NewsBlog

Wednesday, November 13, 2013

நேர்காணல்: ''போலீஸ் பக்ருதீன் வழக்கில் நடந்தது என்ன? பகுதி - 1'

 "மச்சு வீட்டு மிராசுதாரிலிருந்து தெருவோரத்து சாமான்யன்வரை சட்டம் அனைவருக்கும் பொதுவாய் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!" -- என்ற கவலையைத் தெரிவிக்கிறார் வழக்குரைஞர் புகழேந்தி. போலீஸ் பக்ருத்தீன் வழக்கை நடத்தும் இவர் வழக்கு சம்பந்தமாக கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அலட்டிக் கொள்ளாமல் பதிலளிக்கிறார்.

கல்வி அறிவும், விழிப்புணர்வும், ஒற்றுமையும் இல்லாத சமூகத்தின் அவலநிலைக்கு பக்ருத்தீன் குழு பலிகிடாவாகியிருக்கும் இந்த வழக்குகளே உதாரணம். 


பாமரனுக்கு வழக்குரைஞர் புகழேந்தி 26.10.2013 அன்று அளித்த பிரத்யேகமான பேட்டியை 'விழிகள்' Youtube இல், ஏற்கனவே பதிவேற்றி இருந்தது. அதன் லிங்க் இது: http://www.youtube.com/watch?v=3FgODwzEzRM&list=TL1nQ48aNkI0-4Sxl-kH4cA7QP6MHckW8A அதை எழுத்து வடிவில் தரும்படி வாசகர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க அந்த பிரத்யேகப் பேட்டியை அச்சு வடிவில் பாமரன் இதோ தருகிறது.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


கேள்வி: போலீஸ்  பக்ருத்தீன்  வழக்கை உங்கள் பார்வையில் எப்படி பார்க்கிறீர்கள்? 


பதில்: குற்றம் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இது உண்மையா? பொய்யா? என்று நிரூபிக்க வேண்டியது நீதிமன்றம். கைது செய்யப்பட்ட நபர்க்கு என்னென்ன உரிமைகள் சட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அந்த உரிமைகள் இங்கு மறுக்கப்பட்டிருக்கின்றன.

கேள்வி: இவர்கள் ஆரம்பத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தது உண்மைதானா? 

பதில்: ஆம்! இதற்கு முன்பு வெள்ளைதுரை என்ற காவல்துறை கண்காணிப்பாளர், மதுரையில் இருக்கும்போது, அவர் போலீஸ் பக்ருத்தீன் உள்ளிட்ட நபர்களை துப்பாக்கி காண்பித்து மிரட்டும்போது, இருவருக்கும் இடையில் சின்ன வாய் தகராறு ஏற்பட்டு அது கைதகராறாக மாறியது. அதனால் என்ன செய்தார்கள் என்றால்.. போலீஸ் பக்ருத்தீனை தேடுகிறேன் என்ற போர்வையில், கிட்ட தட்ட 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நெல்பேட்டையில் குவிக்கப்பட்டனர். இந்த வெள்ளைதுரை வீரப்பன் என்கௌண்டரில் முக்கிய பங்கு வகித்தவர். பத்துக்கும் மேற்பட்ட என்கௌண்டர்களில் பங்கு கொண்டவர். அதனால், தன்னுடைய உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு மனிதன் தலைமறைவு ஆவது என்பது இயல்பானதுதான். ஆனால், அந்த தலைமறைவு குற்றமா? இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், காரணங்கள் நியாயமானவை. 

கேள்வி: ஆந்திராவின் புத்தூரில் நடந்த சம்பவம் என்ன? அவை ஊடகங்களில் பரபரப்பு செய்திகளாக வெளிவந்துள்ளன. உண்மையில், புத்தூரில் நடந்தவை என்ன? 

பதில்: எங்களுக்கு நான்காம் தேதி இரவு ஏழு மணிக்கு ஒரு தகவல் கிடைக்குது. போலீஸ் பக்ருத்தீன் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் அது. ஊடகங்களில் இருக்கின்ற நண்பர்கள் மூலமாக அதை நாங்க விசாரித்தபோது, அது உண்மைதான் என்று தெரியவருகிறது. நாங்கள் என்ன செய்வது என்று யோசனையில் இருந்தபோது, இரவு 9 மணிக்கு ஆந்திர எல்லையில் கொண்டு போய் அவரை என்கௌவுண்டர் செய்யப் போவதாக திட்டம் இருப்பதாக செய்தியாளர்களில் முக்கியமானவர் தெரிவிக்கிறார். ஆனால், அடுத்தநாள் செய்திதாள்களைப் படித்தபோது, கைது பற்றிய காவல்துறை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்தான் வெளியாயிருந்தன.

ஆகவே, கைது செய்யப்பட்ட ஓர் நபரை சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பது சம்பந்தமாக உச்சநீதிமன்றம் 'D.K. பாஸீ' வழக்கில் அறிவுறுத்திய பதினொன்று அம்ச கட்டளைகளில் ஒன்றாக கைது பற்றி  உறவினர்களிடம் உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கட்டளை நிறைவேற்றப்படவில்லை. உறவினர், நண்பர்களிடம் கைது பற்றி தெரிவிக்கவில்லை என்பதால் அவரை முன்பே சொன்னது போல, ஆந்திர எல்லையில் வைத்து என்கௌவுண்டர் செய்ய திட்டமிட்டு இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி ஓர் மனுவை தாக்கல் செய்வதற்கு முன்னாலேயே தகவல் வருகிறது, ‘இதுபோல புத்தூரில் காவல்துறை ஓர் வீட்டை சுற்றி வளைத்து விட்டது!” – என்று. இந்த செய்தியை அடுத்து அன்று மாலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.


ஆனால், புத்தூரில் நடந்தது இதுதான்: “இரவு 3 மணி அளவில், காவல்துறையினர் வீட்டு கதவைத் தட்டி உள்ளனர். திறக்கும்போது, காவல்துறையினர், பிலால் மாலிக்கின் மனைவியை தள்ளிவிட்டு வீட்டுக்கு உள்ளே நுழைந்திருக்கிறார்கள். (அதற்கு பின் சில சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதை வெளியில் சொல்ல கூடாது! – என்கிறார் வழக்குரைஞர் புகழேந்தி) பன்னா இஸ்மாயீல் டிஎஸ்பியாலே சுடப்பட்டிருக்கிறார். மதுரையைச் சேர்ந்த டிஎஸ்பி அவர். இஸ்மாயீல் காயம் பட்டிருக்கிறார்.

அதேபோல, போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்ட விஷயத்தில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. குறிப்பாக கைது அறிக்கையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த சிபிசிஐடி ஆய்வாளர், அவர்தான் வெள்ளையப்பன் கொலை வழக்கை ஆய்வு செய்பவர் – இவர்தான் கைது செய்தார் என்று ஆவணங்களில் இருக்கின்றது. ஆனால், அரசு ஆணையிலோ ‘லட்சமணன், வீரகுமார் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் கைது  செய்தததாக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. கைது தொடர்பான இத்தகைய முரண்பாடுகள் நிறைய இருக்கிறது. அவராக (போலீஸ் பக்ருதீன்) சரணடைந்தாரா?  இல்லை கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன. இதில் சரணடைந்ததற்கான ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன. தகுந்த நேரத்தில் அதை நீதிமன்றத்தில் சமர்பிப்போம். அதைக் குறித்து தற்போது விரிவாக பேச முடியாது. 


கேள்வி: பாஜக இந்து அமைப்பின் பிரமுகர்கள் பரமக்குடி முருகன், வேலூரில் டாக்டர் அரவிந்த் ரெட்டி, வெள்ளையன், மதுரையில் சுரேஷ், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் இப்படி இவர்கள் அனைவரின் கொலை வழக்குகளிலேயும் ஏற்கனவே சிலரை கைது செய்து வழக்குகளை பதிவு செய்துள்ள நிலையில், அதே குற்றங்களை மீண்டும் போலீஸ் பக்ருதீன் மீது போட்டு அவரும் ஒப்புக் கொண்டுள்ளதாக சொல்கிறார்களே இது மூன்றாம் தர நடவடிக்கைகள் மூலமாக அதாவது சித்திரவதைகள் மூலமாக ஒப்புதல் பெற்றனரா?

பதில்: இது குறித்து நீதி மன்றத்தில் சம்பந்தப்பட்டவர்களான போலீஸ் பக்ருதீனும், பிலால் மாலிக்கும், 'போலீஸார் தங்களை துப்பாக்கியைக் காட்டி இந்த வழக்கில் சம்பந்தம் உள்ளதாக ஒப்புக் கொள்ளும்படி மிரட்டியதாகவும், வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கியதாகவும், தம்மை காவல்துறையினர் சித்திரவதை செய்ததாகவும், ஒரு மிருகத்தைப் போல சங்கிலி போட்டு இழுத்து வந்ததாகவும், தான் எந்த ஒப்புதல் வாக்குமூலமும் தரவில்லை என்றும், சில பேரை சாட்சிகளாகக் கொண்டு வந்து அடையாளம் காட்டியதாகவும், போட்டோ எடுத்ததாகவும் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள். அதை நீதிபதியும் பதிவு செய்துள்ளார். ஆக, இதிலிருந்தே, இந்த இருவரும் மிரட்டப்பட்டு இருக்கிறார்கள்; இவர்களிடம் வெற்றுத்தாள்களில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள்; அந்த தாள்களை வைத்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக அந்த தாள்களில் காவல்துறையினர் எழுதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

கேள்வி: போலீஸ் பக்ருதீன் சரணடைந்தாரா? அல்லது கைது செய்யப்பட்டாரா? 

பதில்: போலீஸ் பக்ருதீன் திருவல்லிக்கேணி மசூதியில் தொழுகை நடத்திவிட்டு மதியம் 2.30 மணியளவில் ஆதம் மார்க்கெட் பேருந்தில் ஏறி சூளையில் வந்து இறங்குகிறார். சூளையில் ஹஜ் கமிட்டிக்கு வரும் வழியில் கைது செய்ததாக காவல்துறை சொல்கிறது. ஆனால், கைது குறிப்பாணையில் உள்ளவற்றைப் பார்க்கும்போது, காவல்துறையினர் ஏதோ கதை கட்டுவது போலதான் இருக்கிறது.

உண்மையில், போலீஸ் பக்ருதீன் சம்பவத்தில் அவர் சரணடைந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கைது செய்யப்பட்டதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

கேள்வி: தீர்த்துக்கட்டும் ஒரு தீவிரவாத இயக்கம் சம்பந்தமாக செய்திகள் வந்திருக்கே! இது சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன? 


பதில்: (சிரிக்கிறார்) தீர்த்துக்கட்டும் இயக்கமா? அப்படின்னு இவர்கள் யார் யாரை சொல்கிறார்களோ.. அந்த மதுரையைச் சேர்ந்த தீர்த்துக்கட்டும் தீவிரவாத இயக்கத்தினர்தான் (மீண்டும் சிரிக்கிறார்) அன்று மதுரையில் என்னோடு நீதிமன்றத்துக்கு வந்தார்கள். என்னோடு உணவு அருந்தினார்கள். ஆக பாதிக்கப்பட்டவர்களுக்கு – போலீஸ் பக்ருதீனுக்கோ, பிலால் மாலிக்குக்கோ யாரும் சட்ட ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ உதவி செய்யக் கூடாது என்பதற்காகதான் இதெல்லாம்! 

இவர்கள் சொல்லும் தீர்த்துக்கட்டும் தீவிரவாத படை என்று சொல்பவர்களின் காரில்தான் நாங்கள் வேலூர்  சென்றோம். இப்படி ஒவ்வொருவராக மிரட்டி…. பயமுறுத்தி இந்த வழக்கிலே எந்த ஒரு உதவியையும் சட்டபடியான, நியாயபடியான அரசியல் அமைப்பு வழங்கி இருக்கிற ஒரு மனிதனின் உரிமைகளைகூட அவர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக மிரட்டும் தொனியில் காவல்துறை கிளப்பிவிட்ட பீதிதான் (‘தீர்த்துக்கட்டும் தீவிரவாத படை’) தானே தவிர இதில் சிறிதுகூட உண்மையில்லை. 

கேள்வி: நீங்க இந்த வழக்குகளில் பார்த்தவரை.. முஸ்லிம்களில் ‘சங்பரிவார்' போல ரகசியமாக ஏதாவது திட்டத்தை வைத்து செயல்படுவதைப் போல பார்த்தீர்களா? 

பதில்: அப்படி எந்த ரகசிய திட்டமும் வைத்து செயல்படுவதாய் எனக்கு தெரியவில்லை. 

கேள்வி: சரி! இந்த கைதுகளுக்குப் பிறகு, புத்தூரில் பெரிய ராணுவ நடவடிக்கையைப் போல பரபரப்பாக்கி கைது செய்து கொண்டுவந்த பிறகு அரசாங்கம் காவல்துறையினருக்கு வெகுமானங்கள், பரிசுகள் என்றெல்லாம் கொடுத்திருக்கிறது. இது சரிதானா? 

பதில்: இது சம்பந்தமாக நான் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளேன். அது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 20 பேருக்கு அரசு சன்மானம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த ஜி.ஓ.வை நாங்க ரத்து செய்ய சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.

இதற்கு முன்பு இப்படிப்பட்ட வெகுமானங்கள் கொடுத்தது தவறு என்று 2008-லேயே, ‘போலீஸ் கமிஷன்’ ஒரு முழு விசாரணை நடத்தி, “இத்தகைய செயல் காவல்துறையின் உள்ளுக்குள் மிகப் பெரிய பிளவுகளை உண்டாக்கும், காவல்துறையின் கட்டுமானத்தையே சீர்குலைக்கும். அதனால் அனுமதிக்க முடியாது! என்று கூறியுள்ளது. அப்போது பதவியில் இருந்த டிஜிபிதான் இப்போதும் டிஜிபி பொறுப்பிலிருக்கிறார்.


பரிசுகள், பதவி உயர்வுகள் என்ற முடிவு தவறானது. காவல்துறையின் மாண்பையே கெடுத்துவிடக்கூடியது. எப்படியென்றால்.. இப்போது கைது செய்யப்பட்டவர்களைப் பிடிக்க மூன்று வருடங்களுக்கு முன்னரே சிபிசிஐடிக்கு அந்தப் பணி கொடுக்கப்பட்டது. மூன்று வருடம் கழித்துதான் அவர்கள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த மூன்று வருட வேலையே சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிப்பதுதான்! இது தவிர இவர்களுக்கு வேறு வேலையும் இல்லை. இதற்காகதான் இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டது. இப்போது கண்டுபிடிச்சதற்கு வெகுமானம் வாங்குகிறார்கள்!

இதே 'லா அண்ட் ஆர்டர்' ல், (Law and Order) தினம் ஒரு ரவுடியை அல்லது சட்ட ஒழுங்குப் பிரச்சனையை போலீஸார் எதிர்கொள்கிறார்கள் அல்லது முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் பந்தோபஸ்த் எல்லாவற்றிலும் பணியாற்றுகிறார்கள். 24 மணி நேரமும் தங்கள் கடமையில் மிகப் பெரிய அர்ப்பணிப்பு செய்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த பரிசுகளும் கிடையாது.


ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பிடிக்க நியமிக்கப்பட்டவர்கள் தேடுவதாக சொல்லி தேடலாம்; சுற்றலாம் அல்லது வீட்டுக்குள்ளேயே இருக்கலாம். ரகசிய தகவல்களைச் சேகரிக்க என்று ஊட்டிக்குப் போய் 10 நாட்கள் தங்கியிருந்தாலும் அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆக, இது கொடுக்கப்பட்ட ஒரு வேளை. அதை செய்தற்காக அவர்களுக்கு சம்பளமும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது. 

கொடுக்கப்பட்ட வேலையைச் செய்ததற்காக இன்னும் வெகுமானங்கள், பதவி உயர்வுகள் என்பது மோசமான விஷயம். அப்படி பார்த்தால்.. "வெடிகுண்டு வச்சிருந்தவரைப் பிடித்தோம்! அவரை குண்டர் தடுப்பு சட்டத்துலே இவர் போட்டாரு! அந்த ஆவணத்துலே கையெழுத்துப் போட்டேன்!  அதனால் எனக்கும் புரமோஷன் தாங்க! இல்லை ஓர் பைல் வேகமாக மூவ் பண்ண அதுக்கு புரமோஷன் கொடுங்கன்னு!" - யாராவது கிளைம் பண்ண முடியுமா? முடியாதில்லையா? அது, அது அவங்க செய்ய வேண்டிய வேலை. அதற்காகதான் சம்பளமும் கொடுக்கப்படுகிறது. அதைவிட்டு விட்டு அவங்க இயல்பாக செய்த வேலைக்காக புரமோஷன் இந்த அவார்ட், சிறப்பு விருதுகள் தருவது மிகவும் தவறானது.

கேள்வி: வழக்கு நடத்த கூடாதென்று சொல்லி வேலூரில் உங்களை சில இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனரே? 

பதில்: எந்த ஒரு அமைப்பும் போராட்டம் நடத்துவதற்கும் அவர்களுக்கு உரிமையுண்டு. அதனால், என்னை எதிர்த்து போராட்டம் நடத்தியதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், அவர்கள் வைத்த கோரிக்கை தவறு. ஒரு நபரை தீவிரவாதி முத்திரை குத்துவதற்கு உங்களுக்கோ, எனக்கோ, பத்திரிகைகளுக்கோ அல்லது மூன்றாவது நபருக்கோ உரிமை கிடையாது. அதற்குதான் நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவர்கள் தீவிரமாக செயல்பட்டார்களா? அல்லது தீவிரவாத இயக்கங்களில் இருந்தார்களா? அவற்றில் பங்கெடுத்தார்களா? என்பது சாட்சிகளின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவு செய்யும்வரை யாரையும் குற்றம் சாட்ட முடியாது. ஆக, அவர்களின் கோரிக்கை தவறு; அவர்களின் போராட்டம் தவறு என்று நான் கூற முடியாது. அது அவர்களின் உரிமை. 


கேள்வி: அய்யா, இது நம் மாநிலம் தாண்டிய ஒரு கேள்வி. மதானி, கேரளாவின் முக்கிய தலைவர்; கைது செய்யப்பட்டிருக்கிறார். பல்வேறு நோய்த்தாக்குதல்களுக்கு ஆளான அவருக்கு தொடர்ந்து மருத்துவம் மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது நீதிமன்றம் மூலமாக மருத்துவத்திற்கான அனுமதி பெற்றிருக்கிறார். மதானிக்கு தகுந்த மருத்துவ வசதிகள் செய்து தரும்படி நீதிமன்றம் கட்டளையிட்டிருக்கிறது. இந்த நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: என்னைப் பொறுத்தவரை நீதிமன்றங்களோ, அரசோ குடிமக்களை சமமாக பார்க்கவில்லை என்றே கூறுவேன். பணக்காரர்களுக்கும் அல்லது பெரும்பான்மையினருக்கும் சார்பாக நடக்கின்றன. 

மதானி கோயம்பத்தூர் சிறையிலிருக்கும் போதே உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்தார். அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கையோடு பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்தது பழிவாங்க வேண்டும் என்பதற்காகத்தான்!
 

ஒவ்வொரு குடிமகனுக்கும் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகள் உண்டு. அவர்களுக்கான மருத்துவ வசதியை அரசாங்கம் கண்டிப்பாக செய்து தர வேண்டும். 

ஆனால், இன்றோ அந்த வசதியை சிறைநிர்வாகம் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் செய்து தருகிறது. பாவப்பட்ட மக்களை பொறுத்தவரை பழிவாங்க வேண்டும் என்ற அரசியல் காரணங்களுக்காக பல்வேறு நபர்களுக்கு சிகிச்சை கொடுக்கப்படாமல் இருக்கிறது. அதனால், இது ஒருவகையான அடுக்குமுறை, அழித்து ஒழிக்கும் நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும். 


கேள்வி: அய்யா, இந்த சந்திப்பின் இறுதியாக உங்களிடம் ஒரு கேள்வி. இந்த வழக்கின் அனுபவங்களையொட்டி முஸ்லிம் சமூகத்துக்கு உங்கள் அறிவுறுத்தல் என்ன?

பதில்: முஸ்லிம்கள் என்றைக்குமே ஒடுக்கப்படுகிற சமூகமாகவே இருக்கிறார்கள். இலகுவாக அரசு அதிகாரத்தால் பிளவு படுத்தவும் படுகிறார்கள். அந்த வகையில், இஸ்லாமிய சமூகம் ஓர் மிக பெரிய சமூகமாக இன்றைக்கு இருந்தால்கூட அது பல்வேறு வகையில் அரசின் சதி வேலைகளால் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் நேர்மையான இயக்கங்கள், போராடக் கூடிய இயக்கங்களின் பின்னால் அனைவரும் அணிவகுத்து நின்றால் மட்டுமே இதுபோன்ற அரசின் ஒடுக்குமுறைகளை நாம் சமாளிக்க முடியும். 

கேள்வி: அப்படியானால்…. தீவிரவாதிகள் யாரும் இல்லை என்கிறீர்களா?


பதில்: தீவிரவாதிகள் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. தீவிரவாதிகள் என்று நான் யாரையும் சொல்லவும் முடியாது. 

கோயம்புத்தூரை எடுத்துக் கொண்டாலே, அங்கே செல்வராஜ் கொல்லப்படுகிறார். அதற்கு பிறகு நடந்த கலவரங்களில் கிட்டதட்ட 19 பேர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதற்கு காரணமான மாசாணமுத்து, முரளியும் பதவி உயர்வு பெற்று இருக்கிறார்கள். அந்த 19 பேர் இறந்ததற்கு நீதி இன்னும் வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் இயல்பாக மக்கள் உணர்ச்சிவசப்பட வாய்ப்பு உண்டு. அதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தனக்கு அரசு நியாயமாக வழங்க கூடிய உரிமைகளை வழங்கவில்லை என்றால், கண்டிப்பாக மாற்றை தேடத்தான் செய்வார்கள். எல்லோரும் அப்படி தேடுவார்கள் (மாற்று வழியை) என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட சிலர் இப்படி செய்யலாம். காரணம் என்னவென்றால், அரசின் அதிகாரம் அதுபோல இருக்கிறது. அதை மாற்றுவதற்கான வழி என்னவென்று பார்க்க வேண்டும். அதை இந்த ஒரு பேட்டியில், சந்திப்பில் தீர்மானித்துவிட முடியாது என்பதே என் கருத்து.

நேர்காணல் முடிந்தது.

- தொகுப்பு: Z. மெஹர் அலி 
காணொளிக்கு: http://www.youtube.com/watch?v=3FgODwzEzRM&list=TL1nQ48aNkI0-4Sxl-kH4cA7QP6MHckW8A
 


0 comments:

Post a Comment