NewsBlog

Sunday, April 6, 2014

தேர்தல்கள் 2014: பாசிஸத்தை விதைப்பவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்?


ஏற்கனவே பலமுறை இந்த ஈவிஎம் எனப்படும் 'எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்' அதாவது மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மைக் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது இன்னும் சில மணி நேரங்களில் மக்களவைக்கான முதல் சுற்று தேர்தல்கள் நடக்கவிருக்கும் நேரத்தில் கடந்த செவ்வாய் அன்று (01.04.2014) மீண்டும் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பலத்த சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளன. 

அசாமின் 'ஜோர்ஹட்' மக்களவைத் தொகுதிக்கான வாக்குசாவடியில் சோதனை முறையில் இந்த மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தை இயக்கிப் பார்த்தபோது, எந்த பொத்தானை அழுத்தினாலும் அது பிஜேபி சின்னத்தில் வாக்கு பதிவு செய்வது போல அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனுக்குடன் சுதாரித்துக் கொண்ட தேர்தல் அதிகாரிகள் அந்த எந்திரத்தை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தி 'சீல்' வைத்தனர். 

ஜோர்ஹட் மக்களவைத் தொகுதியில் நாளை - 07.04.2014 - திங்கள்கிழமை தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன என்பது முக்கியமானது. 

இந்த மக்களவைக்கான தேர்தல்களத்தில் 10 வேட்பாளர்கள் உள்ளனர். 

முன்னாள் மத்திய அமைச்சர் 'பிஜோய் கிருஷ்ணா ஹாந்திக்' காங்கிரஸ் வேட்பாளராக நிற்கிறார். தேயிலைத் தோட்ட பழங்குடி இன தலைவரான 'காமஹ்யா தாஸா' பிஜேபி சார்பில் போட்டியிடுகிறார். அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக 'பத்ருத்தீன் அஜ்மல்' களம் காண்கிறார். 

அதேபோல, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 

அசாம் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான 'தருண் காகோய்' மின்னணு வாக்கு எந்திரத்தில் பிஜேபி தில்லமுல்லு செய்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். "இது முக்கியமான பிரச்னை என்றும், ஏற்கனவே இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்திடம் எழுத்து மூலமாக புகார் அளித்திருப்பதாகவும், தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் 'பி.டி.ஐ' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸீம் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்துள்ளது. 

தவறாக இயங்கிய மின்னணு வாக்களிக்கும் எந்திரம் அதை தயாரித்த 'எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்' நிறுவனத்திடம் சோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
ஏற்கனவே பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் அடிமைகள் ஆள்பட்டாளத்துடன் களம் இறங்கியுள்ள பிஜேபி கட்சியினர் கூடவே பணம், குடி, உல்லாசம் என்று எல்லா கீழ் நிலைகளிலும் இறங்கி மத்திய ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று துடியாய் துடிக்கின்றனர். 

பாசிஸத்தை பயிரிட்டு வளர்க்கும் ஹிட்லர்களிடம் மனித நேயத்தை எதிர்பார்க்க முடியாது என்பதற்கு குஜராத் கலவரங்கள் நல்ல உதாரணம். 

அதுபோலவே சுய ஒழுக்கத்தையும், பன்முகம் கொண்ட ஒரு நாட்டின் மக்கள் நலனையும் எதிர்பார்க்க முடியாது. அசுர பலம் மற்றும் தில்லு முல்லுகள் மூலமாகவே அவர்கள் அரியணைகளை கைப்பற்றி இனவாதத்தை அரங்கேற்றத் துடிப்பார்கள். 

இதற்கான எல்லா வசதிகளையும் அவர்கள் தேடிக் கொள்வார்கள் என்பதையும் அதற்கான திட்டமிடல் ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்பாக விதைக்கப்பட்டுவிட்டது என்பதையும் இந்த தேர்தல் நேரத்தில் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

0 comments:

Post a Comment