NewsBlog

Tuesday, April 9, 2013

சிறப்புக் கட்டுரை: 'நபிகளாரின் திருச் செய்தி: ஓர் இறை! ஓர் நிறை!'


நபிகளார் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கத்தரிசி என்பது தெரியும். அது சரி… நபிகளார் கொண்டு வந்த செய்திதான் என்ன?

ரோமப் பேரரசர் ஹெர்குலஸ். அவர் ‘பைத்துல் முகத்தஸ்’ எனப்படும் ஜெருசலேத்தில் இருந்தபோது, நபிகளார் அவருக்கு எழுதியிருந்த கடிதம் கிடைத்தது. யாராவது ஒரு அரபியர் கிடைத்தால். அவரிடம் நபிகளார் பற்றிய தகவல்களை விசாரிக்கலாம் என்று அவர் காத்திருந்தார். அப்போது மக்கத்து குறைஷி பிரமுகர் அபூ சுப்யானையும், அவரது தோழர் சிலரையும் தற்செயலாகச் சந்தித்தார். அவர்களிடம் ஹெர்குலஸ் பல கேள்விகளைக் கேட்டார். அதில் ஒன்றுதான் ‘நபிகளார் எதன்பால் மக்களை அழைக்கிறார்?’- என்பது குறித்த கேள்வி.

அபூ சுப்யானை நோக்கி ஹெர்குலஸ் இப்படி கேட்டார்: “முஹம்மது உங்களிடம் அப்படி என்னதான் கூறுகின்றார்?’

நபிகளாரிடம் கடும் விரோதம் பாராட்டி வந்தார் அபூ சுப்யான். ஆனாலும், நபிகளார் குறித்து நேர்மையான முறையில்தான் அவரால் பதிலளிக்க முடிந்தது. அவர் இப்படி சொன்னார்:

  • “ஒரே இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள். வானங்களிலும், பூமியிலும் இறைவனின் ஆட்சியே நடக்கிறது. சர்வலோகங்களிலும் அவனுடைய ராஜாங்கமே நடக்கிறது. இந்த அதிகாரத்திலும், நிர்வாக அமைப்பிலும் அவன் யாரையும் இணை, துணையாக வைத்துக் கொள்ளவில்லை.
  • இறைவனின் சக்திக்கு நிகர் வேறு சக்தியில்லை. யதார்த்தம் இதுவாக இருக்கும்போது, மனிதர்கள் இறைவனுக்கு மட்டுமே தலை தாழ்த்தி வணங்கிட வேண்டும். அவன் மீதே அன்பு வைக்க வேண்டும்.
  • இறைவனுக்கு அடிபணிவதிலும், இறைவனை வணங்குவதிலும், இறைவனின் மேலாதிக்கத்திலும் எவரையும் இணை வைக்கக் கூடாது. எல்லாவற்றுக்காகவும் அவனிடமே உதவி கேட்க வேண்டும்.
  • முன்னோர்களின் கோட்பாடுகளையும், இணைவைப்புச் செயல்களையும் விட்டுவிட வேண்டும்.
  • தொழ வேண்டும்.
  • சொல்லாலும், செயலாலும் வாய்மையுடன் வாழ வேண்டும்.
  • ஆணும் – பெண்ணும் ஒழுக்கத்தையும், கற்பையும் பேணி வாழ வேண்டும்.
  • சக மனிதர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
  • மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே! ஒருவருக்கொருவர் சகோதரர்களே! ரத்த உறவு முறைகளே!”

நபிகளாரின் அழைப்பு, அன்னார் கொண்டு வந்த திருச் செய்தியின் உள்ளடக்கம் இதுதான்!

‘அம்ரு இப்னு அபஸா’ (இறையருள் பொழிவதாக!) என்பது அந்த நபித்தோழரின் பெயர். இவர் நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்த தொடக்கக் காலத்தில் நபிகளாரை மக்கா நகரில் சந்தித்தார். அப்போது அவருக்கும் நபிகளாருக்கும் நடந்த உரையாடல் இது:

“நீங்கள் யார்?”

“நான் இறைவனின் தூதராவேன்!”

“… இறைத்தூதர் என்றால்…?”

“இறைவன் என்னைத் தனது தூதராக.. அனுப்பியுள்ளான்!”

“என்ன செய்தியுடன் இறைவன் உங்களை அனுப்பியுள்ளான்?”

  • மக்கள் தம் உறவினருடன் இணைந்து வாழ அறிவுறுத்த வேண்டும்!
  • சிலை வணக்கம் ஒழிக்கப்பட வேண்டும்!
  • இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவக் கொள்கை பரப்ப வேண்டும்!
  • இறைவனுடன் வேறு எவரையும், எதையும் இணை வைக்கக் கூடாது!

இது போன்ற நோக்கங்களுடன் இறைவன் என்னை அனுப்பியுள்ளான்!”

நபிகளார் தமது வருகையின் நோக்கத்தை வாய்ப்பட ரத்தினச் சுருக்கமாக சொன்னது இது.



இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையிலான உறவை சீர்ப்படுத்த வேண்டும். அந்த உறவு சரியான அடிப்படைகள் மீது நிறுவ வேண்டும். அதற்கான அடிப்படை …. ‘இறைவன் ஒருவன்’ – என்ற ஏகத்துவமாகும். இறைவனின் அதிகாரத்தில் வேறு எவரது தலையீட்டையும் அனுமதிக்கக் கூடாது! இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். இறைவனின் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும்.

மனிதர்களுக்கிடையிலான சரியான தொடர்பின் அடிப்படைகள் பரஸ்பர அனுதாபமும், பரிவும், இரக்கமுமேயாகும். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள். ரத்த பந்த உறவு முறையினர். அதனால், ஒருவர் மற்றொருவரிடம் பரிவுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் அநீதிக்கு ஆளாகும்போது, அனைவரும் அநீதி இழைக்கப்படுபவருக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழ வேண்டும். ஆபத்தில் சிக்கிக்  கொண்டோரை ஓடோடிச் சென்று காக்க வேண்டும்.

நபிகளாருக்கு முன் எல்லா இறைத்தூதர்களும் இந்த அடிப்படைச் செய்திகளைத்தான் சொன்னார்கள். அதாவது, ஏகத்துவம் எனப்படும் ஓரிறைக் கொள்கையும், மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும் … முதல் இறைத்தூதருமான ஆதிபிதா ஆதம் அவர்களின் சந்ததிகள். சகோதர உறவுமுறை கொண்டவர்கள் என்பதுதான் அனைத்து இறைத்தூதர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியின் சாராம்சம்.

முகீரா பின் ஷீஃபா (இறையருள் பொழிவாதாக!) இவரும் மற்றொரு நபித்தோழர்.

ஒருமுறை, பாரசீகத்து தளபதி ருஸ்தூமுடன் நடந்த உரையாடலில் சொன்னார்:

“அய்யா! நாங்கள் வணிகர்கள் அல்ல. வணிகத்துக்கான புதிய புதிய சந்தைகளைத் தேடிக் கொண்டிருப்பதற்கு! அது எங்கள் நோக்கமும் அல்ல; எங்கள் இலக்கும் அல்ல. எங்களது நோக்கமும், குறிக்கோளும் மறு உலகம்தான்!

நாங்கள் இறைவனின் கட்டளைகளான இஸ்லாத்தின் கொடியை தோளில் சுமந்து நிற்பவர்கள். அந்த வாழ்க்கையின் பக்கம் மக்களை அழைப்பதே எங்கள் குறிக்கோள். வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதும், முஹம்மது நபிகளார் இறைவனின் திருத்தூதர் என்று சான்று பகர்வதும் இந்த மார்க்கத்தின் அடிப்படை. மனிதன் தன்னைப் போன்ற சக மனிதனுக்கு அடிபணிவதிலிருந்து அவனை விடுத்து இறைவனுக்கு அடிபணிந்து வாழச் செய்ய வேண்டும் என்பதும் இந்த வாழ்க்கை நெறியின் அறிவுரையாகும்!”

இதைக் கேட்ட பாராசீக தளபதி வியந்து சொன்னார்:

“நல்ல அறிவுரைதான்! இன்னும் என்ன சொல்கிறது உங்கள் மார்க்கம்?”

அதற்கு நபித்தோழர் முகீரா பதிலளித்தார்:

“மனிதர்கள் அனைவரும் ஆதமின் வழித்தோன்றல்களே! அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்பதும் அந்த அறநெறியின் போதனைகளாகும்”



இவை நபிகளார் கொண்டு வந்த இஸ்லாம் என்னும் இறைநெறியின் அடிப்படை செய்திகளில் சில. எவர் விரும்புகின்றாரோ அவரை மனிதர்களின் அடிமைப்படும் தளைகளிலிருந்து விடுவித்து இறைவனுக்கு, எங்கும் வியாப்பித்திருக்கும் அந்த பரம்பொருளுக்கு அடிபணியும் வாழ்க்கை நெறிக்கு அழைத்துச் செல்லும் திருப்பணி இது.

படைத்தவனின் கட்டளைப்படி மனித குலத்தை வாழ அழைப்பதே நபிகளாரின் திருச் செய்தியாகும். அதுவே உலகில் அமைதியையும், சமாதானத்தையும் தரும்.




0 comments:

Post a Comment