NewsBlog

Wednesday, January 2, 2013

'விடியலைத் தேடிய வெள்ளைப் புறா!'



அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் அப்பாவி ஈராக்கியர்கள் மீது நடத்திய கொடுமைகளைக் கண்டு உலகம் அதிர்ந்து போனது. அமெரிக்க ராணுவத்தினர் பாக்தாத் நகருக்கு வெளியே அபூகாரிப் மற்றும் குவாண்டானாமோ சிறைகளில் ஈராக்கிய கைதிகளிடம் நடந்து கொண்ட மனித உரிமை மீறல்களைக் கண்டு உலக மக்கள் கொதித்தனர்.

கைதிகளை நிர்வாணமாக உயரே நிற்கவைத்து உடல் முழுக்க மின்கம்பிகளைச் சுற்றி சித்திரவதைகள் செய்யும் காட்சி! நிர்வாணப்படுத்தப்பட்ட அவர்கள் ஒருவர் மற்றொருவருடன் செக்ஸ் உறவு கொள்ள வைக்கும் காட்சிகள் உலக மக்களை தலைகுனிய வைத்தன.

அல்அரேபியா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் சொல்லும்போது, "வெளியானப் படங்களைப் பார்த்தால்.. இன்னும் வெளிச்சத்துக்கு வராத அத்துமீறல்கள் ஏராளம்!"- என்றார்.

அமெரிக்கா, மனித உரிமை மீறல்களையும், அநீதிகளையும் குழிக்கற்களாகக் கொண்டு அதன் மேல் கட்டப்பட்ட நாடு. மண்ணின் மைந்தர்களான செவ்விந்திர்களை விரட்டி.. விரட்டி கொன்றவர்கள்!  ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசி நகரங்களோடு மனிதர்களையும் பஸ்பமாக்கியவர்கள்! குட்டிப் பிசாசு இஸ்ரேலை பயங்கரவாதத்தால்..  ஊட்டி வளர்த்து பலஸ்தீனர்களை நாடிழக்கச் செய்தவர்கள்! உலகம் முழுக்க தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டிக் கொண்டிருப்பவர்கள். மனித ரத்த வெறிப்பிடித்தவர்கள்.



ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருந்த சோவியத் ரஷ்யாவும் தனது சித்தாந்தத்தை திணிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளில் மனித இனம் பறிகொடுத்த உயிரிழப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. 1917-இல், ரஷ்யப் புரட்சியில் 13 மில்லியன் மக்கள் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்!) படுகொலை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அதேபோல, பிரெஞ்சு புரட்சியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தலைவெட்டி சாய்க்கப்பட்டனர்.

உலகில் நடந்த புரட்சிகள், போர்கள், அத்துமீறல்கள் எதை எடுத்துக் கொண்டாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பதைக் காணலாம். அல்ஜீரிய நாட்டு விடுதலைக்கான யுத்தத்தில் 2.5 மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்திய விடுதலைப் போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் 5 லட்சம்! சிரியா, ஈரான், எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் ஈராக் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்லாமிய வாழ்கைக்கான போராட்டங்களில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை பல.. பல லட்சங்களைத் தாண்டும்!



ஆனால், இறைவனின் திருத்தூதர் முஹம்மது நபிகளார் (அன்னாரின் மீது இறைவனின் கருணையும், பேரருளும் பொழிவதாக!) நிகழ்த்திய மாபெரும் புரட்சியின் உயிரிழப்புகள் எவ்வளவு தெரியுமா? 1018 பேர் மட்டுமே!

23 ஆண்டு காலத்தில் முடிந்த அந்த இஸ்லாமியப் புரட்சியில், 80 போர்கள் மற்றம் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 27 ராணுவ நடவடிக்கைகளில் நபிகளார் நேரிடையாகவே கலந்து கொண்டார்கள். 259 முஸ்லிம்கள், 759 முஸ்லிம் அல்லாதோர் என்று மொத்தத்தில் 1018 பேர் மட்டுமே கொல்லப்பட்டார்கள்.

நபிகளார் எந்த சித்தாந்தத்தை நிறுவதற்காக இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ, அந்த இஸ்லாமிய வாழ்வியல் திட்டத்தை நிறுவுவதற்காக எத்தகையை வழிமுறைகளைப் பின்பற்றினார்களோ அதுவே மனித குல அமைதிக்கான தீர்வாகும். உலகில் மனித உரிமைகள் காக்கப்படவும், ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையிலான வாழ்வு மலருவதற்கான ஒரே வழியாகும்.

பூகோள ரீதியாக அரபு நாட்டில் நபிகளார் தோன்றியதற்கான காரணங்கள் மிக முக்கியமானவை.

இறைவனின் திருத்தூது சமர்பிக்கப்பட இதைவிட பொருத்தமான இடம் வேறு இருக்க முடியாது. வரலாற்று ரீதியாக சீர்த்திருத்தம் செய்ய அரபு சமூதாயத்தை தவிர இறைத்தூதருக்கு பொருத்தமான சமுதாயம் உலகில் வேறில்லை! அந்தக் காலக்கட்டத்தில், பல்வேறு சமுதாயங்கள் அரியணையில் ஏறி வாழ்க்கை வளங்களில் மூழ்கித்திளைத்து.. மனித உரிமைகளைப் பறித்து... அநீதி அட்டுழியங்களை இழைத்து ஓய்ந்து போய் இருந்தன.

ஆனால், அரபு சமுதாயமோ எந்தவிதமான சித்தாந்த தாக்கமும் இல்லாமல் வெறுமையுடன் .. அதேநேரத்தில் புத்துணர்வுடன் இருந்தது. மற்ற சமுதாயங்கள் நாகரீகம்-கலாச்சாரம் பெயர்களால் சீர் கெட்டுப் போய் இருந்தன.

ஆனால், இன்று மேற்கத்திய கலாச்சார பாதிப்பால், சுக போகிகளாகவும், ஆடம்பரப் பிரியர்களாகவும், இழிந்த கோழைகளாகவும் அரபு மக்கள் இருப்பதைப் போல அன்று எந்த பாதிப்புக்கும் இவர்கள் ஆளாகவில்லை. அதேபோல, அன்றை அரபு மக்கள் பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சுத்த வீரர்களாகவும், தாராள மனம் கொண்டவர்களாகவும், யாருக்கும் அடிமைப்படாத சுதந்திரதாகம் கொண்டவர்களாகவும், தன்மானமே உயிரினும் பெரிது என்று சுயமரியாதை உடையவர்களாகவும் விளங்கினார்கள். ஆடம்பரமில்லாத அவர்களின் எளிய வாழ்க்கை மற்றொரு சிறப்பம்சமாகும்.

அரபு மக்களிடையே ஏராளமான தீமைகள் மண்டிக் கிடந்தன. இதன் காரணம் ஒழுக்கத்தைப் போதிக்கவும், வாழ்க்கையைச் சீர்ப்படுத்தவும் சரியான வழிகாட்டி இல்லை. மாபெரும் இறைத்தூதர்கள், இப்ராஹீம் நபி மற்றும் இஸ்மாயீல் நபிமார்களுக்குப் பிறகு இந்த சந்ததியிலிருந்து 2,500 ஆண்டுகளாக இறைத்தூதர்களின் வருகையும் இல்லை. சீர்க்கெட்டுப் போயிந்த இத்தகைய மனிதர்களை மனிதப் புனிதர்களாக்குவது சாமான்ய பணியல்ல. சிறப்பியல்புகளோடு அறியாமைக் காரிருளுக்குள் சிக்கிக் கிடந்த அரபு மக்களைச் சீர்த்திருத்தம் செய்தால் கொள்கைகோமான்களாக்கிட முடியும் என்ற யாதார்த்த நிலை.

இறைவனிடமிருந்து மனித இன வழிகாட்டுதலுக்காக.. இறங்கவிருந்த திருச்செய்தியோ... அற்புதமானது! நெஞ்சில் இறங்கி செயலுருவம் பெற வேண்டியது. இதற்கு பொருத்தமான தொடர்பு சாதனம் அவசியம்.

அதற்கான மொழிதான் அரபி. உயரிய சிந்தனைக்கான தகவல் தொடர்பு சாதனம். அரபு மொழி, மொழியல் ரீதியாகவம் வளம் வாய்ந்தது. சுருக்கமாக சொல்லி விளங்க வைத்திட வல்லது. சின்னச் சின்ன சொற்றொடர்களில் பெரும் பெரும் கருத்துக்களை உள்ளடக்கிவிடலாம்! கேட்போர் உள்ளங்களை இனிய நயத்தோடு சுண்டியிழுத்திடலாம்! மொத்தத்தில் திருக்குர்ஆனுக்காக தேர்வு செய்யப்பட்ட மொழி அரபி.

1434 ஆண்டுகளுக்கு  முந்தைய உலகம்!

நவீன அறிவியல் சாதனங்களோ, வசதிகளோ இல்லாத உலகம். இன்று நம் முன் உள்ள வாகன வசதிகளோ, தகவல் தொடர்பு சாதனங்களோ எதுவும் அன்று இல்லை. உலக நாடுகளிலிருந்து அரபு நாடு தனிமைப்பட்டிருந்தது. சுற்றியும் பாரசீகம், ரோமப் பேரரசு, எகிப்து போன்ற வல்லரசு நாடுகள்.. அன்றைய சூப்பர் பவர்கள்!

பரந்த பாலைநிலம் உலக நாடுகளோடு அரபு நாட்டை துண்டித்து வைத்திருந்தது. அரபு வணிகர்கள் உலக நாடுகளோடு தொடர்பு கொள்ள மாதக் கணக்கில் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும். அதுவும் எந்த நேரமும் உயிரிழப்புக்கு ஆளாக்கும் பேராபத்தான பயணங்கள்! மக்களிடையே கல்வி அறிவில்லை. அதை பெறுவதற்கான எந்த ஆர்வமும் இல்லை. அரபு மக்களிடையெ முறையான ஆட்சி-அதிகாரமோ, சட்ட - திட்டங்களோ ஏதுமில்லை! பல குடும்பங்கள் இணைந்த குலங்கள், கோத்திரங்கள்.. தனித்தனி சட்டங்கள் கொண்டிருந்தன. அந்த சமூக அமைப்பில் கொலை - கொள்ளை வழிப்பறிகள் சர்வசாதாரணமாக இருந்தன. தொடர்ந்து நடந்த போர்களில் ஜீவ நதியைப் போல ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது.

மனித உயிருக்கு எவ்வித மதிப்பும் இல்லை. குடி, விபச்சாரம், பெண்ணடிமைத்தனம், சிசுக் கொலை சமூக கலாச்சாரமாக இருந்தது. தினமும் ஒரு திருவிழா என்று ஆண்டு முழுக்க களியாட்டங்கள்! இணைவைப்புக் கூத்துக்கள்! நூற்றுக் கணக்கான சிலைகள் ஓரிறை இல்லமான கஅபாவில் இடம் பெற்றிருந்தன! 'இறைவன் ஒருவன்!'-என்ற தாரக மந்திரத்தை நிலைநிறுத்த தமது வாழ்நாளை அர்ப்பணித்த இப்ராஹீம் நபி மற்றும் அவரது வலக்கரமாக திகழ்ந்த இஸ்மாயீல் நபி இவர்களின் சிலைகளும் அதில் அடக்கம்! பயணத்தில் சிலைகளைச் சுமந்து செல்ல மறந்து போவோர் ஆயத்தக் கடவுள்களாக (Readymade)  பாலையில் ஒட்டகத்தின் பாலைப் பீய்ச்சி சிலை வடித்து வணங்கும் மூடப்பழக்கம் சமூகம் முழுக்க மண்டிக் கிடந்தது.


இத்தகைய அறியாமைக் காரிருள் கும்மிருட்டாய் போர்த்தியிருந்த அரபு மண்ணில்தான் நபிகளார் தோன்றினார்கள். குழந்தைப் பருவத்திலேயே பெற்றொரை இழக்கிறார்கள். பிறகு தமக்கு பொறுப்பாளராக இருந்த பாட்டனாரையும் இழக்கிறார்கள். மனித இனத்தின் மீது கருணை மழைப் பொழிந்த நபிகளாரின் இளமையில், இளகிய குடும்ப உறவுகள், பந்த - பாசங்கள்,  சம்பந்தமான பயிற்சிகள் பெறக்கூட வாய்ப்பில்லாமல் போனது. சிறுவயதில் ஆடுகளின் மேய்ப்பனாக இருக்கிறார்கள். ஒருமுறை வணிகப் பயணம் ஒன்றையும் மேற்கொள்கிறார்கள். நபிகளாரின் தூய.. வாய்மையான வாழ்க்கையை கண்டோர் அவர்களை 'அல் அமீன் - நம்பிக்கைக்குரியவர்', 'அஸ்ஸாதிக் - உண்மைப்படுத்துபவர்', என்ற சிறப்புப் பட்டப் பெயர்களால் அழைக்கிறார்கள். தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், சமூக வாழ்வியல் சூழல்களும் நபிகளாரைப் பெரிதும் பாதிக்கின்றன!

மனிதர்கள் தத்தமது மோட்சத்துக்கான வழியைத் தேடி அலையும்போது, நபிகளார் ஒட்டு மொத்த சமூகத்தின் விடியலைத் தேடினார்கள். மக்காவுக்கு வெளியே உள்ள மலைக் குகையில் தனித்தும், விழித்தும், பசித்தும் தவமிருக்கிறார்கள். நபித்துவ பேரொளி இறங்கும்வரை இந்தத் தேடல் தொடர்கிறது.

ஓரிறைக் கொள்கை, இறைக்கட்டளைகளின் அடிப்படையிலான உயரிய வாழ்க்கை அமைப்பு போதனைகளாக தொடர்கிறது. மூதாதையர் மரபுகளை விட முடியாமல் கோபம் கொள்கிறது சொந்த சமூகம்; பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இன்னல், இடுக்கண்களை அவர் சகித்துக் கொள்கிறார். கல்லாதவரின் வாயிலிருந்து வெளிப்படுகிறது வேத மெய்ஞானம்! 40 வயதுக்கு முன் மக்கள் கேட்டிராத அற்புத செய்திகள்; அதே திருவாயிலிருந்து வெளிப்படுகின்றன கோடி கோடி மின்னல்களாய்!

கல்லாத மனிதரான நபிகளார், சமூகவியல், ஒழுக்கவியல், வாழ்வியல் உயர் நெறிகள், அறிவியல், பொருளியல், அரசியல் என்று மனித வாழ்வின் அத்தனைக் கூறுகளும் உட்படுத்திய வாழ்வியல் திட்டத்தை கொண்டு வருகிறார்கள். யுக.. யுக.. மனிதர்களின் ஈருலக மோட்சத்துக்கான வாழ்வியல் திட்டம் அது! இறைவனின் வழிகாட்டுதல். மனிதர்களுக்கான வாழ்வியல் சட்டங்களை நபிகளார் போதிக்கிறார்கள்.

ஹிரா மலைக் குகையில் வெளிப்பட்ட அந்தப் பேரொளியைச் சுமந்தவாறு நபிகளார் மக்காவின் வீதிகள், தெருமுனைகள், திருவிழாக் கூடாரங்கள், தனிநபர்கள் என்று ஒவ்வொரு மனித உள்ளத்திலும் சேர்க்கத் துடியாய் துடிக்கிறார்கள். அனைத்து இன்னல்களையும் பொறுமையாய் தாங்கிக் கொள்கிறார்கள். அண்டை நாடான 'தாயிப்' வரை இந்த திருச்செய்தி சேர்ப்பதற்கான முனைப்புத் தொடர்கிறது. உடல் ரத்தத்தால் தெப்பமாய் நனைந்தபோதும், தமது திருச் செய்தி சரியான முறையில் சேர்க்க முனைந்தோமோ? என்றுதான் அவரது உள்ளம் வினாக்களை எழுப்புகிறது. பிழையிழைத்தோரின் தவறுகளைப் பொறுத்தருளும்படி இறைஞ்சுகிறது. அவர்களின் வருங்காலச் சந்ததிகளாவது இறைச் செய்தியை ஏற்கலாம் என்று தொலை நோக்கில் சிந்தனைப் பயணம் தொடர்கிறது. இப்படி பத்ர், உஹத், அகழ் போர்கள் என்று அதே திருச்செய்திக்காக தற்காப்பு வாள் ஏந்தியப் பயணங்கள் வரலாற்றில் தொடர்கின்றன.



23 ஆண்டுகள்!

எண்ணற்ற கொடுமைகள் அனுபவித்த அந்த 23 ஆண்டுகள்!

இறுதியில் மக்கா வெற்றியின் போது ஒட்டகத்தின் முதுகோடு முதுகாய் நபிகளார் மக்காவில் நுழைந்த காட்சியைக் கண்டு அந்த கர்வம் கொள்ளாமை பண்பைக் கண்டு வரலாறு வியக்கிறது. மன்னிப்பு அருள்மழையால்.. கொடியவர்களை எல்லாம் நபிகளார் மன்னித்ததைக் கண்டு மனிதம் நாணத்தால் தலை குனிந்தது!

நபிகளார் கொண்டு வந்த வாழ்வியல்  திட்டமும், அதை அமல்படுத்த அன்னார் எடுத்துக்  கொண்ட வழிமுறைகளுமே இன்றைய உலக்கு அத்யாவசியமானது. அற்புதமான இந்த சித்தாந்தந்தின் மகிமையை அதன் உயரிய பண்புகளை அறியாமல் ஏற்றுக் கொண்டோரும், அது என்னவென்று அறியாதோரும் அல்லது அதை அறிந்து கொண்டு வரட்டுத்தனமாக ஆதிக்கப் போக்கில் எதிர்போரும் நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். 

'தி லாஸ்ட் ஒன்லி ஒன் ஆப்ஷன் ஆஃப் தி மேன் கைண்ட்!'

 ஆம்.. மனித இனத்துக்கான ஒரே ஒரு இறுதி தீர்வு இஸ்லாம்தான்!







0 comments:

Post a Comment