NewsBlog

Tuesday, December 17, 2013

செய்திகள்: வாசிப்பது பாமரன்: 'மனித உரிமை மீறலில் காவல்துறை முதலிடம்'


10.12.2013 செவ்வாய் கிழமை, மனித உரிமை நாளையொட்டி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஜெயந்தி பேசியதாவது: 

1997ஆம் ஆண்டு துவக்கப்பட்ட மனித உரிமை ஆணையத்தில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல் குறித்து நாள்தோறும், 80 முதல் 100 புகார்கள்வரை பெறப்படுகின்றன. அவற்றில் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் வைத்து துன்புறுத்துதல், போலியாக வழக்கு பதிவு செய்தல் உட்பட 95 விழுக்காடு புகார்கள் காவல்துறை சார்ந்த புகார்களாக உள்ளன. 

இது தவிர சான்றிதழ்கள் பெற பணம் கேட்டதாக வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாணவர்களை துன்புறுத்திய ஆசிரியர்கள், நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட புகார்களும் பெறப்படுகின்றன.

மனித உரிமை மீறல் குறித்து பொதுமக்கள் கடிதம் மூலமாகவோ அல்லது 143, பசுமை வழிச்சாலை (கிரீன் வே ரோடு), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியில் நேரிலோ மனித உரிமை ஆணையத்திடம் தங்களது புகாரை தெரிவிக்கலாம்.

அளிக்கப்படும் புகாரின் தன்மையைப் பொருத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு பரிந்துரை செய்யப்படும்"


0 comments:

Post a Comment