NewsBlog

Tuesday, December 18, 2012

'ஹிஜ்ரத்' இல்லாத 'மதீனா'!, பகுதிகள் 1 - 3



'தீ' ஜுவாலைகளாகி அனல் கக்கிக் கொண்டிருந்தனர் மக்கத்து குறைஷிகள்! அவர்களால் தங்கள் உணர்வுகளை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு கணமும் மக்காவில் பெரும் மாறுதல் உண்டாகிக் கொண்டிருப்பதை அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. காலங்காலமாக தம் மதத்தை பின்பற்றி வாழ்ந்தோரெல்லாம் இப்போது அதைப் புறக்கணித்து புதிதாக வேறொரு மார்க்கத்திற்கு மாறிப் போவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

"பாட்டன் .. பூட்டன் காலத்திலிருந்து வழி வழியாக பின்பற்றி வந்த தஙகள் மரபுகள் மூடத்தனமானவையாமே!

"விக்கிர ஆராதனைகளை விட்டொழித்து ஒரே இறைவனுக்கு மட்டுமே சிரம் பணிய வேண்டுமாமே!"

"முஹம்மதை இறைவனுடைய தூதராக ஏற்றுக் கொண்டு அவர் போதிக்கும் மார்க்கத்தை பின்பற்ற வேண்டுமாமே!"

தங்கள் ஆச்சாரங்களையும், குலப்பெருமைகளையும் புறக்கணித்துவிட்டு ஒரே இறைவனை ஏற்றுக் கொள்ள முடியாமல் குறைஷிகள் அனலில் இட்ட புழுவாக துடித்தார்கள்; துவண்டார்கள்!

"முடியாது..! இதை விடக்கூடாது! இனியும் தாமதித்தோமானால்.. அரபு நாடு முழவதும் முஹம்மதின் புதிய மார்க்கத்தை தழுவிவிடக்கூடும்! அவரிடம் அப்படி என்னதான் மாயம் இருக்கிறதோ.. கேட்பவரெல்லாம்.. உடனே அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களே..!" - வியப்பும் கோபமும் கொண்ட குறைஷித் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து சதி ஆலோசனை நடத்துகிறார்கள்.

 ஆலோசனையின் முடிவில், 

திறமையும், நுண்ணறிவும் கொண்ட 'உத்பா'வை தூதராக அண்ணலாரிடம் குறைஷிகள் அனுப்பி வைக்கிறார்கள். 

சாமார்த்தியம் வாய்ந்த உத்பாவோ அண்ணலாரை தம் வழிக்கு கொண்டு வர பல வகைகளிலும் முயற்சிக்கிறார்.

"என் அன்பு மகனே! நீர் ஏன் இச்செயலைப் புரிகிறீர்? எங்களுடைய தெய்வங்களை ஏன் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கிறீர்? அவற்றை விடுத்து கண்ணுக்குப் புலப்படாத ... எவரும் பார்த்தறியாத.. ஒரு கடவுளைப் பற்றி ஏன் எடுத்துரைக்கிறீர்?

உம்முடைய இந்த அழைப்புக்கு நோக்கம் செல்வம்தான் என்றால்... அரபு நாட்டின் மொத்த செல்வக் குவியலையும், உம்முடைய காலடியில் கொட்டத் தயாராக இருக்கிறோம்!

அல்லது, குறைஷி குலத்தின் அழகியரில் மிகச் சிறந்த பெண்தான் உம்முடைய நோக்கம் என்றால்.. 

இந்த அரபு நாட்டிலேயே பேரழகு வாய்ந்த பெண்ணை உமக்கு மண முடித்துத் தருகிறோம்!

அல்லது, உம்முடைய நோக்கம் கண்ணியமும், மதிப்பும்தான் என்றால்..உம்மை எம் தலைவராக ஏற்றுக் கொள்ள சித்தமாக இருக்கிறோம்!

உமது நோக்கம்.. ஆட்சி அதிகாரம்தான் என்றால்...

வாருங்கள்..! உம்மை அரபு நாட்டின் மன்னராக்கி மகிழ்கிறோம்! 

அல்லது..." 

சிறிது தயங்கிய உத்பா.., ".... அல்லது உம்முடைய மூளையில்தான் ஏதாவது கோளாறு என்றால்.. அதற்காகவும் நாம் சிறந்த மருத்துவரிடம் உம்மைக் கொண்டு சென்று சிகிச்சைப் பெற ஏற்பாடு செய்கிறோம்!" - என்கிறார் குத்தலாக!

இறை உவப்பை பெறுவது மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்ட ஓர் இறை பக்தரின் பார்வையில் உலக சுகபோகங்களும், பள பளக்கும் செல்வங்களும், ஆதிக்க... அதிகாரங்களும்... நிலையற்ற இன்பங்களும் துச்சமே! இவற்றை துச்சமாகக் கருதும் இறைவனின் அடியாரை விலைக்கு வாங்கவே முடியாது! என்று பாவம் ..! உத்பா அறிந்திருக்கவில்லை.

 உத்பாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சாந்த சொரூபியான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மென்மையும், உறுதியும் வாய்ந்த குரலில் பதிலளித்தார்கள்:

"தங்களின் கருத்து ஏற்புடையதல்ல..! எனக்கு செல்வமோ, பெண்ணோ அரசு ஆதிக்கமோ தேவையில்லை. என் மூளையில் எவ்விதமான கோளாறும் இல்லை! நான் இறைவனின் சத்தியத்தை, அவனுடைய திருத்தூதைதான் கொண்டு வந்துள்ளேன். இதைப் பின்பற்றுவோருக்கு நற்செய்தியும், நிராகரிப்போருக்கு கடும் தண்டனைப் பற்றிய எச்சரிக்கையும் இதில் அடங்கியுள்ளது!"

தெள்ளத் தெளிவான.. திட்டவட்டமான.. எந்தவித நீக்குப் போக்குகள் இல்லாத.. நேரடியான பதிலை அழகிய வார்த்தைகளால்.. இறைவனின் திருத்தூதர் எடுத்து வைத்துவிடுகிறார்கள்.

கடைசியில், உத்பா தோல்வியுடன் திரும்பி செல்ல வேண்டியதாயிற்று!

தம் தூதில் தோல்வியுற்ற குறைஷிகள் மீண்டும் ஒன்று கூடி திட்டமிடுகிறார்கள். பின்பு அண்ணலாரின் பெரிய தந்தையான அபூதாலிபின் மூலமாக மிரட்டலை ஆரம்பிக்கிறார்கள்.

 "ஓ! அபூதாலிப்பே! எங்கள் மத்தியில் உம்முடைய நிலை மிகவும் உயர்வானதாகவும், கண்ணியத்திற் குரியதாகவும் உள்ளது. இதற்கு முன்னர்கூட உமது சகோதரரின் மகனை அடக்கும்படி எச்சரித்துள்ளோம்! ஆனால், அதை நீர் பொருட்படுத்தியதாகக் காணோம்! உமது சகோதரரின் மகனோ, தொடர்ந்து எமது மூதாதையரை இழிவுப்படுத்தும் விதமாக .. எமது குலப்பழக்க வழக்கங்களை கேவலப்படுத்தும் விதமாகவும், எங்கள் கடவுள்களை புறக்கணிக்கும் விதமாகவும் புதிய மார்க்கத்தை போதித்து வருகிறார். இனியும் இந்நிலையை நாங்கள் அனுமதிக்க முடியாது! இதை இனியும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது! இதனை அவர் உடனே கைவிட்டிட வேண்டும்! இல்லையெனில் நீங்கள் இருவரும் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்!! - என்று எச்சரித்துவிட்டு வெளியேறிவிடுகிறார்கள்.

 மிகவும் கவலையடைந்த அபூதாலிப் தம் சகோதரரின் மகனாரை உடனே அழைத்து வரச் செய்கிறார். நடந்ததை எல்லாம் தெரியப்படுத்திவிட்டு மிகவும் கவலையுடன் சொல்கிறார்:

"என்னுடைய சகோதரரின் மகனே! உம்மையும், என்னையும் காத்துக் கொள்ள வழி செய்வீராக! இதுவரை என் பாதுகாப்பு உமக்கு இருந்தது. நீர் தொடர்ந்து உமது அழைப்புப் பணியை நீடித்தால்.. அதனால்.. ஏற்படும் விளைவுகளுக்கு நீரே பொறுப்பாவீர். நன்றாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்!"

 தம் பெரிய தந்தையாரின் இக்கட்டான சூழலையும், அவர் தம் மீது வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பையும், உணர்ந்து கண்கலங்கிய அண்ணலார், 

"பெரிய தந்தையே! இந்த சிக்கலான சூழலைக் கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இறைவன் மீது ஆணையாக! இவர்கள் என் தூதை கைவிடச் சொல்லி.. என் வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும்.. நான் இப்பணியிலிருந்து விலகப் போவதில்லை! இறைவாக்கில் ஓர் எழுத்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ போவதில்லை! இந்த அழைப்புப் பணியில் என் உயிர் போவதாயினும சரியே!" - என்று வருத்தத்துடன் அங்கிருந்து எழுந்து செல்லலானார்கள்.

இதைக் கண்டு அபூதாலிப் அண்ணலாரை திரும்ப அழைத்துக் கூறினார்: 

"எனது சகோதரரின் மகனே! நீர் உம்முடைய கொள்கையிலேயே நிலையாக நில்லுங்கள்....!"

அண்ணலாரின் உறுதி குலையாத கொள்கையின் முன் குறைஷிகளின் திட்டம் மீணடும் தோல்வியுறுகிறது.




குறைஷிகள் தங்கள் திட்டம் தோல்வியடைந்ததைக் கண்டார்கள். 

நேரிடையான மோதலில் இறங்கினார்கள்.

இந்த தனிநபர் வார்த்தை பிரயோகங்களின்தான் எல்லா பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. தடித்த வார்த்தைகள்.. அதைத் தொடர்ந்து இனக்கலவரங்கள், சமயப்பூசல்கள் வரை இந்த வார்த்தைகள்தான் கொண்டு சேர்க்கின்றன. 

ஆனால். அண்ணல் நபிகளார் இவற்றை அழகிய முறையில் எதிர்கொள்கிறார்கள். 

"முஹம்மதே! 

"எம்மைச் சுற்றியுள்ள இம்மலைகள் அனைத்தையும், தரைமட்டமாக்கி... சிரியாவிலும், இராக்கிலும் உள்ளதைப் போல நதிகளை ஓடவிடச் செய்யும்படி உமதிறைவனிடம் கேளும்!"

"எங்களது முன்னோர்களில் சிலரை குறிப்பாக குஸையை மீண்டும் உயிர்ப்பிக்கச் சொல்லும்! உம் தூதைப்பற்றி அவரிடமே நாங்கள் கேட்டு தெளிவுப் பெறுகிறோம்!"

"இவைகளை எங்களுக்கு செய்துதர முடியாவிட்டாலும் பரவாயில்லை! உமக்காவது சில உதவிகளை இறைவனிடம் கேளும். 

உம்மிடம் ஒரு வானவரை அனுப்பி நீர் சொல்வதை உறுதிப்படுத்தியும், நாங்கள் சொல்வதைப் பிழையென காட்டும்படியும் உம் இறைவனிடம் கேளும்!"

"தோட்டங்கள், மாளிகைகள், தங்கம்-வெள்ளி முதலான செல்வங்களை தரும்படி கேளும். இதிலிருந்து உமது செல்வாக்கு உமதிறைவனிடம் எவ்வாறு உள்ளது  என்பதை நாங்கள் அறிந்து கொள்கிறோம்!"

இப்படி எல்லாம் நபிகளாரை குறைஷி இறை நிராகரிப்பாளர்கள் கிண்டலும், கேலியுமாய் பரிகாசம் செய்தனர்.

 அண்ணல் நபிகளார் (ஸல்) மிகவும் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள்.  இந்த பரிகாசங்களுக்கு பொறுமையாகவே பதிலளித்தார்கள். உணர்ச்சிப்பூர்வமான எந்த ஒரு நடவடிக்கைகளையும் அவர்கள் பிரதிபலிக்கவில்லை. இப்படி சொன்னார்கள்:

"இப்படிப்பட்ட விஷயங்களை நான் இறைவனிடம் கேட்கக்கூடிய வனுமல்ல. நான் அதற்காக அனுப்பப்பட்டவனுமல்ல. அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவும், நன்மாராயங் கூறுபவனுமாகவே இறைவன் என்னை அனுப்பியுள்ளான்!"

கொதித்தெழுந்த குறைஷிகள், "ஓ! முஹம்மதே! நாங்கள் உம்மை  நிம்மதியாக இருக்க விடமாட்டோம்! உம்மை நாங்கள் அழிக்கும்வரை .. அல்லது நீர் எங்களை அழிக்கும்வரை ஓயமாட்டோம்!"- என்று சூளுரைத்தார்கள். 

இவை எல்லாம்,

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இஸ்லாத்தின் திருச்செய்தியை மக்களுக்கு எடுத்த வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதை பொறுத்துக் கொள்ள முடியாத இறை நிராகரிப்பாளர்களான குறைஷிகள் இறைத்தூதரையும், அவர்களது திருச்செய்தியையும் கடுமையாக எதிர்த்ததை விளக்கும் வரலாற்றுச் சம்பவங்கள். 

மக்காவின் மண்ணில் பிறந்து ...

அப்பாலையின் காற்றைச் சுவாசித்து...

தம் வியர்வையை அம்மண்ணிலேயே சிந்தி உழைத்து.. வாழ்ந்தவர்கள்.. 

சத்தியத்தை ஏற்று ...

அதை பிரகடனப் படுத்திய ஒரே காரணத்துக்காக..

அண்ணலார் பட்ட துன்பங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாத துன்பக் காவியங்கள்.

இறைவனின் திருச்செய்தியை சமர்பித்து நல்லொழுக்க அடிப்படையில் ஒரு சமூகம் கட்டமைப்பதற்கான அண்ணலாரின் முயற்சிகளுக்கு கிடைத்த பரிசுகள்... சித்திரவதைகள், சமூக விலக்குகள், அடக்குமுறைகள் என விதம் விதமாக நீளும் பட்டியல் அது.

சுற்றமும், நட்பும், ஒட்டு மொத்த சமூகமும் பகையாகி நின்றபோது, 

அண்ணல் நபிகளார் (ஸல்) சத்தியத்தையும், பொறுமையையும் மட்டும் ஆயுதங்களாகிக் கொண்டார்கள். ஓராண்டல்ல.. ஈராண்டல்ல பதிமூன்றாண்டுகள் தாய் மண்ணில் மௌன யுத்தம் நடத்தினார்கள்.

இந்தக் காலக்கட்டத்தில் ஒரே ஒரு முறைதான் இறை நிராகரிப்பாளன் ஒருவனை முஸ்லிம்களில் ஒருவர் ஒட்டகத்தின் தாடை எலும்பைக் கொண்டு தாக்கி காயப்படுத்தியதாக வரலாறு சொல்கிறது.

பகுதி - 3



மக்காவின் 13 ஆண்டுகளும், அண்ணலாரும் அவரைப் பின்பற்றி வாழ்ந்த முஸ்லிம்களும் குறைஷிகளின் கொடுமைகளுக்கு நித்தம் ஆளாகி இரத்தம் சிந்திக் கொண்டேதானிருந்தார்கள். 

இறைநெறியான இஸ்லாத்தை ஏற்று அதன்படி அமைதியாக வாழ முயன்ற முஸ்லிம்களுக்குக் கிடைத்தது கொடுமைகளும், உயிர்-இழப்புகளும்தான்! ஆனால், அவர்கள் அந்நிலையிலும், பொறுமை என்ற பூரண கவசத்தை அணிந்துதான் மௌனமான ஒரு 'விடியல் யுத்தம்' புரிந்தார்கள். சத்தியத்தைக் கட்டிக் காத்தார்கள்.

"அவர்கள் கூறுவதை சகித்துக் கொண்டு கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி இரும்..!" (73:10)

"மேலும், இந்நிராகரிப்போருக்கு நீர் அவகாசமளியும் (அதிகமாய்) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளியும்!" (86:17)

- என்ற திருமறையின் கட்டளைப்படி அவர்கள் வாழ்ந்தார்கள்.

குறைஷிகளின் கொடுமையின் உச்சக்கட்டத்தில்தான்...

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைக்கட்டளைப்படி மக்காவைவிட்டு  ஹிஜ்ரத் செய்கிறார்கள். பிறந்த மண்ணையும், சொந்த - பந்தங்களையும், சொத்து - சுகங்களையும் விட்டு விட்டு தாயகம் துறந்து அந்நிய நாடான மதீனாவுக்கு செல்கிறார்கள்.

இந்த  ஹிஜ்ரத்தை நினைவுறுத்த இதோ!  ஹிஜ்ரியும் பிறந்துவிட்டது. இப்புத்தாண்டின் பிறப்புக்குப் பின்னால் புதைந்திருக்கும் வரலாற்றுப் படிப்பினைகள் ஏராளம்!

இன்றும், இந்தியாவின் ஒவ்வொரு விடியலும், அதன் ஏதாவது ஒரு மூலையில், ஒரு மக்கா உயிர் பெறுகிறது! முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாள்தோறும் அவர்களின் உயிர், உடமைகள் சூறையாடப்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. அவர்களின் மானம் - மரியாதை உரசிப் பார்க்கப்பட்டவாறு மக்காவின் கொடுமைகள் தொடர்கின்றன. முஸ்லிம்களின் சொத்துக்கள் திட்டமிட்டு சூறையாடப்படுகின்றன. அவர்களின் பொருளாதார முதுகெலும்புகள் முறிக்கப்படுகின்றன. ஒரு துல்லியமான திட்டமிட்ட அஜெண்டாவின் அரங்கேற்றங்கள் இவை! மக்கத்து குறைஷிகளின் அதே அடக்குமுறைகள் மீண்டும் நவீன காலத்தில் தொடர்கிறது!

1434 ஆண்டுகளுக்கு முன்னர் சத்தியத்துக்கு எதிராக அதை நசுக்கிட.. அந்த மாபெரும் ஜோதியை ஊதி அணைத்திட அசத்தியங்கள் ஒன்றுபட்டு கிளர்ந்தெழுந்ததைப் போலவே இன்றும்_

இந்திய உபகண்டத்தில் மக்கத்து இறைநிராகரிப்பு குறைஷிகளின் குணாம்சத்தில் சங்பரிவார் சக்திகள் மற்றும் அதன் துணை பரிவாரங்கள் .. இந்து தீவிரவாத அமைப்புகள் கைக்கோர்த்துக் கொண்டு பணியாற்றுகின்றன.

ஆள்பலம், அதிகார பலம், பொருளாதார பலம் இவற்றுக்கும் மேலாக உத்பாக்களைக் போன்ற ஊடக பலம் என்று சர்வ சக்தியுடன் இஸ்லாத்துக்கு எதிரணியில் நிற்கின்றன. முஸ்லிம்களை நசுக்கிட .. அவர்களை வேறுடன் கிள்ளி எறிந்திட  துடிதுடித்து அணிவகுத்துள்ளன.

 தங்கள் தாயகத்தில் அமைதியாக வாழ முயலும் முஸ்லிம்களை எரிச்சலூட்டி.. வலிய வன்முறையைத் தூண்டும் செயலில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். முஸ்லிம்களை பேரத்தின் மூலமும், அச்சுறுத்தல்களின் மூலமும் வென்றுவிட கனவு கோட்டைகளை விண்ணளாவ இவர்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்து தீவிரவாதிகளான இவர்கள் இந்திய உபகண்டத்தின் ஊர்தோறும் மக்களின் உள்ளங்களில் நச்சு விதைகளை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். பகைமைத் துவேஷங்களை தூவிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில், முஸ்லிம்கள் அன்று போல இன்றும் கடைப்பிடிக்க வேண்டியது பொறுமையைத்தான்! உணர்ச்சிவசப்பட்டு விட்டில் பூச்சிகளாய்  மாறும் நிலைமையைத் தவிர்த்தேயாக வேண்டும்.

1434 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியத்தின் அழைப்புக் கேட்டதும், உடல் - பொருள் - ஆவி அத்தனையையும் துச்சமாக மதித்து தாங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கையை கட்டிக் காக்க தயாராக முன் வந்த துடிப்புள்ள நபித் தோழர் பிலால்கள், கப்பாப்கள் (இவர்கள் அனைவர் மீதும் இறையருள் பொழிவதாக!) அதே துடிப்புடன் இன்றும் இந்திய உபகண்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமூக அடக்குமுறைக்கு எதிரான விடுதலை வேட்கையுடன் அவர்களின் தேடல்கள் தொடர்கிறது. ஆனால், ஒரே ஒரு வித்யாசம்! இவர்கள் இங்கு வேறு வேறு பெயர்களுடன் வேறொரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமே அந்த வேறுபாடாகும். சத்தியத்திற்கான இவர்களின் தேடலுக்கும், சமூக விடுதலைக்கும் வழிகாட்ட வேண்டியது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாய கடமையாகும்.

மக்கத்து இறைநிராகரிப்பாளர் போலவே நமது நாட்டிலும் அதே சாயல்களுடன் வேறொரு பெயரில் சங்பரிவார் இந்து தீவிரவாதிகள்!

 இஸ்லாத்தை செயல்படுத்திக் காட்ட அதைப் பின்பற்றி வாழ அன்று போலவே இன்றும் போல ஒரு தியாகக் கூட்டம்!

ஆனால், 1434 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அந்த கொள்கையின் உயிர் துடிப்பு, இப்போது துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்திடம் இல்லாதது வருந்தத்தக்கது. இந்த தேக்க நிலையிலிருந்து மீண்டு முஸ்லிம் சமூகம் முழுமையான செயல்வடிவ முஸ்லிம்களாக மாற வேண்டும். திருக்குர்ஆனயும், திருநபிகளாரின் வழிமுறைகளையும் முழுக்க .. முழுக்க செயல்படுத்திக் காட்ட .. சொல்லாலும் செயலாலும் செயல்படுத்திக் காட்ட முன்வர வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தின் இந்த வாழ்வியல் முறைமை, 

"... (நபியே!) பொறுமையாக இருங்கள்; அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. நம்பிக்கைக் கொள்ளாதோர் உம்மை அலட்சியத்துக்குரியவராக .. மதிப்பற்றவராக காணக்கூடாது!" ( 30:60) 

- என்ற இறைக்கட்டளைக் கேற்ப முன்னுதாரணமான வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் இந்த வாழ்வியல் முறைமை,

"வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும்  கொடுத்தாலும் என் கொள்கையை மாற்றிக் கொள்ள மாட்டேன்!" - என்ற அண்ணலாரின் தளராத கொள்கைப் பிடிப்புள்ளதாக இருக்க வேண்டும். 

இதுதான்  ஹிஜ்ரி புத்தாண்டும் நம்மிடம் வேண்டுவதாகும்!

முஸ்லிம் சமூகம் இத்தகைய கொள்கைப் பிடிப்புடன் .. குணாம்சங்களுடன், செயலுருவ சிப்பாய்களாக வாழ முன்வருவார்களேயானால்..........   இன்ஷா அல்லாஹ் இந்திய உபகண்டம்  ஹிஜ்ரத் இல்லாத மதீனாகிவிடும்! இறைவன் அதை நிச்சயம் உருவாக்கித் தருவான்!

0 comments:

Post a Comment