NewsBlog

Sunday, August 30, 2020

நல்லவன் வாழ்வான்

நேற்றைய பத்திரிகைகளில் வசந்தகுமாருக்கான அஞ்சலிச் செய்திகளே பெரும் பகுதியாய் இடம் பெற்றிருந்தன. அவர் இருக்கும்போது நாம் நினைத்துப் பார்க்காத அவரது வியாபார ஆளுமைத் திறனை அவர் இறந்த பிறகுதான் பலரும் சொல்ல கேட்டு, நாம் வியந்து கொண்டிருக்கிறோம்.

நிஜமாகவே அவர் ஒரு வியாபார சக்கரவர்த்தி என்பது இப்போது நமக்குப் புரிகிறது. அவர் நடத்திய அந்த சாம்ராஜ்யம் அவரது மகனால் விரிவடைய வேண்டும்.

தகப்பனுக்கு பிள்ளை செய்யக்கூடிய உதவியே தகப்பனின் பெயரை காப்பாற்றுவதுதான். அதுமட்டுமல்ல வசந்தகுமார் சாதிமத பேதமில்லாமல் எல்லா மக்களோடும் எளிமையாக பழகியவர். இத்தகைய அருங்குணம் அவரது மகனுக்கும் வரவேண்டும். காங்கிரஸ் பேரியக்கத்தில் அவர் காட்டிய பாரம்பரிய பாசம் பட்டுப் போய்விடாமல் அவர் மகன் அதைத் தொடர வேண்டும்.

பாசிசத்தின் கதை முடித்த கதநாயகன் அண்ணாச்சி வசந்தகுமார். அவரது வழியில் அவர் மகனும் நடைபோட வேண்டும் .

வரவிருக்கும், இடைத்தேர்தலிலும் வசந்தகுமார் மகனுக்கே நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதே தொகுதிமக்களின் பேராவல். அது எனது விருப்பமும்கூட. அதனால், நிலைமையை இப்போதே நான் சொல்லி வைக்கிறேன்.

வசந்தகுமார் அண்ணாச்சிக்கும் எனக்கும் சொல்லிக்கொள்ளும் விதமான பழக்கம் கிடையாது. ஒரு பெருநாள் தொழுகையின்போது ஈத்கா  (சிறப்புத் தொழுகைகளுக்கான திடல்) மைதானத்திற்கு வந்திருந்த அவரோடு ஒரு படம் எடுத்துக் கொண்டதோடு சரி.  உருவத்தைப் பார்த்தோ என்னவோ அவருடைய விஷேச புன்னகையுடன் ரொம்ப கண்ணியமாக என்னை விசாரித்து மரியாதை தந்தார் அப்போது.

அண்மையில், அருமை அண்ணன் தக்கலை அப்துல் வாகித் மறைந்த செய்தியறிந்து அவரது உடலை பார்க்கச் சென்றிருந்தேன். பார்த்துவிட்டு நான் வீட்டுக்கு வரும் வழியில் எதிரே வசந்தகுமார் அண்ணாச்சி காரில் வந்து கொண்டிருந்தார். அவரும் வாகித் அண்ணன் வீட்டுக்குத்தான் வந்து கொண்டிருந்தார்.

என்னைக் கண்டதும் காரின் வேகத்தைக் குறைத்து, என்னிடம் அதே விஷேசச் சிரிப்போடு, “நல்லா இருக்கீங்களா?” - என்று விசாரித்துச் சென்றார்.

ஒரே ஒருமுறை சந்தித்த சந்திப்பை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறாரே என்று நினைத்து எனக்கு வியப்பாக இருந்தது.

நேற்று நண்பர் ‘சித்திக் ஹஸன்’ (Siddique Hassan),

“ரொம்ப நல்லவனா இருக்குறதே தப்பு. வசந்தகுமார் அண்ணாச்சி ரொம்ப நல்லவனா இருந்தாரு. இப்போ எதிர்பாராத நிலையில இறந்துட்டாரு. மனசு தாங்கலே"ன்னு சொல்லி புலம்பினாரு.

வசந்தகுமார் அண்ணாச்சி, நல்லவனாக இருந்ததால்தான் இன்றைக்கும் நாம் அவரை பாராட்டுகிறோம். இத்தகைய சாதனையாளர்களின் சிறப்பே அவர்கள் மறைந்த பிறகும் அவர்களை நினைவு கொள்ள சிலவற்றை விட்டுச் செல்வார்கள்.

வசந்தகுமார் அண்ணாச்சியும் அத்தகைய பல நினைவுகளை நிச்சயம் விட்டு சென்றிருக்கிறார். வீடுதோறும், அவரது ஷவசந்த் அண்ட் கோ’வில் வாங்கிய பொருட்கள் ஏதாவது இல்லாமல் இருக்காது. எங்கள் வீட்டிலும் அவரது கடையில் வாங்கிய  ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருக்கின்றன.

ஆமாம்! மதிப்பான பொருட்கள்தான்.

ஒரு சாதாரண எளிய பணியாளராய் வாழ்க்கையைத் தொடங்கி, உழைப்பை மூலதனமாக்கி வாழ்வில் உயர்ந்து காட்டிய ஒரு மதிப்புமிக்க மனிதரின் மதிப்புமிக்க பொருட்கள் அவை.

அண்ணாச்சி வசந்தகுமாரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.

''''''''''''''''''''''''' 

ஆக்கம்: அபு ஹாஷிமா (Abu Haashima-https://www.facebook.com/abuhaashima)

0 comments:

Post a Comment