NewsBlog

Monday, September 23, 2013

விருந்தினர் பக்கம்: 'முரண்பாடுகளில் நழுவும் 'பயங்கரவாத' மாய மான்!'


நாற்பத்தி மூன்று வயதாகும் மௌலானா அப்துல் ஹலீம் என்ற இசுலாமிய அறிஞர் உத்திரப் பிரேதச மாநிலத்திலிருந்து 1988ஆம் ஆண்டு அகமதாபாத் நகரத்திற்கு வந்தவர். இந்தியாவில் சுமார் 180 ஆண்டுகள் பழமை வாய்ந்த 'அஹ்லே ஹதீஸ்' எனும் இவருடைய சன்னி பிரிவை அகமதாபாத் நகரில் மட்டும் சுமார் 5000 - ம் பேர் பின்பற்றுகின்றனர். இவர்களுடைய மசூதியில் 20 வருடங்களாக சொற்பொழிவாற்றுகிறார் மௌலானா ஹலீம். இந்த சமயப்பணி போக தன்னுடைய வருமானத்திற்கு ஒரு பழைய இரும்புச் சாமான்கள் சேகரிக்கும் கடையையும் நடத்திவருகிறார். இவருக்கு மனைவியும் ஏழு குழந்தைகளும் உள்ளனர். மூத்த குழந்தைகள் இருவரும் டெல்லி மதரசாவில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வழக்கமாக நடக்கும் ஜூம்மா நமாஸ் எனப்படும் ஒரு மணிநேரத் தொழுகையில் மௌலானா அப்துல் ஹலீம் உரையாற்றும் போது “அண்டை வீட்டார் பசியோடிருக்கும் போது உங்கள் வயிற்றை நிரப்புவது கூடாது, உங்களுக்கு அருகில் குடியிருப்போர் முசுலீமா, இந்துவா என்றெல்லாம் மதவேறுபாடு பார்க்கக்கூடாது!” - என்று தொழவந்தவர்களுக்கு போதிக்கிறார். இதற்கடுத்த நாள் சனிக்கிழமையன்று அகமதாபாத் நகரில் தொடர் குண்டு வெடித்து 53 மக்கள் கொல்லப்படுகின்றனர்.

ஒரு சமய அறிஞராக வெளிப்படையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மௌலானா ஹலீமை குண்டு வெடித்த மறுநாளே போலீசு அதிரடியாகக் கைது செய்கிறது. மசூதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மௌலான ஹலீமின் வீட்டைச் சுற்றியிருக்கும் மக்கள் இந்தக் கைதைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். சிறையலடைக்கப்பட்ட மௌலானா ஹலீமை இரண்டு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி முன் நிறுத்திய போலீசு அவர் குண்டு வெடிப்புச் சதிகளில் ஈடுபட்டிருந்த்தாகக் குற்றம் சாட்டியது. இதையே ஊடகங்களும் பரபரப்பாக கண் காது மூக்கு வைத்து அவரைப் பயங்கரவாதியாகச் சித்தரித்தன.

மேலும், '
மௌலானா ஹலீம் 'சிமி' எனப்படும் தடைசெய்யப்பட்ட இசுலாமிய மாணவர் இயக்கத்துடன் தொடர்புள்ளவர் எனவும், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலுள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர், அகமதாபத் நகரிலுள்ள முசுலீம் இளைஞர்களை தெரிவு செய்து உத்திரப் பிரேதச மாநிலத்திற்கு அனுப்பி பயங்கரவாத பயிற்சி எடுக்க வைத்தவர், அதன் மூலம் 2002 கலவரத்திற்கு பழிவாங்கும் முகமாக அத்வானி, மோடி முதலானவர்களைக் கொல்லுவதற்குத் திட்டம் தீட்டியவர்!' - என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் குஜராத் 'அரசு - வழக்கறிஞரால்' நீதிபதி முன் எடுத்து வைக்கப்பட்டன. '2002 ஆம் ஆண்டிலிருந்து மௌலான ஹலீம் தலைமறைவாகி விட்டார்!'- என்றும் போலீசு குற்றம் சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிலும் துளி கூட உண்மையில்லை என்பதை 'தெஹல்கா' வார ஏடு புலன் விசாரணை செய்து வெளியிட்டிருக்கிறது.
(All the Wrong Men -9.08.08)

http://archive.tehelka.com/story_main40.asp?filename=Ne090808coverstory.asp

உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் குடியிருக்கும் மௌலானா ஹலீமை அவ்வட்டார மக்கள் நன்கு அறிவார்கள். அவரைப் பற்றி போலீசுக்கும் நன்கு தெரியும். குண்டு வெடிப்புக்கு முந்தைய நாள் வரை அவர் சிமி இயக்கத்துடன் தொடர்பிலிருந்தவர் என்று போலீசு எப்போதும் கூறியதில்லை.

இந்த ஆண்டு மே மாதம் மௌலானா ஹலீமும் அவரது சமயப்பிரிவைப் பின்பற்றுவர்களும் ஒரு கடை முகவரியில் ஆரம்பித்திருந்த டிரஸ்ட் சம்பந்தமாக அவருக்கு கடிதம் அனுப்பியிருந்தது போலீசு. அதில் அந்த ட்ரஸ்ட்டில் உள்ளவர்களின் முகவரியைத் தருமாறு கேட்டிருக்கிறது. எந்த வித குற்றப் புகாரும் இல்லாத நிலையிலும் கூட மௌலானா ஹலீம் அந்த ட்ரஸ்ட் சம்பந்தமான விவரங்களை போலீசுக்கு அனுப்பியிருக்கிறார். 

இதிலிருந்து அவர் தலைமறைவாக இல்லை என்ற உண்மை போலீசுக்கும் தெரிந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் மெளலானா ஹலீம் தான் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து தனது குடும்பத்தினரை போலீசு அச்சுறுத்தியது என்று குஜராத்தின் போலீசு டைரக்டர் ஜெனரலுக்கும், அகமதாபாத் காவல் துறை ஆணையருக்கும் தந்தி அனுப்பியிருக்கிறார். அடக்குமுறைக்குகெதிரான இந்த சட்டப்பூர்வ முயற்சிகளையெல்லாம் ஒரு தலைமறைவு பயங்கரவாதி செய்வாரா என்ன?

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு சமயங்களையும் உள்ளடக்கிய 'சமூக ஒற்றுமை மற்றும் அமைதிக்கான இயக்கம்' - என்ற அமைப்பு சமயநல்லிணக்க கூட்டம் நடத்துவதற்காக போலீசிடம் அனுமதி வாங்கியபோது அந்த விண்ணப்பத்திலிருந்த முக்கிய சொற்பொழிவாற்றுபவர்களின் பட்டியலில் மௌலானா ஹலீமின் பெயரும் இடம் பெற்றிருந்தது. 'இதையெல்லாம் சொல்லித்தான் ஹலீமின் அப்பாவித்தனத்தை நிரூபிக்க வேண்டுமென்பதில்லை!' -  என்கிறார்கள் அவரது நண்பர்கள். 'தனது குழந்தைகள் மீது ஆணையிட்டு தனது கணவர் ஒரு பயங்கரவாதியில்லை, அப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறார்!'- என்கிறார் மௌலானா ஹலீமின் மனைவி நூர் ஷாபா.

2002 கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி வழங்க ஹலீம் முயற்சி எடுத்த போதுதான் போலீசின் தொந்தரவுகள் ஆரம்பித்தன. 

கலவரத்தால் வீடு வாசல், உற்றார் உறவினரை இழந்து அகதிகளாய் நிவாரண முகாமில் வாழ்ந்து வரும் சிறார்களுக்காக உதவி செய்ய மௌலானா ஹலீம் முயன்றார். குவைத்திலிருந்து வந்த இரண்டு இந்திய முசுலீம்களை அவர் அந்த முகாம்களுக்கு அழைத்துச் சென்று உதவி கோரினார். அதற்காகப் பின்னர் கடிதமும் எழுதினார். அந்த இரண்டு நபர்களும் பின்னர் டெல்லி போலீசால் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டு டெல்லி நீதி மன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். ஆனால், இந்த வழக்கில் வெடிமருந்து வைத்திருந்ததாக சாட்சி அளித்தவர்கள் போலீசார் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மொராதாபாத் வணிகர் ஒருவரை விடுதலை செய்த நீதிமன்றம் நிவாரண முகாமுக்குச் சென்று குழந்தைகளுக்காக உதவி செய்ய நினைத்ததை குற்றமென வரையறுக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தது.

குஜராத்தின் அனாதை முசுலீம் குழந்தைகளுக்காக இவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதியதால் மௌலானா ஹலீமும் வேறு ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் கடிதத்தில் உதவி கேட்டு இடம் பெற்ற வாசகங்கள் எல்லாம் போலிசால் தீவிரவாதத்தின் பொருளாகத் திரிக்கப்பட்டன. இதன் பொருட்டு கைது செய்யப்பட்ட மௌலானா ஹலீம் பின்னர் பிணையில் வந்தார். இவ்வழக்கின்படி அவர் குஜராத் குழந்தைகளைத் தீவிரவாதிகளாக்கும் பொருட்டு பயிற்சி முகாமுக்கு அனுப்ப முயன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்குதான் தற்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வழக்கிற்கு மூலமாக காட்டப்படுகிறது. ஆக வெளிப்படையாக ஒரு சமய அறிஞராகவும், முசுலீம் மக்களுக்கு உதவவேண்டுமெனவும் பாடுபட்ட ஒரு அப்பாவி, பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டு இன்று சிறையில் வாடுகிறார். கடை வருமானத்தை இழந்த அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. குஜராத் போலிசோ குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியைக் கண்டுபிடித்ததாக ஊடகங்களை நம்ப வைக்கிறது. 

மௌலானா ஹலீமின் கதையோடு இந்த நாடகம் முடிந்து விடவில்லை. இவரைப் போன்ற பல இசுலாமியர்கள் குறிப்பாக அப்பாவி இளைஞர்கள் இந்தியாவெங்கும் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுவதை 'தெஹல்கா' ஏடு அம்பலப்படுத்தியது.

அனாதை என்பதன் பொருளை பெற்றோர், உற்றார், உறவினரோடு வாழும் ஒருவர் அவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்ள முடியாது. இந்த உலகில் எந்த உறவுமின்றி ஆதரவற்ற நிலையில் வாழும் ஒரு அனாதையின் உளவியலை சகஜ வாழ்க்கையில் இருக்கும் நம்போன்றோர் அறிவதில்லை. இது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல சமூக வாழ்க்கைக்கும் பொருந்தும். சொல்லப்போனால் சமூக வாழ்க்கையில் அனாதைகளாக்கப்படும் நபர்கள்தான் சொல்லணாத் துயரத்தைச் சந்திக்கின்றனர். இந்து மதவெறியர்களின் அடக்குமுறைக் கலவரங்களின் எதிர் விளைவால் தோன்றும் இசுலாமிய பயங்கரவாதம் உண்மையில் பல அப்பாவி இசுலாமிய மக்களையே பலி கொள்கிறது.

தொப்பியும், தாடியும் வைத்திருக்கும் ஒரு இசுலாமிய இளைஞன் எந்த வித முகாந்திரமுமின்றி 'பயங்கரவாதியாக இருக்கலாம்' என்று சமூக அமைப்புக்களால் நினைக்கப்படுகிறான். எங்கெல்லாம் குண்டு வெடிக்கிறதோ அங்கெல்லாம் கேட்பார் கேள்வியின்றி இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். பல ஆண்டு வழக்கு விசாரணைக்குப் பிறகே இவர்கள் அப்பாவிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர். எந்தக் குற்றமும் செய்யாத தம்மை இந்த சமூக அமைப்பு கிரிமனல் போன்று நடத்தப்படுவதை வைத்துத்தான் தங்களை எந்த உதவியுமின்றி துன்பப்படும் அனாதைகளாக இவர்கள் உணர்கின்றனர். இந்தியாவில் இத்தகைய இசுலாமிய அனாதைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது ஆரோக்கியமான போக்கு அல்ல. சமூக அளவில் தன்னை அனாதையாக்கும் இந்த அமைப்பு குறித்து அவர்களிடம் எழும் கோபத்தை எவரும் தணிக்க இயலாது.

பயங்கரவாதத்திற்கெதிராக இந்திய அரசு தொடுத்திருக்கும் இந்தப்போரின் விளைவு பல தீவிரவாதிகளை உருவாக்கவே உதவி செய்யும். மதசார்பற்ற சக்திகள் இந்த அப்பாவி இசுலாமிய இளைஞர்களைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றியடைவது ஒன்றே அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்ற ஆறுதலைச் சிறிதேனும் தரும். 

ஒரிசாவில் கிறித்தவ மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இந்து மதவெறியர்களின் பயங்கரவாதத்தை இந்த அரசியல் அமைப்பு கேள்வி கேட்பதில்லை. லட்சுமானந்தா சரஸ்வதி என்ற விசுவ இந்து பரிசத்தின் தலைவரும், அவ்வட்டாரத்தில் பிரபலமான இந்து மதவெறியராகவும் இருந்தவர் கொலை செய்யப்பட்டதை வைத்து இந்து மதவெறியர்கள் இந்தக் கொலைக்குத் தொடர்பில்லாத கிறித்தவ மக்களை வேட்டையாடுகின்றனர்.

'குஜராத்தில் முசுலீம்களுக்குப் பாடம் கற்பித்து விட்டோம்!'. 'ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு பாடம் கற்பிப்போம்!' - என்று சங்க பரிவாரங்கள் வெளிப்படையாகவே வெறியைப் பரப்பி கலவரம் செய்து வருகின்றன. ஒரிசாவே பற்றி எரியுமளவுக்கு பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 2000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் கொளுத்தப்பட்டு, 25 பேர் வரை கொல்லப்பட்டும் இருக்கின்றனர்.

1999 ஆம் ஆண்டு ஒரிசாவில் 'கிரகாம் ஸ்டேன்ஸ்' எனும் ஆஸ்திரேலியப் பாதிரியார் இரு மகன்களுடன் ஒரு காரில் உயிருடன் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்து மதவெறியர்களின் இந்த கொடூரச் செயலுக்குப் பிறகு கூட அவர்களின் நடவடிக்கைகள் தடை செய்யப்படவில்லை. அதனால்தான் இன்றும் அரசு ஆதரவோடு அவர்களது பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. 

பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக கிறித்தவ மத்த்திற்கு மதம்மாறிய தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களெல்லாம் அன்றாடம் இந்து பயங்கரவாதத்தைக் கண்டு நடுங்கியபடியேதான் வாழ நேரிடுகிறது. கடந்த பத்தாண்டுகளாக இந்த ஒடுக்கப்பட்ட கிறித்தவ மக்கள் பல தாக்குதல்களை சந்தித்திருக்கின்றனர். அதன் தொடர் விளைவாகத்தான் இன்றைய கலவரங்கள்; இந்து மதவெறியர்களால் நடத்தப்படுகின்றன.

குண்டு வெடிப்புக்காக அப்பாவி முசுலீம்களைக் கைது செய்யும் போலீசோ ஒரிசாவில் இந்து மதவெறியர்களின் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றது. கிறித்தவ மக்கள் உயிருடன் கொளுத்த்தப்படும் போதுகூட போலிசின் துப்பாக்கிகள் சுடாமல் அமைதி காத்தன. பா.ஜ.கவின் இளைய பங்காளியான நவீன் பட்நாயக் அரசோ மோடியின் அரசுபோல இந்து மதவெறியர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. தொகாடியா போன்ற இந்து மதவெறியர்களின் பேச்சும் நடவடிக்கையும் எந்த தடையுமின்றி ஒரிசாவில் வலம் வருகின்றன.

இந்த நாட்டின் அரசியல் அதிகார அமைப்புகள் இந்து மதவெறிக்கு ஆதரவாக இயங்கிவரும்போது இதன் பயங்கரவாதத்தை எவரும் சட்டபூர்வமாக ஒழிக்க முடியாது. மறுகாலனியாதிக்கத்தின் அங்கமாக ஒரிசாவை பன்னாட்டு நிறுவனங்கள் வேட்டையாடி வரும் நிலையில், அதை எதிர்த்து போராடும் பழங்குடி மக்களின் போராட்டத்தை இந்து மதவெறியர்கள் திசை திருப்பி ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கின்றனர். பெரும்பான்மை, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றாக அணிதிரண்டு இந்து மதவெறியர்களை கருவறுக்கும்வரை எவருக்கும் விடுதலை இல்லை.

பயங்கரவாதத்தின் பெயரில் நூற்றுக்கணக்கான அப்பாவி இசுலாமிய மக்கள் சிறையில் வாடும்போது, உண்மையான பயங்கரவாதிகளான இந்து மதவெறியர்கள் சமூகத்தில் வெளிப்படையாக இயங்கி வருகின்றனர். இந்த முரண்பாடு சரிசெய்யப்படும் வரை இந்தியாவில் அமைதி என்பது பிடிபடாத மாய மானைப் போல ஓடிக் கொண்டே இருக்கும்.

- ஷாஹீல் ஹமீது (தென்காசி ஷாஹீல்) with SIO Peringolam
 - Source: Thelka Mazine
Shahul Hameed (Tenkasi Shahul)

0 comments:

Post a Comment