட்சியை எழுதிக் காண்பித்தேன்..படித்துப் பார்த்தவர் பேய் அறைந்தது போல் ஆகி, பேப்பரை என்னிடம் கொடுத்தார். நான் கொஞ்சம் நம்பிக்கையுடன் அவரை பார்க்க, "உன் கையெழுத்து நல்லா இருக்கு" என்றார். "சீன் சகிக்கவில்லை" என்பதைத் தான் அவர் அப்படிச் சொன்னார். இருப்பினும் முதலும் கடைசியுமாக என் கையெழுத்து பாராட்டப்பட்டது அன்று தான். 

பள்ளிகளில் 95 மார்க்குக்கு பாடம் நடத்திவிட்டு 5 மார்க் கையெழுத்துக்கு என்று ஒதுக்கலாம். அதன் அழகை அளவிட சில முறைகள் தேவைப்படும். அதற்கெல்லாம் இங்கே யாருக்கு நேரம்  இருக்கிறது? கையெழுத்தை வைத்து மனிதனின் மன நிலையை கணிக்க முடியும் என்று உளவியல் சொல்கிறது. இது உண்மை தான். எப்போதும் படபடப்பாக இருப்பவரின் கையெழுத்து பெரும்பாலும் கோணல்மாணலாக இருக்கும். ரிவர்ஸில் யோசித்தால் நிதானமாக, அழகாக எழுதினால் பதட்டம் குறையும். ஆக நல்ல கையெழுத்து BPயை குறைக்கலாம் இல்லையா? 

அடுத்த தலைமுறை தவறவிடும் விஷயங்களில் கையெழுத்தும் ஒன்றாய் இருக்கும். தேர்வுகள் எல்லாம் 'டாபிளட்டில்' எழுதப்படலாம். முழு இங்க்கையும் காட்டும் கண்ணாடி 'கேம்லின்' பேனா மியூசியத்தில் இருக்கலாம்.

என் தம்பி "என்னன்னா இது? விவசாயத்தைப் பத்தி எழுதச்சொன்னா... நீ ஏதோ கையெழுத்தைப் பத்தி கிறுக்கியிருக்க? இது யாருக்கு வேணும்?" என்றான். 

நான் மட்டும் இதை வைத்து என்ன செய்வேன்? படிப்பதற்கு யாருமே இல்லை.என்றாலும, நிச்சயம் வாசிக்கப்படும் என்ற நம்பிக்கையில்  நான் (சரளா... என் laptop-ஐ எடு....!)
 
நன்றி: சிவக்குமார் அசோகன்

விழிகள்: கனவே கலையாதே!


Friday, June 7, 2013

வாழ்வியல்: 'சிறகுகள் விரியுங்கள்.. பறவைகள் போல!'

"வாழ்க்கை என்பது விமானப்பயணம். சிலருக்கான ஓடுதளங்களை அவர்களுடைய குடும்பமோ முன்னோர்களோ உருவாக்கியிருப்பார்கள். உங்களுக்கான ஓடுதளம் முன்னமே உருவாக்கப்பட்டிருந்தால், அதில் ஓடத் தொடங்கி உயரப்பறங்கள். இல்லையென்றால், உங்கள் ஓடுதளங்களை நீங்களே உருவாக்குங்கள்". - புகழ்பெற்ற பெண் விமானி ஒருவர் தன் சுய சரிதையில் எழுதியிருநதது இது.
உண்மைதான்! சில விஷயங்கள் இல்லையென்பதற்காகவே பலவற்றை செய்யாமல் விட்டு விடுகிறோம்.
போதிய கல்வி இல்லை, போதிய வசதி-வாய்ப்புகள் இல்லை என்பவையெல்லாம்  சொல்வதற்கான சில காரணங்களாகலாம்.  ஆனால் கடக்க முடியாத காரணங்கள் அல்ல.
பிறந்த சூழலிலும் வளர்ந்த சூழலிலும் இருக்கிற பின்னடைவுகள், புதிய இலக்குகள் நோக்கிப் புறப்பட உத்வேகம் தர வேண்டும். தகுதியின்மைதான் தகுதிகளைத் தேடிச் செல்வதற்கான அடிப்படைத் தகுதி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் கனவுகளை எட்டும் தகுதி உங்களுக்கு உண்டு என்கிற நம்பிக்கையை உறுதியாக உருவாக்கிக் கொண்டால், தகுதிக் குறைவுகளை எல்லாம் நிறைவு செய்கிற வழிகள் தாமாகவே புலப்படத் தொடங்கும். உதாரணமாக, சொந்தமாக ஒரு வீடு வாங்குவது என்கிற கனவு ஒருவர் காண்பதாக வைத்துக் கொள்வோம்.
அந்தக் கனவு, அவருக்குள் தோன்றிய ஆசையா, அல்லது நிர்ப்பந்தங்கள் காரணமாய் அப்படி ஓர் இலக்கை வகுத்துக் கொண்டாரா என்று முதலில் பார்க்க வேண்டும்.
சரி.. நிர்பந்தம் என்பது என்ன? உடன் பணிபுரிபவர்கள் எல்லாம் சொந்தமாக வீடுகட்டிக் கொண்டதால்.. தானும்  வீடுகட்ட வேண்டும் என்று நினைத்தால்.. அது நிர்ப்பந்தம்.
கனவு என்பது? சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்கிற தீவிரம் அவருக்குள் தணலாய் எரிந்தால்.. அது அவருடைய கனவு.
இந்த சூழல்களில் இப்படிப்பட்டவருக்கு ஏற்பட வேண்டிய நம்பிக்கை கலந்த துணிவு ஒன்றே ஒன்றுதான். "என்னுடைய கனவை என்னால் நிச்சயம் எட்ட முடியும்" – என்பதுதான் அது.
இதன்பிறகு என்ன? இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகள் மள மளவென்று பாதைகள் திறக்கும்.
  • கடன் வாங்குவது,
  • ஓய்வு நேரங்களில் டியூஷன் எடுப்பது,
  • புதிதாக வீடு கட்டும்போதே கீழே சில கடைகளைக் கட்டி வாடகைக்கு விடுவது
என்று விதம் விதமான வழிமுறைகள் அவை. ஒன்றை எட்டவேண்டும் என்கிற கனவு உங்களுடையதாக இருந்தால் அதனை எட்டுகிற உத்திகள், வழிகள், வாய்ப்புகள் எல்லாவற்றையும் உங்களின் தீவிரமே உருவாக்கித் தந்துவிடும்.
தயக்கம் படர்ந்த கனவுகள்தான் தேங்கிப் போகின்றன. தெளிவில்லாத இலக்குகள் நிச்சயம் குழப்பத்தையே உருவாக்கும் அல்லவா?
எந்தவோர் இலக்கைத் தொடுவதன்றாலும், முதலில் நீங்கள் கலந்துரையாட வேண்டியது உங்கள் மனதோடுதான்.
ஆம்.. ஒரு இலக்கை எட்ட நினைக்கும் முன் கொஞ்சம் ரிலாக்ஸாக கண் மூடி அமருங்கள்.
ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளியேற்றுங்கள். உங்கள் திட்டங்களை மனதில் காட்சிப்படுத்துங்கள்.  உங்கள் கனவென்னும் அந்த இலக்கு  தூரத்தில் தெரிகிற மலைச்சிகரமாக எண்ணி அதைச் சென்றடைவதற்கான வழிமுறைகள் குறித்து யோசியுங்கள்

அந்த இலக்கை எட்டத் தேவையான அடிப்படை வழிகள், எடுக்க வேண்டிய முயற்சிகள் அதற்கென ஆகக்கூடிய காலம் என்று எல்லாவற்றையும் மனதில் பட்டியலிடுங்கள். இந்த வழிகளை பலப்படுத்திக் கொண்டால் இலக்கை தொட்டுவிட  முடியுமா என்று உங்கள் மனதை கொஞ்சம் கேளுங்கள். அதன்பின் அசாத்தியமான நம்பிக்கையுடன் உங்கள் கனவை… இலக்கை..  எட்டுவதற்கான எல்லா முயற்சிகளையும் முழு வீச்சில் பிரயோகியுங்கள்.
உங்கள் உள்மனதில்  துல்லியமாகத் தெரிவதுதான் நாளைய நிஜம். உண்மையில் ஒவ்வோர் இலக்குமே ஒரு ஓவியம் போன்றதுதான்! கோடுகளுக்கு உயிர் கொடுக்கும் சிரத்தையான பணி அது.
எட்ட வேண்டிய உயரத்தை நோக்கி, மெல்ல.. மெல்ல.. படிப்படியாய் முயல்வது மிக உறுதியான எச்சரிக்கையுடன் காலெடுத்து வைக்கும் மெதுவான முன்னேற்றம் என்பதே அதன் பொருள்.
சிறந்த கல்வியாளராக வேண்டுமா? சிரத்தையுடன் படியுங்கள். படித்தவற்றை பிறருடன் பகிருங்கள். இது நினைவாற்றலை வளர்க்கும். உங்கள் இலக்கு என்னும் கரை கொண்டு சேர்க்கும்.
பிரபல எழுத்தாளராக வரவேண்டுமா?  நாள்தோறும் பல பக்கங்கள் ஈடுபாட்டுடன் படியுங்கள். பிற மொழி எழுத்துக்களை மொழிப்பெயர்த்துப் பாருங்கள். அதைவிட முக்கியம் வாழும் சமூகத்தை உற்று நோக்குங்கள்.
இப்படி படிப்படியாய் மேற் கொள்கிற முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்ற சிகரங்களை நோக்கி நகர்த்திக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு நாளும், நீங்கள் எடுத்த முயற்சிகள் என்னென்ன, அந்த முயற்சிகளால் கிடைத்த முன்னேற்றங்கள் என்னனென்ன என்பதை பட்டியலிட்டுக் கொண்டே வாருங்கள்.
கடந்து வந்த தூரம்.. அது தரும் இன்பத்துக்கும், அடைய இருக்கும் எல்லையைக் குறித்த உற்சாகம் தரும் மகிழ்ச்சிக்கும் ஈடு இணை எதுவும் கிடையாது.
நீங்கள் எட்ட நினைக்கும் இலக்கைத் தொடுவதென்று நீங்கள் (Fixed) 'முடிவு' செய்துவிட்டால், உங்கள் முன்னேற்றம் அதன்பின் ‘Non Stop’தான் போங்கள்! அது யாருக்காகவும்.. எதற்காகவும் நிற்பதில்லை... மாறாக நீங்களாகவே வலிய நிறுத்தினாலே தவிர!
பிறகென்ன பாஸ்? ம்.. ஸ்டார்ட்.. ஓடுங்கள்! இலக்குகள் என்னும் வெற்றிகளை நோக்கி!

Sunday, June 2, 2013

உடல் நலம்: 'காக்க.. காக்க.. கல்லீரல் காக்க!'



நாம் அன்றாடம் பருகும் தண்ணீர், உட்கொள்ளும் பல்வேறு உணவுப் பொருட்கள், 100 சதவீதம் சுத்தமானது என, சொல்ல முடியாது. இவற்றில் கலந்துள்ள வேதிப்பொருட்கள், நாட்கணக்கில் உடம்பில் சேர்ந்தால், அவை நஞ்சாக மாறி, உடலுக்கு ஊறு விளைக்கும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்தை தவிர்க்கும் பணியை, கல்லீரல் மேற்கொண்டு வருகிறது.
தினமும், குடலில் செரிமானம் செய்யப்படும் உணவை உறிஞ்சும் கல்லீரல், முதலில் அதில் உள்ள, நச்சுத்தன்மைக் கொண்ட வேதிப் பொருட்களை நீக்குகிறது.
அதன்பின், அந்த உணவில் உள்ள, புரதம், கார்ப்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து ஆகியவற்றை, தனித்தனியாக பிரித்து, அவற்றை ஆற்றலாக மாற்றி, சிறுநீரகம், மூளை, கை, கால் உள்ளிட்ட அனைத்து உடல் உறுப்புகளுக்கும், தொடர்ந்து அளிக்கிறது


மேலும், உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க தேவையான, புரதத்தை உற்பத்தி செய்வதுடன், ரத்தத்தை, நீர்த்துப் போக செய்யாமல், அதை குறிப்பிட்ட உறைநிலையில் வைத்திருக்கும், முக்கியமான பணியையும், கல்லீரல் செய்கிறது.
உடலின், "வேதி தொழிற்சாலைஎனும் அளவிற்கு, நாள் ஒன்றுக்கு, கிட்டத்தட்ட, 3,000 வேதிவினைகளை, கல்லீரல் மேற்கொள்கிறது.
  • மது பழக்கம், வெறும் வயிற்றில் மது அருந்துவது,
  • உடம்பில் அளவிற்கு அதிகமாக சேரும் கொழுப்புச் சத்து,
  • உடல் பருமன்,
  • உயர் ரத்த அழுத்தம்,
  • நீரிழிவு நோய், "ஹெப்படைட்டிஸ் பிவைரஸ் தாக்கம்
போன்ற காரணங்களால், கல்லீரல் பாதிக்கப்படுகிறது

கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக, மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. "ஹெப்படைட்டிஸ் பிவைரஸ் தாக்கம் அதிகமாகும் போதும், கல்லீரலில், கொழுப்பு சத்து அதிகமாக சேரும்போதும், கல்லீரல் புற்றுநோய் உண்டாகிறது.
பிரத்யேக ரத்த பரிசோதனை மூலம், கல்லீரலின் ஆரோக்கியத்தை அறியலாம்.
  • தினமும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வது,
  • சத்தான உணவுகளை தேவையான அளவு உட்கொள்வது,
  • மதுப் பழக்கத்தை தவிர்ப்பது,
  • "ஹெப்படைட்டிஸ் பிதடுப்பூசி போட்டுக் கொள்வது
போன்றவற்றின் மூலம், கல்லீரல் பாதிப்பை தவிர்க்கலாம்.
மொத்தம், 1.5 கி.கி., எடையுள்ள மனிதக் கல்லீரல், பல காரணங்களால், குறிப்பிட்ட அளவு வரை சேதமடைந்தால், அது, ஒரு மாதத்திற்குள் மீண்டும் வளர்ந்துவிடும் தன்மைக் கொண்டது

தன்னைத் தானே புதுப்பித்து, உடல் உறுப்புகள் அனைத்திற்கும் ஆற்றல் அளிக்கும் அற்புத உறுப்பான கல்லீரல், ஒருவருக்கு பாதிக்கப்பட்டால், அதற்கு, அவரே முழுமுதற் காரணமாக இருக்க முடியும்.
கல்லீரல் செயலிழந்தால், உடல் உறுப்புகளின் இயக்கமும் தடைப்படும் என்பதை கருத்தில் கொண்டு, கல்லீரலை நாம் காக்க வேண்டும்.

பேராசிரியர் நாராயணசாமி,
கல்லீரல் மருத்துவ துறை தலைவர்,
சென்னை மருத்துவக் கல்லூரி,
98411 70145

Saturday, June 1, 2013

ஆளுமை: 'நேர்மைக்கு விலையில்லை!'


'தனக்கு உரிமையில்லாத பணம் வேண்டாம்!' - என்று ரூ. 1.9 கோடி காசோலையை  திருப்பியனுப்பினார் ஓர் ஆட்டோ டிரைவர். 

வியப்புக்குரிய இந்த சம்பவம் நடந்திருப்பது காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில்தான்! 


தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு நஷ்டஈடாக அளிக்கப்பட்ட ரூ. 1.9 கோடி பணத்துக்கான காசோலையை, அதை வழங்கியவர்களிடமே திருப்பி அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ஆட்டோ டிரைவர் ராஜூ.


குஜராத் மாநிலம் 'சனாந்த்' பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ பர்வாத். ஆட்டோ டிரைவர். மேற்கு வங்க மாநிலத்தில் டாடா நானோ தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு கிளம்பிய போது, அங்கிருந்து இடமாற்றம் செய்த அந்த நிறுவனம் தற்போது சனாந்த் பகுதியில் தனது தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதற்காக அப்பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியை, குஜராத் தொழில் வளர்ச்சி கழகம் செய்து வருகிறது. 

ஒரு பிகா நிலத்திற்கு குறிப்பிட்ட தொகை வீதம் டாடா நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கி வருகிறது. பிகா என்பது வட இந்தியாவில் நிலத்தின் அளவை குறிக்கும் ஒரு சொல்லாகும்.  

இப்பகுதியில் ராஜூவின் முன்னோர்களுக்கு சொந்தமான 10 பிகா நிலம் இருந்தது. இதில் 3 பிகா நிலத்தை ராஜூவின் தாத்தா வேறொருவக்கு விற்று விட்டார். ராஜூவின் தாத்தாவிடமிருந்து நிலத்தை வாங்கியவர், அதை பெயர் மாற்றம் செய்யவில்லை. தற்போது அந்த இடத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். .


அந்த 3 பிகா நிலத்திற்கான நஷ்ட ஈடான ரூ. 1.9 கோடி ராஜூவின் பெயருக்கு காசோலை வந்துள்ளது. இதையடுத்து தனக்கு வந்த காசோலையை டாடா நிறுவன அதிகாரிகளிடமே திருப்பி அளித்துள்ளார் ராஜூ.  

"எனது பெற்றோர் எனக்கு கற்பித்த சில விஷயங்களில் நேர்மையும் ஒன்று. நேர்மையற்ற வழியில், எனக்கு சொந்தமில்லாத வழியில் வந்த பணத்தைக் கொண்டு எனது வாழ்க்கையை நடத்த எனக்கு விருப்பமில்லை. எனக்கு மேலும் 4 பிகா நிலங்கள் உள்ளன. அது எனக்கும் எனது குடும்பத்தாரின் எதிர்கால வாழ்விற்கும் போதும்" என்று ராஜூ கூறியுள்ளார்.


ராஜூவின் இந்த செயலால் குஜராத் தொழில் வளர்ச்சிக்கழக அதிகாரிகள் திகைப்படைந்துள்ளனர். தங்களது வாழ்வில் இவ்வளவு பெரிய தொகை திரும்ப வந்துள்ளது இதுவே முதல் முறை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.  வெறும் ரூ. 6 ஆயிரம் சம்பளத்தில் ஆட்டோ டிரைவர் வாழ்க்கையை நடத்தும் ராஜூ, இவ்வளவு பெரிய தொகைக்கு ஆசைப்படாதது தங்களை மிகவும் ஆச்சர்யப்பட வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

நேர்மைக்கு விலை இல்லை என்பது அவர்களுக்கு பாவம் தெரியாது!

தகவல்:
: