NewsBlog

Saturday, March 29, 2014

சிறப்புக் கட்டுரை: 'இதோ நாளைய சிற்பிகள்!'


கம்பீரமாய் திறக்கப்பட்ட இரும்புக்கதவுகள்.

வட சென்னையின் பிரபலமான கல்லூரி அது.

மாலை நேரம் சுமார் 6.30 மணி.

எதிரே வாகனங்கள் நெரிச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தன. கும்பல், கும்பல்களாய் மாலை நேர வகுப்பு மாணவர்கள், "மச்சிகளுடனும், ஜோ.. க்கியா யார்..' களுடனும் மும்மொழியில் வம்பளந்து கொண்டிருந்தார்கள்.

பழைய புகைவண்டிகளை ஞாபகப்படுத்த புகைகளாக கக்கிக் கொண்டிருந்தார்கள். 

நண்பர் ஒருவரின் வருகைக்காக அந்தக் கல்லூரியின் பக்கத்திலிருந்த கடையில் காத்திருந்தேன் நான்.

"டேய் மச்சி..! அதோ! ஒரு இண்ட் ஸீஸிகி ஹெல்மெட் இல்லாம வருது. அதை கொஞ்சம் கலாய்க்கலாமா?" - கும்பலிலிருந்த மாணவர் ஒருவர் நடு ரோடுக்கு வந்தார்.

"சார்... சார்..!"

45 வயது மதிக்கத்தக்க அந்த வாகனமோட்டி உடனே நின்றார். பின்னால் வேகமாக வந்த சைக்கிள் இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமலிருக்க பட்ட சிரமம் "சாவு கிராக்கி!"யாக வெளிப்பட்டது. 

"சார் ..! முன்னாலே ஹெல்மெட் கேஸ் பிடிக்கிறாங்க... பாத்துப் போங்க..!"

மாணவரின் பொய்யை மெய்யென்று நம்பிய அந்த நபர் வண்டியின் வேகத்தைக் குறைத்து பாதையின் முன்னால் எட்டி எட்டி பார்த்துக்  கொண்டே  எச்சரிக்கையுடன் சென்றார்.

இதைக் கண்டதும், மாணவர் கும்பலிலிருந்து "குபீர்" சிரிப்பொன்று வெளிப்பட்டது. 

வாகனமோட்டியை ஏமாற்றிய மாணவரின் முகத்தில் 1000 வாட்ஸ் பிரகாசம்  பளிச்சிட்டது.

அடுத்து அவர்களின் பார்வையில் பட்டது இரண்டு பெண்கள். அவர்களையும் அழாத குறைக்கு கேலி செய்து அனுப்பியது அந்த மாணவர் கும்பல்.

"டேய் .. மச்சி.. அதோ பார்! மாமா.. போறார்..!"

"மாமா... மாமா..!"  - இது சட்டத்தின் காவலர் ஒருவருக்கு வீசப்பட்ட ஏவுகணை. அவரும், "நமக்கேன் வம்பு?" என்று கண்டும் காணாமலும் சென்று விட்டார்.

ஒரு நாட்டிடின் முதுகெலும்பான இளைய சமுதாயம், ஒழுக்கம் குன்றிய மிக மோசமான நிலையில் அனுதினமும் உருவாகிக் கொண்டேயிருக்கிறது.

வருங்காலத்தின் மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், பொறியாளர்கள், சமுதாய சிந்தனையாளர்கள் இவர்கள்தான் என்று எண்ணும்போது, சோகம்தான் ஏற்படுகிறது. 

இளைய வயதிலேயே இறையச்சத்தை ஊட்டி, அதன் விளைவால் உண்டாகும் மேலான ஒழுக்கத்துடன் கூடிய கல்விமுறையைத் தவிர வேறு எதனாலும் இந்த இளந்தளிர்கள் திருந்தப் போவதில்லை. இவர்களால் புதிதிதாக நாட்டிற்கு ஒன்றும் ஆகப்போவதுமில்லை.

மாறுமா இந்த நிலை?

- சமரசம், டிசம்பர் 16-31 - 1987ல், பிரசுரமான கட்டுரை.

0 comments:

Post a Comment