சிமி இயக்கத்தை தடை செய்வதற்கான அவர்கள் செய்த ஒரே ஒரு குற்றம் பாபரி மசூதியை போஸ்டராக அச்சிட்டு அதன் தலைப்பாக “இறைவா! ஒரு முஹம்மது கஜ்னவியை’ அனுப்புவாயாக!” – என்று அச்சிட்டதுதான்!
இந்து சகோதரர்களிடையே கசப்புணர்ச்சியை உண்டாக்கும், எரிச்சலூட்டும் முஸ்லிம் லீக் பாணியிலான மனப்போக்காகும் இது. ஏற்கனவே முஹம்மது கஜ்னவியைக் குறித்து ஆதாரமற்ற பல கட்டுக்கதைகள் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் இது நடந்தது. இந்திய நாட்டில் சங்பரிவார் வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதுதான் முழுக்க.. முழுக்க உண்மை என்ற நிலையிலும், முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதை கேட்டக் கூட தயாராக இல்லாத சூழலும் நிலவிவருவதே உண்மை.
இந்த போஸ்டரைப் பார்த்துவிட்டு திடுக்கிட்ட நான் உடனுக்குடன் ஒரு கட்டுரையை எழுதினேன். அதைப் படித்துவிட்டு சிமியின் ‘முஜாஹிதீன்கள்’ என்னுடைய அலுவலகம் வந்து வாத, விவாதங்களில் இறங்கினார்கள். அப்போது நான் அலுவலகத்தில் இல்லாத நிலையில் எனக்கு தகவல் வந்தது. நான் உடனே அவர்களை கண்ணிமாக வரவேற்று, நான் வரும்வரை அவர்களுக்கு தேனீர் அளித்து உபசரிக்கும்படியும் சொன்னேன்.
நான் அலுவலகம் திரும்பியதும், அவர்களின் கடுமையான எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது. தீப்பிழ்பாய் மாறிய அவர்கள் தாங்கள் காலித் பின் வலீத்தாய் (நபித்தோழர் காலீத் பின் வலீத் இஸ்லாத்துக்காக பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தவர்; இறைவனின் வாள் என்ற சிறப்புக்குரியவர்) மாற வேண்டியிருக்கும் என்றார்கள்.
நான் அவர்களுடன் அன்போடும், கருணையோடும் உரையாடத் தொடங்கினேன். "நண்பர்களே! முஹம்மது பின் கஜ்னவீ முஸ்லிம்களுக்காகவும், அவர்களது முன்னேற்றத்துக்காகவும் செய்த ஒரே ஒரு பங்களிப்பை, நற்செயலை சொல்ல முடியுமா? ஒரு வேளை அவர் திரும்பவும் தன்னுடைய படையோடு வந்தால் ஒரே ஒரு கிராமத்தையாவது அவரால் கைப்பற்ற முடியுமா?” என்று கேட்டேன். நான் அன்பைப் பொழிந்து அவர்களுக்கு விளக்க முயன்றேன்; ஏனென்றால் அவர்கள் அனைவரும் இளைஞர்கள்; திறமையாளர்கள்.
நான் என்னுடைய உதாரணத்தையே முன் வைத்து அவர்களுடன் உரையாட வேண்டியிருந்தது. சிறப்பிதழ் ஒன்றை கொண்டு வந்ததற்காக, அதை யாருமே படிக்காத நிலையில் குருட்டுத்தனமான காங்கிரஸ் அரசால் அதில் அரசுக்கு எதிராக எதுவுமே குறிப்பிடாத நிலையிலும் பறிமுதல் செய்யப்பட்டு, அதற்காக, ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த கதை அது.
அந்த குற்றத்துக்கான சட்டப்பிரிவுகள், விளக்கவுரைகள் எதுவுமே தெரியாவிட்டாலும் என்னை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் என்னை DIR [Defense of India Rule] என்னும் சட்டப்பிரிவின் கீழ் கைது செய்திருந்தனர். தடா, மாகோகா மற்றும் பொடா (TADA, MACOCA and POTA) போன்ற சர்வாதிகார சட்டங்களின் துணைப் பிரிவு இது. இந்த சட்டப்பிரிவை கைது செய்பவர்கள் மீது பயன்படுத்தும்போது அவர்கள் கைதுக்கான காரணங்கள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
நான் அந்த சிமி உறுப்பினர்களிடம் பேச ஆரம்பித்தேன்: “என் அன்புக்குரிய சகோதரர்களே! மூன்று மொழிகளில் பிரமாண்டமாய் அச்சடித்த இந்த போஸ்டர்கள் வழியே டஜன் கணக்கில் சோமநாதர் கோயில் மீது படையெடுத்த குற்றவாளியான முஹம்மது கஜ்னவிக்கு அழைப்பு கொடுத்திருக்கிறீர்கள்!” – என்று பேசி ஒருவழியாய் அவர்களைச் சமாதானப்படுத்தி கோபத்தைத் தணித்து பிறர் எரிச்சலடையாதவாறு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யுங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தேன்.
அடுத்த நாள் காலையில் சிமி தடைச் செய்யப்பட்டதை பத்திரிகைகள் வாயிலாக அறிந்து கொண்டேன். லக்னோ, தில்லி மற்றும் மும்பையில் நூற்றுக்கணக்கான சிமியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இதுவரையிலும் சிறையில் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜுன் 26-ம், தேதியோடு மோடியின் சர்க்கார் பதவியேற்று ஒரு மாதமே ஆன நிலையில், மோடி 60 மாதங்களை கேட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் அதில் ஒரு மாதம் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் மோசமாக கழிந்துள்ளது. உண்மையில், ஒரு மாத கால அவகாசத்தில் இந்த அரசாங்கம் குறித்து எந்தத் தீர்ப்பையும் வழங்கிட முடியாதுதான்.
மோடி நாட்டு வளர்ச்சிக்கு திறம்படி செயல்பட ஓராண்டு காலம் அதாவது 12 மாதங்கள் கேட்டிருப்பதை நமது நண்பர்கள் மறந்துவிட்டார்கள் போலும்! குற்றப் பின்னணி உள்ள உறுப்பினர்களின் வழக்குகள் இந்த ஓராண்டுக்குள் அதற்கான சிறப்பு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துவிடும். அதன் பின் வழக்குகளிலிருந்து விடுபடும் உறுப்பினர்கள் மக்களவை உறுப்பினர்களாக செயல்பட முடியும். மற்றவர்கள் சிறைக்கு சென்றுவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே கேட்கப்பட்டிருக்கும் 60 மாத கால அவகாசத்தில் 12 மாதங்கள் கழிந்துவிடும் நிலையில், குற்றப் பின்னணிக் கொண்ட மக்களவை உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிப்பதற்காக முறையான நீதி, பரிபாலன அமைப்புகளை இன்னும் நிறுவவில்லை; அதற்கான எந்த ஏற்பாடுகளும் இதுவரையிலும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விரைந்து செயல்படும் நிகழ்வுகள் எவையென்றால், மோடியின் பிரியத்துக்குரியவரான அமித் ஷாவின் பாஜக தலைமைப் பதவிக்கான நியமனங்களும், அதற்கான பாதையை செப்பனிடுவதும்தான்! அவர் மீது ஏற்கனவே கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, அதற்காக சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளி வந்துள்ளவர் அவர். ஷொராப்புத்தீன் மற்றும் அவரது அழகிய மனைவியின் ஆத்மாக்கள் தங்கள் கொலைக்குக் காரணமான மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நபருக்காக சபித்துக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், தற்போது அவருக்காக நியமிக்கப்பட்டிருக்கும் 25 கமாண்டோக்களைப் பார்த்து இன்னும் குமைந்து போயிருக்கும்.
ஏப்ரல் மாதத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், தான் அரசில் எந்த பொறுப்பிலும் பங்கெடுக்க விரும்பவில்லை என்றும், கட்சிக்கு சேவையாற்றவே முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால், மோடி அமித் ஷா குறித்து பெரிதும் கவலைப்பட்டார். ஏனென்றால் அமித் ஷாவை உள்துறை அமைச்சராக நியமிக்க முடியாது! அதனால், ராஜ்நாத் சிங்கின் பெயரை ஜபிக்க ஆரம்பித்தார். ராஜ்நாத் சிங் இல்லையென்றால் தன்னால் அரசாங்கத்தை நடத்த முடியாது என்றெல்லாம் பசப்பு வார்த்தைகள் கூறினார். கடைசியில் வலுக்கட்டாயமாக ராஜ்நாத் சிங் அரசில் பங்கெடுக்க வைத்தார். கடைசியில் ஒரு மாதத்துக்கு பிறகு சாமார்த்தியமாக காய்களை நகர்த்தி அமித் ஷாவுக்கான பாதையை சீர்ப்படுத்திவிட்டார். ராஜீவ் காந்தியும், சோனியா காந்தியும் எப்படி இரட்டைப் பொறுப்புகளை நிர்வகித்தார்களோ அதே வழிமுறையைப் பின்பற்றி மோடியும் வெற்றிப் பெற்றார். விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக மோடி கட்சிப் பொறுப்பை ஏற்காமல் அதைவிட பாதுகாப்பான முறையில் அதை தக்க வைத்துக் கொள்ளும்விதமாக அதுவும் 25 கமாண்டோக்கள் புடைசூழ அவர்களுக்காக லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டிய நிலையில் வலம் வரும் ஒரு நபரை உருவாக்கிவிட்டார். தனது சட்டைப் பைக்குள் உள்ள நபர் அவர்!
இந்நிலையில், மோடி ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று விரும்பினால், அவர் உடனே சிமி இளைஞர்களை விடுதலைச் செய்ய வேண்டும். அவர்கள் வெறும் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். முதிர்ச்சிப்பெறாத இளைஞர்கள். அவர்களுக்கு இதுரை அளிக்கப்பட்ட தண்டனை அளவுக்கு அதிகமானது.
(ஹபீஸ் நுஃமானி புகழ்பெற்ற உருது பத்திரிகையாளர் மற்றும் பன்னூல் ஆசிரியர் ஆவார்)
Translated by Urdu Media Monitor.Com from Avadhnama, Lucknow, 5 July 2014.