NewsBlog

Wednesday, November 27, 2013

நடப்புச் செய்தி: நீதி வழுவாத எழுது கோலாகட்டும்



ஜமாஅத்தின் அகில் இந்தியா மாநாடு ஹைதராபாத்தில் நடந்த சமயம். மௌலான சித்திக் ஹஸன் சாஹெபை பேட்டி எடுப்பதற்காக அவரைச் சந்திக்க போய் இருந்தேன். தலைவர்கள் அறையில் பார்த்தால் இல்லை. விசாரித்து அவர் இருந்த இடம் தேடி சென்றால்.. சாதாரண தொண்டர்களோடு தொண்டராய் அவர் படுத்திருந்த மிகவும் எளிமையானவர் அவர்

மலைநாட்டு மைந்தனுக்கு உரிய வெள்ளை வேட்டி சட்டை, அதுவும் வேட்டியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு.. அக்குளில் இடுக்கிய சிறு தோல் பையுடன் அவர் களப் பணி ஆற்றிட கிளம்பும் அதிசயம்.
அதனால் தான் கேரளம் மண்ணின் இயல்புகளோடு இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளில் முதன்மை மாநிலமாக வெல்ல முடிந்தது. சிகரங்களை நோக்கி செல்கிறது. இன்ஷா அல்லாஹ் இன்னும் செல்லும் வெற்றிவாகைச் சூடும்.

மீடியா ஒன் தொலைக்காட்சி சேனல் தொடக்கவிழாவில் பேராசிரியர் சித்தீக் ஹஸன் ஆற்றிய உரையிலிருந்து....


இறைவனின் தனிப்பெருங் கிருபையால் நாம் இங்கே ஒரு மிகப்பெரும் பணியைத் தொடக்கியிருக்கின்றோம். மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. பயமாகவும் இருக்கின்றது.

இந்த நேரத்தில் ஒரே ஒரு குறிப்பை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

'தஃவத்' ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அதிகாரப்பூர்வ ஏடாக (வாரம் மும்முறை) தலைநகர் தில்லியிலிருந்து  கடந்த அறுபதாண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கின்றது.
 
இன்றும் இதில் வரும் ஆக்கங்கள் நாடு முழுவதும் மட்டும் அல்ல, வெளிநாடுகளிலும் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகின்றன. அதில் வெளியாகும் கட்டுரைகளும் தலையங்கங்களும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் வருகின்றன.

பல்லாண்டுகளுக்கு முன்பு அந்த இதழின் ஆசிரியராக மௌலானா முஹம்மத் முஸ்லிம் என்கிற ஒப்பற்ற, தன்னலமற்ற, தலைவர் இருந்தார்.

அவருடைய சிந்தனைகளைப் போன்றே அவருடைய எழுத்துக்களும் கூர்மையானவை. இதயங்களைச் சிலிர்த்தெழச் செய்பவை.
அவர் பன்முக ஆற்றல் கொண்டவர். சமூக ஆர்வலர். அழைப்பாளர். நீதி தவறா நேர்மையாளர். மௌன உழைப்பாளி. இலட்சிய எழுத்தாளர்.

பேனாவும் கையுமாக இருந்தாலும் அவருடைய தொடர்புகளும் பரந்து விரிந்திருந்தன. அவருடைய காலத்தில் இந்த நாட்டில் இருந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலத் தரப்பினருடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார் அவர்

அந்தக் காலத்தில் நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த பிளிட்ஸ் ஆங்கில இதழாசிரியர் பி.கே. கரன்ஜியாவும் அவருடைய நண்பர்களில் ஒருவர்

பிற்காலத்தில் பிரதமராக உயர்ந்த கலை ஆர்வம் மிக்க அரசியல் தலைவர் இந்தர் குமார் குஜ்ராலும் அவருடைய நண்பர்தான்

அன்றும் இன்றும் ஓயாது எழுதிக்கொண்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரும் அவருடைய நண்பர்தான்

இவ்வாறு ஏராளமான நண்பர்களைப் பெற்றிருந்தார் மௌலானா முஹம்மத் முஸ்லிம்.

அவருடைய வீட்டுக்கும் இந்தப் பிரமுகர்கள் வருவார்கள். நிறைய நேரம் பேசிக் கொண்டிப்பார்கள். இயக்கப் பணிகளுக்காக எழுத்து சேவைக்காக வாழ்வையே அர்ப்பணித்திருந்த மௌலானாவின் வீட்டில் ஏழ்மை குடி புகுந்திருப்பதை அந்தப் பிரமுகர்களும் பார்த்தார்கள்.

அவர்களில் ஒருவர் மௌலானா முஹம்மத் முஸ்லிம் சாகிபிடம் சொன்னார்:
"ஒரு யோசனை சொல்லட்டுமா? ஒரே நாளில் உங்களுடைய வாழ்வே தலைகீழாக மாறிவிடும்!"

மௌலானா மௌனமாக அவரையே பார்க்க அந்தப் பிரமுகர் தொடர்ந்து சொன்னார்

"உங்களுடைய பேனாவை சற்றே வளைத்து விடுங்கள். வாழ்க்கை சிறந்துவிடும்"

அதனைக் கேட்ட மௌலானா நிதானமாக, தீர்க்கமாக, அழுத்தம்திருத்தமாகச் சொன்னார்

"இறைவனின் உவப்பைப் பெறுவதற்காகவும் மறுமையில் வெற்றி பெறுவதற்காகவும் கையில் எடுத்துள்ள பேனா இது. இது உடையுமே தவிர எந்தக்காலத்திலும் வளையாது"

அன்பர்களே!

மீடியா ஒன் சேனல் தொடங்கியிருக்கின்ற இந்த வேளையில் நான் கூற விரும்புகின்ற செய்தியும் ஒன்றே ஒன்றுதான்.

உங்களுடைய பேனா உடைந்து போகலாமே தவிர, வளையக் கூடாது!

புகழ் அனைத்தும் இறைவனுக்கே!


தகவல்: டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்







0 comments:

Post a Comment