NewsBlog

Sunday, December 16, 2012

'ஹிஜ்ரத்' இல்லாத 'மதீனா'! - பகுதி - 1



'தீ' ஜுவாலைகளாகி அனல் கக்கிக் கொண்டிருந்தனர் மக்கத்து குறைஷிகள்! அவர்களால் தங்கள் உணர்வுகளை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு கணமும் மக்காவில் பெரும் மாறுதல் உண்டாகிக் கொண்டிருப்பதை அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. காலங்காலமாக தம் மதத்தை பின்பற்றி வாழ்ந்தோரெல்லாம் இப்போது அதைப் புறக்கணித்து புதிதாக வேறொரு மார்க்கத்திற்கு மாறிப் போவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

"பாட்டன் .. பூட்டன் காலத்திலிருந்து வழி வழியாக பின்பற்றி வந்த தஙகள் மரபுகள் மூடத்தனமானவையாமே!

"விக்கிர ஆராதனைகளை விட்டொழித்து ஒரே இறைவனுக்கு மட்டுமே சிரம் பணிய வேண்டுமாமே!"

"முஹம்மதை இறைவனுடைய தூதராக ஏற்றுக் கொண்டு அவர் போதிக்கும் மார்க்கத்தை பின்பற்ற வேண்டுமாமே!"

தங்கள் ஆச்சாரங்களையும், குலப்பெருமைகளையும் புறக்கணித்துவிட்டு ஒரே இறைவனை ஏற்றுக் கொள்ள முடியாமல் குறைஷிகள் அனலில் இட்ட புழுவாக துடித்தார்கள்; துவண்டார்கள்!

"முடியாது..! இதை விடக்கூடாது! இனியும் தாமதித்தோமானால்.. அரபு நாடு முழவதும் முஹம்மதின் புதிய மார்க்கத்தை தழுவிவிடக்கூடும்! அவரிடம் அப்படி என்னதான் மாயம் இருக்கிறதோ.. கேட்பவரெல்லாம்.. உடனே அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களே..!" - வியப்பும் கோபமும் கொண்ட குறைஷித் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து சதி ஆலோசனை நடத்துகிறார்கள்.

 ஆலோசனையின் முடிவில், 

திறமையும், நுண்ணறிவும் கொண்ட 'உத்பா'வை தூதராக அண்ணலாரிடம் குறைஷிகள் அனுப்பி வைக்கிறார்கள். 

சாமார்த்தியம் வாய்ந்த உத்பாவோ அண்ணலாரை தம் வழிக்கு கொண்டு வர பல வகைகளிலும் முயற்சிக்கிறார்.

"என் அன்பு மகனே! நீர் ஏன் இச்செயலைப் புரிகிறீர்? எங்களுடைய தெய்வங்களை ஏன் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கிறீர்? அவற்றை விடுத்து கண்ணுக்குப் புலப்படாத ... எவரும் பார்த்தறியாத.. ஒரு கடவுளைப் பற்றி ஏன் எடுத்துரைக்கிறீர்?

உம்முடைய இந்த அழைப்புக்கு நோக்கம் செல்வம்தான் என்றால்... அரபு நாட்டின் மொத்த செல்வக் குவியலையும், உம்முடைய காலடியில் கொட்டத் தயாராக இருக்கிறோம்!

அல்லது, குறைஷி குலத்தின் அழகியரில் மிகச் சிறந்த பெண்தான் உம்முடைய நோக்கம் என்றால்.. 

இந்த அரபு நாட்டிலேயே பேரழகு வாய்ந்த பெண்ணை உமக்கு மண முடித்துத் தருகிறோம்!

அல்லது, உம்முடைய நோக்கம் கண்ணியமும், மதிப்பும்தான் என்றால்..உம்மை எம் தலைவராக ஏற்றுக் கொள்ள சித்தமாக இருக்கிறோம்!

உமது நோக்கம்.. ஆட்சி அதிகாரம்தான் என்றால்...

வாருங்கள்..! உம்மை அரபு நாட்டின் மன்னராக்கி மகிழ்கிறோம்! 

அல்லது..." 

சிறிது தயங்கிய உத்பா.., ".... அல்லது உம்முடைய மூளையில்தான் ஏதாவது கோளாறு என்றால்.. அதற்காகவும் நாம் சிறந்த மருத்துவரிடம் உம்மைக் கொண்டு சென்று சிகிச்சைப் பெற ஏற்பாடு செய்கிறோம்!" - என்கிறார் குத்தலாக!

இறை உவப்பை பெறுவது மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்ட ஓர் இறை பக்தரின் பார்வையில் உலக சுகபோகங்களும், பள பளக்கும் செல்வங்களும், ஆதிக்க... அதிகாரங்களும்... நிலையற்ற இன்பங்களும் துச்சமே! இவற்றை துச்சமாகக் கருதும் இறைவனின் அடியாரை விலைக்கு வாங்கவே முடியாது! என்று பாவம் ..! உத்பா அறிந்திருக்கவில்லை.

 உத்பாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சாந்த சொரூபியான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மென்மையும், உறுதியும் வாய்ந்த குரலில் பதிலளித்தார்கள்:

"தங்களின் கருத்து ஏற்புடையதல்ல..! எனக்கு செல்வமோ, பெண்ணோ அரசு ஆதிக்கமோ தேவையில்லை. என் மூளையில் எவ்விதமான கோளாறும் இல்லை! நான் இறைவனின் சத்தியத்தை, அவனுடைய திருத்தூதைதான் கொண்டு வந்துள்ளேன். இதைப் பின்பற்றுவோருக்கு நற்செய்தியும், நிராகரிப்போருக்கு கடும் தண்டனைப் பற்றிய எச்சரிக்கையும் இதில் அடங்கியுள்ளது!"

தெள்ளத் தெளிவான.. திட்டவட்டமான.. எந்தவித நீக்குப் போக்குகள் இல்லாத.. நேரடியான பதிலை அழகிய வார்த்தைகளால்.. இறைவனின் திருத்தூதர் எடுத்து வைத்துவிடுகிறார்கள்.

கடைசியில், உத்பா தோல்வியுடன் திரும்பி செல்ல வேண்டியதாயிற்று!

தம் தூதில் தோல்வியுற்ற குறைஷிகள் மீண்டும் ஒன்று கூடி திட்டமிடுகிறார்கள். பின்பு அண்ணலாரின் பெரிய தந்தையான அபூதாலிபின் மூலமாக மிரட்டலை ஆரம்பிக்கிறார்கள்.

 "ஓ! அபூதாலிப்பே! எங்கள் மத்தியில் உம்முடைய நிலை மிகவும் உயர்வானதாகவும், கண்ணியத்திற் குரியதாகவும் உள்ளது. இதற்கு முன்னர்கூட உமது சகோதரரின் மகனை அடக்கும்படி எச்சரித்துள்ளோம்! ஆனால், அதை நீர் பொருட்படுத்தியதாகக் காணோம்! உமது சகோதரரின் மகனோ, தொடர்ந்து எமது மூதாதையரை இழிவுப்படுத்தும் விதமாக .. எமது குலப்பழக்க வழக்கங்களை கேவலப்படுத்தும் விதமாகவும், எங்கள் கடவுள்களை புறக்கணிக்கும் விதமாகவும் புதிய மார்க்கத்தை போதித்து வருகிறார். இனியும் இந்நிலையை நாங்கள் அனுமதிக்க முடியாது! இதை இனியும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது! இதனை அவர் உடனே கைவிட்டிட வேண்டும்! இல்லையெனில் நீங்கள் இருவரும் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்!! - என்று எச்சரித்துவிட்டு வெளியேறிவிடுகிறார்கள்.

 மிகவும் கவலையடைந்த அபூதாலிப் தம் சகோதரரின் மகனாரை உடனே அழைத்து வரச் செய்கிறார். நடந்ததை எல்லாம் தெரியப்படுத்திவிட்டு மிகவும் கவலையுடன் சொல்கிறார்:

"என்னுடைய சகோதரரின் மகனே! உம்மையும், என்னையும் காத்துக் கொள்ள வழி செய்வீராக! இதுவரை என் பாதுகாப்பு உமக்கு இருந்தது. நீர் தொடர்ந்து உமது அழைப்புப் பணியை நீடித்தால்.. அதனால்.. ஏற்படும் விளைவுகளுக்கு நீரே பொறுப்பாவீர். நன்றாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்!"

 தம் பெரிய தந்தையாரின் இக்கட்டான சூழலையும், அவர் தம் மீது வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பையும், உணர்ந்து கண்கலங்கிய அண்ணலார், 

"பெரிய தந்தையே! இந்த சிக்கலான சூழலைக் கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இறைவன் மீது ஆணையாக! இவர்கள் என் தூதை கைவிடச் சொல்லி.. என் வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும்.. நான் இப்பணியிலிருந்து விலகப் போவதில்லை! இறைவாக்கில் ஓர் எழுத்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ போவதில்லை! இந்த அழைப்புப் பணியில் என் உயிர் போவதாயினும சரியே!" - என்று வருத்தத்துடன் அங்கிருந்து எழுந்து செல்லலானார்கள்.

இதைக் கண்டு அபூதாலிப் அண்ணலாரை திரும்ப அழைத்துக் கூறினார்: 

"எனது சகோதரரின் மகனே! நீர் உம்முடைய கொள்கையிலேயே நிலையாக நில்லுங்கள்....!"

அண்ணலாரின் உறுதி குலையாத கொள்கையின் முன் குறைஷிகளின் திட்டம் மீணடும் தோல்வியுறுகிறது.

- - இறைவன் நாடினால்... நாளை..

இணைப்புக்கு: பகுதி: 2
http://mrpamaran.blogspot.in/2012/12/2_17.html
இணைப்புக்கு: பகுதி: 3
http://mrpamaran.blogspot.in/2012/12/3.html 

0 comments:

Post a Comment