NewsBlog

Monday, April 1, 2013

சிறப்புக் கட்டுரை: 'வாக்குமூலம்..'




அது ஒரு அனல் பறக்கும் வெள்ளி நண்பகல்.

குஜராத்தின் ஷாபூர் தொகுதிக்குட்பட்ட அஹ்மதாபாத்தின் மணிநகர் பகுதி. எந்த அச்சத்துக்கும், அதிகாரத்துக்கும் அடிபணியாத நிஜ இரும்பு மங்கை ஸ்வேதா பட் சின்ன டெம்போவிலிருந்து கீழே குதித்து இறங்குகிறார். டெம்போவைச் சுற்றியும் காங்கிரஸ் கொடிகள் பதாகைகள். அவரைச் சுற்றியும் கட்சியினரின் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் திரண்டு நின்ற கட்சிக்காரர்கள்.

நீல வண்ண நிறத்திலான புடவை. கரு நீல ரவிக்கைச் சட்டை. ஆடைக்கு பொருத்தமான அதே நீல வண்ணத்தில் ஒரு சிறு நெற்றிப் பொட்டு. ஷாபூர் தொகுதியின் குறுகலான … குப்பைகள் கொட்டிக் கிடந்த தெருக்களில் விறு விறுவென்று நடக்க ஆரம்பித்தார்.

நெரிச்சலான வீடுகளும், தெருவெங்கும் கொட்டிக் கிடந்த குப்பைகளுமாய் நகரின் இதயப்பகுதியாக அது திகழ்ந்தாலும் கடைந்தெடுக்கப்பட்ட ஒரு சேரியாகவே இருந்தது அதன் தோற்றம்.

இங்கிருந்துதான் சங்பரிவாரின் கனவு பிரதமர், நவீன கொலைக்களத் தலைவன் நடப்பு காலத்தின் ஹிட்லர் மதிப்பிற்குரிய நரேந்திர மோடியும் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இதே மணிநகரிலிருந்துதான்!

கன்னியாகுமரியிலிருந்து.. கஷ்மீரைவரையிலான சங்பரிவாரின் நம்பிக்கை நாயகனும், பெரும் கொலைக்கலைஞருமான நரேந்திர மோடியை எந்த ஆண்மக்களும் எதிர்த்து நிற்காத களத்தில் எதிர்த்து நிற்கும் அந்த பெண் சிங்கம் ஸ்வேதாவை பார்க்க பெரும் ஆவலாய் திரண்டது கூட்டம். ஒவ்வொரு குடிசைக்கு முன்பும்.. திரளாய் நின்றிருந்த அந்த ஏழை – பாழைகளிடம் புன்முறுவலுடன் “நமஸ்தே!” என்ற முகமன் சொல்லியவாறு விசாரிக்க ஆரம்பித்தார்.

வழக்கம் போலவே என்றும் புறக்கணிக்கப்படும் ஏழை – எளியோரான அவர்கள் தங்களது அடிப்டை வசதிகளான குடிநீர், மற்றும் கழிவறை, சாலை போன்ற வசதிகள் வேண்டி குறைப்பட்டுக் கொண்டனர்.

அவர்கள் அனைவருக்கும் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று உறுதிமொழி அளித்துக் கொண்டிருந்தார் ஸ்வேதா.


கண்ணீரோடும், புன்னகையோடும், வாய்விட்டு சிரிப்போடும் தன் உள்ளக்கிடக்கையைத் திறக்கிறார் அந்த 48 வயதான பெண்.

“நான் நரேந்திர மோடியை மறக்க மாட்டேன்! என்னால் முடியாதும் கூட! அவர் தன்னலத்துக்காக யாருக்கும்.. எந்தத் தீங்கையும் செய்ய தயங்காத மனிதன். இன்று எனக்கு மட்டுமல்ல.. குஜராத்தின் ஒவ்வொருவரும் இந்த சித்திரவதைக்கு ஆளாவார்கள் என்ற நிர்பந்தத்திலேயேதான் உள்ளார்கள். அவரது கொள்கை மிக மிக எளிதானது. அது இதுதான்: “ நீ என்னோடு இல்லையென்றால்… நீ எனது எதிரி அன்றி வேறில்லை!”   

இந்துத்துவ தீவிரவாதிகளால் தனது குடும்பத்தார் அலைகழிக்கப்பட்ட அந்த சோகமான பின்னூட்டத்தில் நுழைகிறார் ஸ்வேதா:

அரசியல் எனது தொழில் அல்ல. சூழ்நிலைகளால் நான் அரசியலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். ஒரு பத்தாண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகள் அவை.. சஞ்சீவ் (கணவர்) குஜராத்தின் எஸ்ஐபி க்கு (State Intelligence Bureau) மாற்றப்பட்ட அந்த நாளிலிருந்து தொடங்கும் போராட்டம் அது! பணியில் மிகச் சிறந்த நேர்மையான காவல்துறை அதிகாரி என்று பெயர் வாங்கியவர்  அவர்.

2002 – இல், மிக மோசமான கோத்ரா கலவரங்களின் போதுதான் சஞ்சீவ் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். மாநிலத்தின் உளவுத்துறையின் அதிகாரி என்ற பொறுப்பில் அவர் தவறாக நிகழ்தேறிய பல்வேறு சம்பவங்களுக்கு சாட்சி சொல்ல வேண்டிய நிலை. கலவரங்களின் போது மொத்த காவல்துறை எந்திரத்தின் செயல்பாடும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.


காக்சி சட்டை அணிந்த பின் கண்ணெதிரே நிகழும் குற்றங்களின் போது, கற்பழிக்கப்பட்ட பெண் இந்துவா? முஸ்லிமா? என்று கேள்வியா கேட்டு செயல்பட முடியும்? மாநிலத்து மக்கள் நலன் காப்பதே ஒரு காவல்துறை அதிகாரியின் கடமை. ஆனால், அவர் (சஞ்சய்) தொடர்ந்து தவறாகவே நிகழ்ந்து கொண்டிருந்த செயல்களுக்கு அடிபணிய தயாராக இல்லை.

ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். பாபு பஜரங் (ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பஜரங்தள் இந்து தீவிரவாதி) நிறைமாத கர்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்தக் கருவை தனது வாளில் குத்திக் கொண்டு நடனமாடியவர்! மாயா கோதானி (சிறைப்பட்டிருக்கும் பிஜேபி எம்எல்ஏ) ஒரு பெண்ணாக இருந்தும் கொலைக்காரர்களுக்கு கேன்.. கேனாக மண்ணெண்ணெயை விநியோகித்தவர். இரண்டு மாதக் குழந்தைகள் எல்லாம் எரியூட்டப்பட்ட கொடுமைகள் நிகழ காரணமானவர்.

ஆயிரக்கணக்கான அப்பாவிகள் குஜராத்தில் கொல்லப்பட்ட அந்த நிகழ்வுகள் கொடூரமானவை! இதில் விசித்திரமான ஒரு சம்பவமும் நிகழ்ந்தது. கோத்ரா ரயில் சம்பவத்தில் இறந்து போனவர்களின் சடலங்கள் அஹ்மதாபாத் நகருக்கு கொண்டு வரப்பட வேண்டிய அவசியம்தான் என்ன? பிணங்களை வைத்து ஆதாயம் தேட முயன்றவனர் மோடி. அதுவும் மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு அவர் இப்படி பட்ட செயல்களை எப்படி செய்யலாம்?

இந்த சம்பவங்கள் நடந்து சில ஆண்டுகளுக்கு பின் ஒரு சிறப்பு புலனாய்வு குழு – எஸ்ஐடி (Special Investigation Team) உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்டது. சஞ்சீவ் அந்த குழுவின் முன்பாக ஆஜராகி கலவரங்கள் யாரால் நிழத்தப்பட்டன? அதற்கு யார் யார் காரணமாக இருந்தனர்? யார் யாரெல்லாம் அந்த கொலை அரங்கேற்றங்களுக்கு உத்திரவு இட்டனர் என்று விலாவாரியாக சாட்சியம் சொன்னார். தனது வாக்குமூலத்துக்கு சாட்சிகளாக தொலைபேசி உரையாடல்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் அந்த சிறப்புப் குழுவிடம் ஒப்படைத்தார்.

ஆனால், சிறப்பு புலனாய்வு குழுவோ அவரது வாக்குமூலத்தை நிராகரித்தது. நரேந்திர மோடி முதல்வராக இருந்த அந்த காலக்கட்டத்தில் கலவரங்களின் போது நிகழ்ந்த உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த சஞ்சீவ், நரேந்திர மோடி நேரடியாகவே, மக்கள் தங்கள் கோபங்களை தணித்துக் கொள்ள விட்டுவிடுங்கள்! முஸ்லிம்கள் இதன் மூலம் பாடத்தைக் கற்றுக் கொள்ளட்டும்! – என்று போட்ட உத்திரவுகளுக்கு சாட்சியாக நின்றவர் சஞ்சீவ்.


ஒரு வழியாக சஞ்சீவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு அதில் பல்வேறு தவறுகள் இருப்பதாகவும் மீண்டும் மறு விசாரணை நடத்தும்படியும் நீதிமன்றம் உத்திரவிட்டது.

இந்தமுறை உளவுத்துறை அதிகாரிகள் நேரடியாக தலையிட்டு சஞ்சீவின் வாக்குமூலத்தை அந்த விசாரணை அறிக்கையிலிருந்து அகற்றினார்கள்.

அன்றிலிருந்து சஞ்சீவுக்கு அடுக்கடுக்காய் பிரச்னைகள் ஆரம்பித்தன. அவர் தண்ணியில்லாத காடு ஜீனாகட்டுக்கு மாற்றப்பட்டார். அவரது விடுமுறை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தனது சொந்த பிரச்னைகளுக்கும் சரி.. அல்லது எஸ்ஐடி யின் விசாரணைக்காகவோ கூட அவர் விடுப்பில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. 20 ஆண்டுகால கோப்புகள் தூசி தட்டி எடுக்கப்பட்டு அதில் அவரை சம்பந்தப்படுத்த பெரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அடுத்தடுத்து மூன்று முறை இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டார். ஒன்றிலிருந்து மீண்டு வெளிவந்ததும் அடுத்த இடைக்கால பணி நீக்க உத்திரவு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி வழங்கப்பட்டது. இதற்கெல்லாம் சஞ்சீவ் பணிந்துவிடவில்லை

நிகழ்வுகளை விவரித்துக் கொண்டிருக்கும் போதே ஸ்வேதாவின் கண்கள் பனிக்கின்றன.

ஸ்வேதாவின் வாழ்வில் மிக மோசமான நாட்கள் அவை! திரைப்படங்கள் போலவே அந்த சம்பவங்களும் நிகழ்ந்தேறின.

கடந்தாண்டு செப்டம்பர் 30  இல், திபு திபு வென்று வீட்டில் நுழைந்த 40-50 காவலர்கள் சஞ்சீவை கைது செய்தனர். சார் உங்களை கைது செய்ய வந்துள்ளோம்! – என்று ஒற்றை வரியில் கூறிவிட்டு அவர்கள் சஞ்சீவை அழைத்து சென்றனர்.

இது நடந்து மாலை 5 மணியிருக்கும் அடுத்த ஒரு மணி நேரம் கழித்து அதாவது மாலை 6  மணியளவில் 40 க்கும் மேற்பட்ட காவலர்களால் சோதனை என்ற பெயரில் சஞ்சீவின் வீடு தலைகீழாக புரட்டப்பட்டது.

வீட்டில் இருந்த பொருட்கள் தாறுமாறாக வீசி எறியெறியப்பட்டன. பிரிட்ஜை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. அதிலிருந்த பொருட்களை.. பாட்டில்களை வெளியே வீசி எறிந்தனர். இந்த சோதனை நடந்து கொண்டிருந்த அதேநேரத்தில் சஞ்சீவின் பெற்றோர் வீட்டிலும் சோதனை நடந்தது. அதிர்ச்சியில் உறைந்து போன சஞ்சீவின் 80 வயதான தயார் ஒரே ஒரு போன் செய்து கொள்ள அனுமதி கேட்டும் அது மறுக்கப்பட்டது.

இத்னீ  ஹய்வானியத் மைனே கபீ நஹீன் தேகீ! – இத்தனை மிருகத்தனமான செயல்களை நான் அதுவரையும் கண்டதில்லை! – என்கிறார் ஸ்வேதா தனது பின்னூட்ட நினைவுகளின் ஊடே!

எங்களிடமிருந்த ஆதார ஆவணங்களைக் கைப்பற்றுவதற்கான முயற்சி அது! 

இந்த சம்பவங்கள் நிகழ்வதற்கு 8-10 நாட்களுக்கு முன்புதான் எனது மாமியாரின் வீடு இருமுறை கொள்ளையடிக்கப்பட்டது. அந்த இரு திருட்டு நிகழ்வுகளிலும் வீட்டிலிருந்த பத்திரிகைகள், வீட்டுப் பத்திரங்கள், ஷேர் பங்குகளுக்கான பத்திரங்கள் என்று எல்லா காகிதங்களும் எரிக்கப்பட்டிருந்தன. திருடர்கள் என்று பெயர் தாங்கி வந்தவர்களின் நோக்கம் எல்லாம் ஆவணங்களை அழிக்கும் முயற்சியாகவே இருந்தது. இதில் விசித்திரம் என்னவென்றால்.. வீட்டிலிருந்த விலையுயர்ந்த எந்தப் பொருளும் களவு போகவில்லை என்பதுதான்! நல்லவேளை சஞ்சீவின் 24 ஆண்டுகால உளவுத்துறை அனுபவங்களால்.. அவர் ஏற்கனவே ஆவணங்களின் பல்வேறு நகல்களை எடுத்து வைத்திருந்தார்.

சஞ்சீவை பணிய வைக்க முடியவில்லை. பெண்ணான என்னை பயமுறுத்திப் பார்க்கவே சோதனை என்ற பெயரில் நடந்த கூத்துக்கள் அனைத்தும்! 40 காவலர்கள் திபு திபு வென்று சோதனைக்கான எந்த உத்திரவு ஆவணங்களும் இல்லாமல் வீட்டில் நுழைவதும், தீவிரவாதிகளை கைது செய்வது போல வீட்டிலுள்ள பொருட்களை உடைப்பதும், கபாடி மைதானம் போல வீட்டை துவம்சம் செய்வதும் பெண்களை மிரட்ட அன்றி வேறென்ன? – என்கிறார் கோபத்துடன் ஸ்வேதா.

அன்றும் அதற்கு அடுத்த நாளும் பொறுத்து பொறுத்துப் பார்த்த ஸ்வேதா மூன்றாவது நாள், இது என்ன பூங்கா மைதானமா? 40-50 பேர்கள் பாட்டுக்கு உள்ளே நுழைவதும், எதிரில் தென்பட்டதை எல்லாம் வீசி எறிவதற்கும் இது என்ன பொது இடமா? தகுந்த ஆவணங்கள் காட்டாமல் வீட்டில் நுழையக் கூடாது!”- என்று கடுமையாக சத்தம் போட ஆரம்பித்ததும் திரும்பிச்  சென்ற அவர்கள் உடன் சோதனைக்கான உத்திரவுகளுடன் திரும்பி வந்தார்கள்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சஞ்சீவ் கிரைம் பிராஞ்சின் என்கவுண்டர் ஸ்பெஷலிஷ்டுகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
காவல் நிலையத்தின் எட்டுக்கு பத்து அளவிலான அந்த அறையில் கொடிய குற்றவாளிகளுடன் சஞ்சீவ் அடைக்கப்பட்டார். ஐஜி அந்தஸ்து கொண்ட காவல்துறை அதிகாரிக்கு திரைப்படங்களில் பார்ப்பது போலவே ஏற்பட்ட உண்மை நிலை இது.

ஆனால், சஞ்சீவ் சூழல்களைக் கண்டு கலங்கவில்லை. நிலை தடுமாறவும் இல்லை. அழுக்கான ஒரு போர்வையை போர்த்துக் கொண்டு நிம்மதியாக உறங்கியவர் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து நிமிர்ந்த நெஞ்சுடன் அடுத்த காட்சிக்கு தயாராகிவிட்டார்.

அவர் அழைத்துச் செல்லப்பட்டதும், தங்க வைக்கப்பட்டதும் அஹ்மதாபாத்தில் நடந்த அத்தனை என்கவுண்டர்களும் அரங்கேறிய பகுதி. அன்று இரவு சஞ்சீவும் தப்பிச் செல்லும் போது சுடப்பட்டிருக்க வேண்டும். மரணம் விதியில் இல்லாத நிலையில் அவருக்கு யாரால்தான் மரணம் நிகழ்த்த முடியும்.

சஞ்சீவின் கைது காட்டுத் தீயாக பரவ காவல்நிலையத்துக்கு வெளியே குழந்தை – குட்டிகளுடன் திரண்ட மக்கள் கூட்டம் இரவு முழுவதும் காவல் காத்து நின்றது.  சஞ்சீவின் ஆயுளை காத்தது.

பின்பு அங்கிருந்து சஞ்சீவ் சபர்மதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.

ஏற்கனவே சஞ்சீவ் சூப்பிரடெண்டாக 3,500 கைதிகளுடன் பணி புரிந்த இடம் அது. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடிகள், பல் நோய் உள்ளவர்களுக்கு அதற்கான சிகிச்சை என்று பல்வேறு சிறைத்துறை சீர்த்திருத்தங்களை பணிக்காலத்தில் நிகழ்த்திய இடம். கைதிகள் உண்ணுவதற்கு முன்பாக உணவின் தரம் அறிய அதை முதன் முதலில் சுவைப் பார்ப்பார் சஞ்சீவ்.

சஞ்சீவ் பணிமாற்றம் பெற்றபோது கைதிகள் அவரை பிரிய மனமில்லாமல் தவியாய் தவித்தார்கள். இப்படிப்பட்ட அதே சிறையில் சக கைதிகளுடன் கைதியாக சஞ்சீவ் அடைக்கப்பட்டார். ஆரம்பத்தில் கைதிகள் அதிர்ச்சி அடைந்தாலும் உண்மை வெளிப்பட்டதும் அவரை தலைமேல் வைத்துக் கொண்டு கொண்டாடினார்கள்.

சஞ்சீவ் அரசியல்வாதிகள் போல எந்த பிரத்யேக சலுகைகளையும் சிறைக்குள் பெறவில்லை. சட்ட நடைமுறைகள் அவற்றின் கடைமையைச் செய்யும் என்று ஆணித்தரமாக நம்பினார். சக கைதிகள் உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று நாங்கள் கூறுகிறோம். நீங்கள் ஏதாவது ஒரு மருத்துவமனையில் ஓய்வு பெறலாம்!” - என்றெல்லாம் அரசியல்வாதித்தனமான ஆலோசனைகள் கூறினார்கள். என் வாழ்நாளில் நோய் என்பதே இல்லாத போது இப்போது நோய் வந்தது எப்படி? – என்று சிரித்துக் கொண்டே அவற்றை தவிர்த்துவிட்டார் சஞ்சீவ். நாள்தோறும் 15 கி.மீட்டர் ஓட்டப் பயிற்சி.. மற்ற கைதிகள் போலவே சாதாரண உணவு.. தரையில் கைதிகளோடு கைதியாய் உறக்கம்.

ஒருமுறை இவரது வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுற்றி சூழ்ந்திருந்த ஊடகத்தார் முன்னிலையில் நீதிபதி  பட்டய்யா, உங்களிடம் இருக்கும் ஆவணங்களை கொடுத்துவிடுங்கள்! நான் உங்களுக்கு ஜாமீன் வழங்கிவிடுகின்றேன்! – என்று கேட்டதற்கு உண்மைக்கு புறம்பாக என்னால் நடக்க முடியாது! தாங்கள் சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொள்ளுங்கள்!”- என்று எத்தகைய உடன்படுதலுக்கும் ஆட்படாமல் நெஞ்சுயர்த்தி சொன்ன போது, நீதிமன்றத்தில் கூடியிருந்தோர் சிங்கம்! என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

கடைசியில், சஞ்சீவ் 17 நாட்களுக்கு பிறகு ஜாமீன் பெற்றார்.

“20 நிமிடங்களில் நடந்திருக்க வேண்டிய ஒரு சட்ட வரையரை இழுத்தடிக்கப்பட்டு 17 நாட்கள் மறக்க முடியாத நிகழ்வுகளாயின! – என்கிறார் ஸ்வேதா.

கணவர் விடுதலைப் பெற்றதும் உணர்ச்சிப் பிழம்பில் ஸ்வேதா பட்
கணவர் சிறைக்குள் பிரச்னைகளோடு மோதிக் கொண்டிருந்த போது, ஸ்வேதா அரசு எந்திரத்தின் அனைத்து கெடுபிடிகளையும் மக்கள் ஆதரவுகளோடு சமாளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது மக்கள் அளித்த ஆதரவை என்னால் மறக்க முடியாது! சிலர் மெழுகு வத்திகளோட என் வீட்டுக்கு வெளியே நின்றார்கள். இன்னும் சிலர் மலர்களோடு என் வீட்டுக்குள் வந்தார்கள். சஞ்சீவ் விஷயத்தில் தாங்கள் மிகவும் பெருமைப்படுவதாக அவர்கள் மகிழ்ச்சியோடு சொன்னார்கள். இவையெல்லாம் எனக்கு தன்னம்பிக்கையூட்டின. அதற்கு முன் நான் கற்பனையிலும் நினைத்திராத செயல்களை எல்லாம் துணிச்சலுடன் செய்ய துணைப் புரிந்தன. வழக்குரைஞர்களோடு கலந்தரையாடினேன். பெரும் துணிச்சலுடன் வீட்டிலிருந்து தெருவில் இறங்கி அறப்போருக்குத் தயாரானேன். மக்களின் பேராதரவோடு மோடியை அவரது சொந்த தொகுதியிலேயே எதிர்த்து களம் இறங்கியது இப்படிதான்!

நான் தேர்தல்களில் சுயேச்சையாகதான் போட்டியிட விரும்பினேன். ஆனால், காங்கிரஸோ எனக்கு இடம் ஒதுக்கி தந்தது. 

அடிப்படை தேவைகள் கிடைக்காமல் பின்தங்கியுள்ள மணிநகர்
என் சொந்த வாழ்வில் நெருக்கடிகளை தந்தது போலவே, நான் போட்டியிடும் தொகுதியிலும் ஏராளமான தொல்லைகளைத் தந்தார் மோடி. மணிநகரில் தேர்தல் அலுவலகம் அமைக்க ஐந்து நாட்கள் போராடிதான் ஒரு இடத்துக்கான அனுமதி கிடைத்தது. அதுவும் ஒரு சிறுபந்தலைப் போட! எனக்கு கருப்புப்பூனை பாதுகாப்போ, எந்தவிதமான ஆரவாரங்களோ தேவையில்லை! மக்களோட மக்களாக இருந்து செயல்படவே விரும்புகின்றேன்.

நரேந்திர மோடி தன்னலம் மிக்கவர். ஆடம்பர பிரியர். ஒருவேளை உணவில்லாமல் இங்கு ஏழை-பாழைகள் தவிக்கும் போது, ஒருமுறை அணிந்த ஆடைகளை மறுமுறை அணிய விரும்பாதவர் மோடி. ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் அவரது காலடியில் அமர்ந்துதான் பேச வேண்டும்.  அவருக்கு சட்ட ரீதியாக மனைவி உண்டு. ஆனால், அவர்கள் இருவரும் பிரிந்திருக்கிறார்கள். 60 களின் பிற்பகுதியில் அவர் ஆர்எஸ்எஸின் பிரச்சாரக்காக இருந்தபோது அவரை மணந்து கொண்டார். பல ஆண்டுகளாக பிரிந்திருக்கும் அவர்கள் சட்ட ரீதியாக இன்னும் பிரியவில்லை. குஜராத்தின் ஒரு பள்ளிக்கூடத்தை பெருக்கிக் கொண்டு அதில் வரும் வருவாயான ஐந்நூறு ரூபாயைக் கொண்டு தன் வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிறார். அவரும் (மோடியின் மனைவி), அவருடைய உறவினரும் மோடியை சந்திக்க அனுமதிப்பதில்லை. அத்துடன் அவரது பயமும் கூட.



குஜராத்தைப் பாருங்கள்! ஒரு பெண் நீருக்காக கையேந்தும் காட்சியைக் காணலாம். தயவுசெய்து தண்ணீர் தாருங்கள்! – என்று கெஞ்சும் அவல நிலை அது.

மோடியின் சொந்தத் தொகுதியான மணிநகரிலேயே குடிக்க நீர் இல்லாமலும், கழிவறைகள், கல்விச்சாலைகள், மருத்துவமனைகள், சாலைகள் போன்ற அடிப்படை தேவைகள் இன்றி மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகள் குஜராத்தில் காணாமல் போய் இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் 13,000 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுவிட்டன.

குஜராத்தில் ஜனநாயகம் என்பது இல்லை. சர்வாதிகாரம்தான்!

வெறும் பொய்களாலேயே மக்களை திசைத் திருப்பி வருபவர் மோடி.

ஹிட்லரும் இதைத்தான் செய்தார். அவர் ஜெர்மனியில் யூதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு இரயில் வண்டிகள் குறித்த நேரத்தில் நேரந்தவறாமல் ஓடிக் கொண்டிருந்தன. வளர்ச்சியைச் சுற்றிலும் உடுத்தத் துணியின்றி வெற்றுடம்புகளுடன் குழந்தைகள் ஓடுவதைப் பாருங்கள்! 10 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் போது வளர்ச்சியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன் குஜராத், சீனாவுக்கு துணிகளை ஏற்றுமதி செய்தது. நெசவாலைகள் குஜராத்தில் நிரம்பி வழிந்தன. இன்று அவை போன இடம் தெரியவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு அமுல்  வந்ததைத் தவிர!

நிச்சயம் மாற்றங்கள் வரும் என்று நான் கண்டிப்பாக நம்புகின்றேன்! வர்னா சத்யா மர் ஜாயங்கா! – இல்லையென்றால்.. சத்தியம் அழிந்துவிடும்! நான் அனுதினமும் வென்றுகொண்டுதான் இருக்கின்றேன்! – என்கிறார் ஸ்வேதா கங்கையைப் போல பொறுமையாக!

இன்றில்லாவிட்டாலும்.. நாளை அல்லது அதற்கடுத்த நாள்.. சத்தியம்தான் மேலோங்கும்! அசத்தியம் அழியும் என்பதே வரலாறு.

நம்பிக்கையோடு இருங்கள் சகோதரி ஸ்வேதா!

SOURCE: SAVVY – January 2013
Photographs   - Sanjit Sen

0 comments:

Post a Comment