NewsBlog

Sunday, May 19, 2013

சிறப்புக் கட்டுரை: 'தாழட்டும் துப்பாக்கி..! உயரட்டும்.. மனிதம்!!'

‘அந்நியனுக்கு வரி கட்ட முடியாது!’ – என்றதால் தூக்குக் கயிறு மாட்டப்பட்டது கட்டபொம்மனுக்கு; அது அந்தக் காலம். ‘தீவிரவாததுக்கு துணைப் போக முடியாது! வரியும் கட்ட முடியாது!’ – என்று சொன்னதால் அதைச் சொன்ன கோர்டேஜுக்கு நெக்லஸ் வெடிகுண்டு மாட்டப்பட்டது. இது பயங்கரவாதிகளின் காலம்.

கொலம்பியாவின் ‘பொகோடா’வில் பால் வியாபாரம் செய்து வயிற்றைக் கழுவும் ஏழைப் பெண் கோர்டேஜ் (53). இவர் கொலம்பியா தீவிரவாதிகளின் வரித் தண்டலுக்கு உடன்படவில்லை. விளைவு, கோபத்தின் உச்சிக்குச் சென்ற அந்த ‘சித்தாந்தவாதிகள்’ அப்பாவியான ஏழைப் பெண்ணுக்கு உடனுக்குடன் என்ன தண்டனை அளித்தனர் தெரியுமா?
கழுத்தில் வெடிகுண்டைப் பொருத்தி.. பூட்டி விட்டனர்.
எந்த நேரமும் வெடிக்கத் தயாராய்க் காத்திருக்கும் அந்த மின்னணுக் கந்தக பூதத்தின் பிடியில் சிக்கி ஆறு மணிநேரம் அப்பெண் சித்திரவதையை அனுபவிக்க வேண்டியிருந்தது.
படபடக்கும் இதயங்களுடன் சுற்றியும் உறவினர்கள் சூழ்ந்திருக்க.. அண்டை – அயலார் அச்சப்பட்டு சிலையாய் நிற்க ..
நிபுணர்களின் வெடிகுண்டுச் செயலிழப்பு முயற்சிகள் பலனளிக்காமல் கோர்டேஜின் உடல் சுக்கு நூறாய் சிதறடிக்கப்பட்டது. மற்றொரு முறை வரலாற்றில் மனிதநேயம் வெட்கித் தலைகுனிந்தது.
உடல் நடுங்கச் செய்யும் பயங்கரவாதம் கொலம்பியா போன்ற ஏதோ தொலைதூர நாட்டில் நடந்தாலும் அல்லது இலங்கை போன்ற அண்டை நாட்டில் நிகழ்ந்தாலும் அது மனித நேயத்துக்கும், மனித குலத்துக்கும் எதிரானது என்பது மட்டும் நிச்சயம்.
வடக்கில் காஷ்மீரிலிருந்து ஒடிசா, அசாம், பிகார், உ.பி, ம.பி மாநிலங்களைத் தாண்டி தெற்கில் ஆந்திரம்வரை நமது நாட்டிலும் பயங்கரவாத்தின் வேர்கள் ஆழமாக பதிந்திருப்பது பெரும் கவலையளிப்பதாகும்.


தீவிரவாதிகள, கொரில்லாக்கள், வகுப்புவாதிகள், சாதீயவாதிகள், இனவாதிகள் என்று பன்முகப் பெயரகளில் ‘பயங்கரவாதம்’ இந்திய துணைக்கண்டத்தில் பல்வேறு முகமூடிகளுடன் உலவி வருகிறது. அமைதிப் பூங்கா என்று பெயர் பெற்ற பெரியார் – அண்ணாக்களின் பூமியில் … தமிழகத்திலும் இதன் நச்சுவிதைகள் தூவப்பட்டுவிட்டது.
வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைக் கர்ஜனைகளும், ஆந்திரம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் தீவிரவாதிகளின் கந்தக நெடிகளும் ரத்தக் களறியை ஒருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
உ.பி, பிகார், ஹரியானா மாநிலங்களில் மிட்டாமிராசுகளும், நிலக்கிழார்களும் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொள்ள தனியார் படைகள் என்ற பெயரால் ‘ரண்வீர் சேனை’ என்ற கூலிப்படையை நிறுவியுள்ளனர்.
மாவோயிஸ்ட்டுகளோ தற்காப்பு, முதலாளித்துவத்துக்கு எதிரான.. பிற்படுத்தப்பட்டோருக்கு ஆதரவான நிலைப்பாடு காரணமாக துப்பாக்கி மொழியில் பேச மனித ரத்தம் ஆறாய்ப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
ஒருபுறம் அந்நிய பயங்கரவாதமும், மறுபுறம் உள்நாட்டுத் தீவிரவாதமும் இந்தியாவை சின்னா பின்னப்படுத்திக் கொண்டிருக்கின்றன. காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் ஒரு கூட்டம் ஆயுதமேந்தினால்… அசாம், போடோ, மிஜோ போராட்டங்களோ மண்ணின் மைந்தர்களான அங்கீகாரக் கோரிக்ககையாகத் தீவிரவாத வடிவம் பெற்றன. நிலபிரபுத்துவம், சுரண்டல், சமூகமாற்றம் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு தெலுங்கானாவின் தொடராய் எழுந்ததே நக்சலைட்டுகளின் தீவிரவாதம்.

வடகிழக்கில் தீவிரவாதத்தைத் தடுப்பதற்குப் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஒப்பந்தங்களுக்கு பிறகு உடனுக்குடன் பிரச்னைகள் முடிந்துவிடுவதில்லை. பஞ்சாப் பிரச்னைக்கு லோங்கோவால் ஒப்பந்தமும் உடனடித் தீர்வாய் அமையவில்லை.
1993, பிப்ரவரியில் கையெழுத்தான போடோலாந்து ஒப்பந்தமும் இத்தகையதுதான். தீவிரவாதிகள் அதை ஏற்கவில்லை என்பது வேறு விஷயம்.
வழக்காமாக அரசு செய்யும் ஒரு தவறையும் சுட்டிக் காட்டியாக வேண்டும். மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்ற அமைப்புகளிடம் எப்போதும் அது ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக, தனது நம்பிக்கைக்கு மட்டும் பாத்திரமான.. மக்களிடம் அவ்வளவாக எடுபடாத.. ஒரு சிறிய குழுவை அல்லது பிரிவை மட்டும் கொண்ட அமைப்புகளுக்கு கிரீடம் சூட்ட முனைகிறது.
ஒவ்வொரு பிரச்னையையும் அரசு சரியாக அணுகாததே அனைத்துச் சிக்கல்களுக்கும் அசலான காரணம்.
பிரச்னைகளின் கேந்திரமான பகுதிகளில் முக்கியத் தீவிரவாதக் குழுக்களை கண்டறிய வேண்டும். அவர்களின் கொள்கை, கோட்பாடுகளை, மக்கள் பிரச்னைகளுக்கு அவை முன் வைக்கும் தீர்வுகளை, அவர்கள் தரப்பு வாதங்களை, நியாயங்களை எல்லாம் அரசு உளப்பூர்வமாக காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

தீவிரவாதிகள் தானே உருவாவதில்லை; அவர்கள் உருவாக்கப் படுகிறார்கள்.
அசாமில் பங்களாதேஷ் அகதிகள் நிரம்பியதால் அதற்கு எதிரானதாக உருவானதே, ‘அனைத்து அசாம் மாணவர் இயக்கம்’ தங்கள் பூமியை ஆக்கிரமித்தார்கள் என்ற கோபத்தில் வெகுண்டெழுந்தவர்களே லாலுங் பழங்குடிகள்.
1947 இல், 93 விழுக்காடாக இருந்த தொழிலாளர்கள் 1981 க்குள் எல்லாம் சொற்ப எண்ணிக்கையாகிவிட்டது. வாழ்வுரிமைக்கான யுத்தம் தொடங்கியது. ‘திரிபுரா நேஷனல் வாலண்டீர் ஃபோர்ஸ்’ உருவானது. அந்தத் தீவிரவாதத்துக்கு வங்காளிகள் பலியானார்கள். இதற்கிடையில் ஒடுக்கப்ட்டோர் நலம் காப்பதாக ‘பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி’ மற்றும் மாவோயிஸ்ட் ரெவெலூஷனரி ஃபோர்ஸ் குழுக்கள்’ துப்பாக்கிகள் ஏந்தின. இவற்றில் கல்வியாளர்களும், மேதைகளும், கலை – இலக்கியவாதிகளும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி வடகிழக்கு மாநிலங்கள் குருதியில் முங்கின.

ஆந்திராவில் பெருந்தலைவலியாக மாறியிருக்கும் நக்சலிஸம் 30 ஆண்டு வரலாறு கொண்டது. மேற்கு வங்கத்தில் தொடங்கிய நக்சல்பாரி இயக்கம் 1969-இல், ஶ்ரீகாகுலம் மாவட்டத்தில் தீவிரமாக செய்ல்பட்ட காலகட்டத்தில் தீவிரவாதிகள் வரிந்து கட்டிக் கொண்டு எந்த போலீஸாரையும் கொன்றதில்லை. இன்றோ துப்பாக்கிகளுக்கும், நிலக் கண்ணி வெடிகளுக்கும் பலியாகும் போலீஸாரின் மரணங்கள் சர்வசாதாரணமாகி விட்டன. கொல்லப்பட்டவர்களில் ஆந்திரத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் மாதவரெட்டி போன்றவர்கள் அடக்கம்.

அதுபோலவே, 2000 - ஆம், ஆண்டு ஏப்ரல் இறுதிவரை 'மோதல்கள்' என்ற பெயரால் 120 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமைக்கழகம் பட்டியலிட்டது. ஏப்ரல் மாத்த்தில் மட்டும் 27 மோதல்கள் நடந்ததாகவும், அவற்றில் 52 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. இவற்றில் நக்சல்கள் என்ற பெயராலும், ஐ.எஸ்.ஐ உளவாளிக் என்ற பெயராலும் நடந்த மோதல்களும் உண்டு.

போலீஸ் காவலில் ஒரு கைதி சித்திரவதை காரணமாக இறக்கும்போது, சந்தேகத்துக்குரிய மரணம் - குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 174 - இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. அதாவது, இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 302 - இன், கீழ் கொலைக் குற்றமாக அது பதிவு செய்யப்படுவதில்லை. 

அதேபோல, போலீஸ் மோதல்களில் ஒருவர் கொல்லப்படும்போது, தற்காப்புக்காக கொல்லப்பட்டது என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. 

மனித உரிமை இயக்கமோ பிற கொலை சம்பவங்களைப் போலவே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 302 - இன் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோருகிறது. 



ஆந்திரத்தில் மக்கள் யுத்தக் குழுவினரின் எண்ணிக்கைஅரசுத் தரப்புத் தகவல்களின்படி 5 ஆயிரம் மட்டுமேயாகும். ஆனால், இவர்கள்தான் 8 கோடிக்கும் அதிகமான ஆந்திர மக்களின் வாழ்க்கையை அவ்வப்போது 'பந்த்'கள் மற்றும் போராட்டங்கள் மூலம் ஸ்தம்பிக்கச் செய்பவர்கள். 

ஒருபுறம் காக்கிச் சட்டைகளின் கெடுபிடிகள். மறுபுறம் ஆலிவ் கிரீன் தீவிரவாதிகளின் அதிரடித் தாக்குதல்கள். மக்கள் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறார்கள். 

வடக்கு தெலுங்கானா கிராமங்கள் முழுவதும் துப்பாக்கி கலாச்சாரம்தான்.

காஷ்மீரை எடுத்துக் கொண்டால்.. வாக்களித்தபடி கருத்துக் கணிப்பு நடத்தாதது....

370 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அரசியல் சட்ட சுயாட்சி உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டது...

தேர்தல்கள் என்ற பெயரால் நடந்த ஜனநாயக விரோத ஊழல்கள்...

1990 முதல் 1995 வரை ஐந்தாண்டுகளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுதான் காஷ்மீரிகள் இந்திய அரசுடன் அந்நியப்பட்டு நிற்பதற்கான காரணமாக 'குடியுரிமை மற்றும் ஜனநாயக உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு' தெரிவிக்கிறது. இந்தியாவின் எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 13 பேர் கொண்ட ஓர் உண்மை அறியும் குழுவை 1995 ஜுலை 30 முதல் ஆகஸ்ட் 7 வரை காஷ்மீருக்கு அனுப்பியிருந்தது. நாற்பதாண்டு கால ஜனநாயக அத்துமீறல்களை எல்லாம் சகித்துக் கொண்ட காஷ்மீர் மக்கள் 1980 களின் இறுதியில்தான் ஆயுதம் ஏந்தத் தொடங்கியதாக அக்குழுவின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இப்படிப்பட்ட சிக்கலான காஷ்மீர் விவகாரத்தில் கடுமையைக் காட்டி வந்த மத்திய அரசு ஒரு கட்டத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க ஹீரியத் அமைப்புடன் பேச்சு வார்த்தைக்கு முன்வந்ததது வரவேற்கத்தக்கது. ஆண்டின் பெரும் பகுதியை வெளிநாடுகளில் உல்லாசமாக கழிக்கும் பாரூக் அப்துல்லாஹ் போன்ற  பொம்மைத் தலைவர்களை முன்னிலைப்படுத்தாமல் மக்கள் தலைவர்களை பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்க அரசு அதிக ஆர்வம் காட்ட வேண்டும். 2000 க்கு முந்தைய பத்தாண்டுகளில் காஷ்மீரில் 9 ஆயிரம் ராணுவ வீரர்கள், 2 ஆயிரம் தீவிரவாதிகள், 10 ஆயிரம் பொதுமக்கள் பலியானதாக அப்போதைய தகவல்கள் தெரிவித்தன.



66 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் தீவிரவாதத்துக்கு பலியானோர் எண்ணிக்கை லட்சத்தையும் தாண்டியிருக்கும். இனியும் இத்தகைய ஈடு செய்ய முடியாத மனித உரியரிழப்புகளை அனுமதிக்கக்கூடாது. அமைதிப் பேச்சுகளை தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்கான நடுநிலையாளர்கள் கொண்ட குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். தன்னார்வ அமைப்புகளையும், அறிஞர்களையும், மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களையும் இக்குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

"தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சு வார்த்தைகளா?" - என்று முகம் சுளிப்பதில் பயனில்லை. இந்தியாவின் ஜனநாயக அமைப்புக்கு பெரும் அறைகூவலாக இருப்பது போரோ அல்லது அணு ஆயுத போட்டிகளோ அல்ல; தீவிரவாதம்தான்!

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக தீவிரவாதிகளுக்கு அந்நிய சக்திகளிடமிருந்து ஆயுதங்கள் உட்பட எல்லா உதவிகளும் கிடைக்கின்றன. நிதிகளும், பயிற்சிகளும் தாரமாக தரப்படுகின்றன. 12 நாடுகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் அந்நியப் படையினர் இந்தியாவில் ஊடுருவி கண்ணும், கருத்துமாக பணிபுரிவதாகவும், இவர்களின் எண்ணிக்கை 1993 லிருந்து 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பஞ்சாபில் தீவிரவாதத்துடன் கடும் மல்லுக்கட்டிய முன்னாள் டி.ஜி.பி கே.பி.எஸ்.கில்லின் எச்சரிக்கை மறக்க முடியாதது. 

தீவிரவாத்தை நசுக்க வேண்டும் என்று களத்தில் இறங்கினால்.. உயிர், பொருள் இழப்புகள் இரு பக்கமும் தொடர்ந்தவாறே இருக்கும். அதற்கு ஒரு முடிவும் கிடைக்காது. அன்றைய காந்தஹார் விமான கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது அமைதி பேச்சு வார்த்தைக்கு கிடைத்த வெற்றி என்று கூட சொல்லலாம்.



மக்களைக் காப்பதற்காக அரசாங்கங்கள் இறங்கிவருவதில் தவறேதும் இல்லை. இது தலைகுனிவான செயலுமல்ல. 

அமைதி பேச்சு வார்த்தைகளுக்கு முன் துப்பாக்கிகள் தாழ வேண்டும். இந்த பேச்சு வார்த்தைகளுக்கு நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களான இணையங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

தோட்டாக்களுக்கு தோட்டாக்கள் பதிலாக முடியாது. 

அருமையான மனிதவளம் பல நூற்றாண்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதுதான் மிச்சம். 

மக்கள் ஒவ்வொரு நிமிடமும் அஞ்சி.. அஞ்சி வாழ்வதில் பொருளே இல்லை. 

அரசின் நலத்திட்டங்களும் மக்களைச் சென்றடைவதில் வாய்ப்பேதும் இல்லை. 

உலகில் எங்கெல்லாம் தீவிரவாதம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் வறுமை, வளர்ச்சியில் பின்னடைவு, அறியாமை ஆகியவை தலைவிரித்தாடும். இந்த மூன்றும் வன்முறைக்கு வழிவகுப்பவை. அமைதியை சீர்குலைப்பவை. அது நக்சல்களின் தெலுங்கானவாக இருந்தாலும் சரி.. தாலிபான்களின் ஆப்கானாக இருந்தாலும் சரியே! 



0 comments:

Post a Comment