NewsBlog

Tuesday, July 9, 2013

சிறப்புக் கட்டுரை: 'சதித் தீப்பிழம்புக்குள் பிரமிடு!'


தங்கள் அரசியல் உரிமைகள் நிலைநாட்டப்பட எகிப்தியர்கள் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார்கள். உலகமே வியக்கும் வண்ணம் நடக்கும் இராணுவத்துக்கு எதிரான சாமான்யர்களின் இந்த 'ஜனநாயக' மீட்புப் போராட்டம் அசாதாரணமானதுதான்! அதேநேரம், பெரும் உயிர் சேதத்தை விளைவிப்பதுகூட.

சமுத்திரமர்க திரண்டிருக்கும் இந்த ஜனத்திரளுக்கு முழு காரணம் இராணுவம்தான்! மக்களின் பேராதரவு பெற்று ஆட்சிக்கு வந்த ஒரு ஜனநாயக அமைப்பை உதாசினம் செய்து.. துப்பாக்கி முனைகளில் இராணுவம் கிரீடம் சூட்டிக் கொண்டதன் விளைவு இது.

தற்போது எகிப்தின் வீதிகள் தோறும் வாக்கு பெட்டிகள் போன்றும், இராணுவ ஹெலிகாப்டர்களோ வாக்குச் சீட்டுகளை எண்ணும் கருவிகள் போன்றும், முடிவுகளை அறிவிக்கும் நபர்களாய் சீருடை அணிந்த இராணுவமாய் களத்தில் எங்கும் பரபரப்பு சூழ்ந்து கொண்டிருக்கிறது.

எகிப்து இன்று எதிர்கொண்டிருக்கும் பேராபத்தை வார்த்தைகளால் வடிக்க இயலாது. 

எகிப்தின் அரசியல் அமைப்பு பெரும் ஆபத்தில் உள்ளது.

ஜனவரி 25, அன்று நடந்த புரட்சியின் போது இருந்த நிலையில் இன்று இராணுவம் இல்லை. தோளோடு தோள் இணைந்து எகிப்து மக்கள் 18 நாட்கள் நடத்திக் காட்டிய வரலாற்றுப் புகழ் பெற்ற புரட்சி அது. 30 ஆண்டு காலம் தங்களை அடக்கி ஆண்ட ஒரு சர்வாதிகாரியை வீழ்த்த அல்ல தற்போது நடக்கும் போராட்டம். இரு குழுக்களாய் சிதறிப் போயிருக்கும் மக்கள். ஆயுதத்தை கையில் ஏந்தி சொந்த மக்களுக்கு எதிராய் திருப்பியிருக்கும் மூர்க்கத்தனமான இராணுவம்.

மூன்று கட்டங்களாய் நடந்த தேர்தல்களிலும், இரண்டு முறை நடந்த 'வாக்குக்கணிப்பிலும்' (ரெப்ரெண்டம்) பல மணி நேரம் வேலை மெனக்கெட்டு மக்கள் வாக்களித்தனர். ஹெலிகாப்டர்களில் வானில் சுற்றியவாறு வட்டமிட்டு இதைக் கண்காணித்தது இராணுவம். திரண்டிருந்த அந்தந்த பகுதி மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு ஆட்சிக்கு வர இருப்பவர் யார் என்று ஏற்கனவே அறிந்தும்  கொண்து. அதேபோல, பெரும்பான்மை மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இஸ்லாமிய இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததும் 'ஷரீயா' என்னும் இஸ்லாமிய அமைப்பு அரியணையில் ஏற வேண்டும் என்பதற்குதான்!


இது இப்படியிருக்க தற்போது கைதுகளும், ஊடகத் தடைகளுமாய் இராணுவம் தனது இரும்பு கரங்களால் ஜனநாயக அமைப்பின் குரல்வலையை நசுக்க முனைகிறது.வேறொரு முகமூடியோடு முபாரக்கின் அதிகாரம் மீண்டும் அரியணையில் ஏறப் பார்க்கிறது. 

முபாரக்கின் ஆதரவாளர்களும், எதிர்கட்சி தலைவரான டாக்டர் முஹம்மது பராடியின் ஆதரவாளருமாய் சேர்ந்துதான் ஜுன் 30 இல், தெருக்களில் திரண்டு மோர்ஸிக்கு எதிராய் குரல் எழுப்பினார்கள். மேற்கத்திய ஊடகங்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தண்ணீராய் பணத்தை இறைத்து மிகவும் திட்டமிட்டு மோர்ஸிக்கு எதிராய் ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். 

கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு எல்லைகளில் தன் நாட்டு மக்களை கருவறுக்க காத்திருக்கும் கடும் எதிரிகளை கண்காணித்து சமாளிக்க வேண்டிய எகிப்து இராணுவமோ ஜனநாயகத்தை புறந்தள்ளியதோடு மட்டும் நில்லாமல் சொந்த மக்களின் நெஞ்சங்களில் குண்டுகளை பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், ஆயிரக்ணக்கில் தெருக்களில் திரண்டுவரும் மோர்ஸியின் ஆதரவாளர்கள் இராணுவம் அரங்கேற்றிய ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக போராடி வருகிறார்கள். 


உலகத்துடனான ஊடகத் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு.. இராணுவத்தால் ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்.. சமூக வலைத்தளங்களின் உதவியாலும், சில தனியார் செயற்கைக் கோள்களின் உதவியாலும் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

நிமிடத்துக்கு நிமிடம் எகிப்திய தெருக்களில் திரண்டுவரும் மக்கள் வெள்ளம் எகிப்தை மீண்டும் சதுக்கத்தில் திரட்டிவிடும் என்பதில் ஐயமில்லை! இதற்கான விலை சற்று அதிகமானலும் அதைவிட முக்கியம் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு எகிப்தியரும் நன்கறிந்து உள்ளார்கள்.

0 comments:

Post a Comment