NewsBlog

Saturday, November 23, 2013

உடல் நலம்: ‘ரத்தபுஷ்டிக்கு’ எளிய வழி...!


"எப்பவும் சோம்பல்..! சோம்பல்..!! எந்த வேலையைச் செய்யப் போனாலும் அசதி சூழ்ந்து கொள்கிறது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மனம் சொல்கிறது. தூக்கம் வருவது போல இருக்கிறது. ஆனால், தூக்கம் வரவில்லை. இதனால் ஏற்படும் அசதி வேறு!

மருத்துவரிடம் செல்லலாம் என்றால்… 'அ, ஆ, இ, ஈ' என்று எத்தனை பரிசோதனைகள் உள்ளனவோ அத்தனைக்கும் பட்டியல் போட்டு தந்துவிடுவார் அவர்! கடைசியில், “இரத்தத்தில் ஹீமோகுளோபின் ரொம்பவும் குறைவாக உள்ளது!” – என்று ஒரு முடிவுக்கு வந்து மீண்டும் மாத்திரைகள் பட்டியலை மாதக் கணக்கில் நீளச் செய்வார்.

இவ்வளவு செலவுக்கும், சிரமங்களுக்கும் பிறகு உடல் நிலை சரியாகுமா? என்றால் அதுதான் இல்லை. பழைய அதே சோம்பல் கதைதான்!" - என்று புலம்பியவாறே எதிர் வீட்டு இம்ரான், மாணிக்கம் தாத்தாவிடம் வந்தான்.

"வாப்பா, இம்ரான்! இப்படி வந்து உட்கார்!" - தாத்தா அவன் அமர ஒரு பாயைப் போட்டார். 

மாணிக்கம் தாத்தா நிறையப் படிப்பவர். இயற்கையை நேசிப்பவர். இயற்கை மருத்துவம்கூட நிறைய தெரிந்து வைத்திருப்பவர். 

இம்ரான் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட தாத்தா சொன்ன எல்லோருக்குமான மருத்துவ அறிவுரைதான் இது:

"நமது உடலில் ஹீமோகுளோபின் குறைச்சலால்தான் இந்த சோம்பல், களைப்பு எல்லாம் ஏற்படுகின்றன.

நாம் உண்ணும் உணவிலிருந்து நமது உடல், தனக்குத் தேவையான சத்துக்களை எந்தெந்த அளவு தேவையோ அந்தளவுகளை பிரித்து எடுத்துக் கொள்கிறது. மீதியை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்ணும் போதும் இதே நிலைதான்; தேவைக்கு அதிகமான சத்துக்களை நமது உடல் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும்.


இந்த ஹீமோகுளோபின்களின் அளவு 8 கிராமுக்கும் கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோய் வர வாய்ப்பாகிறது. உடல் மெலிந்து, களைப்பு ஏற்படுகிறது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாக மாறுகிறது. 

நமது உடலில் நிகழும் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் செல்லும் ரத்தம் நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ஏற்று உற்சாகம் பெறுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ஏற்று, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.


ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னுள் கலக்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை  ஆக்சைடாக மாற்றிநுரையீரலுக்கு திரும்ப வந்து மூச்சாக வெளியேற்றுகிறது. 

நம் உடலில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரத்த சுழற்சி இது.

சரி..! உடலில் ஹீமோகுளோபின் குறைந்துவிட்டால் அதிகரிப்பது எப்படி?

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.

நாட்டு மருந்து கடைகளில் உலர் கருப்பு திராட்சை கிடைக்கும்.

உலர் திராட்சைப் பழங்களை வாங்கி மூன்று பழங்களை ஒரு டம்ளரில் போட்டு நீர் ஊற்றுங்கள். இரவு முழுவதும் பழங்கள் நீரில் ஊற வையுங்கள். இப்போது மூன்று வேளைக்கான இயற்கை மருந்து தயார்!

காலையில் பல் துலக்கி முடிந்ததும் வெறும் வயிற்றில், நீங்கள் ஊறவைத்திருந்த பழங்களில் ஒன்றை சாப்பிட்டு பழங்கள் ஊறிய நீரையும் சிறிது குடியுங்கள். மதியம் மற்றும் மாலை என்று மூன்று வேளைக்கும் இவ்வாறே செய்யுங்கள். 


கீழே உள்ள பட்டியலில் உள்ளபடி நாள்தோறும் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி என்று பழங்களையும், நீரையும் பயன்படுத்துங்கள்: 


1-வது நாள் 1, 1, 1 = 3.
2-வது நாள் 2, 2, 2 = 6.
3-வது நாள் 3, 3, 3 = 9.
4-வது நாள் 4, 4, 4 = 12.
5-வது நாள் 4, 4, 4 = 12.
6-வது நாள் 4, 4, 4 = 12.
7-வது நாள் 3, 3, 3 = 9.
8-வது நாள் 2, 2, 2 = 6.
9-வது நாள் 1, 1, 1 = 3.

ஒன்பது நாட்கள் முடிந்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை பரிசோதித்துப் பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள்.

இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் குறிப்பிட்ட அளவு அதிகரித்து இருக்கும்.

நமது உடலிலிருக்கும் தகுந்த அளவு ஹீமோகுளோபின்தான் நோய்கள் வராமல் தடுக்கிறது. உடலுக்கு தெம்பைத் தருகிறது. வலிவோடும், வனப்போடும் உடலை மிளிர வைக்கிறது. 

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஹீமோகுளோபின்களை மேற்கண்ட எளிய இயற்கையான மருத்துவத்தால் எந்தவிதமான பக்கவிளைவும் இல்லாமல் குறைந்த செலவில் அதிகரித்துக் கொள்ள முடியும்!" - என்று முடித்தார் மாணிக்கம் தாத்தா.

இம்ரானும் தாத்தாவுக்கு நன்றி சொல்லிவிட்டு நாட்டு மருந்துகடை நோக்கி எழுந்து சென்றான்.


0 comments:

Post a Comment